Friday, August 28, 2009

அதிர்ச்சியளிக்கும் இலங்கை

இந்த நவீன யுகத்தின் அனைத்து வகையான போர்த் தந்திரங்களும் பயன்படுத்தப்பட்ட ஒரே இடம் ஈழம்தான். இப்படியொரு மிகச் சிக்கலான போர்க்களத்தை வேறு எந்த நாட்டு ராணுவமும் அறிந்திருக்க முடியாது. அப்பாவி மக்கள் நிறைந்திருந்த இந்தப் போர்க்களத்தை பல்வேறு நாடுகளின் படைகளும் தங்களது பயிற்சிக்களமாகப் பயன்படுத்தின என்னும் குற்றச்சாட்டு பலமுறை எழுந்தது. இப்போது அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாமோ என்கிற சந்தேகம் வலுவடைந்திருக்கிறது.

உலகின் மிக வலுவான ஆயுதப் போராளிகளை வீழ்த்திவிட்ட இலங்கை ராணுவம் இப்போது புதிய ராஜீய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் நிதி திரட்டுவதற்கும் ஈழ மண்ணைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிகிறது.

அதற்காக பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் படைகளுக்கு பயிற்சியளிக்கப் போவதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் செறிந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் போர்ப் பயிற்சிக்களங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கருதப்படும் நிலையில், இப்படியொரு செய்தி இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே, வடக்கு இலங்கையின் அம்பாந்தோட்டையில் "வணிகப் பயன்பாட்டுக்கான' துறைமுகத்தை சீனா அமைத்து வருகிறது. இந்தத் துறைமுகத்தை கடற்படைத் தளமாக மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

தொடக்க காலத்தில் இந்தத் துறைமுகத்தை வர்த்தகத்துக்காகப் பயன்படுத்தினாலும், சில வசதிகளை மேம்படுத்தினால் எப்போது வேண்டுமானாலும் கடற்படைத் தளமாக மாற்றிக்கொள்ள முடியும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

சாலைகள், மின் நிலையங்கள் என இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சீனாவின் பங்கு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை இருநாட்டு உறவு தொடர்பான நடவடிக்கைகள் என ஒதுக்கிவிட முடியாது.

இலங்கையில் காலடி வைத்ததன் மூலமாக இந்தியாவைத் "தாக்கும்' தொலைவுக்கு சீனா வந்துவிட்டது என்பதுதான் உண்மை. "தாக்கும்' தொலைவுக்குள் முக்கிய அணுமின்நிலையங்கள் இருக்கின்றன என்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீன-இலங்கை உறவு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில், தலிபான்களுடன் போரிடுவதற்கு பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்கப் போவதாக இலங்கை கூறியிருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு நேரடியான எதிரிகள். இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்ட ஒரே விஷயம் இலங்கை விவகாரம்தான்.

ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புகளில் இலங்கையைக் காப்பாற்றுவதற்கு மூன்று நாடுகளும் போட்டிபோட்டன. ஆனால், போரில் உதவியும் சர்வதேச அரசியலில் ஆதரவும் அளித்த இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்யப்போகிறது என்றே தோன்றுகிறது.

ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இப்போது, இலங்கை-பாகிஸ்தான், இலங்கை-சீனா இரு தரப்பு உறவுகள் வலுவடைந்தால், இந்தப் பிராந்தியத்தில் இந்த மூன்று நாடுகளின் ஆதிக்கம் மேலோங்கக்கூடும்.

இதனால் பொருளாதார அளவில் இல்லையென்றாலும், பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தியாவிடம் இலங்கை உதவி கேட்டிருக்கும் தற்போதைய நிலைமை மாறி, ஆதரவு கேட்டு இந்தியா இறங்கி வரவேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

இந்த விஷயத்தில் இலங்கை மிகத் தந்திரமாகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவைவிட பாகிஸ்தானும் சீனாவுமே நம்பகமான நாடுகள்.

அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக எந்த நேரத்திலும் தமக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்கக்கூடும் என்கிற சந்தேகம் இலங்கைக்கு இன்னும் இருக்கிறது.

அதனால், சீனாவை தாஜா செய்வதற்காகவே தைவானை தனிநாடாக அங்கீகரிக்க இலங்கை மறுத்திருக்கிறது.

அதே நேரத்தில், காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை எடுக்கத் தயக்கம் காட்டி வருகிறது. இந்தியா மீது சந்தேகப்படாமல் இருந்திருந்தால், இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையையே இலங்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானையும் சீனாவையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற ராஜதந்திரம்தான் இலங்கையை மெüனம் காக்க வைத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இருக்கும்வரை இந்தியாவுக்குப் பிடிக்காத எதையும் வெளிப்படையாகச் செய்ய இலங்கை தயங்கியது.

இனியும் அப்படி இருக்கத் தேவையில்லை எனக் கருதியே, பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்க வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. அதனால், விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு உதவியது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பெரிய சறுக்கலாகவே கருதப்படுகிறது.

முன்பிருந்ததைப் போன்று இலங்கை பலவீனமான நாடல்ல. விடுதலைப் புலிகளுடனான போர் மூலமாக, புதிய போர் உத்திகளைக் கற்றுக் கொண்டிருப்பது இலங்கையின் முதல் பலம்.

இதுதவிர, சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தால்கூட, உலக நாடுகளைச் சமாளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் புதிய அனுபவங்கள் மூலம் இலங்கை தெரிந்து கொண்டிருக்கிறது.

இப்படி போர்த் தந்திரத்திலும், ராஜதந்திரத்திலும் வலுவடைந்துள்ள இலங்கை, இந்தியாவின் எதிரிகளுடன் கூட்டு இப்போது வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் வெளியுறவு உத்திகளை வகுப்பதில் இந்தியா கொஞ்சம் பிசகினாலும் அது வரலாற்றுத் தவறாக முடிந்துவிடும்.

கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி

பினான்சியல் சர்வீசில் தடம் பதிக்கிறது நோக்கியா மொபைல் நிறுவனம்

இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் முத்திரை பதித்துள்ள நோக்கியா நிறுவனம், பினான்சியல் சர்வீசிலும் கால் தடம் பதிக்கிறது.இந்த சேவையை பயன்படுத்தி நோக்கியா போன் பயன்படுத்துபவர்கள் பண பறிமாற்றம் செய்து கொள்ள முடியம். மேலும் பில் கட்டுவடு, டிக்கெட் எடுப்பது போன்ற வேலைகளையும் நோக்கியா பினான்சியல் சர்வீஸ் மூலம் முடித்துக் கொள்ளலாம். வங்கி கணக்குகள் இல்லாதவர்கள் இந்த புது சேவையால் பயனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தினமலர்


ஜின்னாவின் நிறைவேறாத இரண்டு ஆசைகள்

புதிதாகப் பிறந்த பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர் முகமது அலி ஜின்னா. அவர் இங்கிலாந்தில் படித்தவர். தாதாபாய் நௌரோஜி, சி.ஆர்.தாஸ், கோகலே, திலகர், காந்திஜி, நேருஜி, நேதாஜி, சர்தார் பட்டேல் போன்ற இந்திய தேசத்தின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். அவர் இரண்டு அழகிய மாளிகைகளை தனது அயராத முயற்சியால் எழுப்பினார்.

அவற்றில் ஒன்று மும்பை மௌண்ட் பிளசண்ட் சாலையில், தான் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட அழகிய வீடு. இன்னொன்று தனது மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும், அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவுடனும் வாழவேண்டும் என்ற லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய பாகிஸ்தான் ஆகும்.

மும்பையில் அவர் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட மாளிகை மிகவும் அழகியது. பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டது. மேல்நாட்டுப்பாணியில் நவீன வசதிகள் கொண்டது. நேர்த்தியான வராந்தாக்கள் உடையது. பரந்துவிரிந்த அழகிய மலர்த்தோட்டம் சூழ்ந்தது. இந்த அரண்மனையை வடிவமைப்பதிலும், கட்டுவதிலும், பராமரிப்பதிலும் தனிக்கவனம் செலுத்தினார் ஜின்னா.

இந்த அழகிய மாளிகையில் தான் 1944 செப்டம்பரில் காந்தி - ஜின்னா பேச்சுவார்த்தை நடந்தது. இங்கு வந்து தான் நேதாஜி, ஜின்னாவுடன் உரையாடினார். பண்டித ஜவாஹர்லால் நேரு 15-8-1946 அன்று இங்குதான், ஜின்னாவுடன் தேசவிடுதலைக்கான வழிமுறைகள் பற்றி விவாதித்தார். இங்கு தான் ஜின்னாவின் ஒரே குழந்தை, தீனா, 15-8-1919 அன்று பிறந்தார். இப்படி வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மாளிகை இது. தான் வசிப்பதற்காகவே, அணு அணுவாகப் பார்த்துக்கட்டிய மாளிகையில், தொடர்ந்து வசிக்க முடியாமல், பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்பதற்காக கராச்சி சென்றது, ஜின்னாவின் துரதிர்ஷ்டமே!

ஜின்னா கராச்சிக்குச் சென்ற பின்பு அந்த மாளிகை பூட்டியே கிடந்தது. அதுசமயம் மும்பையில் மிக அதிகமான இட நெருக்கடி. ஆகவே வாடகைக் கட்டுப்பாடு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அந்த மாளிகையை அரசு பயன்பாட்டுக்கு எடுக்கலாமா? என மத்திய அரசை, மும்பை மாநில அரசு தொடர்ந்து வேண்டியது. செய்தி அறிந்த பண்டித நேருவோ, ""ஜின்னாவின் அனுமதி இல்லாமல், எவரும் அதைத் தொடக்கூடாது'' என்றார். அத்துடன் அப்பொழுது பாகிஸ்தானில் இந்திய அரசின் தூதராகப் பணிபுரிந்த ஸ்ரீபிரகாசாவை அழைத்து, ஜின்னாவை நேரில் சந்திக்கும்படியும், அவர் அந்த மாளிகை பற்றி என்ன நினைக்கிறார், எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை அவரிடமிருந்து அறிந்து தனக்குத் தெரிவிக்குமாறு பணித்தார்.

ஸ்ரீபிரகாசா இக்கேள்வியை எழுப்பியவுடன், ஜின்னா அதிர்ச்சி அடைந்தார். ""ஸ்ரீ பிரகாசா! என் இதயத்தில் அடிக்காதீர்கள்! என் இதயத்தில் அடிக்க வேண்டாம் என்று ஜவஹரிடம் சொல்லுங்கள். இதை ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்துக் கட்டியிருக்கிறேன் நான். இதுபோன்ற வீட்டில் யார் வசிக்க முடியும் தெரியுமா? எவ்வளவு நேர்த்தியான வராந்தாக்கள்? ஒரு சிறிய ஐரோப்பியக் குடும்பம் அல்லது பண்பட்ட இந்திய இளவரசர் ஒருவர் வசிக்கத் தகுந்த வீடு இது. நான் மும்பையை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. மறுபடியும் திரும்பிச் சென்று அந்த வீட்டில் வசிக்கும் காலத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்''~என்றார் ஜின்னா.

நீங்கள் மறுபடியும் மும்பைக்குச் சென்று வசிக்க விரும்புகிறீர்கள் என்பதை நான் எனது பிரதமர் (நேருஜி) இடம் சொல்லலாமா? என ஸ்ரீபிரகாசா கேட்க, அதற்கு ஜின்னா ""ஆம்! நிச்சயமாகச் சொல்லலாம்'' என்றார். இவ்விவரம் பிரதமர் நேருஜிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரோ ""ஜின்னாவின் மனதை நான் அறிவேன்; அவ்வீட்டில் எவரும் கைவைக்கக் கூடாது. ஜின்னாவின் பதில் வரும் வரை காத்திருப்போம்'' என்றார். இது ஜின்னாவுக்கு ஸ்ரீபிரகாசாவால் தெரிவிக்கப்பட்டது.

ஜின்னா, இறுதியாக 16-8-1948 அன்று ஸ்ரீபிரகாசாவுக்குப் பதில் எழுதுகிறார். ""இவ்விஷயத்தில் ஜவாஹர்லாலும், நீங்களும் மிகவும் கனிவோடும் கவனத்தோடும் நடந்தமைக்கு நன்றி. இவ்வீட்டை அமெரிக்க அரசின் தூதுவர் அலுவலகத்திற்கு வாடகைக்கு விடலாம். அவர்கள் வெள்ளையர்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் வீட்டைக் கவனமுடன் பாதுகாப்பார்கள் என்பதால்தான்'' என்று.

அவர் கடிதம் எழுதியது 16-8-1948 அன்று. ஆனால் அதற்கு அடுத்த 1 மாதத்திற்குள்ளாக 11-9-1948 அன்று மறைந்துவிட்டார்!

""என் இறுதிக்காலத்தில் மும்பைக்குச் செல்வேன். நான் ஆசையுடன் கட்டிய அந்த அழகிய மாளிகையில் வசிப்பேன்! இதை என் அன்புக்குரிய ஜவாஹர்லாலிடம் சொல்லுங்கள்'' என்றார் ஜின்னா. மும்பையின் அந்த அழகிய வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஜின்னாவின் முதல் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது!

ஜின்னா எழுப்பிய இரண்டாவது மாளிகை, இந்தியாவை உடைத்து பாகிஸ்தானை உருவாக்கியது. இதன் மூலம் அவரைப் பிரிவினைவாதி என்றும், பிடிவாதக்காரர் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாதி என்றும் இந்தியர்கள் குறை சொல்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை இல்லாதவர். காங்கிரúஸôடு சமரசம் செய்வதிலேயே காலம் கடத்தியவர். இஸ்லாமியர் நலனில் அக்கறை காட்டாதவர் - என்று பாகிஸ்தானியர் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆங்கிலேயருக்கு அனுசரணையாகச் செயல்படவில்லையே. காங்கிரûஸ எதிர்ப்பதில் கடுமை காட்டவில்லையே~ என்று அன்றைய ஆங்கிலேய அரசு குறைபட்டுக் கொண்டது.

இப்படி அனைத்துத் தரப்பினரின் கடுமையான விமர்சனத்துக்கு உட்பட்டவர்தான் ஜின்னா. ஆனால் உண்மையில் அவர் ஒரு தேசியவாதி. சமயச்சார்பற்றவர். ஒன்றுபட்ட இந்தியாவைப் பாதுகாக்க நினைத்தவர்.

ஒரு வலுவான தேசியவாதியாக, உண்மையான காங்கிரஸ்காரராகத் தான் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார் ஜின்னா. காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார் அவர். ""நான் முதலில் இந்தியன். அதன் பிறகுதான் நான் இஸ்லாமியன்'' எனக் கருதினார்.

கோகலேயின் ஆலோசனைப்படிதான் ஜின்னா முஸ்லிம் லீகில் சேர்ந்தார். அடிப்படை மதவாதிகளிடமிருந்தும், ஆங்கிலேயர்களின் அரவணைப்பிலிருந்தும், முஸ்லிம் லீகைக் காப்பாற்றி காங்கிரúஸôடு நல்லுறவை வளர்க்க வேண்டும் என்பதுதான் அவர் முஸ்லிம் லீகில் சேர்ந்ததன் நோக்கம்.

ரஹமத் அலியின் பாகிஸ்தான் பிரிவினைத்திட்டத்தை அவர் ஏளனம் செய்தார். இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அப்துல்லா ஹரூன் 1938-ல் முஸ்லிம் லீக் மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவாக அப்துஸ் சத்தார் கைரி, அப்துல் மஜீத் சிந்தி ஆகியோர் கொண்டு வந்த தீர்மானங்களைத் தனது வாதத் திறமையால் தோற்கடித்தார்.

1939-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய ஜின்னா, ""இந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் முஸ்லிம் லீக் நண்பர்களே! அந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் நண்பர்களே! உங்கள் முன்னால் கிடக்கும் முட்டுக்கட்டைகளைத் தூக்கி எறியுங்கள்! கட்டிக்கொண்டிருக்கும் உங்கள் கைகளை விரித்து எடுங்கள். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுங்கள். உண்மையான வெற்றி உங்களைத் தேடி வரும்'' என முழங்கினார்.

இப்படி இந்திய தேச ஒற்றுமை பற்றிப் பேசிய ஜின்னா, 1940 ஜனவரி முதல் பிரிவினைப் பாதையில் மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார் என்பது, ஜின்னாவின் இந்தியா பாகிஸ்தானின், சோக வரலாறாக முடிந்தது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? தேச விடுதலைக்கான பேச்சுவார்த்தையில், தான் ஓரம் கட்டப்படுவதாக அவர் நினைத்தார்; தேச மக்கள் அனைவரின் சார்பாகவும் பேசும் உரிமையும், தகுதியும் காங்கிரஸýக்கு மட்டுமே இருப்பதாக ஆங்கிலேய அரசு சொல்வதை அவர் ஏற்க மறுத்தார். இஸ்லாமியர்கள் சார்பாகப் பேசுவதற்குத் தனக்கு மட்டுமே தகுதி உண்டு; தன்னை மட்டுமே அழைத்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினார். இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெறுவதற்காகவும், அவர்களின் ஒரே பிரதிநிதி தான்தான் என்பதை நிலைநாட்டுவதற்காகவும், ஜின்னா முதல்முறையாக மதத்தை (இஸ்லாம்) முன்வைத்துப் பேசத் தொடங்கினார். அவருக்கு ஆதரவு வளரத் தொடங்கியது.

காங்கிரஸ் ஜின்னாவை மதிப்பதற்கும், பிரிட்டிஷார் ஜின்னாவுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் இந்த உத்தி பயன்பட்டது. ""அவரது உள்ளார்ந்த உண்மையான நோக்கம் பிரிவினை அல்ல; இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளை முஸ்லிம் லீக் ஆட்சி செய்ய வேண்டும்; ஒன்றுபட்ட இந்திய ஆட்சியில், ஜின்னாவுக்கு ஒரு முக்கிய பொருத்தமான பதவி வழங்கப்பட வேண்டும்'' என்பதுதான். அவரது உள்நோக்கத்தை அவரால் செயல்படுத்த முடியவில்லை.

முதல் சுதந்திர தினப் பேருரையில் ""காலப் போக்கில் இங்கே வாழும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அரசியல் பொருளாதார ரீதியில், இந்துக்களாக அல்லது இஸ்லாமியர்களாக இருக்க மாட்டார்கள்; இத்தேசத்தின் குடிமக்களாகத்தான் இருப்பார்கள்'' என்றார் ஜின்னா. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக பாகிஸ்தானை உருவாக்க முடியவில்லையே என ஏங்கினார்; மனவேதனைப்பட்டார்; நோய்வாய்ப்பட்டார்; அதன்பின்பு அவர் நீண்டநாள் வாழவும் இல்லை. இவ்வாறு சமயச் சார்பற்ற ஜனநாயக நாடாக பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற ஜின்னாவின் கனவும் நிறைவேறாமல் போய்விட்டது.

இறுதிக் காலத்தில் ஜின்னா மனவேதனையால் துன்புற்றபோது, துயரத்தோடு அவர் கூறுகிறார்: ""பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம் நான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டேன். தில்லிக்குத் திரும்பிச் சென்று கடந்த காலத்தில் நடந்த தவறுகளை மறந்து, மன்னித்து, மீண்டும் சகோதரர்களாக இருப்போம் என்று ஜவாஹர்லாலிடம் கூற விரும்புகிறேன்''~என்று.

இப்படி மும்பையில் தான் கட்டிய அழகிய மாளிகையில் இறுதிக் காலத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறவில்லை; பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக அமைக்க வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறவில்லை! இப்படி தான் நினைத்ததை நிறைவேற்ற முடியாத மனிதராகவே ஜின்னா மறைந்தார்.

ஆனாலும் நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மிகப்பெரிய தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை மறுக்க இயலாது.
கட்டுரையாளர் : அ. பிச்சை
நன்றி :தினமணி

சமச்சீரான முடிவு!

சமச்சீர் கல்வி அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலாகும் என்று அறிவித்திருக்கும் தமிழக அரசைப் பாராட்டவும், துணிந்து இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதற்கு நன்றி சொல்லவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதனால் மட்டும் கல்வியின் தரம் அதிகரித்துவிடுமா என்று குதர்க்கமாகக் கேள்வி கேட்பவர்கள், இன்றைய குழப்பமான நிலைமை தொடர்வதனால் கல்வியின் தரம் மேம்படுமா என்கிற எதிர்கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

தமிழகத்தில் மட்டும் விநோதமாக மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ - இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் இயங்குகின்றன. போதாக்குறைக்கு சி.பி.எஸ்.இ. முறை என்று தேசிய அளவிலான கல்வித் திட்டம் போதிக்கும் தனியார் பள்ளிகள் வேறு. பள்ளிக் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்திலானதாக இருந்தால் மட்டும்தான் சமநிலைச் சமுதாயம் உருவாகிறதோ இல்லையோ, அரசு அனைத்துத் தரப்புகளுக்கும் நியாயம் வழங்குவதாக இருக்கும்.

தனது 2006 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சமச்சீர் கல்வி முறை வாக்குறுதியை ஏதோ ஒப்புக்கு நிறைவேற்றாமல், தமிழக அரசால் முறையாக ஒரு குழு அமைக்கப்பட்டு, மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு நடத்தி இப்போது படிப்படியாக நிறைவேற்ற முனைந்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒன்று. இந்த விஷயத்தில் அரசு மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் கல்விக்கொள்கை பல தடவை மாற்றப்பட்டது என்பதுடன் தனியார்மயம் அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருபுறம் தரம் தாழ்ந்த கல்வியும், இன்னொருபுறம் பணக்காரர்களுக்கு மட்டும் தரமான கல்வியும் என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது. ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்டு படித்தால் மட்டுமே வருங்காலம் உண்டு என்பதுபோல ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அந்த மாயையின் மூலம் கொள்ளை லாபம் அடிக்கும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தனியாரால் தெருவுக்குத் தெரு காளான்களாக உருவாகிவிட்டிருக்கின்றன.

தேசிய அளவிலான உயர்கல்வித் தகுதிகளுக்கு சி.பி.எஸ்.இ. முறையில் படித்தால் மட்டுமே தேர்வு பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக அரசு படிப்படியாகக் கல்வித்துறையின் மீது காட்டத் தவறிய கண்டிப்பும், முனைப்பும்தான். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஏதோ படித்தால் படிக்கட்டும் என்று ஆட்சியாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினர் என்பதை எப்படி மறுக்க இயலும்? நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார் கல்வி நிறுவனம் நடத்தாத அரசியல்வாதிகளே இல்லை என்கிற நிலைமை அல்லவா ஏற்பட்டு விட்டிருக்கிறது!

தமிழில் படிக்காமல் அல்ல, தமிழே தெரியாமல் தமிழகத்தில் படித்து முனைவர் பட்டம் வரை பெற்றுவிட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலக் கல்வி தேவை என்கிற கோஷத்தால், தமிழ் படிப்பதே கேவலம் என்றும், தமிழ் படிக்கவே வேண்டாம் என்றும் ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே, இதை என்ன சொல்ல?

சமச்சீர் கல்வி இதற்கெல்லாம் முடிவு கட்டுமா என்றால் சந்தேகம்தான். ஆனால் சமச்சீர் கல்வி முறை மூலம், தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ.யின் தரத்துக்கு இணையான கல்வித் திட்டத்தை உருவாக்கி, அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ எங்கே படித்தாலும் ஒரே தரத்திலான, தேசிய அளவில் போட்டியிடும் தகுதியிலான கல்வி போதிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தை ஏற்படுத்த முடியும்.

பல பள்ளிக்கூடங்களில் தரமான ஆசிரியர்கள் இல்லை. வகுப்புக்கு ஓராசிரியர்கூட இல்லாத நிலைமை தொடர்கிறது. பயிற்று மொழியாகத் தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர்வது என்றால் ஆங்கிலம் தான் பாட மொழியாக இருக்கும். தமிழ் பொதுப் பயிற்று மொழி என்று அறிவிக்கப்பட வேண்டும். கிராமப்புற பள்ளிக்கூடங்களிலும்கூட ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

தரமான கல்வியைத் தனியார்தான் தரமுடியும் என்கிற தவறான கண்ணோட்டம் தகர்க்கப்பட வேண்டும். முடிந்தால் பள்ளிக்கல்வி என்பது அரசின் நேரடிக் கண்காணிப்பில், கட்டணம் இல்லாமல் இருப்பதுதான் முறை. உயர்கல்வியில் மட்டும்தான் தகுந்த கண்காணிப்புடன் தனியார் அனுமதிக்கப்பட வேண்டும். இப்படி நாம் சாதித்தாக வேண்டியது எத்தனை எத்தனையோ...

பள்ளிக்கல்வி அமைச்சரின் முனைப்பும் ஆர்வமும் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்களையும் சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த அறிவிப்பு முதற்படிதான். பாடத்திட்டம், ஆசிரியர் தகுதி, கட்டமைப்பு வசதிகள், அரசின் நேரடிக் கட்டுப்பாடு இவைதான் சமச்சீர் கல்வியை வெற்றி அடையச் செய்யும். பள்ளிக்கல்வி முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்தான் சமச்சீர் கல்வி என்பது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பது நமது கருத்து.

சமச்சீர் கல்வி என்பது காலத்தின் கட்டாயம். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறது தமிழக அரசு. இதன் மூலம் அடித்தட்டு மக்களின் ஒட்டுமொத்த வாழ்த்துகளையும் அரசு பெறுவதுடன், வருங்காலச் சந்ததியினரின் நல்வாழ்வுக்கும் வழிகாட்டி இருக்கிறது!
நன்றி : தினமணி

ஏ.டி.எம்., கட்டுப்பாடுகள் அக்., 15ல் அமல்

வங்கிக் கணக்கு இல்லாத பிற ஏ.டி.எம்., களை, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தினால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கும் திட்டம், அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தல் மற்றும் கணக்கில் உள்ள பணத்தை அறிய பிற வங்கி ஏ.டி.எம்.,களைப் பயன்படுத்தும் போது, அதனால், அந்த வங்கியின் சேவை பாதிக்கப்படுவதோடு, வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கி, பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால், வங்கியின் செலவினம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, பிற வங்கி ஏ.டி.எம்.,களை மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்துபவர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கலாம் என, இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரைத்தது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கியும் ஒத்துக் கொண்டது. இந்தத் திட்டம், அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத் தப்பட உள்ளது. இந்தத் திட்டம் அமல்படுத்தப் பட்டால், மாதத்திற்கு ஐந்து தடவைக்கு மேல், பிற வங்கி ஏ.டி.எம்., களைப் பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்களிடம், ஒரு தடவைக்கு 20 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த சேவை கட்டணம், எந்த வங்கியின் ஏ.டி.எம்., பயன்படுத்தப் பட்டதோ, அந்த வங்கிக்கு சென்றடையும்.

நன்றி : தினமலர்


தேசமா? அம்பானிகளா?

1960-ல் குஜராத் மாநிலம் அங்கலேஸ்வர் நகருக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வெண்ணிற ஷெர்வானி முழுவதும் எண்ணெய்க் கறையானது. அந்தக் கறை அவருக்குள் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. பெட்ரோலியப் பொருள்களுக்காக வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. அந்தக் கறை படிந்த ஷெர்வானியுடனே நாடாளுமன்றத்தில் பேசப் போவதாக தன்னுடன் வந்தவர்களிடம் கூறினார். இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதில் அந்த அளவுக்கு அவருக்குள் பெருமித உணர்வு ஏற்பட்டது. அந்த இடத்தில் தோண்டப்பட்ட முதல் பெட்ரோலியக் கிணறுக்கு "வசுந்தரா' என பூமித் தாயின் பெயரை வைத்தார் நேரு.

சொன்னபடியே, இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை முதன் முதலாக நாடாளுமன்றத்தில்தான் நேரு அறிவித்தார். அதன் பிறகே ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டனர். நாடு முழுவதும் உற்சாகம் பொங்கியது. ஆனால், இன்றைய நிலை வேறு. எல்லாம் மாறிவிட்டது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய அளவிலான இயற்கை எரிவாயு வளம் கடந்த 2002-ம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தி முதன் முதலாக பிரதமர் மூலமாகவோ, நாடாளுமன்றம் மூலமாகவோ அறிவிக்கப்படவில்லை.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழுவில் முகேஷ் அம்பானி அறிவித்த பிறகே இந்த விவரத்தை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. தோண்டுமிடமெல்லாம் இயற்கை எரிவாயு கிடைத்தது.

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்புக்கு அவர்கள் வைத்த பெயர் திருபாய். நாட்டு மக்களுக்குப் பெருமித உணர்வோ மகிழ்ச்சியோ ஏற்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது?

நேரு காலத்தில் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் விஷயத்தில் இந்திய அரசு எவ்வளவு துணிவுடனும் வெளிப்படையாகவும் நடந்து கொண்டது என்பதற்கு முதல் நிகழ்வு சரியான உதாரணம். நேருவின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதற்கு இரண்டாவது நிகழ்வே சாட்சி. நேருவின் கொள்கைகள் தெளிவாகவும் திட்டவட்டமானதாகவும் இருந்தன. எண்ணெய் வளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போனால் பொருளாதார வளர்ச்சி தாராளமாக இருக்காது என தேசிய வளங்களுக்கான அப்போதைய அமைச்சர் கே.டி. மாளவியா அறிவித்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்தக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்துவிட்டன.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிவதற்கும் வெளிக்கொண்டு வருவதற்கும் செலவுகள் அதிகமானதால், இந்தத் துறையில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 1997-ம் ஆண்டில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி, 1999-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7 சுற்று ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான சர்ச்சைக்குக் காரணமான கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை எரிவாயுவும் இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒதுக்கப்பட்டதுதான்.

கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவுக்கும் எண்ணெய்க்கும் பல தரப்பிலிருந்தும் இப்போது உரிமை கோரப்படுகிறது. இங்கு கிடைக்கும் எரிவாயுவில் 10 சதவீதத்தை வழங்கவேண்டும் என அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தனியார் நலனுக்காக நாட்டு நலனை அடகு வைத்துவிடக்கூடாது என்கிறார் அவர். பொதுமக்களும் ஊடகங்களும் ஆதரிப்பதால் இந்தக் கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.

அதேபோல், காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு எரிவாயுக் குழாய் அமைப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் மெத்தனம் காட்டி வருவதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். மும்பை, குஜராத், உத்தரப் பிரதேசம் என வடக்குப் பக்கமே அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் போராட வேண்டியிருக்கிறது. அம்பானி குடும்பத்துக்குள் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவின் ஒரு பகுதி அனில் அம்பானியின் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த எரிவாயு சப்ளைக்கு மற்றவர்களுக்குத் தருவதைவிட குறைந்த விலை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம். இதை எதிர்த்து இந்திய அரசு இப்போது வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், விடை கிடைக்காத பல கேள்விகள் எழுகின்றன. மிகப்பெரிய தேசிய வளத்தை நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கறாராக அமல்படுத்துவதை விட்டுவிட்டு, மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளத்தை, தனியார் நிறுவனம் ஒன்று தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகப் பெற முடியாத நிலையும் இருப்பதாகத் தெரிகிறது.

கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்திருக்கும் முதலீடுகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். கடுமையாக முயன்றும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், அம்பானி சகோதரர்களின் சண்டை வீதிக்கு வந்திருக்கிறது. இந்தச் சண்டையில், முதலீட்டை அதிகரித்துக் காட்டுவது, விலையைக் குறைத்து நிர்ணயிப்பது, குறைந்த உற்பத்தி போன்ற தந்திரங்கள் கிருஷ்ணா-கோதாவரி திட்டத்தில் கையாளப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
அத்துடன், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் தற்போதைய கொள்கைகளையும் சட்டங்களையும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

புதிதாக வகுக்கப்படும் கொள்கைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், திட்டங்களைச் செயல்படுத்தும்போது இடம்பெயரும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வகை செய்வதாகவும் அமைய வேண்டும். இதைச் செய்யும் வரையில் அம்பானிகள் விவகாரத்தால் எழுந்திருக்கும் சர்ச்சை ஓயப்போவதில்லை.
கட்டுரையாளர் : பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி