Saturday, June 20, 2009

மூலிகை சிகிச்சைக்காக கேரளா வரும் வெளிநாட்டு பயணிகள் வரத்து குறைந்தது

கேரளாவில் பிரபலமாக இருக்கும் மூலிகை சிகிச்சைக்காக ( ஸ்பா ) அங்குள்ள பருவ காலத்தில் ( ஜூன் - செப்டம்பர் ) ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடமிருந்து நிறைய சுற்றுலா பயணிகள் இதற்காக வருவதுண்டு. இப்போது அங்கு பொருளாதார மந்த நிலை தீவிரமாக இருப்பதால், அங்கிருந்து வருபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த பருவ காலத்திலும் அங்கிருந்து வருபவர்கள் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக பருவ காலத்தில்தான் சுற்றுச்சூழல் தூசு இல்லாமலும், குளிராகவும் இருக்கும். அப்போதுதான் நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்களின் ஓட்டைகளும் நன்கு திறந்திருக்கும். அப்போது மூலிகை சிகிச்சை செய்தால்தான் அது உடலுக்கு நல்ல பயனை தரும். எனவே இந்த காலம் தான் மூலிகை சிகிச்சை செய்து கொள்ள ஏற்ற காலம். ஆனால் இந்த வருடம் அதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் டாக்டர் ராஜேஷ். இவர் கொச்சியை சேர்ந்த சாப்டச் ஹெல்த்கேர் நிறுவனத்தின் டாக்டராக இருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு மூலிகை சிகிச்சைக்காக ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருவது வழக்கம். மேலும் கோயம்புத்தூரில் இருக்கும் ஆர்ய வைத்ய பார்மஸி ( ஏவிபி ) மற்றும் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை ஆகியவற்றுக்கும் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்கிறார் ஏவிபி யின் மேலாண் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணகுமார்.
நன்றி : தினமலர்


பெல் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு

இந்திய அளவில் மதிப்பு மிக்க பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் ( பெல் ) மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் கொஞ்சம் பங்குகளை விற்க மத்திய அரசு முன் வந்திருக்கிறது. பெரிய தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் நேற்று இதனை தெரிவித்தார். இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இல்லாததால் இதற்கு எதிர்ப்பு அவ்வளவாக இருக்காது என்று எண்ணிய மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், ரூ.28,000 கோடி மதிப்புள்ள பெல் நிறுவனத்தில் 67.72 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மத்திய அரசு, கடந்த 2005 இலேயே அதன் பங்குகளில் கொஞ்சம் பங்குகளை விற்க முன் வந்தது. அப்போது இடதுசாரி கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்ததால், அது கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வேறு வழியில்லாமல் மத்திய அரசு விற்பனையை கைவிட்டது. இப்போது இடதுசாரிகளின் தொந்தரவு இல்லாததால் மீண்டும் விற்பனைக்கான முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. பெல் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 67.72 சதவீத பங்குகளில் 10 சதவீதத்தை விற்கும் என்று தெரிகிறது. இப்போது பெல் நிறுவனத்தின் சந்தை முதலீடு ரூ.1,02,334 கோடியாக இருக்கிறது. 10 சதவீத பங்குகளை விற்பதால் அதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.10,234 கோடி கிடைக்கும். மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான சாதனங்களை பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. மத்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்கள் லிஸ்ட்டில் பெல் நிறுவனமும் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இருந்தால், அந்த நிறுவனம் அதிக சுதந்திரம் கொண்டதாக இருக்கிறது என்று அர்த்தம்.
நன்றி : தினமலர்


'யூ மொபைல்' வசதியை அறிமுகப்படுத்தியது யூனியன் வங்கி

மொபைல் மூலம் வங்கியின் அனைத்து சேவையும் பெற முடிகிற, 'யூ மொபைல்' வசதியை, இந்திய யூனியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நாயர் அறிமுகப்படுத்தினார்.
அறிமுக நிகழ்ச்சியில் நாயர் பேசியதாவது: இந்திய யூனியன் வங்கி ஏற்கனவே, குறிப்பிட்ட செயல்பாடுகள் கொண்ட மொபைல் வங்கி சேவையை நடைமுறைப்படுத்தியது. அடுத்த கட்டமாக, முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட, 'யூ மொபைல்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டில் இந்திய யூனியன் வங்கியில் மற்றும் கிளைகளில் ரொக்கம் பெறாமல், எலக்ட்ரானிக் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ததில், 6 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, இதை 35 சதவீதமாக உயர்த்த, 'யூ மொபைல்' வசதி பெரிதும் உதவும். மொபைல் போனில் பட்டனை அழுத்தினால், வங்கியின் அனைத்து சேவைகளையும் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த 'யூ மொபைல்' வசதியை, எஸ்.எம்.எஸ்., மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் பெறலாம். வங்கித் துறையில் பாதுகாப்பாக, எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செயல்படுத்த முடிகிற இந்த வசதியின் மூலம், யூனியன் வங்கி கணக்கிற்கு மற்றும் இதர வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றவும், காசோலைகளை நிறுத்தவும், காசோலை புத்தகம் அனுப்பச் சொல்லியும் தகவல் அனுப்பி, பயன் பெறலாம். யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள், மொபைல் போன் கணக்கு மூலம் செக் நிலவரம், கிளை ஏ.டி.எம்., இருப்பிடம், கணக்கு பட்டியல், கணக்கு இருப்பு பற்றிய விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் போன்றவற்றைப் பெறலாம். இவ்வாறு நாயர் பேசினார்.
நன்றி : தினமலர்


சம்பளம் இல்லாமல் வேலை பாருங்கள் : ஏர் - இந்தியாவும் கேட்கிறது

ஜூலை மாதத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பாருங்கள் என்று அதன் ஊழியர்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் கேட்டுக்கொண்டது போலவே, ஏர் - இந்தியாவும் கேட்டிருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ், அதன் எல்லா ஊழியர்களிடமும் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க சொன்னது. ஏர் - இந்தியாவோ, நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களிடமும் மூத்த அதிகாரிகளிடமும் மட்டுமே ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் உற்பத்திக்கு தகுந்த ஊக்க தொகை பெறாமல் வேலைபார்க்க சொல்லி கேட்டிருக்கிறது.கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்த இரு விமான கம்பெனிகளும் செலவை கட்டுப்படுத்த இந்த ஏற்பாட்டிற்கு இறங்கி வந்திருக்கின்றன. இது குறித்து வெள்ளி அன்று ஏர் - இந்தியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஏர் - இந்தியாவின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குநர் அர்விந்த் ஜாதவ், ஜெனரல் மேனேஜர் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஜூலை மாதத்தில் சம்பளம், ஊக்கதொகை இல்லாமல் வேலை பாருங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த மாத துவக்கத்தில்தான் ஏர் - இந்தியா நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பளத்தை ஜூலை ஒன்றாம் தேதிக்கு பதிலாக 15 நாள் கழித்து ஜூலை 15 ம் தேதி வழங்குவதாக அறிவித்தது. இப்போது அதன் மூத்த அதிகாரிகளுக்கு ஜூலை மாதம் சம்பளம் இல்லை என்கிறது. 2008 - 09 நிதி ஆண்டில் ஏர் - இந்தியா ரூ.4,000 கோடி வரை நஷ்டம் அடைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.2,226 கோடி நஷ்டம் அடைந்திருந்தது.
நன்றி : தினமலர்