Sunday, February 15, 2009

வீடுகள் விலை 30 சதவீதம் சரிவு: வாங்குவோர் தயக்கம்

கடந்த நான்கு மாதங்களில், வீடுகளின் விலை 30 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜோனஸ் லாங் லாசல்லே மேக்ராஜ் என்ற ஆலோசனை அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இருப்பினும், வீடு வாங்குவதை பெரும்பாலானோர் தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகின்றனர். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும்நிலையில், புதிய வீடுகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள், வீடு வாங்குவோருக்கு ஏற்ப அதிக சுமையில்லாத விலையில் தயாராகி வருகின்றன. ஏற்கனவே, வாங்கப் பட்ட நிலங்கள் அதிக விலை கொடுக்கப்பட் டவை. இருப்பினும், அதிக லாபம் இல்லாமல், அந்த நிலங்களில் வீடுகள் கட்டி விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், வீடுகளின் விலை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. வீடுகளின் விலை சரிந்துள்ள நிலையில், வங்கிக் கடன் வட்டி விகிதமும் சரிந்துள்ளது. இதனால், புதிய வீடுகள் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் பணிகளை துவக்கி உள்ளன. குறிப்பாக, நடுத்தரப் பிரிவினர் வாங்கும் திறன் கொண்ட வகையில், குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் ஆட் குறைப்பு போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பதால், வேலை நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வீடுகளின் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், வீடு வாங்குவோர் மத்தியில் தொடர்ந்துதயக்க நிலையே காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல், வீடு வாங்கும் திறன் அதிகரிக்கும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக வீடுகளின் விலைகள் குறைக்கப் பட்டுள்ளன. வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, குறைந்த விலை வீடுகளின் விற்பனை ஸ்திரமடையும் என்ற எதிர்பார்ப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நுகர்வோர் மத்தியில் நிலவுகிறது. ஆனால், ஏற்கனவே, அதிக விலை கொடுத்து நிலம் வாங்கியிருப்பதால், இதற்கும் குறைவாக விலை நிர்ணயிக்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தயாராக இல்லை. இதனால், பல்வேறு நிறுவனங்கள் புதிதாக நிலம் வாங்கி, அதில் வீடுகள் கட்டி, குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
நன்றி : தினமலர்


சேமிப்பு கணக்குக்கு இனி 'பான்' தேவையில்லை

வங்கியில் சேமிப்பு கணக்குக்கு 'பான்' கட்டாயம் இல்லை; ஒரு லட்சம் ரூபாய் மேற்பட்ட பிரிமியம் கட்டும் இன்சூரன்ஸ் திட்டங்களில் மட்டும் தான் இது தேவைப்படும். சட்டவிரோத நிதி நடமாட்டங்களை தடுக்க, கருப்புப்பணத்தை ஒழிக்க 'பான்' கார்டு முறை வெகுவாக கைகொடுத்து வந்தது. கடந்தாண்டு பட்ஜெட் உரையில் கூட, நிதி அமைச்சர் சிதம்பரம் பேசும் போது,'எல்லா வித வங்கி நிதி பரிமாற்றங்களிலும் 'பான்' கார்டு எண் குறிப்பிட வேண்டியது சட்டப்படி கடைபிடிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். சரியாக ஓராண்டு கழிந்த நிலையில், இப்போது தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள் ளது. பட்ஜெட் மீதான நடவடிக்கை அறிக் கை சமீபத்தில் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'பான்' கார்டு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லா விதமான வங்கி நிதி பரிமாற்றங்களிலும் 'பான்' எண் குறிப்பிடப் பட வேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்படுகிறது. சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கட்டும் போது 'பான் 'எண் குறிப்பிட வேண்டும் என்று அவசியம் இனி இல்லை. ஆனால், நடப்பு கணக்கு ஆரம்பிக்கும் போது மட்டும் இந்த 'பான்' எண் குறிப்பிட வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி விஷயங்களில் மட்டும் , ஒரு லட்சத்துக்கு மேல் பிரிமியம் கட்டும் பட்சத்தில், 'பான்' எண் குறிப்பிடப்பட வேண்டும். இதனால், வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிமாற்றம் செய்யும் போது 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை நீங்குகிறது. தபால் சேமிப்பு திட்டங்களில் சேர்ந்தாலும், 'பான்' கட்டாயமாக குறிக்கப்பட வேண்டும் என்பது உட்பட 'பான்' கட்டுப்பாடு வரப்போகிறது என்று பேசப்பட்ட நிலையில், பெரும் சலுகையை இப்போது அரசு அமல்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஓட்டுக்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எண்ணினாலும், இதனால், பலருக்கும் பலன் கிடைத்துள்ளது என்பதே உண்மை. குறிப்பிட்ட தொகைக்கு மேல் கையாளும் போது, வங்கியில் 10 இலக்க 'பான்' குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை.
நன்றி : தினமலர்