Friday, September 26, 2008

கார்கள் விற்பனை சரிவு : டூ வீலர்கள் அதிகரிப்பு


புதுடில்லி: கார்கள் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால், மக்களில் பலர், கார் வாங்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை தள்ளிப் போட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார்கள் விற்பனை 4.35 சதவீதம் குறைந்துள்ளது. 2008 ஆகஸ்டில் 94 ஆயிரத்து 584 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டில் இதே மாதத்தில், 98 ஆயிரத்து 893 கார்கள் விற்பனையாயின. அதேபோல், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 6.33 சதவீதம் சரிந்துள்ளது. 2008 ஆகஸ்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 34 ஆயிரத்து 294. ஆனால், 2007 ஆகஸ்டில் 36 ஆயிரத்து 615 வாகனங்கள் விற்றன. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.19 சதவீதம் குறைந்துள்ளது. 2007 ஆகஸ்டில் 32 ஆயிரத்து 973 மூன்று சக்கர வாகனங்கள் விற்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31 ஆயிரத்து 920 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2007 ஆகஸ்டில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 504 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதே மாதத்தில், 6 லட்சத்து 20 ஆயிரத்து 927 வாகனங்கள் விற்றுள்ளன. அதாவது, 14 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

நன்றி : தினமலர்

ஏ.டி.எம்., மையங்கள் மூலமாக தினமும் ரூ.1,000 கோடி பரிமாற்றம்


புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, தினமும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்கிறது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், 22,500 மையங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமானவை. 10,500 மையங்கள் தனியார் வங்கிகளுக்கு சொந்தமானவை. 1,050 மையங்கள் வெளிநாட்டு வங்கிகளால் அமைக்கப் பட்டுள்ளன. பழைய பொதுத்துறை வங்கிகள் 2,190 மையங்களை அமைத்துள் ளன. இந்த மையங்களில் இருந்து சராசரியாக தினமும் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் இருந்து சராசரியாக தினமும் 760 கோடி ரூபாயும், தனியார் வங்கிகளின் மையங்களில் இருந்து தினமும் 355 கோடி ரூபாயும் வாடிக்கையாளர்களால் எடுக்கப்படுகின்றன. 2008-09ம் ஆண்டு இறுதியில் நாட்டில் மேலும் 10,500 ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

ரூ.10 ஆயிரம் கோடி மானநஷ்டம் கோரி முகேஷ் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கு



மும்பை: முகேஷ் அம்பானி மீது, அவரது தம்பி அனில் அம்பானி குழுமம், 10 ஆயிரம் கோடி ரூபாய் கோரி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முகேஷ் - அம்பானி மோதல், மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக, முகேஷ் மற்றும் அனில் இடையே 2004ம் ஆண்டு, கடும் மோதல் ஏற்பட்டது. குடும்பத்தாரின் சமரசத்தை தொடர்ந்து, 2005ம் ஆண்டு நிறுவனங்கள் பிரித்துக் கொள்ளப் பட்டாலும், இன்னும் பிரச்னைகள் தொடர்கின்றன. பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில், காஸ் சப்ளை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வழக்கு தொடரப்பட்டது. இதை பேசித் தீர்த்துக் கொள்ளவும், தாயின் உதவியை நாடவும் கோர்ட் அறிவுரை கூறியது. ஆனால், முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், காஸ் சப்ளை ஒப்பந்தத்தை மறுப்பதாக, அனில் அம்பானி குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, 'இப் பிரச்னையில் கோர்ட்டில் தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று, முகேஷ் அம்பானி திட்டவட்டமாக கூறினார். இதற்கிடையே, அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி பத்திரிகை, 'நியூயார்க் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, முகேஷ் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில். அந்தப் பேட்டியில், பாகப் பிரிவினைக்கு முன்பாக, அனில் அம்பானியின் நண்பர்களும், கூட்டாளிகளும், உளவு பார்த்ததாகவும், இது அனிலின் மேற்பார்வையில் நடந்ததாகவும் முகேஷ் குறிப்பிட்டு இருந்தார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி, முகேஷ் மீது 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில் அம்பானி. மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 200 பக்க மனுவில் கூறியிருப்பது என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து கேட்ட போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பதில் அளிக்க மறுத்துவிட்டார். பல முறை முயன்றும், அனில் தரப்பு தகவலை அறியமுடியவில்லை.

நன்றி : தினமலர்

Wednesday, September 24, 2008

இரண்டு மாத மவுனத்துக்கு பின் மீண்டும் சிமென்ட் விலை உயருது


மும்பை: இரண்டு மாத இழு பறிக்கு பின், சிமென்ட் விலை மீண்டும் வரும் 1 தேதி முதல் உயருகிறது; மூட்டைக்கு ஐந்து ரூபாய் வரை அதிகரிக்கிறது. ரியல் எஸ்டேட் வர்த்தகம் கொடிகட்டிப்பறப் பதை அடுத்து, கட்டுமானப் பணிகள் அதிகரித்து வருகின்றன. மும்பை, டில்லி மற்றும் தென் மாநிலங்களில் அதிகளவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில அளவில் விற்பனை செய்யப்படும் சிமென்ட் மூட்டைகளுக்கு விலை அதிகரிக்கவில்லை என்றாலும், ஏ.சி.சி., அம்புஜா, ஜே.கே., லட்சுமி மற்றும் பினானி போன்ற பிராண்டு சிமென்ட் மூட்டை விலை வரும் 1ம் தேதி முதல் உயருகிறது. கடந்த ஓராண்டில், சிமென்ட் விலை, 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 50 கிலோ மூட்டை 245 முதல் 275க்கும் இழுத்தடித்தபடி உள்ளது. போக்குவரத்து செலவு தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 'சிமென்ட் உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நிலக்கரி விலை 60 சதவீதம் உயர்ந்து விட்டது. அதனால் தான் சிமென்ட் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை' என்று, சிமென்ட் உற்பத்தியாளர் கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் 70 சிமென்ட் கம்பெனிகள் உள்ளன; ஆண்டுக்கு 17 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்கின்றன.

நன்றி : தினமலர்

சிங்கூரில் இருந்து வெளியேறுகிறது டாடா ; பான்ட்நகரில் இருந்து நானோ கார் அக்டோபரில் வெளியீடு


பூனே : சிங்கூரில் இருந்து வெளியேறுவது என்று டாடா மோட்டார்ஸ் முடிவு செய்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் பான்ட் நகரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் இருந்து நாள் ஒன்றுக்கு 100 நானோ கார்கள் வீதம் தயாரிக்கப்பட்டு, அக்டோபர் மத்தியில் 1000 கார்களை வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான நானோ இஞ்சின் மற்றும் கியர்பார்ஸ் பூனே அருகில் இருக்கும் சிக்லி தொழிற்சாலையில் இருந்து பான்ட் நகர் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூலை அல்லது ஆகஸ்டில் நானோ காரை வெளியிட்டு விட வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருந்தது. சிங்கூரில் இருக்கும் அதன் தொழிற்சாலையால் ஏற்பட்ட பிரச்னையால் இப்போது அது அக்டோபருக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நிதி ஆண்டிற்குள் ஒரு லட்சம் நானோ கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த டாடா மோட்டார்ஸ், இப்போது அதை 50 ஆயிரமாக குறைத்திருக்கிறது. நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை பங்கு சந்தையில் இதுவரை இது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

நன்றி : தினமலர்

Tuesday, September 23, 2008

139க்கு டயல் செய்தால் : தேடி வரும் ரயில் டிக்கெட்


புதுடில்லி: கிரெடிட் கார்டு வைத்திருப்போர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது மிகவும் எளிமையாகிறது. 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசினால் போதும், இ-மெயில் மூலமாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ ரயில் டிக்கெட் உங்களை தேடிவரும். இந்த புதிய முறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.இந்தியன் ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.,) இயக்குனர் நளின்சிங்கால் கூறியதாவது:ரயில் பயணத்தை எளிமையானதாகவும், வசதியானதாகவும் மாற்ற நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அடுத்த மாதம் முதல் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இதன் மூலம் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எளிதில் ரயில் டிக்கெட் பெறலாம். "டயல் ஏடிக்கெட்' என்ற இந்த வசதியை பெற, ஒருவர் சாதாரண தொலைபேசி மூலமாகவோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ 139 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அதில் பயணம் செய்ய விரும்பும் ரயிலின் எண்ணையும், மற்ற விவரங்களையும், கிரெடிட் கார்டு நம்பரையும் தெரிவிக்க வேண்டும்.

இதைச் செய்து முடித்து விட்டால், நீங்கள் புக்கிங் செய்த ரயில் டிக்கெட் இ-மெயில் மூலமாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ உங்களை வந்து சேரும்.இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் வசதியை மட்டுமின்றி, ரயில்களில் வருகை, புறப்பாடு, டிக்கெட்டுகளின் தற்போதைய நிலை உட்பட பல விவரங்களையும் இந்த 139 எண்ணை சுழற்றி அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு நளின் சிங்கால் கூறினார்.

நன்றி : தினமலர்

Friday, September 19, 2008

அமெரிக்காவின் தலையீட்டால் மீண்டும் எழுந்தது பங்கு சந்தை

கடந்த 10 மாதங்களாக அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்து வரும் நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடியை சமாளித்து, சகஜ நிலைக்கு கொண்டு வர அமெரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுதிலும் இன்று பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சீனாவும் அதன் பங்கிற்கு, பங்குகளை வாங்குபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஸ்டாம்ப் டூட்டியை நிறுத்தி விட்டது.இதன் காரணமாக அங்குள்ள ஹாங்செங் 9.61 சதவீதம் உயர்ந்திருந்தது. ஜப்பானின் நிக்கி 3.76 சதவீதம், தைவான் 5.82 சதவீதம், கோஸ்பி 4.55 சதவீதம், ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் 5.78 சதவீதம், ஜகர்தா 5.82 சதவீதம் உயர்ந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தையிலும் எப்.டி.எப்.சி., 8 சதவீதம், சி.ஏ.சி.,6.4 சதவீதம், டி.ஏ.எக்ஸ்.,4 சதவீதம் உயர்ந்திருந்தது. கடந்த திங்களில் இருந்து நேற்று வரை 21 சதவீத புள்ளிகளை இழந்திருந்த ரஷ்ய பங்கு சந்தைகள் இன்று 20 சதவீத புள்ளிகளை மீட்டன. உலகம் முழுவதிலுமிருந்து வந்த இந்த சாதகமான செய்தியை அடுத்து இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயரத்துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 726.72 புள்ளிகள் ( 5.46 சதவீதம் ) உயர்ந்து 14,042.32 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 207.10 புள்ளிகள் ( 5.13 சதவீதம் ) உயர்ந்து 4,245.25 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெரும் லாபம் பார்த்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எப்.சி., ஓ.என்.ஜி.சி., எல் அண்ட் டி, ஹெச்.டி.எப்.சி.பேங்க், பார்தி ஏர்டெல், சத்யம் மற்றும் பெல் நிறுவனங்கள்.
நன்றி : தினமலர்


Thursday, September 18, 2008

உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி : இந்தியா இழந்ததை மீண்டது

உலகம் முழுவதும் இன்று காலை பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஜப்பானில் கடும் வீழ்ச்சியில் இருந்த பங்கு சந்தையை மீற்க, பேங்க் ஆப் டோக்கியோ கூடுதலாக 14.4 பில்லியன் டாலர்களை நிதி சந்தையில் புழக்கத்திற்கு விட்டிருக்கிறது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கியின் சராசரி 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது. தென்கொரிய சந்தையில் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசியா முழுவதும் இந்த வாரத்தில் மட்டும் அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகளால் மொத்தம் 33 பில்லியன் டாலர்கள் நிதி சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சந்தை சரிந்துகொண்டுதான் இருக்கிறது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 5 சதவீதம், தைவானின் வெயிட்டட் 4.5 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 3.5 சதவீதம் குறைந்திருந்தது. திவால் நிலைக்கு சென்ற ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவத்திற்கு, 85 பில்லியன் கடன் கொடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி காப்பாற்றினாலும் அங்கும் பங்கு சந்தையில் 4 சதவீத சரிவு ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் பெரும் சரிவுதான்.இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையும் கடும் பாதிப்பிற்குள்ளானது. மும்பை பங்கு சந்தையில் காலை 10.00 மணி அளவில் சென்செக்ஸ் 649 புள்ளிகள் குறைந்து 12,613 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 174 புள்ளிகள் குறைந்து 3,833 புள்ளிகளாக இருந்தது. கட்டுமானம், டெலிகாம், டெக்னாலஜி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் படு பாதாளத்திற்கு சென்றன. பி எஸ் இ இன் எல்லா இன்டக்ஸூமே சிகப்பில் தான் இருந்தன. ஆனால் மத்திய அமைச்சரின் பேச்சு மதியம் வெளியான பின்பு இந்திய பங்கு சந்தை மீண்டும் உயிர் பெற்றது. அமெரிக்காவின் நிதி நிறுவனமான லேமன் பிரதர்ஸ் திவாலானதால் இந்திய வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொன்ன அவர், இந்திய பொதுத்துறை வங்கி எதுவும் லேமன் பிரதர்ஸூடன் தொடர்பு வைத்திருக்கவில்லை, எனவே எந்ந ஒரு இந்திய வங்கியும் பாதிக்கப்படாது என்றார். ஒரு வேளை இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிந்து வருமானால் அதனை சரிக்கட்டவும் மத்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் என்றார். அவரது அறிக்கை வெளியான பின்பு பங்கு சந்தை, காலையில் இழந்த புள்ளிகள் மீட்க ஆரம்பித்தது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 52.70 புள்ளிகள் ( 0.4 சதவீதம் ) உயர்ந்து 13,315.60 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 29.90 புள்ளிகள் ( 0.75 சதவீதம் ) உயர்ந்து 4,038.15 புள்ளிகளில் முடிந்தது.
நன்றி : தினமலர்


உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி

உலகம் முழுவதும் இன்று பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஜப்பானில் கடும் வீழ்ச்சியில் இருந்த பங்கு சந்தையை காப்பாற்ற பேங்க் ஆப் டோக்கியோ கூடுதலாக 14.4 பில்லியன் டாலர்களை நிதி சந்தையில் புழக்கத்திற்கு விட்டிருக்கிறது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கியின் சராசரி 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது. தென்கொரிய சந்தையில் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசியா முழுவதும் இந்த வாரத்தில் மட்டும் அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகளால் மொத்தம் 33 பில்லியன் டாலர்கள் நிதி சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சந்தை சரிந்துகொண்டுதான் இருக்கிறது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 5 சதவீதம், தைவானின் வெயிட்டட் 4.5 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 3.5 சதவீதம் குறைந்திருந்தது. திவால் நிலைக்கு சென்ற ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவத்தை, 85 பில்லியன் கடன் கொடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி காப்பாற்றினாலும் அங்கும் பங்கு சந்தையில் 4 சதவீத சரிவு ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் பெரும் சரிவுதான்.இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையும் கடும் பாதிப்பிற்குள்ளானது. மும்பை பங்கு சந்தையில் காலை 10.00 மணி அளவில் சென்செக்ஸ் 649 புள்ளிகள் குறைந்து 12,613 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 174 புள்ளிகள் குறைந்து 3,833 புள்ளிகளாக இருந்தது. கட்டுமானம், டெலிகாம், டெக்னாலஜி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் படு பாதாளத்திற்கு சென்றன. பி எஸ் இ இன் எல்லா இன்டக்ஸூமே சிகப்பில் தான் இருந்தன.
நன்றி :தினமலர்


Wednesday, September 17, 2008

அமெரிக்க நிதிச் சந்தையில் பெரும் சுனாமி


நியூயார்க்:அமெரிக்க நிதிச் சந்தையில் தற்போது மையம் கொண்டுள்ள சுனாமியால், உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேமென் பிரதர்ஸ் வங்கி மற்றும் மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இன்சூ ரன்ஸ் நிறுவனமான அமெரிக்க இன்டர்நேஷனல் குரூப் கடும் நிதி சுனாமியில் சிக்கி திவால் நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதித்துறை வங்கியான லேமென் பிரதர்ஸ் திவாலாகி உலகம் முழு வதும் பொருளாதார சந்தைகளில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு நிதி நிறுவனமான மெரில் லிஞ்ச் கடும் நஷ்டத்தில் சிக்கியது. இதை, பாங்க் ஆப் அமெரிக்கா வாங்க முன்வந்ததையடுத்து பிரச்னை ஓரளவுக்கு தீர்ந்தது.இருப்பினும், அமெரிக்காவின் மேலும் பல வங்கிகள் நிலைமை தள்ளாட்டம் கண்டுள்ளதால், அமெரிக்க நிதிச் சந்தைகளில் மந்தமான சூழ்நிலை நிலவுகிறது. தற்போது, இந்த வரிசையில் அமெரிக்காவின் பிரபல இன்சூரன்ஸ் நிறுவ னமான(ஏ.ஐ.ஜி.,) அமெரிக்க இன்டர்நேஷனல் குரூப் கடும் நிதிச்சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இதில் இருந்து தப் பிக்க, நான்காயிரம் கோடி டாலர் உதவி தேவை என, ஏ.ஐ.ஜி., கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கி அதிகாரிகளும், ஜே.பி.மோர்கன் சேஸ் மற்றும் கோல்டுமேன் சாஸ் நிறுவனமும் ஏ.ஐ.ஜி.,யை காப்பாற்ற முயற்சி கள் மேற்கொண்டு வருகின்றன. எங்களால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என, நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்.ஏ.ஐ.ஜி.,யின் நிலைமை மோசமாகியதை அறிந்ததும் நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தது. மொத்தம் 60 சதவீத அளவிற்கு விலை சரிந்தது.நலிவடைந்த மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்தை ஐந்தாயிரம் கோடி டாலர் கொடுத்து வாங்க பாங்க் ஆப் அமெரிக்கா முன்வந்ததையடுத்து, நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் இதன் பங்குகள் 21.3 சதவீதம் குறைந்தது.நூற்றாண்டுக்கு ஒரு முறை அமெரிக்காவில் இது போன்ற நெருக்கடியை சந்திப்பது வாடிக்கை. நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க தீவிர கவனம் செலுத்தப்படும் என அதிபர் புஷ் அறிவித்துள்ளார். இதற்காக, அமெரிக்காவின் பெடரல் வங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெடரல் வங்கி (நம் நாட்டின் ரிசர்வ் வங்கியை போன்றது) பெருமளவில் நிதியை இறக்க இருக்கிறது.இதற்கிடையில் லேமென் பிரதர்ஸ் வங்கியின் ஆசிய துணை நிறுவனங்களான லேமென் பிரதர்ஸ் ஆசியா லிமிடெட், லேமென் செக்யூரிட்டிஸ் ஆசிய லிமிடெட், லேமென் பிரதர்ஸ் பியூச்சர்ஸ் ஆசிய லிமிடெட் ஆகியவை நேற்று தங்களது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி கொண்டுள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தையில் இந் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், லேமென் பிரதர்ஸ் வங்கியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜப்பான் பங்குச் சந்தையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஜப்பான் பிரதமர் முக் கிய அமைச்சர்களை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பாங்க் ஆப் ஜப்பான் உடனடியாக இர ண்டாயிரத்து 400 கோடிக்கு ஜப்பான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முன்வந்தது.ஊழியர்கள் கொதிப்பு: தங்களது வங்கி திவாலாகிவிட்டதால், லேமென் பிரதர்ஸ் வங்கியின் 25 ஆயிரம் ஊழியர்கள் கோபத்தில் உள்ளனர். நியூயார்க் தலைமை அலுவலகத்தில் கூடிய ஊழியர்கள் சிலர், அலுவலகத்தில் தங்களுக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் அட் டை பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதை எண்ணி கவலையடைந்துள்ளனர். அதே சமயம் மெரில் லிஞ்ச் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. திவாலாகாமல் தப்பித்து பாங்க் ஆப் அமெ ரிக்காவுடன் இணைந்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் எங்கள் வங்கியை காப்பாற்றிய பாங்க் ஆப் அமெ ரிக்கா பெரிய நிறுவனம் தான் என சில ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மீளவில்லை இந்திய பங்குச் சந்தை:மும்பை: கடும் சரிவை சந்தித்துள்ள இந்திய பங்குச் சந்தை நேற்றும் 300 புள்ளி களுக்கு மேல் சரிவுடன் தான் துவங்கியது. தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங் கினர். இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை சரிவை சந்தித்தன.இன்னும் இறங்குமா, முதலீடு செய்வதற்கு இப்போது ஏற்ற தருணமா என்று பல முதலீட்டாளர்களும் தயங்கி இருந்தனர்.இருப்பினும் சென்செக்ஸ் 13 ஆயிரத்தை நெருங்கிய போது பலரும் துணிச்சலுடன் பங்குகளை வாங்க முன் வந்தனர்.இதன் காரணமாக மதியத் திற்கு மேல் பங்குச் சந்தையில் முன்னேற்றம் தெரிந்தது.'நிப்டி'நான்காயிரம் புள்ளிகளுக்கு கீழாக வந்தது. அதிபர் புஷ் ஷின் அறிவிப்பு, ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் சற்றே ஏற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தையிலும் சற்று நம்பிக்கையைக் காண முடிந்தது.இதன் காரணமாக பலரும் ஆர்வமுடன் பங்குகளை வாங்க முன் வந்தனர்.கச்சா எண்ணெய் விலை குறைந்து 93 டாலருக்கும் கீழ் வந்ததால் பெட்ரோலிய துறை பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன.இறுதியில் 'சென்செக்ஸ்' 12 புள்ளிகள் சரிந்து 13 ஆயிரத்து 518 புள்ளிகளிலும், 'நிப்டி' இரண்டு புள்ளிகள் அதிகரித்து நான்காயிரத்து 74 புள்ளிகளிலும் நிலை பெற்றது.அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்ற போதிலும், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ. 20 ஆயிரம் கோடிகளுடன், பங்குச் சந்தை இன்னும் கீழ்நிலைக்கு வரும் என்று காத்து கொண்டு இருக்கின்றன. இப்போதுள்ள நிலையில் சென்செக்ஸ் 12 ஆயிரத்து 500க்கு கீழும், நிப்டி மூன்றாயிரத்து 800க்கு கீழும் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என பங்குச் சந்தை நோக் கர்கள் கூறுகின்றனர். பொதுவாக உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படும் நிலை இருப்பதால் அமெ ரிக்காவின் பாதக சாதகங்கள் இங்கும் எதிரொலிக்கிறது.

நன்றி : தினமலர்

Tuesday, September 16, 2008

பங்கு சந்தையில் இன்றும் சரிவு நிலைதான்

அமெரிக்காவின் நிதி நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால், மும்பை பங்கு சந்தையில் இன்றும் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ் , அதிகபட்ச குறைவான 13,051.73 புள்ளிகளில் இருந்து 467 புள்ளிகள் மீண்டு வந்துள்ளது. அதே போல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி, அதிக பட்ச குறைவான 3,919.35 புள்ளிகளில் இருந்து 155 புள்ளிகள் மீண்டு வந்திருக்கிறது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.47 புள்ளிகள் ( 0.09 சதவீதம் ) மட்டும் குறைந்து 13,518.80 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2 புள்ளிகள் ( 0.05 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,074.90 புள்ளிகளில் முடிந்துள்ளது. காலையில் வேகமாக இறங்கி வந்த பங்கு சந்தை மாலையில் ஏறி வந்ததற்கு காரணம், அப்போது பேங்க் மற்றும் ஆயில் நிறுவன பங்குகள் வேகமாக வாங்கப்பட்டதுதான். கடைசி நேரத்தில் பங்கு சந்தை எழுந்ததில் பெரும் பங்காற்றியது ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி., பேங்க், பெல் மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்குகள்தான்.
நன்றி : தினமலர்

ஓபக் அமைப்பில் சேர விடுத்த அழைப்பை நிராகரித்தது பிரேசில்

பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான ஓபக் இல் சேரும்படி, பிரேசிலுக்கு சவுதி அரேபியா விடுத்த அழைப்பை பிரேசில் நிராகரித்துள்ளது. எங்கள் நாட்டின் ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து நாங்களே பயன்படுத்த போகிறோம்.நாங்கள் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப்போவதில்லை. எனவே ஓபக் கில் சேரச்சொல்லி சவுதி அரேபியா விடுத்த அழைப்பை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்று பிரேசிலின் சுரங்கம் மற்றும் எனர்ஜி அமைச்சர் எடிசன் லாபோ தெரிவித்தார். பிரேசிலின் ஆழ்கடல் பகுதியில் புதிதாக எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் 55 பில்லியன் பேரல்கள் ( 5,500 கோடி பேரல்கள் ) கச்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றை எடுத்து பயன்படுத்தினாலே பிரேசிலுக்கு போதுமானது என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 92 டாலராக குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து கொண்டே வருகிறது.நியுயார்க் சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை நேற்று மட்டும் பேரலுக்கு 5.47 டாலர் குறைந்து 95.71 டாலராக இருந்தது. அதே போல லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 92.38 டாலராக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் இப்போது தான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு அதிகமாக குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் கிணறுகள் இருக்கும் மெக்ஸிகோ வளைகுடா பகுதியை, ஐக் சுறாவளி எதிர்பார்த்த அளவுக்கு தாக்காமல் கடந்து சென்றுவிட்டதுதான் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதற்கு காரணம் என்கிறார்கள். இருந்தாலும் அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நிதிநிறுவனமான லேமன் பிரதர்ஸ் திவால் ஆனதாக அறிவித்திருந்தும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது ஆச்சரியம்தான். ஆனால் இதிலும் ஓரு ஆதரவான செய்தி என்னவென்றால், மோசமான நிதி நிலையில் இருக்கும் இன்னொரு நிதி நிறுவனமான மெரில் லிஞ்ச் சை பேங்க் ஆப் அமெரிக்கா வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறது. மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்திற்கு 40 பில்லியன் டாலருக்கும் மேல் வராக்கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனமான ஏ ஐ ஜி யும் இப்போது நிதி பிரச்னையால் தள்ளாடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


Monday, September 15, 2008

திவாலா ஆகி விட்ட அமெரிக்காவின் நிதி வங்கி லேமன் பிரதர்ஸ்

அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நிதி வங்கியான லேமன் பிரதர்ஸ் இப்போது திவாலா ஆகும் நிலைக்கு வந்துள்ளது. திவாலா ஆகி விட்டதற்கான அறிவிப்பை அது அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அந்த நிதி வங்கிக்கு ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கான டாலர் நஷ்டத்தை அடுத்து அது திவாலா நோட்டீஸ் கொடுக்க இருக்கிறது. லேமன் பிரதர்ஸ் திவாலா ஆகி விட்டது என்ற தகவல் வெளியானதாலும், யூரோ மற்றும் யென்னுக்கு எதிரான டாலரின் மதிப்பு குறைந்திருப்பதாலும் இன்று ஆசிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. லேமன் பிரதர்ஸை பேலவே நஷ்டத்தில் இருக்கும் மெரில் லிஞ்ச் நிதி வங்கியை பேங்க் ஆப் அமெரிக்கா 50 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்வதாக சொல்லியிருக்கிறது. இதே போல் லேமன் பிரதர்ஸையும் அதன் நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற பார்க்லேஸ் பேங்க்கும், பேங்க் ஆப் அமெரிக்காவும் முயற்சி மேற்கொள்ளும் என்கிறார்கள். இந்நிலையில் திவாலா ஆகி இருக்கும் லேமன் பிரதர்ஸின் நியுயார்க் கட்டிடத்திற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கட்டிடத்தில் இருந்து வெளிவரும் ஊழியர்கள் பெரிய பெரிய அட்டை பெட்டிகளை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கும் லேமன் பிரதர்ஸ் நிதி வங்கிகளில் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தன

இன்று காலை தேசிய பங்கு சந்தையில் வர்த்தகம் துவங்கியதுமே நிப்டி 112 புள்ளிகள் குறைந்து விட்டன. அதே போல் மும்பை பங்கு சந்தையிலும் வர்த்தகம் ஆரம்பித்ததுமே சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது. அமெரிக்க நிதி நிறுவனமான லேமன் பிரதர்ஸ் இல் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தொடர்ந்துதான் இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்தது என்கிறார்கள். காலை 10.07 மணிக்கு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 710.31 புள்ளிகள் குறைந்து 13,290.50 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 195.50 புள்ளிகள் குறைந்து 4,032.95 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்


சிங்கூர் பிரச்னையால் கார் தயாரிப்பு தொழிலுக்கு பாதிப்பு இல்லை

'சிங்கூர் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு ஏற் பட்டுள்ள பிரச்னையால், இந்தியாவில் எங்கள் நிறுவனங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள முதலீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் கார் தயாரிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள் வோம்' என, மெர்சிடிஸ் உள்ளிட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கம், சிங்கூரில் உள்ள டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரபல கார் தயாரிப்பு நிறுவனங் கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன உயரதிகாரி ரய்னெர் ஸ்முக்கெல் கூறுகையில், 'இந்திய கார் சந்தை மீது எங்களுக்கு பலமான நம்பிக்கை உள்ளது. சிறிய ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள் ளோம். சொகுசு கார்களுக் கான தேவை அதிகரித் துள்ளதால், இந்தியாவில் கார் தயாரிப்பு பணி பாதிக் கப்படாது' என்றார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ஹெண்டர்சன் கூறுகையில், 'சிங்கூர் பிரச்னையால் எங்கள் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவில் கார் தயாரிப்புக்காக கூடுதலாக முதலீடு செய்துள் ளோம்' என்றார். நிசான் மோட்டார் இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குனர் ஷோகி கிமுரா கூறுகையில், 'இந்தியாவில் எங்கள் தயாரிப்பு திட்டங்களை மேலும் விரிவு படுத்த முடிவு செய்துள்ளோம். 'வரும் 2012க்குள் ஒன்பது புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம். இவற்றில் ஐந்து மாடல் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்' என்றார்.
நன்றி : தினமலர்


Sunday, September 14, 2008

சிறிய ரக கார்கள் உற்பத்தியில் சாதிக்கப் போகிறது இந்தியா

'சிறிய ரக கார்கள் உற்பத்தியில், 2013ம் ஆண்டில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும்' என, அமெரிக்காவைச் சேர்ந்த, 'குலோபல் இன்சைட்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம் கூறியுள்ளதாவது: வரும் 2013ம் ஆண்டில், சிறிய ரக கார்கள் உற்பத்தியில் இந்தியா பெரிய சாதனை படைக்கும். உலகில் தயாராகும் மொத்த கார்களில் 31 சதவீதம், அப்போது இந்தியாவில் உற்பத்தியாகும். தொழில்நுட்ப திறன், குறைவான செலவு, நிலையான பொருளாதாரம், சிறிய ரக கார்கள் உற்பத்திக்கு ஏற்ற அரசின் கொள்கைகள் உட்பட பல சாதகமான அம்சங்களால் இந்தியா இந்த நிலையை எட்டும். இந்தியாவில் கடந்த ஆண்டு 10 லட்சம் சிறிய ரக கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. உலக அளவில் சிறிய கார்கள் உற்பத்தி, 2013ம் ஆண்டில், 50 லட்சமாக அதிகரிக்கும். அப்போது, கார் உற்பத்தியில் 10வது இடத்தில் உள்ள இந்தியா, ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும். சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும். மேலும், இந்தியாவிலிருந்து தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் சிறிய ரக கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2013ம் ஆண்டில், 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும். மேலும், ஆசியாவிலேயே சிறிய ரக கார்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். ஜப்பான், கொரியா, தாய்லாந்து மற்றும் சீனா போன்றவை இடம் பெற்றுள்ள பட்டியலில் இந்தியாவும் சேரும். இவ்வாறு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


இந்தியாவில் எதிரொலித்தது அமெரிக்க சந்தையின் வீழ்ச்சி

மூன்றாவது வாரமாக பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாரம் 12.10 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது. வியாழனன்று பேரலுக்கு 100 டாலருக்கு கீழேயும் வந்து பின்னர் சிறிது மேலே சென்றது. இருந்தாலும் சந்தை மேலே எழும்பவில்லை. காரணம் மறுபடியும் அமெரிக்காவில் நிறுவனங்கள் வங்கிகள் கொடுத்த கடன்களில் வராக்கடன் அதிகமாகிக்கொண்டே போவது தான்.
சமீபத்திய நிகழ்வான லேமென் பிரதர்ஸ் நஷ்டமான மூன்று பில்லியன் டாலர்கள் (அதாவது 12,000 கோடி அளவு) சந்தையையும் ஆட்டி பார்த்தது. அதே சமயம் அந்தக் கம்பெனியையும் ஆட்டிப் பார்த்தது.
உலகத்தின் மிகச்சிறந்த கம்பெனிகளில் ஒன்றாக கருதப்பட்ட லேமென் பிரதர்ஸ் நிலைமையே இப்படி இருக்கும் போது மற்ற அமெரிக்க கம்பெனிகளின் நிலைமை என்ன ஆகும்? உலகளவில் சந்தை வியாழன், வெள்ளி இரண்டு நாட்களாகவே விழுந்து வந்தது. குறிப்பாக அமெரிக்க சந்தைகளின் பாதிப்பு தான். அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக விழுந்து கொண்டிருக்கிறது. ஆதலால் வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 338 புள்ளிகளையும், வெள்ளியன்று 185 புள்ளிகளையும் இழந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 14138 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4228 புள்ளிகளுட னும் முடிவடைந்தது. 14,000 க்கும் கீழே செல்லாமல் இருப்பது தான் ஒரே ஆறுதல். வெள்ளியன்று காலையில் சந்தை அதிக புள்ளிகள் இழந்திருந்தது. இழந்த புள்ளிகளை திரும்பப் பெற்றது.
ஏன் சாப்ட்வேர் பங்குகள் வெள்ளியன்று மிகவும் கீழே விழுந்தது? : இந்தியாவில் டாலர் மதிப்பு கூடி ரூபாயின் மதிப்பு அதிவேகமாக ஒவ்வொரு தினமும் குறைந்து வரும் வேளையில் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு கொண்டாட்ட மாக தானே இருக்க வேண்டும். பின் ஏன் வெள்ளியன்று அதன் பங்குகள் கீழே விழுந்தன என்று பலர் புரியாமல் இருந்தனர். காரணம் என்னவென்றால் வியாழனன்று அமெரிக்காவில் ஏற்பட்ட அடியில் அங்கு பட்டியலிடப் பட்டிருந்த இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளின் அமெரிக்க டெபாசிட்டரி ரிசிப்ட்களின் விலைகள் குறைந்தன.
அதன் பாதிப்பு வெள்ளியன்று இந்தியாவிலும் இருந்தது. ஆதலால் சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் இங்கு விழுந்தன. இதுவும் வெள்ளியன்று பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். திருவிழாக் காலங்களும், தங்கமும்
தீபாவளி என்றதும் கொண்டாட்டம் தான் ஞாபகம் வரும். அதிலும் குறிப்பாக பலரும் தங்கம் வாங்க முற்படுவர். தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவது ஒரு நல்ல செய்தி. எது வரை குறையும் என்று தெரியாததால் பலரும் தற்போது வாங்குவதா அல்லது சிறிது காத்திருப்பதா என்று யோசிக்கத்தொடங்கி உள்ளனர். இது போல சந்தைகளில் முடிவுகள் எடுப்பது கடினம். இருந்தாலும் தற்போது குறைந்து இருப்பதால் தேவையில் பாதியை வாங்குவது உத்தமம். பணவீக்க டேட்டா தற்போது வாரா வாரம் வரும் பணவீக்க சதவீதம் இனிமேல் மாதம் ஒரு முறை வெளியிடலமா என்று யோசனையில் அரசு இருந்து வருகிறது. மக்கள் வாரா வாரம் பயப்படாமல் மாதம் ஒரு முறை பயந்தால் போதுமா?
புதிய வெளியீடுகள் : செபியின் புதிய விதிகளின் படி வெளிவந்துள்ள முதல் புதிய வெளியீடான 20 மைக்ரான் புதனன்று மாலை வரை 42.9 மடங்கு செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு கிட்டதட்ட 10 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் செபியின் புதிய விதிகளை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு அப்ளை செய்துள்ளனர் என்றே கருத வேண்டும். சிறிய முதலீட்டாளர்கள் புதிய வெளியீடுகள் சந்தைக்கு திரும்பி வந்தது மகிழ்ச்சியான செய்தி ஆகும்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: ஒரே ஒரு ஆறுதல். இந்தியாவில் மட்டும் விழவில்லை. எல்லா நாடுகளிலும் சந்தை நிலைமை இது தான். விழுந்து கொண்டே இருக்கிறது. பங்குசந்தையை பணம் காய்க்கும் மரமாக பார்த்தவர்கள், தற்போது அதை இலையுதிர் காலமாக பார்க்க வேண்டிய காலமாகிவிட்டது.
அமெரிக்க சந்தைகள் எப்படி பரிணமிக்கப் போகிறதோ என்பதைப் பொறுத்தே அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கும் இருக்கும்.
சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


Saturday, September 13, 2008

ரூ.24 ஆயிரம் கோடி காப்பீடு : 'இன்போசிஸ்' அறிவிப்பு

இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தனது ஊழியர்களுக்காக, ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ். இந்நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் 97 ஆயிரம் ஊழியர்களுக்காக, ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பிலான குழு ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. எல்.ஐ.சி., மேலாண்மை இயக்குனர் தாமஸ் மாத்யூ கூறுகையில்,'குழு காப்பீட்டு திட்டங்களிலேயே மிக அதிக மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை இன்போசிஸ் அறிவித்துள்ளது. உலகின் மிக அதிக மதிப்பிலான காப்பீடு என்றும் இதைக் கூறலாம். இந்தியாவை பொறுத்தவரை இதனை அதிகமான தொகைக்கு குழு காப்பீட்டு திட்டங்களை வேறு எந்த நிறுவனமும் மேற்கொள்ளவில்லை' என்றார்.
நன்றி : தினமலர்


இன்றும் வீழ்ச்சியில் முடிந்த பங்கு சந்தை

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் பங்கு சந்தை வீழ்ச்சியைத்தான் சந்தித்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 323.48 புள்ளிகள் ( 2.26 சதவீதம் ) குறைந்து 14,000.81 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 61.85 புள்ளிகள் ( 1.44 சதவீதம் ) குறைந்து 4,228.45 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃராஸ்டரச்சர் - 6.33 சதவீதம், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் - 6.09 சதவீதம், ஐ சி ஐ சி ஐ பேங்க் - 4.92 சதவீதம், ஹெச்.டி.எப்.சி.பேங்க் - 3.84 சதவீதம், டி.எல்.எப். - 3.81 சதவீதம், ஹெச்.சி.எல்., டெக் - 3.76 சதவீதம் குறைந்திருந்தது. இருந்தாலும் மாருதி சுசுகி, பெல், ஹெச்.யு.எல்., பார்தி ஏர்டெல், பங்குகள் விலை உயர்ந்திருந்தன.
நன்றி ; தினமலர்


Friday, September 12, 2008

விலையை குறைக்கும் எண்ணம் இல்லை : முரளி தியோரா

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக பேரலுக்கு 100 டாலரை ஒட்டியே இருந்து வரும் கச்சா எண்ணெய் விலை, கடந்த வியாழன் அன்று 98 டாலருக்கு கூட வந்தது. விலை குறைந்து வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்காக உடனடியாக இங்கு பெட்ரோலுக்கான விலையை குறைப்பதாக இல்லை என்றார் முரளி தியோரா. கச்சா எண்ணெய் விலை இதை விடவும் குறையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பெட்ரோலிய துறை செயலர் பாண்டே தெரிவித்தார். சர்வதேச சந்தையில் பேரலுக்கு 147 டாலர் வரை இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஒன்றரை மாதங்களாக குறைந்துகொண்டே வந்து இப்போது 100 டாலரை ஒட்டி இருக்கிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை சராசரியாக 95.47 டாலராக இருக்கிறது. இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்றார் பாண்டே. கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு முன் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அது இப்போது ரூ.400 கோடியாக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பிரன்ட் குரூட் ஆயில் விலை 100 டாலருக்கும் கீழே போனது

அமெரிக்காவில் அதிகம் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியான மெக்ஸிகோ வளைகுடாவை, ஐக் என்ற சூறாவளி தாக்கும் அபாயம் இருந்த போதிலும் லண்டணின் ஐ.சி.இ., பியூச்சர் யூரோப் எக்ஸ்சேஞ்சில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழே சென்றிருக்கிறது. நேற்று வியாழக்கிழமை பிரன்ட் குரூட் ஆயில் விலை 1.17 டாலர் ( அல்லது 1.2 சதவீதம் ) குறைந்து 97.80 டாலராக இருந்தது. கடந்த மார்ச் 5 ம் தேதிக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு விலை குறைந்திருக்கிறது. இதே பிரன்ட் குரூட் ஆயில் விலை நியுயார்க் மெர்க்கன்டைல் சந்தையில் 1.73 டாலர் குறைந்து 100.85 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்தது

ஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 12.34 சதவீதமாக இருந்தது. 0.24 சதவீதம் குறைந்திருக்கிறது.மூன்றாவது வாரமாக பணவீக்கம் குறைந்திருந்தாலும் முக்கிய 30 பொருட்களின் விலை கூடித்தான் இருக்கிறது என்று நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் உள்பட சில உணவுப் பொருட்கள், மக்காசோளம், வாசனை திரவியங்கள், பழங்கள் போன்றவற்றின் விலை குறைந்திருக்கிறது.

நன்றி : தினமலர்



இந்தியாவில் ஆண்டு தோறும் ரூ.80 ஆயிரம் கோடி நகைகள் விற்பனை

இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.80 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்படுவதாக டைட்டன் இண்டஸ்ட்ரிஸ் (ஆபரணப் பிரிவு) துணை தலைவர் எல்.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: உலகில், ஆண்டு தோறும் மூன்றாயிரம் டன் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 800 டன் கொள்முதல் ஆகிறது. உலகளவில் தங்கத்தின் தரம் பார்க்கும் கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 95 சதவீத வாடிக்கையாளர்களுக்கு, 12 முதல் 36 சதவீதம் வரை தரம் குறைவான தங்க நகை கிடைக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எட்டாயிரம் கோடி ரூபாய் வரை இழக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்தியாவில் 10 லட்சம் பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலை ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளோம். இந்திய அளவில் காரைக்குடியில் துவக்கப்பட்டது 28வது கிளை. தமிழகத்தில் இது 16வது கிளை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்வு செய்துள்ள 834 நகரங்களில் கிளைகள் துவக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் மூன்றாயிரம் டிசைன்கள் உள்ளன. இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Thursday, September 11, 2008

பங்குச் சந்தையில் தொடரும் திரிசங்கு நிலை

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்த தடைகள் நீங்கி, இந்தியாவும் ஒரு அங்கமானதால், சந்தையும் ஒளிர்வு பெற்றது. அது தான் நடந்தது திங்களன்று. இதனால், பவர் பங்குகள் பவர் காட்டின என்றால் மிகையாகாது.
மேலும், கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் அணுமின்சாரம் யூனிட் 2.50 அளவில் விலை வைக்கப்படும் என்ற செய்தியும் வலுவூட்டுகிறது.
திங்களன்று சந்தை 461 புள்ளிகள் கூடியது. இதனால், முதலீட்டாளர்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடியது. உங்களுக்கு எவ்வளவு கூடியது?: நேற்று முன்தினம், லாப நோக்கிலேயே பலர் இருந்ததால், சந்தை துவக்கத்தில் மிகவும் கீழேயே இருந்தது. பின்னர் சிறிது சுதாரித்து, இழந்த நஷ்டங்களை திரும்பப் பெற்று முன்னேறியது. ஒரு கட்டத்தில் மேலேயும் வந்தது.
குறிப்பாக சமீபகாலமாக ஏறிவந்த வங்கிப் பங்குகளை பலரும் விற்று லாபம் பார்க்கத் துவங்கினர். ஆதலால், கடைசியாக 44 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. நேற்று முன்தினம் உலகளவில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட இறக்கம் இந்தியாவிலும் நேற்று துவக்கத்தில் இருந்தே இருந்தது. மேலும், மெட்டல் பங்குகளின் விலை இறக்கமும் சந்தையை வெகுவாக பாதித்தது. குறிப்பாக ஸ்டெர்லைட் பங்குகள் 11 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 5 சதவீதமும் குறைந்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 238 புள்ளிகளை இழந்து 14,662 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 68 புள்ளிகளை இழந்து 4,400 புள்ளிகளில் முடிவடைந்தது.
அமெரிக்காவில் வீழ்ச்சி ஏன்?: நேற்று முன்தினம், அமெரிக்காவில் பங்குச் சந்தை விழுந்ததற்கு, மறுபடியும் சப்பிரைமா என்ற பயத்தை தோற்றுவிக்கும் அளவிற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, ஸ்டாண்டர்டு அண்டு புவர் கம்பெனி, லேமென் பிரதர்ஸ் கம்பெனியை கவனிக்க வேண்டிய லிஸ்டில் சேர்ந்து இருந்தது. அது, சந்தையில் மிகுந்த அலைகளை ஏற்படுத்தியது. அந்த கம்பெனியின் பங்குகள் 45 சதவீதம் குறைந்தது.
டாலர் எங்கே செல்கிறது?: ஒவ்வொரு நாளும் 'எண்ணெய் கவனி' என்ற வாசகம் போய், 'டாலரைக் கவனி' என்று வந்து விடும் போலிருக்கிறது. அவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. டாலரின் மதிப்பு ரூபாய் 45யையும் தாண்டி சென்றுள்ளது பலருக்கு வியப்பு அளிக்கிறது. ஏற்றுமதியாளர்களுக்கு லாபம்.
இழந்த லாபங்களை திரும்பப் பெற இது ஒரு வாய்ப்பு. ஆனால், நிறைய ஏற்றுமதியாளர்கள் ரூபாயின் மதிப்பு கூடிக்கொண்டே வந்த போது (அதாவது சமீபத்தில் 42.30லிருந்து) இது தான் சமயம் என்று பார்வேட் கான்ட்ராக்ட் பெரிய அளவில் போட்டு விட்டனர். அவர்களுக்கு லாபத்தில் நஷ்டம்.
கச்சா எண்ணெய், தங்கம் விலையும் டாலர் மதிப்பில் குறைந்து கொண்டு வருவது ஒரு நல்ல செய்தி. குறைந்து கொண்டே வரும் எண்ணெய் விலை யை தடுப்பதற்காக, 'ஓபெக்' எண்ணெய் தயாரிப்பாளர்களை தங்கள் கோட்டாவை மட்டும் உற்பத்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலகளவில் எண்ணெயின் உபயோகம் குறைந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். கூடும் உற்பத்தி, குறையும் உபயோகம் ஆகியவை விலையை இன்னும் குறைக்கும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளனர்.
புதிய வெளியீடுகள்: செபியின் புதிய விதிகளின் படி வெளிவந்துள்ள முதல் புதிய வெளியீடான 20 மைக்ரான், நேற்று மாலை வரை 0.77 மடங்கு செலுத்தப் பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு, ஒரு தடவை வரை செலுத்தப்பட்டுள்ளது. சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்களுக்கு போடத் தகுந்த வெளியீடு. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
வேதாந்தாவில் மாற்றம்: வேதாந்தா குரூப் என அழைக்கப்படும் (ஸ்டெர்லைட்) கம்பெனிகள், தனது கம்பெனிகளுக்கிடையே பிசினஸ் லைன்களை பிரித்துக் கொண் டுள்ளது. அதாவது, காப்பர் மற்றும் ஜிங்க், அலுமினியம் மற்றும் எனர்ஜி, இரும்புத் தாது என்று மூன்றாகப் பிரித்து காப்பர் மற்றும் ஜிங்க் பிசினஸ் ஸ்டெர்லைட் கம்பெனிக்கும், அலுமினியம் மற்றும் எனர்ஜி பிசினஸ் வேதாந்தா கம்பெனிக்கும், இரும்புத் தாது பிசினஸ் சீசா கோவா கம்பெனிக்கும் செல்லும். பிசினஸ் பிரித்து கொள்வதற்கு தகுந்தாற்போல் பங்குகளும் பிரித்து அளிக்கப்படும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: இந்த வாரமும் சென்ற வாரம் போலத்தான் இருந்தது. அதாவது, திங்களன்று கிடைத்த பெரிய லாபத்தை நேற்று முன்தினம், நேற்றும் ஈடுசெய்து விட்டன. முதலீட்டாளர்கள், இந்த நிலையை கண்டு ஒரு திரிசங்கு நிலையில் தான் இருக்கின்றனர். வரும் நாட்கள் மேலும், கீழுமாகத்தான் இருக்க வேண்டும். டிரேடிங்கில், வல்லுனர்களுக்கு இந்த சந்தை ஒரு வாய்ப்பாகும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


வீடுகள் விலை உயர்வு தொடருமா?: எச்.டி.எப்.சி., தலைவர் பேட்டி

'வீடுகள் தேவை தொ டர்ந்து அதிகமாக இருப்பதால், தற்போதுள்ள அதிகபட்ச விலை என்ற போக்கு தொடராதே தவிர, வீடுகளின் தேவை என்பது குறையாது. மாறாக பிடித்த வீடுகள் ஓரளவு கட்டுப்படியாகும் நிலையில் இருந் தால், வாங்குவதில் தவறு இல்லை' என்று, எச்.டி. எப்.சி., சேர்மன் தீபக் பரேக் கூறினார். வங்கி வட்டி விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்து உள் ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடும் நிதி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற அச்சம், சந்தை மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. வீடுகள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த காலங்களில் இருந்தது போல் இல் லாமல், ஒரு வித தேக்கநிலை காணப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் இப்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து எச்.டி.எப்.சி., சேர்மன் தீபக் பரேக்கிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு தீபக் பரேக் அளித்த பேட்டி வருமாறு: இப்போதுள்ள வட்டி விகிதங்கள் ஏற்கனவே உச்சகட்டத்தில் உள்ளன. இந்நிலையில், மேலும் 0.5 சதவீதம் உயருமோ என்ற அச்சம் சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது. இது குறித்து பயம் தேவையில்லை. கடந்த சில வாரங்களாக ஏறிய பணவீக்கம் கணிசமாக குறையத்துவங்கியுள்ளது. எனவே, வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற பயம் தேவையில்லை. கண்டிப் பாக பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வர்த்தக ரீதியான ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் நன்றாக இருக்கும். இதில் அச்சம் கொள்ள தேவையில்லை. ரியல் எஸ்டேட் துறை சந்தையில் பங்கேற்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். நேரடி அன்னிய முதலீடு மற்றும் பங்குச் சந்தையில் ரியல் எஸ் டேட் நிறுவன பங்குகளை வாங்குவதில் கணிசமான வெளிநாட்டு முதலீடு அதிகரித்துவருகிறது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய நேரடி முதலீடு 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இதில், புது பங்கு வெளியீடு மீண்டும் வரவேற்பை பெற சில காலம் ஆகலாம். வீட்டுக்கடன் வழங்கியதில் எச்.டி.எப்.சி.,யை பொ ருத்தமட்டில் இந்த நிதியாண் டின் முதல் நான்கு மாதங்களில் கடன் பெற்றோர் சதவீதம் கடந் தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் சற்று தொய்வு ஏற்பட்டு 22 சதவீதமாக இருந்தது. இந்தாண்டில் இனி வரும் மாதங்களில் 24 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை கடன் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. வீடுகளின் தேவை குறைந்தபாடில்லை. வீடுகளின் விலை சரியாக நிர்ணயிக் கப்பட்டால், அதன் தேவைக்கு ஏற்ப கிராக்கி தொடரும். இன்றைய நிலையை வைத்து வீடுகள் அல்லது மனைகளுக்கு அதிக பட்ச விலை என்ற போக்கு தொடர வாய்ப்பில்லை. விலை குறையும் என்று கருதி வாங்குவதா அல்லது வேண்டாமா என்று குழம்ப வேண்டாம். பிடித்தால் வாங்க வேண்டியது தான். ஆனால், எதிர்காலத்திலும் வீட்டு வசதி தேவை அதிகமாக இருக்கிறதே தவிர குறைய வாய்ப்பு இல்லை. 15 ஆண்டுகளுக்கான வீட்டுக் கடன் வசதி வட்டி விகிதம் ஏறி இறங்கி மாறுபாட்டுடன் இருக்கும். ரியல் எஸ்டேட் துறை தற்போது தான் ஒரு இணக்கமான சூழ்நிலையை எட்டிவருகிறது. விரைவில் இது மேல் நோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தீபக் பரேக் கூறினார்.
நன்றி : தினமலர்


Wednesday, September 10, 2008

சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

இன்றும் மும்பை பங்கு சந்தை சரிவில்தான் முடிந்திருக்கிறது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து கொண்டிருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 238.15 புள்ளிகள் ( 1.6 சதவீதம் ) குறைந்து 14,662.61 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 68.45 புள்ளிகள் ( 1.53 சதவீதம் ) குறைந்து 4,400.25 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில், டெலிகாம், பவர் மற்றும் தனியார் வங்கி பங்குகள் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 103 டாலர்தான்

வியன்னாவில் நடக்கும் ஓபக் அமைப்பின் ( பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு ) மாநாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 5.2 லட்சம் பேரல்கள் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. நியுயார்க் மெர்கண்டைல் சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 3.08 டாலர் குறைந்து 103.26 டாலராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப்பிறகு இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு குறைந்திருக்கிறது. ஓபக் அமைப்பின் கூட்டத்திற்குப்பின் அதன் தலைவர் சாகிப் கெலில் பேசுகையில், ஓபக் நாடுகள் இனிமேல் இப்போதுள்ள எண்ணெய் உற்பத்தியில் இருந்து நாள் ஒன்றுக்கு 5,20,000 பேரல்கள் குறைத்து 2 கோடியே 88 லட்சம் பேரல்கள் தான் உற்பத்தி செய்யும் என்றார். ஆனால் பொதுவாகவே ஓபக் நாடுகள், ஓபக் அமைப்பு விதிக்கும் உற்பத்தி அளவை விட கூடுதலாகவே எண்ணெய்யை உற்பத்தி செய்து வந்துள்ளன. இதற்கு முன் நடந்த ஓபக் மாநாட்டில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 73 லட்சம் பேரல்கள்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்கு மேல்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


எல்லாருக்கும் வளர்ச்சி தரும் திட்டம்: ரிசர்வ் வங்கி கவர்னர் முதல் பேட்டி

'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நிதிநிர்வாக நடவடிக்கை எடுத்த போதும், வளர்ச்சி பாதிக்காத வகையில் அதிகரிக்க நிதித்துறை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்படும்' என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார்.ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பு ஏற்றுள்ள சுப்பாராவ் நேற்று முதல் முறையாக நிருபர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது;நிதித்துறை சீர்திருத்தம் என்பது யாருக்கு பயன் போய்ச் சேர வேண்டுமோ அதற்கேற்ற நடை முறை, செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். இது குறித்து மத்திய அமைச்சரவை கமிட்டி அளித்த பரிந்துரைகள் அடங்கிய ஒருங்கிணைந்த அறிக்கையை மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது. உலக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் நமது தேவையுடன் கூடிய வளர்ச்சியை மேற்கொள்ளும் வகையில் இது இருக்கும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான், கடுமையான நிதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை தொட்டுவிட்டு, தற்போது உலகளவில் உள்ள பொருளாதார சூழ்நிலையால் சற்றே தொய்வு அடைந்துள்ளது. தற்போதுள்ள பணவீக்கம், பொருட்கள் வரத்து மற்றும் தேவை போன்ற காரணிகளால் ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் பணவீக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்படும்.உள்நாட்டு மொத்த உற்பத்தி சதவீத நிலைமை குறித்த ஆய்வு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் நிதி கொள்கையில் இடம் பெறும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவானதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது.நாட்டின் உடனடி மற்றும் மத்திய தர தேவைகளை கருத்தில் கொண்டு நிதித்துறை சீர்திருத்தங்கள் பொருத்தமான நேரத்தில் கொண்டுவரப்படும். வங்கிகள் சீர்திருத்தம் மேலும் அதிகரிக்கும்இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்

Tuesday, September 9, 2008

வர்த்தகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் நம்பர் 1

வணிக நிறுவனங்களில், சந்தை முதலீட்டை அதிகமாக கொண்டுள்ள நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை முதலீடு மூன்று லட்சம் கோடி ரூபாய். இரண்டாவது இடத்தில் உள்ள இரண்டு லட்சத்து 30 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ள அரசுக்கு சொந்தமான எண்ணெய் எரிவாயுக்கழகம்.
மூன்றாவது இடத்தை பாரதி ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது; இதன் சந்தை மூலதனம் ஒரு லட்சத்து 52 ஆயிரம் கோடி. இந்த வகையில் முதல் பத்து இடங்களில் அரசுக்கு சொந்தமான ஆறு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் எண்ணெய் எரிவாயுக்கழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளதை தொடர்ந்து, என்.டி.பி.சி.,(1.43 லட்சம் கோடி) எம். எம்.டி.சி.,(1.19 லட்சம் கோடி) என்.எம்.டி.சி.,(1.17 லட்சம் கோடி) ஸ்டேட் பாங்க் (96 ஆயிரம் கோடி) பெல் (84 ஆயிரம் கோடி) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல் உட்பட நான்கு தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில், இன்போசிஸ் நிறுவனம் 98 ஆயிரம் கோடி, டி.எல்.எப்., நிறுவனம் 84 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளன.
இந்த பட்டியலில், 11 முதல் 20க்குள் டி.சி.எஸ்.,ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன், லார்சன் டூப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ., ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நன்றி : தினமலர்


சிறிது இறக்கத்துடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை

நேற்று 461 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய மும்பை பங்கு சந்தையில் இன்று லேசான சரிவு காணப்பட்டது. காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே சந்தை சரிவில் இருந்தாலும் மதியத்திற்கு மேல் கொஞ்சம் மேலே வந்தது. ஆனால் மீண்டும் இறங்கி விட்டது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 44.21 புள்ளிகள் ( 0.3 சதவீதம் ) மட்டும் குறைந்து 14,900.76 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 13.6 புள்ளிகள் ( 0.3 சதவீதம் ) மட்டும் குறைந்து 4,468.70 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், பேங்கிங், ரியாலிடி, பார்மா நிறுவன பங்குகள் அதிகமாக விற்கப்பட்டன. டெலிகாம், ஆயில் மற்றும் ஆட்டோ நிறுவன பங்குகள் வாங்கப்பட்டன.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை 105 டாலராக குறைந்தது

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்திருக்கிறது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பான ஓபக் இன் கூட்டம் இன்று நடக்க இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 55 சென்ட் குறைந்து 105.79 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 14 சென்ட் குறைந்து 103.30 டாலராக இருக்கிறது. சமீப காலமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருவதை அடுத்து, இன்று மாலை நடக்க இருக்கும் ஓபக் அமைப்பு கூட்டத்தில், எண்ணெய் எடுக்கும் அளவை குறைக்கலாமா என்று விவாதிப்பார்கள் என தெரிகிறது. இப்போது சப்ளை அளவு அதிகமாக இருக்கிறது என்றும் எனவே எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்றும் ஓபக் அமைப்பு நாடுகளான வெனிசுலா, ஈரான், அல்ஜீரியா மற்றும் லிபியா கூறுகின்றன. அதே நேரம் உற்பத்தியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்று குவைத், யு.ஏ.இ., ஈக்வாடர் நாடுகள் கூறுகின்றன. உலகில் எடுக்கப்படும் மொத்த கச்சா எண்ணெய்யில் 40 சதவீதம் ஓபக் அமைப்பு நாடுகளில்தான் எடுக்கப்படுகிறது. இப்போது அவைகள் நாள் ஒன்றுக்கு 3,06,70,000 பேரல்கள் கச்சா எண்ணெய்யை எடுக்கின்றன.
நன்றி : தினமலர்


வணிக வாகன தயாரிக்கும் புது திட்டம் அசோக் லேலண்டுடன் அரசு ஒப்பந்தம்

வணிக வாகனங்கள் தயாரிக்கும், நான்காயிரத்து 150 கோடி ரூபாய் முதலீட்டிலான புதிய திட்டங்களைச் செயல்படுத்த முதல்வர் கருணாநிதி முன்னிலையில், அசோக் லேலண்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வணிக வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமான அசோக் லேலண்டு, சென்னைக்கு அருகில் எண்ணூரில் மட்டுமன்றி, ஓசூரில் இரண்டு ஆலைகள், ராஜஸ்தானில் ஒன்று, மகாராஷ்டிராவில் ஒன்று என ஐந்து உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. பயணிகளுக்கான சொகுசுக் கார், விளையாட்டுப் போட்டிகளுக்கான வாகனங்கள், இலகுரக வணிக வாகனங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஜப்பான் நாட்டின் 'நிசான் மோட்டார்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, இலகுரக வணிக வாகனத் திட்டத்தை மூன்று கூட்டு முயற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த உள்ளது.
மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் உற்பத்தித் திறன் கொண்ட நடுத்தர ரக மற்றும் கனரக வணிக வாகனங்கள் தயாரிப்பதை தனது சொந்த திட்டமாகவும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற இடங்களில் நான்காயிரத்து 150 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய இருக்கும் இத்திட்டங்கள் முழுத்திறனுடன் செயல்படும்போது, நான்காயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும், 13 ஆயிரத்து 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இத்தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழக அரசு சார்பில் தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, அசோக் லேலண்ட் சார்பில் அதன் மேலாண்மை இயக்குனர் சேஷசாயி, நிசான் நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் ஆன்ட்ரூ பால்மர் ஆகியோர் கையெழுத்திட்டனர். அசோக் லேலண்ட் சார்பாக ஜி.பி.இந்துஜா, டி.ஜி.இந்துஜா, சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும், நிசான் நிறுவனத்தின் சார்பாக தகாஷி டெராடா, நகாடா ஆகியோரும் உடாநிருந்தானர்.
நன்றி ; தினமலர்

Monday, September 8, 2008

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் லட்சுமி மிட்டல்

அமெரிக்க பிசினஸ் பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ், வாழ்நாள் சாதனையாளர் விருதை லட்சுமி மிட்டலுக்கு இன்று வழங்குகிறது . சர்வதேச அளவில் தொழில்துறையில் சாதனை புரியும் மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் இன்றிரவு நடக்கும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது. உலக அளவில் 160 பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள தொழில்களின் அதிபர்கள் சுமார் 450 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த வருடம் ஜூன் மாதத்தில்தான் உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரராக லட்சுமி மிட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிறுவனத்தின் அப்போதைய மதிப்பு 45 பில்லியன் டாலர்கள். ராஜஸ்தானில் பிறந்த லட்சுமி மிட்டல், 1976ம் ஆண்டு மிட்டல் ஸ்டீல் கம்பெனியை நிறுவினார். பின்னர் அவர் உலகம் முழுவதும் உள்ள பல ஸ்டீல் கம்பெனிகளை வாங்கி குவித்தார். 2006ம் ஆண்டு ஆர்செலர் கம்பெனியை வாங்கியபின் உலகில் அதிகம் ஸ்டீல் உற்பத்தி செய்பவராக லட்சுமி மிட்டல் உயர்ந்தார்.

நன்றி : தினமலர்


அணு எரிபொருள் சப்ளைக்கான தடை நீங்கியதால் இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்

45 நாடுகளை உறுப்பினராக கொண்ட அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அமைப்பு, இந்தியாவுக்கு எதிராக விதித்திருந்த தடையை விலக்கி இருக்கிறது. கடந்த 34 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டிருப்பதை அடுத்து விரைவில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. காலை வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் ( 4 சதவீதத்திற்கும் கூடுதலாக ) உயர்ந்திருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 4500 புள்ளிகளுக்கு மேல் போய் விட்டது. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால், கடும் மின்சார தட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவில் அந்த குறை விலகி விடும் என்றும் இதனால் தொழில்துறை நன்கு வளர்ச்சி அடையும் என்றும் சொல்கிறார்கள். இது தவிர சிங்கூரில் இருக்கும் டாடா மோட்டார்ஸ்க்கு எதிரான போராட்டத்தை மம்தா பானர்ஜி விலக்கிக்கொண்டதால் அங்கு மீண்டும் உற்பத்தி துவக்க ஆரம்பித்து விடும் என்பதால் டாடா மோட்டார்ஸின் பங்குகள் இன்று 5.5 சதவீதம் உயர்ந்திருந்தன. இதன் காரணமாக இன்று காலை 9.57 க்கு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 617.30 புள்ளிகள் ( 4.26 சதவீதம் ) உயர்ந்து 15,101.13 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 4.05 சதவீதம் உயர்ந்து 4,528.65 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்


ஆசிய 'டாப்' நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் 'டாப்'

ஆசியாவின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இரு இடங்களை இந்தியாவைச் சேர்ந்த சீமன்ஸ் இண்டியா மற்றும் யுனிடெக் ஆகியவை பிடித்துள் ளன. ஆசிய நாடுகளில் சிறந்து விளங்கும் 50 நிறுவனங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல நிதித்தறை இதழ் 'பிசினஸ் வீக்' இதை தயார் செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த டி.சி.எஸ்., டி.எல்.எப்., டெக் மகிந்திரா மற்றும் ஐ.டி.சி., உட்பட 10 நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. பட்டியலில் சீனாவைச் சேர்ந்த எட்டு, ஹாங்காங்கைச் சேர்ந்த ஆறு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனியில் பிரபல சீமன்ஸ் நிறுவனத்தின் இந்திய நிறுவனம் சீமன்ஸ் இண்டியா. அதுபோல, கட்டுமான சேவையில் உள்ள நிறுவனம் யுனிடெக். இந்த இரு நிறுவனங்களை அடுத்து, சீனாவைச் சேர்ந்த அலிபாபா டாட் காம் மற்றும் மோலிபோடினம், ஜப்பானைச் சேர்ந்த இம்பெக்ஸ் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. முதல் 20 இடங்களுக்குள் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மருந்து நிறுவனம் சிப்லா(ஆறாவது), ஏ.பி.பி., இண்டியா(12), டெக் மகிந்திரா(13), இந்துஸ்தான் சிங்க்(17), டி.எல்.எப்., (18), பெல்(27), ஐ.டி.சி.,(45) மற்றும் டி.சி.எஸ்., (50) ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. வர்த்தக ரீதியாக இந்த நிறுவனங்களுக்கு எந்த அளவில் செல்வாக்கு உள்ளது என்பதை பிரதிநிதிகளின் ஒட்டெடுப்பு மூலம் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற சில முன்னணி நிறுவனங்கள், உலக அளவில் கொடிகட்டிப்பறக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


Sunday, September 7, 2008

ஏறி இறங்கும் சந்தையிலும் தொடர்கிறது ஆடுபுலி ஆட்டம்

பங்குச் சந்தை போகும் போக்கு அபாயகரமாக உள்ளது. 'தொழில் நுட்ப பகுப்பாய்வு, அடிப்படை வலுவாக உள்ளது' என்ற பேச்சுகள் எல்லாம் எடுபடாமல் போய்விட்டது. 15 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சந்தை நிலை பெற்றால் ஏறுமுகம் தான் என்ற நிலையும் மாறியுள்ளது. சமீபகாலமாக, 500 புள்ளிகள் கூடினால், அடுத்த நாளே 500 புள்ளிகளும் காணாமல் போய்விடுகின்றன. கடந்த வியாழன் அன்று இந்தியச் சந்தைகளில் லாப நோக்கில் விற்பவர்கள் அதிகம் இருந்தனர். சந்தை 15,000 புள்ளிகளுக்கு மேல் செல்லும் போதெல்லாம் விற்பவர்கள் பலர் இருக்கின்றனர்.
இது தவிர, சந்தை தற்சமயம் கீழே இறங்கியிருந்த போது டிரேடிங் நோக்கத்தோடு வாங்கியவர்கள் எல்லாம், கிடைத்த லாபம் போதும் என்று விற்கமுற்படுகின் றனர். இதனால், சந்தை கீழே இறங்குகிறது. வியாழன் அன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 150 புள்ளிகளை இழந்திருந் தது.
அன்று, அமெரிக்காவில் பங் குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு உலகளவில் பல பாகங்களிலும் எதிரொலித்தது. அதாவது, அங்கு வேலையில்லாதவர்கள் தங்களது அடிப்படை வசதிகளுக்காக ஒரு உதவித் தொகைக்காக விண்ணப் பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருவதாக வந்த புள்ளி விவரத்தை வைத்து, அங்கு பங்குச் சந்தைகள் 3 சதவீதம் வரை கீழே விழுந்தது. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட பெரிய சரிவு இது தான். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குமோ என்ற கவலை வேறு சேர்ந்து கொண்டது. இதுவும் போதாது என பணவீக்கம் கடந்த வாரத்தை விட மிகச்சிறிய அளவே குறைந் திருந்தது. கடந்த வாரம் 12.40 சதவீதமாக இருந்தது, இந்த வாரம் 12.34 சதவீதமாக குறைந்துள்ளது. சிறிது அதிகமான குறைவை எதிர்பார்த்திருந் தனர். இவையெல்லாம் சேர்ந்து பங்குச் சந்தையை ஒரு புரட்டு புரட்டி விட்டது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 415 புள்ளிகள் குறைந்து 14,483 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 95 புள்ளிகள் குறைந்து 4,352 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
புதிய வெளியீடுகள்: யூகோ வங்கி தனது புதிய வெளியீட்டை வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொண்டு வரும் எனவும், அது, ரூ. 50 முதல் 60 விலைக்குள் இருக்கும் எனவும், வெளியீடு 500 கோடி ரூபாய் அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வங்கியின் பங்குகள் மேலே சென்றன. இது போல பெரும்பாலும் எல்லா வங்கிகளும் தங்களுடைய மூலதனத்தை அதிகப்படுத்துவதற்காக புதிய வெளியீடுகளை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. வரப்போகும் ஐந்தாண்டுகளில் எல்லா வங்கிகளும் பெருமளவில் மூலதனத்தை அதிகரிக்க வேண் டிய கட்டாயத்தில் உள்ளன. டாலர் கூடுகிறது; ரூபாய் குறைகிறது: இந்தியாவின் முக்கியமான இறக்குமதிப் பொருட்களில் ஒன்று கச்சா எண்ணெய். இறக்குமதி செய்த கச்சா எண் ணெய்க்கு கொடுக்க வேண்டி, பொதுத்துறை நிறுவனங்கள் டாலரை வாங்கும் போது அதன் மதிப்பு கூடுகிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி கூடிக்கொண்டே தான் போகிறது. அதாவது உபயோகம் கூடிக்கொண்டே போகிறது. ஆதலால் அதிகம் டாலர் தேவையாக உள்ளது. விலையை எவ்வளவு கூட்டினாலும் உபயோகம் கூடிக் கொண்டே தான் போகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் 795 டாலர் அளவிற்கு இறங்கி வந்துள்ளது. ஆனால், அதே சமயம் ஒரு டாலரின் மதிப்பு 44.67 வரை கூடியுள்ளது. ஆதலால், தங்கம் விலையில் அதிகம் மாற்றம் ஏற்படவில்லை. 20 நாட்கள் முன்பு ஒரு டாலர் 42.30 அளவில் இருந்தது; இது ஆச்சரியமான ஏற்றம் தான். இறக்குமதியாளர்களுக்கு திண்டாட்டம் தான். ரிலையன்ஸ் முதலிடம்: ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. மேலும், சிஸ்டமேட்டிக் இன்வஸ்மென்ட் பிளானில் 10 லட்சம் அக்கவுன்ட்களை பெற்று முதலிடம் வகிக்கிறது. அதாவது, மியூச்சுவல் பண்டில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடுவது என்ற திட்டத்தில். மேலும், பொதுவாகவே மியூச்சுவல் பண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2.77 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வரும் வாரம் எப்படி இருக்கும்? இந்திய அளவில் செயல்பாடுகளில் பெரிய மாறுதல்கள் இல்லாவிடினும், இந்திய பங்குச் சந்தைகளில் மாற்றங்கள் உலகளவில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தும் இருப்பதால் அதில் ஏதும் பெரிய மாறுதல்கள் இல்லாத பட்சத்தில் அடுத்த வாரம் 14,500 முதல் 15,000க் குள்ளேயே இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குறைந்த முகமதிப்பில் பங்குகளை வாங்கிப்போட்டவர்கள் எல்லாம், ஏறி இறங்கும் சந்தையில் ஆடு புலி ஆட்டம் ஆடிவருகின்றனர். இது அவர்கள் நீண்ட நாட்களாக சந்தையில் தாக்குபிடித்து பாடம் கற்று கொண்டதால் வந்த பயன். இந்த ஆட்டத்தை குறிப்பிட்ட சில பங்குகளின் திடீர் ஏற்றத்தையும், இறக்கத்தையும் வைத்தே கணித்துவிடலாம். நிறுவனங்களின் அரையாண்டு முடிவுகள், அட்வான்ஸ் டேக்ஸ் என சாதகமான அம்சங்கள் இருந்தாலும் அணுசக்தி ஒப்பந்தமும் முக்கிய காரணியாக இருக்கும்.
இருப்பினும் தொடர்ந்து உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தேர்தல் அணிவகுப்பு காத்து இருக்கிறது. அதுவரை சந்தை நித்திய கண்டம் பூர்ண ஆயுசாக சென்று கொண்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே, ஜாக்கிரதையாக கையாள்பவர்களுக்கு கவலையிருக்காது.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


400 நாள் பிக்சட் டிபாசிட் இப்போதைக்கு நல்லது

பணவீக்கம் படு மோசமான ஏற்றம், பங்குச் சந்தையோ கையை கடித்து விட்டது. கையில் இருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்?
இந்த கேள்வி, பலரிடம் உள்ளது. வீடு வாங்கலாம் என்றால், வீட்டுக் கடன் மீதான வட்டிவீதம் கூரையை பீய்த்துக்கொண்டு எங்கோ எகிறி விட்டது. அது போலத்தான் வாகன கடன் வட்டிவீதமும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யலாம் என்று கடந்த காலத்தில் பணத்தை போட்ட நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலரும், இப்போது கடும் பீதியில் உள்ளனர். கையில் இருக்கும் பணத்தை காப்பாற்றிக் கொள்வதே இவர்களுக்கு சிரமமாக உள்ளது. நிதி ஆலோசகர்கள் பலரும் கூறுவது என்னவென்றால், இப்போதுள்ள சூழ்நிலையில், பிக்சட் டிபாசிட் தான் லாபம் தரும் முதலீடு என்று 'அடித்துச்' சொல்கின்றனர். அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பிக்சட் டிபாசிட் திட்டம் உள்ளது; அதுபோல, வேறு சில நிதி நிறுவனங்களும் பிக்சட் டிபாசிட் திரட்டும் திட்டங்களை வைத்துள்ளன. இவற்றில் இதுவரை போதுமான அளவுக்கு வட்டி கிடைக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பணவீக்கம் 14 சதவீதத்தை தொட்டுள்ள நிலையில், பல கடன்கள் மீதான வட்டிவீதம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதுபோல, டிபாசிட்கள் மீதான வட்டிவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏ.பி.என்., ஆம்ரோ, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இண்டியா, டெவலப்மென்ட் கிரெடிட் பாங்க் உட்பட பல வங்கிகளில் பிக்சட் டிபாசிட்டில், 400 நாள் திட்டத்தை வைத்துள்ளன. இந்த திட்டத்தில் வட்டிவீதம் 9.5 முதல் 10 சதவீதம் வரை. சில வங்கிகள் அதற்கு மேலும் வட்டி தருகின்றன. பணவீக்கத்துடன் கணக்கிடும் போது, பிக்சட் டிபாசிட்டில் போட்ட பணத்துக்கு கிடைக்கும் வட்டித்தொகை லாபகரமானது தான். 'பணவீக்கம் குறையும் என்று நிதி அமைச்சரில் இருந்து பலரும் நம்பிக்கை தெரிவித்து விட்டனர். அப்படி பார்க்கும் போது, பிக்சட் டிபாசிட்டில் போட்ட பணத்துக்கு இதே வட்டிவீதம் தான் கடைபிடிக்கப்படும். ஆனால், பணவீக்கம் குறைந்து விடும். அப்போது, லாபம் அதிகம் தானே' என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
நன்றி : தினமலர்


Saturday, September 6, 2008

ஏ.டி.எம்.,மில் 'செக்'கை போடலாம்: விரல் ரேகை பாதுகாப்பும் வருது

வங்கிகளின் ஏ.டி.எம்., தொழில்நுட்பத்தில் அதிரடி மாற்றங்கள் வரப் போகின்றன. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளும், பணத்துக்கு பாதுகாப்பும் கிடைக்கப்போகிறது.
'ஆட்டோமேட்டட் டெல்லர் மிஷின்' என்று அழைக்கப்படும் ஏ.டி.எம்., மிஷின்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. வங்கிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம்; பணத்தை டிபாசிட் செய்யவும் செய்யலாம். ஆனால், ஏ.டி.எம்., கார்டை போலியாக தயாரித்து அப்பாவிகள் பணத்தை சூறையாடும் கும்பல்கள் அதிகரித்து விட்டன. சர்வதேச அளவில் உலவும் இந்த கும்பல் களை ஒடுக்க ஏ.டி.எம்., தொழில் நுட்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வர தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிரமாக உள்ளனர். சர்வதேச அளவில் ஏ.டி.எம்., மிஷின்களில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில மாற்றம் மட்டும், இந்தியாவில் அமல் படுத்தப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில், நான்கு முக்கிய வசதிகளை ஏ.டி.எம்., மிஷின்களில் தர வங்கிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான தொழில்நுட்ப வசதிகள் அமலாக உள்ளதால், ஏ.டி.எம்., மிஷின்கள், பணம் எடுக்க உதவும் இயந்திரமாக மட்டுமின்றி, பல வகையில் வாடிக்கையாளருக்கு உதவுவதாகவும், பணத்துக்கு 100 சதவீத பாதுகாப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செக் டிபாசிட்: ஏ.டி.எம்., மிஷினில் 'செக்'கை டிபாசிட் செய்ய முடியாது. ஆனால், டில்லியில் இப்போது சில வங்கிகள் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளன. மிஷினில் உள்ள ஸ்கேன் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் 'செக்'கை வைத்ததும் 'ஸ்கேன்' செய்து கொள்ளும். அதில் உள்ள தொகையை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கும். அதே நேரத்தில், செக் ஜெராக்ஸ் நகலும் வெளித்தள்ளும். வழக்கமான ஏ.டி.எம்., மிஷன் தயாரிப்பு விலை எட்டரை லட்சம் ரூபாய். இந்த புதிய மிஷின் விலை 13 லட்சத்தை தொடுகிறது. ரொக்கம் டிபாசிட்: பல நாடுகளில் ஏ.டி.எம்.,மில் ரொக்கப்பணத்தை டிபாசிட் செய்யும் வசதி உள்ளது. இந்தியாவில் உள்ள சில வெளிநாட்டு வங்கி ஏ.டி.எம்., களில் ரொக்கத்தை டிபாசிட் செய்ய முடியும். அதை மிஷின் தானியங்கி எண்ணி, அதை கணக்கில் வரவு வைத்து, ரசீதும் தரும். சில வங்கிகளில், கவரில் பணத்தை போட்டு, எவ்வளவு தொகை என்று குறிப்பிட்டு விட்டால், அதை மறுநாள் ஊழியர்கள் எண்ணி, வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைப்பர். அதற்கும் மிஷின் ரசீது தரும். ஒரு சில வங்கிகளில் உள்ள ரொக்கம் எண்ணும் முறை, இனி பல வங்கிகளில் அமலாக உள்ளது. இதனால், அப்போதே டிபாசிட் செய்த பணம் வரவு வைக்கப்பட்டு விடும். மொபைல் போனில் செக்: மொபைல் போன் மூலம் யாருக்காவது 'செக்' அனுப்ப முடியுமா? ஏன் முடியாது... அதற்கும் தொழில் நுட்ப வசதி வந்து விட்டது. அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இந்த வசதி உள்ளது. மொபைல் போனில் வாடிக்கையாளர் தன் கணக்கில் இருந்து குறிப்பிட்ட பணத்தை மற்றவருக்கு அனுப்ப முடியும். மொபைலில் தகவல் அனுப்பி விட்டால், அடுத்தவர், தன் மொபைல் மூலம், எலக்ட்ரானிக் செக் பெற்றுக்கொள்ள முடியும். அதுபோல, மற்றவரிடம் இருந்தும் மொபைல் மூலம் எலக்ட்ரானிக் செக் பெற்றுக் கொள்ள முடியும். கைரேகை பதிவு: போலி ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி அப்பாவிகளின் பணத்தை 'லவட்'டும் கும்பல்களை ஒடுக்க, ஏ.டி.எம்., வாடிக்கையாளர்களின் விரல் ரேகை பதிவு முறையை அமல்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. ஜப்பானில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., மிஷினில் கார்டை செருகி, 'பின்' நம்பரை பதிவு செய்வதற்கு பதில், ஒரு செ.மி., உயரத்துக்குள் கைரேகையை காட் டினால், ஸ்கேன் செய்யப் பட்டு, உடனே ஏ.டி.எம்.,மில் உங்கள் கணக்கு திறந்து கொள்ளும். நீங்கள் பணம் எடுக்கலாம். கைரேகை பதிவு சரியாக பதிவாகாத நிலையில் மட்டும் 'பின்' நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
நன்றி : தினமலர்


Friday, September 5, 2008

ஐரோப்பாவுக்கு போகும் 'ஐ 20' சென்னையில் தயாரிக்குது ஹுண்டாய்!

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள 'ஐ 20' ரக கார்களை, தன் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்ட 'ஐ 10' ரக கார் போல இல்லாமல், புதிய ரக கார், சர்வதேச அளவில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சர்வதேச கார் கண்காட்சி நடக்கிறது. அதில், ஹுண்டாய் நிறுவனம் தன் புதிய ஆறு கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார்களை சர்வதேச அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த 'ஐ 20' ரக கார்களை ஆண்டுக்கு ஆறு லட்சம் எண்ணிக்கையில் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நன்றி : தினமலர்


மின்சார இண்டிகா: டாடா புது திட்டம்

மின்சாரத்தால் இயங்கும் இண்டிகா காரை தயாரிக்க டாடா கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், இதை இந்தியாவில் தயாரிக்கப்போவதில் லை. நார்வேயில் தயாரித்து, அங்கு விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது; அடுத் தாண்டு இந்த திட்டம் நிறைவேறியதும், 2010ல் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று தெரிகிறது . டில்லியில் நடந்த தொழில் வளர்ச்சி கண் காட்சியில் இந்த காரின் மாதிரி வடிவத்தை டாடா நிறுவனம் வெளியிட்டது. ஏற்கனவே, உலகின் மிக மலிவு விலை கார் என்று ஒரு லட்சம் ரூபாய் நானோ காரை அறிமுகம் செய்த டாடா, மின்சார இண்டிகா கார் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

'எரிபொருள் மிச்சமாகிறது; உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்காது என்ற வகையில், மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிப்பதில் பல நிறுவனங் கள் தயாராகி விட்டன. அந்த வகையில், எங்கள் பதில் இண்டிகா மின்சார கார். வெளிநாடுகளில் வாகன காஸ் விலை பல மடங்கு உயர்ந்து வருவதால், இதுபோன்ற மின்சார கார்களுக்கு வரவேற்பு இருக்கும்' என்று டாடா நிறுவன நிர்வாக இயக்குனர் ரவிகாந்த் கூறினார். நிசான், மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், மின்சார காரை தயாரிக்க தீவிரம் காட்டி வருவதை அடுத்து, அமெரிக்காவின் பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், 'செவி வோல்ட்' என்ற மின்சார ரக காரை தயாரிக்க உள்ளது. டாடா நிறுவனம் தயாரிக்கும் மின்சார காரில் இடது பக்கத்தில் ஸ்டீரிங் பொருத் தப்பட்டிருக்கும். நார்வேயின் பிரபல நிறுவனம் ஒன்றுடன் கூட்டுசேர்ந்து இந்த மின்சார கார் தயாரிப்பு திட் டத்தில் டாடா இறங்கியுள்ளது. 

நன்றி : தினமலர்



Thursday, September 4, 2008

ஏர்பஸ் விமானங்களுக்கு கிராக்கி அதிகரிப்பு

சர்வதேச அளவில் விமானப்போக்குவரத்து அதிகரித்துவருவதை அடுத்து, ஏர்பஸ் விமானங்களுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, தனியாரில் முன்னணியில் உள்ள ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்குவதில் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இன்னும் மூன்று ஆண்டில், இந்தியாவில் இருந்து தான் அதிக ஆர்டர்களை எதிர்பார்க்கிறோம்' என்று நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத்தலைவர் கிரன் ராவ் கூறினார். விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஏர்பஸ் மற்றும் போயிங். இரண்டுமே, இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானங்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றன. கடந்த 2005ல், இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 500 விமானங்களை இந்திய நிறுவனங்களுக்கு விற்றன. மிக அதிக அளவில் விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கியது அப்போது தான். மீண்டும் 2012க்குள் 500 விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கும் என்று ஏர்பஸ் விமான நிறுவனம் எதிர்பார்க்கிறது. 'விமானப்போக்குவரத்து வர்த்தகத்தில் சற்று தொய்வு இருந்தாலும், இப்போது சீராகி வருகிறது. ஏர்பஸ் விமானங்கள் ஆர்டர் கொடுத்து விட்டு வாபஸ் பெறுவது குறைந்து விட்டது. கடந்த 2005ல் ஆர்டர் செய்யப்பட்ட விமானங்கள் அடுத்த இரண்டாண்டுகளில் டெலிவரி செய்யப் படும். அப்போது மீண்டும் அதிக அளவில் ஆர்டர் வரும்' என்றும் கிரன் ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.  
நன்றி : தினமலர் 


கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: கமர்சியல் சிலிண்டர் விலை சரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் கமர்சியல் காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ. ஆயிரத்து 190 ரூபாய் 99 காசுகளாக குறைந்தது. ஆயில் நிறுவனங்கள் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மற்றும் 19.2 கிலோ எடையுள்ள வர்த்தக காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்குவதால் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.342.85க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைகளுக்கான சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்காததாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், கடந்த எட்டு மாதமாக சிலிண்டர் விலை படிப்படியாக அதிகரித்தது. கடந்த ஜன., மாதம் ரூ.ஆயிரத்து 148 ஆக இருந்த சிலிண்டர் பிப்., மாதம் ரூ.ஆயிரத்து 153 ஆகவும், ஜூன்1ம் தேதி முதல் ஆயிரத்து 172 ரூபாய் 20காசுகளாகவும், ஜூலை மாதம் ஆயிரத்து 231 ரூபாய் 20காசுகளாகவும், கடந்த மாதம் ஆயிரத்து 250 ரூபாய் 90 காசுகளாகவும் அதிகரித்தது. சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தால், நேற்று கடைகளுக்கான சிலிண்டர் விலை ஆயிரத்து 190 ரூபாய் 99 காசுகளாக குறைந்தது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் சிலிண்டர் விலை 59 ரூபாய் 91 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
நன்றி : தினமலர்

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலரை விடவும் குறைவு

சில வாரங்களுக்கு முன்பு வரை ஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குஸ்டாவ் என்ற புயல் தாக்கும் அச்சம் இருந்ததால் அப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இப்போது அந்த புயலும் அங்கிருந்து நகர்ந்து விட்டதால் விலை குறைய ஆரம்பித்து விட்டது. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 110 டாலரை விடவும் குறைந்து, பேரலுக்கு 109.35 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 108.06 டாலராக இருந்தது. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவாறு 147 டாலருக்கும் மேல் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது 110 டாலறை விடவும் குறைந்து விட்டது.உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்துள்ளதும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையை நிமிர வைத்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

சாதாரணமாக தரையில் எண்ணெய் விழுந்துவிட்டால் அது நம்மை வழுக்கி விடும். ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டால், அது பங்குச் சந்தையில் எல்லாரையும் தூக்கி விடும். அது தான் நேற்று முன்தினம் நடந்தது. எண்ணெய் வரலாறு காணாத அளவு வழுக்கி விழுந்தது(விலையில்). அதாவது, சமீபத்தில் ஒரு பேரல் 147 டாலர் அளவு இருந்த கச்சா எண்ணெய், நேற்று முன்தினம் 106 டாலர் அளவிற்கு வந்தது. இது, சந்தையை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் லாப வாரமாகவே இருந்தது. நேற்று முன்தினம் கிடைத்த லாபம், சமீப காலத்தில் கிடைத்த லாபங்களில் பெரிதான ஒன்று. அது, திங்களன்று ஏற்பட்ட சிறிய சரிவையும் ஈடுகட்டி விட்டது. நேற்று சந்தைக்கு விடுமுறையாதலால் முதலீட்டாளர்களும் சந்தோஷத்தில் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி இருப்பார்கள். உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால், திங்களன்று சரிவிலேயே துவங்கிய சந்தை முடிவாக 66 புள்ளிகள் நஷ்டத்தில் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சந்தை 200க்கும் அதிகமான புள்ளிகளை இழந்திருந்தது. வங்கிப் பங்குகள் தான் சந்தையைக் காப்பாற்றின. நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி, சந்தையை நிமிர வைத்தது. அதுவும், 500 புள்ளிகளுக்கு மேலே. வங்கிப் பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள், ஏர்லைன்ஸ் கம்பெனிகளின் பங்குகள் ஆகியவை மேலே சென்றன. விமான எரிபொருள் விலைகளும் மிகவும் குறைந்துள்ள நிலையிலும் விமானக் கட்டணங்கள் குறையாதது ஒரு ஆச்சரியமான விஷயம் தான். மக்களும் குறைந்த கட்டண விமானப் பயணங்களுக்கு அடிமையாகி விட்டதால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். நேற்று முன்தினம் முடிவாக மும்பை பங்குச் சந்தை 551 புள்ளிகள் கூடி 15,049 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 155 புள்ளிகள் கூடி 4,504 புள்ளிகளுடன் முடிவடைந்தது. 15,000க்கு மேல் என்றாலே தற்போதெல்லாம் ஒரு நிம்மதி வருகிறது. கச்சா எண்ணெய் விழுந்தால் சந்தை ஏன் மகிழ்கிறது? மக்களின் அத்தியாவசியப் பொருட்களில் கச்சா எண்ணெயும் ஒன்று. கச்சா எண்ணெய் விலை கூடும் போது அதை அதிகம் உபயோகிக்கும் கம்பெனிகளின் பொருட்களின் விலையும் கூடும். மேலும் அதிகம் உபயோகிக்கும் சரக்கு லாரிகள், டிரக்குகள் தங்கள் கட்டணங்களை கூட்ட வேண்டியிருக்கும். அப்படி பொருட்களின் விலைகள் கூடும் போது பணவீக்கம் கூடுகிறது. அதுபோல கச்சா எண்ணெய் விலை விழும் போது பொருட்களின் விலையும் குறையும், பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்புகளில் தான் சந்தை மகிழ்கிறது. மேலும், சமீபத்தில் எண்ணெய் வள நாடுகளை ஒட்டி வந்த வந்த புயல் எந்த நாட்டையும் தாக்காமல் சென்றதால் அதுவும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
புதிய வெளியீடு: செபி கடந்த மாதம் அறிவித்த புதிய விதிகளின் படி வரும் புதிய வெளியீடு 20 மைக்ரான். இந்த வெளியீடு வரும் 11ம் தேதி முடிவடையும். 43.5 லட்சம் பங்குகள் வெளியிடப்படவுள்ளன. நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ரூபாய் 50 முதல் 55 வரை. பெயின்ட், பிளாஸ்டிக் கம்பெனிகளுக்கு தேவையான அல்ட்ரா பைன் மினரல் தயாரிக்கிறது இந்தக் கம்பெனி.
சந்தையும் 2008ம்: டிசம்பர் 31, 2007 அன்று சந்தை 20,286 புள்ளிகளில் இருந்தது. தற்போது 5,237 புள்ளிகள் குறைந்து நிற்கிறது. சதவீத கணக்கில் பார்த்தால் 25.81 சதவீதம் சந்தை கடந்த வருடத்தை விடக்குறைந்துள்ளது.
கடந்த டிசம்பரை விட, இந்த வருடம் ஜனவரி 10ம் தேதி அதிகபட்ச அளவான 21,206 புள்ளிகளை தொட்டிருந்தது. அதிலிருந்து பார்த்தால் சந்தையில் 6,156 புள்ளிகள் குறைந்துள்ளது. சந்தையில் கடந்த வருடங்களில் பல சரிவுகள் இது போல ஏற்பட்டிருந்தாலும், பெரிய சரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சந்தை 15,000 தாண்டி இருப்பதே ஒரு நல்ல செய்தி தான். இது தொடர்ந்தால் சந்தைக்கும் நல்லது, முதலீட்டாளர்களுக்கும் நல்லது. சென்ற முதலீட்டாளர்கள் திரும்பி சந்தைக்கு வருவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


Wednesday, September 3, 2008

மீனவ பயிற்சி நிலையம்: டாடாவுடன் அரசு ஒப்பந்தம்

நவீன தொழில்நுட்பத்துடன் மீனவ தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிலைய திட்டத்தை நிறுவ 'டாடா' நிறுவனத்துடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
மீனவர்கள் மீன் பிடிப்பதிலும், மீன்களை சேதமின்றி பதப்படுத்தி விற்கவும், நவீன உத்திகளை கடைபிடித்து, அதிக வருவாய் ஈட்டுவதற்காக, வெளிநாடுகளில் உள்ளது போல கடலில் கூண்டுகளில் மீன் வளர்த்தல், நண்டு வளர்ப்பு போன்றவற்றில் மீனவர்கள் ஈடுபடவும், பாசி வளர்த்தல், மீன் பொருட் களை பதப்படுத்துதல் ஆகியவற்றை பெண் கள் மேற்கொள்ளவும், தேவையான பயிற் சியை அளிக்க, 'நவீன் மீன்பிடி தொழில் நுட்ப பயிற்சி மையம்' ஒன்று அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தை நிறைவேற்ற 'மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையம்- பிட்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப் பட்டது. இப்பயிற்சி மையத்தை அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காடு கிராமத்தில் 1.16 எக்டேர் நிலத்தை அசு இலவசமாக வழங்கியது. இத்திட்டத்துக்கு, லாப நோக்கம் ஏதுமின்றி தொழில்நுட்ப உதவி உட்பட அனைத் துவகை உதவிகளையும் வழங்க 'டாடா' நிறுவனம் முன்வந்தது.'டாடா' குழுமத்தின் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று காலை கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் மீன்வளத் துறை முதன்மைச் செயலர் லீனா நாயரும், 'டாடா' சார்பாக கிருஷ்ணகுமாரும் கையெழுத்திட்டனர். இத்திட்டத்தின் மூலம், 'டாடா' நிறுவனம் உருவாக்கும் சொத்துக் கள், திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசு, மீன்துறை, டாடா நிறுவனம் ஆகியவற்றுக்கும், பயனாளிகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு நிறுவனமாக 'பிட்' சங்கம் செயல்படும். மீனவ தொழில் நுட்ப பயிற்சி நிலையத்தின் ஆரம்ப கட்ட வளர்ச்சிப் பணிக்குரிய செலவுகளை மேற் கொள்ள, முதல்கட்ட உதவியாக ஒரு கோடி ரூபாய்க் கான காசோலையை முதல்வர் கருணாநிதி, இச்சங்கத்தின் கவுரவத் தலைவரான மீன் வளத் துறை முதன்மை செயலர் லீனா நாயரிடம் நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், மீன்வளத் துறை அமைச்சர் சாமி, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறைச் செயலர் ஞானதேசிகன், மீன்வளத் துறை ஆணையர் சம்பு கல்லோலிகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்றி : தினமலர்

தீயணைப்பு சான்றிதழே பெறாமல் ஐந்து மாடியில் கடை

'தீ விபத்து நடந்த சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை நிர்வாகத்தினர், தீயணைப்பு சான்றிதழ் பெறாமல் கடையை நடத்தியுள்ளனர். கடையில் தீயணைப்பு கருவிகள், தண்ணீர் எடுத்துச் செல்லும் பைப் லைன்கள் பெயரளவில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், தீயை விரைந்து அணைக்க முடியவில்லை,'' என தமிழக தீயணைப்புத் துறை இயக்குனரான கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணை போலீஸ் தரப்பில் நடந்து வருகிறது. தீப்பிடித்தது எப்படி என்ற விசாரணையில், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அச்சம்பவத்தில் இரண்டு உயிர்கள் பலியாகின. சம்பவ இடத்தை பார்வையிட்டேன். பல தவறுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.தீ விபத்து ஏற்பட்ட ஐந்து மாடிக் கட்டடத்தில், தரைதளத்தில் இருந்து ஐந்தாவது தளத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டு, கேட் வால்வு பொருத்தப்பட வேண்டும். அதை முறைப்படி செய்யாமல், பெயரளவில் செய்துள்ளனர். வெறும் பிளாஸ்டிக் பைப் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. கேட் வால்வு இல்லை; அதனால், விரைவில் தண்ணீரை, தீப்பிடித்த தளத்திற்கு கொண்டு செல்ல முடியாதது, விசாரணையில் தெரிய வந்தது.அது தவிர, விபத்து நடந்த கடையில், தீயணைப்புத் துறையினரால் வழங்கப்படும் சான்றிதழ் பெறவில்லை. அதனை பெறாமல் எப்படி கடையை நடத்தினர் என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு கருவிகள் பொருத்தப்படவில்லை. சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடைக்கு தீயணைப்புத் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. தீ விபத்து நடந்த நிறுவனத்தின் குறைகளை சுட்டிக்காட்டி, கோர்ட் டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த சம்பவம், தீயணைப்பு விதிகளை மீறும் அனைத்து நிறுவனத்திற்கும் பாடமாக இருக்க வேண்டும்.தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள வர்த்தக நிறுவனத்தினர் பலர், ஐகோர்ட்டில் பல்வேறு தடை உத்தரவுகளை வாங்கியுள்ளனர். மாநகராட்சி விதி முறையை மீறி அனுமதிக்கப்பட்ட தளங்களுக்கு மேல், ஏறக்குறைய எல்லா நிறுவனத்தினரும் கட்டடம் கட்டியுள்ளனர். அவர்கள் அதைக் குறிப்பிட்டு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் உள்ள வர்த்தக நிறுவனத்தினரை நேரில் அழைத்து, தீ தடுப்பு உத்திகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளோம். அத் துடன், வர்த்தக நிறுவனங்களில் பொருத்த வேண்டிய தீ தடுப்பு கருவிகள் உட்பட முக்கிய அம்சங்கள் குறித்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் செய்து முடிக்காவிட்டால் நடவடிக்கை தொடரும்.
தமிழகத்தில் 968 பெரிய அடுக்கு மாடிக் கட்டடங்கள் உள்ளன. அதில், சென்னையில் மட்டும் 661 கட்டடங்கள் உள்ளன. பல மாடி கட்டடங்கள் கட்டுபவர்களுக்கு, 2006ம் ஆண்டு ஐகோர்ட் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, இனிமேல் கட்டப்படும் புதிய கட்டடங்களை சுற்றி நாலாபுறமும் ஏழு மீட்டர் காலியிடம் அமைக்க வேண்டும். தீயணைப்பு சான்றிதழ் வழங்கும்போது இதனை கண்டிப்பாக பின்பற்ற உள்ளோம்.
கட்டடம் முழுதும் தீப்பற்றி எரியும்போது, கட்டடத்திற்குள் துளையிட்டு நுழைவதற்கு நவீன துளையிடும் கருவியை, இந்த விபத்தில் பயன்படுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த மெஷினின் மதிப்பு ரூ.50 லட்சத்தைத் தாண்டும். அதைத் தமிழக தீயணைப்புத் துறைக்கு வாங்க அரசிடம் அனுமதி கோரப்படும்.
இவ்வாறு ஷியாம் சுந்தர் கூறினார்.
நன்றி : தினமலர்