Saturday, August 8, 2009

காலையில் ஏறிய தங்கம் மாலையில் இறங்கியது

ஆபரணத் தங்கம் விலை, நேற்று கண்ணாமூச்சி காட்டியது. காலையில் ஏறிய விலை, மாலையில் சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்றது.
நேற்று முன்தினம் தங்கம் கிராம் 1,389 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, சவரன் 11 ஆயிரத்து 128 ரூபாய்க்கும், கிராம் 1,391 ரூபாய்க்கும் விற்றது. மாலை நிலவரப்படி, சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 112 ரூபாய்க்கும், கிராம் 1,389 ரூபாய்க்கும் விற்றது.
நன்றி : தினமலர்


பன்முகச் சந்தைப்படுத்தலால் யாருக்கு லாபம்...?

அண்மைக்காலமாக புற்றீசல்களாக பெருகி வருவது "சங்கிலித் தொடர்' விற்பனை முறையான எம்.எல்.எம். (பன்முகச் சந்தைப்படுத்தல்). இதில் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நட்பாசையில் ஏராளமான மத்தியதரக் குடும்பங்கள் இதில் இறங்குகின்றன.

ஏற்கெனவே இந்தை சந்தைப்படுத்துதலில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சக்கைப்போடு போட்டன. நாளடைவில் மோசடி எனப் பெயர் வாங்கிவிட்டன.
யாரைப் பார்த்தாலும் கையில் ஒரு உப தொழில் இருக்கும். நம்பிக்கையுடன் கையில் பேஸ்ட், சோப்பு, பினாயில் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சகிதமாக வலம் வந்துகொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் ஏராளமான கற்பனையில் படு சுவாரசியமாக இந்த விற்பனையில் ஈடுபட்டனர். விளைவு முதன்முதலில் சேர்ந்தவர்கள் பலர் நல்ல லாபம் ஈட்டினர். ஓரே குடும்பத்தில் பலர் உறுப்பினர் ஆனார்கள். ஆனால் முக்கால்வாசிப் பேர் உள்ளதும் போனதே என நொந்தனர்.

இந்த வர்த்தகத்தில் பல திட்டங்களும், முறைகளும் உள்ளன. அதில் வெற்றிகண்டவர்கள் சிலர் மட்டுமே. சாதாரணமாக, நேரடி வர்த்தகத்தைவிட இந்த வர்த்தகம்தான் எதிர்காலத்தில் நடைமுறையில் இருக்கும் என இத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறுவதுண்டு.

இன்று பல்வேறு ஆசை வார்த்தைகளை நம்பி ஏராளமானோர் இத் துறையில் இறங்கிவருகின்றனர். இதில் எத்தனை சதவிகிதம் பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பது கேள்விக்குறியே. குறிப்பாக, இந்த வர்த்தகமுறையில் சங்கிலித் தொடரை சரியாக முடிக்காதவர்கள் தோல்வியைத்தான் சந்திக்கின்றனர்.
ஆரம்பத்தில் வெறும் ரூ.6 ஆயிரம் கட்டினால் போதும். அப்புறம் பாருங்கள் நீங்கள் 24 வது மாதத்தில் அதிகம் லாபம் பெறலாம் என்பார்கள்.

24 மாதங்களுக்குப் பிறகு லாபம் கிடைக்காதவர்கள் கேள்வி கேட்டால், நீங்கள் மாதாமாதம் இத்தனை நபரைச் சேர்க்க வேண்டும், இவ்வளவு பொருள்களை விற்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகை கிடைக்கும் என்பார்கள்.

மாதத்துக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு சோப்பு, பேஸ்ட், பவுடரை வாங்கினால்தான் ரூ. 500 கிடைக்கும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் ஒருவருக்கு 20 சதவிகித லாபம் என்று வைத்துக் கொண்டாலும் ரூ.1000 கிடைக்கும்.

இங்கு அதுவும் கிடைப்பதில்லை. இதற்குப் பதிலாக வெளியில் அதிகமாக விற்பனையாகும் பொருள்களை ஏஜன்சி எடுத்தால் கூட 20 சதவிகித லாபம் போக தவணை முறை, பின் தேதியிட்ட காசோலை வசதி, இன்சென்டிவ், டிஸ்ப்ளே, இதர சலுகைகள் என குறிப்பிட்ட தொகையையும் நிறுவனத்தினரே தருகின்றனர்.

இப்படிப்பட்ட சலுகைகளை எல்லாம் விட்டுவிட்டு எம்எல்எம் முறையில் பொருள்களை வாங்குவது சிரமமானது என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இத் துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூச்சம், கெüரவம் இதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
ஒரு நபரை இந்த முறையில் சேர்ப்பதற்கு அவர்கள் வீட்டுக்குச் சென்று, போலியாக முகஸ்துதி செய்து, எப்படியாவது மனதை வசியப்படுத்த வேண்டியிருக்கிறது.

அப்படி தாராள மனசு வைத்து சேரும் நபர்கள் கேட்கும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கும் பதில் கூறுவதற்குள் அப்பாடா...என்ன பிழைப்பு என்ற கேள்வி மனதுக்குள் எழுவதுண்டு.

ஒருவழியாக குறிப்பிட்ட நபர்களை சேர்த்தபிறகு, அதன் பலன் எப்படியிருக்கும் என்றால், விடாமல் மீட்டிங் நடத்த வேண்டும். தேவையற்ற பொய்களைக் கூறியே ஆக வேண்டும்.

இதெல்லாம் தொடர்ந்து செய்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். ஆனால், எத்தனை பேர் இதைச் செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
இப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில், சவாலாக சிலர் இத் தொழிலில் வெற்றிபெற்றும்விடுகின்றனர்.

முழுநேரத் தொழிலாக பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். பகுதி நேரமாக பார்ப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.
இன்று ஏராளமானோர் பணத்தைக் கட்டி, கடினமான விதிமுறைகளின் காரணமாக போட்ட பணத்தையே திரும்ப வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இப்படி சேர்ந்த பணத்தை அந் நிறுவனங்கள் சுருட்டி வைத்துக் கொள்கின்றன. திரும்பத் தருவதுமில்லை. இப்படி இருந்தால் ஏழைகள் எப்படி இத்தொழிலை தொடரமுடியும் என்பதுதான் நமது கேள்வி.

மொத்தத்தில் இன்று புதிய எம்எல்எம் நிறுவனங்கள் முளைத்து வருவது நல்லதா கெட்டதா என்பதை உடனே கூறிவிட முடியாது. இதற்கும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தால் ஏமாற்றமடையாமல் தடுக்க வழி கிடைக்கும்.

கட்டுரையாளர் : எஸ். ரவீந்திரன்
நன்றி : தினமணி

காஷ்மீரின் இளம் துருக்கியர்கள்

மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முஸôபர் ஹுசைன் பெய்க், அண்மையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், 2006-ம் ஆண்டு நடந்த பாலியல் வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியது அவையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனால் ஆத்திரம் அடைந்த உமர் அப்துல்லா, இருக்கையை விட்டு எழுந்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சமாதானப்படுத்தும் புகைப்படங்கள் அடுத்த நாள் காலையில் பத்திரிகைகளில் வெளியானது.

"என்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. என் மீது அபாண்டமாக பழிசுமத்தப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் வரை பதவியில் நீடிக்க விரும்பவில்லை' என்று கூறிய உமர் அப்துல்லா, அன்று மாலையே ஆளுநர் என்.என்.வோராவைச் சந்தித்து நிபந்தனையுடன் கூடிய தமது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் வோரா, உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்டார். இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் உமர் அப்துல்லா பெயர் இல்லை. எனவே அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாத நிலையில் முதல்வர் பதவியில் தொடருமாறு உமர் அப்துல்லாவை ஆளுநர் வோரா கேட்டுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் பணியைத் தொடர்ந்தார் உமர் அப்துல்லா.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் முதல்வர் உமர் அப்துல்லா, ஆளுநர் வோராவிடம் கொடுத்த ராஜிநாமா கடிதம் மிகவும் கவனமுடன் தயாரிக்கப்பட்டிருந்ததுதான். "என் மீதான குற்றச்சாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் விடைகிடைக்க வேண்டும். நான் குற்றம் இழைத்தவன் எனத் தெரியவந்தால் எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று உமர் தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உமர் அப்துல்லா மிகவும் நுணுக்கமாக ராஜிநாமா கடிதத்தை எழுத உதவியது தந்தை பாரூக் அப்துல்லாதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. தில்லி செல்வதற்காக பாரூக் ஸ்ரீநகர் விமான நிலையத்துக்குக் காரில் சென்றுகொண்டிருந்தபோது, மாநில சட்டப்பேரவையில் உமர் அப்துல்லாமீது எழுந்த குற்றச்சாட்டு, அதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்த தகவல் கிடைத்து உடனடியாக காரைத் திருப்பி வீட்டுக்கு வந்தார். பின்னர் ராஜிநாமா கடிதத்தை எப்படி எழுத வேண்டும் என்று எடுத்துக்கூறி அவருக்கு உதவியுள்ளார்.

சோபியான் விவகாரம் வெடித்ததிலிருந்தே உமர் அப்துல்லாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பாரமுல்லாவில் நான்கு பேர் கொல்லப்பட்டது காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் கற்பழிப்புச் சம்பவத்தை முதல்வர் உமர் அப்துல்லா பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகக் கூறி புகாரை மறுத்துவந்தார். ஆனால், பின்னர் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்ற உண்மையை அவர் புரிந்துகொண்டார். இதற்குள் ஆளுங்கட்சிக்கு அவப் பெயர் ஏற்பட்டு விட்டது.

இந்த விவகாரத்தை அரசு சரியாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். ஒரு சாதாரண விஷயம் இப்படி விசுவரூபம் எடுக்கும் என்று உமர் நினைத்துப் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், கற்பழிப்புக் குற்றத்தை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டார் என்றும் கொள்ளலாம்.

ஆளுங்கட்சியை வீழ்த்த என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்த முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சோபியான் விவகாரம் கைகொடுத்தது. சோபியான், பாரமுல்லா சம்பவங்களுக்காக முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது ஹுரியத் அமைப்புதான் என்றாலும் அதை கையிலெடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி அதைப் பெரிதுபடுத்தியது மெஹ்பூபா முஃப்திதான்.

பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் உமர் அப்துல்லாவுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு விவகாரங்களை மாநில அரசு சரிவர கையாளவில்லை என்று குலாம்நபி ஆஸôத் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் இடையே இறுக்கமான நிலை இருந்து வருகிறது.

அதாவது 2008 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ள போதிலும் ஆஸôத்தும் அப்துல்லாவும் கடந்த பல ஆண்டுகளாக இணைந்தே செயல்பட்டு வந்துள்ளனர். பாரூக் அப்துல்லா ஆதரவுடன்தான் குலாம்நபி ஆஸôத் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இப்போது தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக ஆஸôத் கூறியுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமர்நாத் விவகாரத்தை அடுத்து குலாம்நபி ஆஸôத் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மக்கள் ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சி, தமக்கு ஆதரவு அளிக்கும் என்று ஆஸôத் எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படக் காரணம் என்று வேறுசிலர் நினைக்கின்றனர். அன்று தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரவு அளித்திருந்தால் முதல்வராக நீடித்திருக்கலாம் என்பது ஆஸôத்தின் கருத்து.

காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆஸôத்தும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் புரவலர் முப்தி முகமது சய்யீத்தும் ஒன்றுசேர முடியாத எதிரிகள். ஆனால், சமீபத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு ஆஸôத் தூது விட்டதாக தேசிய நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. காங்கிரஸ் கட்சியில் ஆஸôத்தை பிடிக்காதவர்கள் சிலர் வேண்டும் என்றே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்த இந்தச் செய்திகளை உலவவிட்டதாகத் தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸில் உள்கட்சிப் பூசலும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசலும் நீண்டநாளாக இருந்து வந்தது. இப்போது பாலியல் வழக்கு தொடர்பாக உமர் அப்துல்லா அதிரடியாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்ததன் எதிரொலியாக தேசிய மாநாட்டுக் கட்சியை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது இப் பிரச்னை கூட்டணிக் கட்சிகளிடையே பழையபடி நெருக்கத்தை ஏற்படுத்த வழிவகுத்துவிட்டது. இது உமர் அப்துல்லாவுக்குச் சாதகமான அம்சமாகும்.

2006 பாலியல் வழக்கில் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையை சட்டப்பேரவையில் கிழித்து எறிந்து, பேரவைத் தலைவர் இருக்கையில் இருந்த மைக்கை பிடுங்கி எறிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி. ஆனால், அவரது செயல் நாடு முழுவதும் எதிரொலிக்கவில்லை.

ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சிவிலியன் பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், காஷ்மீர் எல்லைப் பகுதியில் போக்குவரத்து மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கோரி வருகிறது. அக்கட்சியின் இந்த நிலைப்பாட்டுக்கு வேறுசில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் மெஹ்பூபா முஃப்தி.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்பூட்டு போட்டு அடக்கி வைக்க ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி முயன்று வருகிறது. சட்டப்பேரவையில் தினமும் ஏதாவது பிரச்னையை எழுப்பினால், அது தொடர்பான தீர்மானத்துக்கு பேரவைத் தலைவர் முட்டுக்கட்டை போடுவார், அதன் மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்பது மெஹ்பூபாவின் எண்ணம்.

பாலியல் வழக்கு விவகாரத்தில் எப்படியாவது முதல்வர் உமர் அப்துல்லாவை சிக்கவைத்து அதன் மூலம் ஆதாயம் பெறமுடியுமா என்று பார்க்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. அதனால்தான் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 300 பேர் பட்டியலில் உமர் பெயர் உள்ளதாக அது குறிப்பிட்டு வருகிறது. உயர் நீதிமன்றத்தில் உள்ள பட்டியலாகும் இது. ஆனால், முதன் முதலாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா பெயர் இல்லை.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது இளம் தலைவர்கள் அரசியல் களத்தில் புகுந்துள்ளனர். அத்தகைய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் ஒன்று. காஷ்மீரில் உமர் அப்துல்லாவும், மெஹ்பூபா முஃப்தியும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக உள்ளனர். உமர் அப்துல்லா, பாரூக் அப்துல்லாவின் மகன். ஷேக் அப்துல்லாவின் பேரன். மெஹ்பூபா, முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சய்யீத்தின் மகள். இருவரும் ஒரேசமயத்தில் அரசியல் களத்தில் குதித்தவர்கள்.

1998-ல் மக்களவை உறுப்பினராகி அரசியலில் நுழைந்தார் உமர் அப்துல்லா. 1996-ம் ஆண்டு பிஜ்பெஹ்ரா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியலில் நுழைந்தவர் மெஹ்பூபா முஃப்தி. பின்னர் 1999-ம் ஆண்டு முப்தி முகமது சய்யீத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மக்கள் ஜனநாயகக் கட்சியை உருவாக்கினார். அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஸ்ரீநகர் தொகுதியில் உமர் அப்துல்லாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மெஹ்பூபா. இதையடுத்து 2004 தேர்தலில் வெற்றி பெற்று அவர் மக்களவை உறுப்பினரானார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் உமர் அப்துல்லா வெளியுறவுத்துறை துணை அமைச்சராக இருந்தாலும், 2008 ஜூலையில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது உமர் அப்துல்லாவின் உருக்கமான பேச்சுதான் அவரை நாடறிய வைத்தது எனலாம்.
மெஹ்பூபா முஃப்தி பல கொலை முயற்சிகளில் உயிர்தப்பியவர். காஷ்மீர் மக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு என மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவர்.

மெஹ்பூபா காஷ்மீரை மையமாக வைத்துத்தான் அரசியல் நடத்தி வருகிறார். ஆனால், உமர் அப்துல்லா அப்படியல்ல; தேசிய அரசியலில் தமது பெயர் இடம்பெற வேண்டும் என நினைக்கிறார்.

உமர் அப்துல்லாவும், மெஹ்பூபாவும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி அரசியல் நடத்தி வந்தாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதர மாநிலங்களைப் போல பிராந்திய அரசியல் கட்சிகள் பலமடைந்து வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லது மட்டுமல்ல; அங்கு சகஜ நிலை திரும்பவும் வழிவகுக்கும்.

கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது

அமெரிக்காவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவுவதால், மாதா மாதம் லட்சக்கணக்கானவர்கள் புதிது புதிதாக வேலையை இழந்து கொண்டே இருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் மட்டும் 2,47,000 பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இருந்தாலும் அது எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவான அளவுதான் என்று அங்கு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த அளவினரே வேலையை இழந்திருப்பதால் ஜூன் மாதத்தில் 9.5 சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை, ஜூலை மாதத்தில் 9.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. 2008 ஏப்ரலுக்குப்பின் இப்போதுதான் முதல் முறையாக வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.1 சதவீதம் குறைந்திருக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் பாரக் ஒபாமா, வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்திருப்பது, நம் நாடு பொருளாதார சீரழிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதற்கான அடையாளம்தான் என்றார். இருந்தாலும் நாம் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் கூட வேலையை இழக்கவில்லை என்ற செய்தி வரும் வரை நாம் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது என்றார் அவர். 2007 டிசம்பரில் பொருளாதார சீரழிவு ஆரம்பமானதில் இருந்து அமெரிக்காவில் 67 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள் என்கிறது தொழிலாளர் துறை வெளியிட்ட அறிக்கை. நான் அதிபராக பொறுப்பேற்றிருந்தபோது இருந்ததை விட இப்போது வேலையில்லாதோர் எண்ணிக்கை பாதியாக குறைந்திருக்கிறது என்று சொன்ன ஒபாமா, பொருளாதார சிஸ்டத்தை நாம் சிக்கலில் இருந்து மீட்டிருக்கிறோம் என்றார். கடும் சீரழிவில் இருந்து மீட்டிருக்கிறோமே ஒழிய வளர்ச்சியடைய செய்யவில்லை. எனவே மீண்டும் முன்புபோல் வளருவதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்றார். முன்னதாக, ஜூலை மாதத்தில் விவசாயம் அல்லதாத துறையில் 3,20,000 பேர் வேலையிழப்பார்கள் என்றும், வேலையில்லாதோர் எண்ணிக்கை 9.6 சதவீதமாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. அது பொய்த்து விட்டது. மொத்தம் வேலை இழந்த 2,47,000 பேரில், உற்பத்தி துறையில் 52,000 பேர் மட்டுமே வேலையை இழந்திருக்கிறார்கள். கடந்த செப்டம்பருக்குப்பின் இப்போது தான் முதல் தடவையாக ஒரு லட்சத்துக்கும் குறையானவர்கள் இந்த துறையில் வேலையை இழந்திருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்கள் வேலையை இழந்து வந்தாலும், இன்னொரு பக்கம் புதிய வேலைவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவ சேவை துறையில் ஜூலை மாதத்தில் புதிதாக 17,000 பேர் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். அதே போல கட்டுமான துறையில் 76,000 பேர் வேலையை இழந்திருந்தாலும் அது எதிர்பார்த்ததை விட மிக குறைவு தான் என்கிறார்கள். ஜூன் மாதத்தில் 18.53 டாலராக ( சுமார் ரூ.890 ) இருந்த அமெரிக்கர்களின் சராசரி ஒரு மணி நேர வருவானம், ஜூலை மாதத்தில் 18.56 டாலராக ( சுமார் ரூ.891 ) உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்