Saturday, August 2, 2008

எம்.டி.என்., உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை : ஏர்டெல் அறிவிப்பு



தென் ஆப்ரிக்காவின் எம்.டி.என்., நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை எதையும் நாங்கள் நடத்தவில்லை என்று பார்தி ஏர்டெல் நிறுவன சேர்மன் சுனில் மிட்டல் தெரிவித்தார். எம்.டி.என்., நிறுவனத்தை வாங்கிக்கொள்ளும் முயற்சியில் கடந்த மே மாதத்தில் ஈடுபட்ட ஏர்டெல், பின்னர் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அந்த முயற்சியில் ஈடுபடவே பின்வாங்கி விட்டது. இந்நிலையில் ஏர்டெல், மீண்டும் எம்.டி.என்.,உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளுக்கு பதிலளிக்கவே, அதனுடன் நாங்கள் பேச்சுவார்த்தைஎதையும் நடத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறார். வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய சுனில் மிட்டல், பார்தி ஏர்டெல் நிறுவனம், விரைவில் வர இருக்கும் 3ஜி டெக்னாலஜியை பெறும் முயற்சியில் ஈடுபடும் என்றார்.

நன்றி : தினமலர்


ஜூன் மாதத்தில் இந்தியாவின் குரூட் ஆயில் இறக்குமதி 53.4 சதவீதம் அதிகரிப்பு



சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் விலையால், ஜூன் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்த குரூட் ஆயிலின் பில் தொகை கடந்த வருடத்தை விட 53.4 சதவீதம் உயர்ந்து 9.03 பில்லியன் டாலராகி விட்டது. இதுவே கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 5.89 பில்லியன் டாலராகத்தான் இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் குரூட் ஆயில் இறக்குமதி 50.2 சதவீதம் அதிகரித்து, அதன் பில்தொகை 25.52 பில்லியன் டாலராக இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 16.99 பில்லியன் டாலராகத்தான் இருந்தது. இந்த உயர்வு எதனால் ஏற்பட்டது என்றால் இந்த வருடம் முதல் காலாண்டில் இந்தியாவின் டிரேட் பெஃபிசிட் 41.7 சதவீதம் அதிகரித்து 30.42 பில்லியன் டாலராக இருந்ததால்தான் என்கிறார்கள். இந்த வருடம் ஏப்ரல் - ஜூன் மாதத்தில் இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 118.50 டாலராக இருந்தது. இதுவே கடந்த வருடம் ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 77.25 டாலராகத்தான் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 123.35 டாலராக இருக்கிறது.


நன்றி : தினமலர்


ரியல் எஸ்டேட் வர்த்தகம் துபாயில் கொடிகட்டுது



துபாயில் ரியல் எஸ்டேட் நிலவரம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள் அன்று ஒரே நாளில் 560 கோடி ரூபாய்க்கு மனை பரிமாற்றம் நடந்துள்ளது; அதில் ஒரு மனை 20 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. துபாயில் கட்டுமான பணிகள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடந்து வருகின்றன. பல இடங்களில் மனைகள் கிடைப்பது அரிதாகி வருகிறது. சமீப காலமாக வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, தனி நபர் வாங்கும் மனைகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த செவ்வாயன்று முடிந்த 20 விற்பனைகளில் மிக அதிக விலையில், அல் பஷ்ரா பகுதியில் 20 கோடி ரூபாய்க்கு ஒரு மனை விற்பனை ஆகியுள்ளது. மிர்டிப் பகுதியில் எட்டு கோடி ரூபாய்க்கு ஒரு மனை விற்பனை ஆகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் துபாயில் தான் அதிக அளவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் நடந்து வருகிறது. வானளாவ கட்டடங்கள் கட்டப்படுவதும் அதிகரித்து வருகிறது; தனி நபர் மனை வாங்கி வீடு கட்டும் நடவடிக்கைகளும் அதிகமாகி வருகின்றன. கோடிக்கணக்கில் மதிப்புள்ள மனைகள் விற்பனை ஒரு நாளைக்கு 35 முதல் 50 வரை நடந்து வருகின்றன.
இந்தியாவை போலவே ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல மடங்குக்கு உயர்ந்து வருகிறது. இதுகுறித்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகையில்,'வர்த்தக ரீதியாக சர்வதேச கட்டடங்கள் கட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால், ரியல் எஸ்டேட் நிலவரம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் துபாயில் வீட்டு மனைகளுக்கு பற்றாக்குறையாகி விடும் அளவுக்கு நிலைமை அதிகரித்து வருகிறது' என்று தெரிவித்தன.


நன்றி : தினமலர்


விமான கட்டணங்கள் உயர்வு


விமான எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, சில விமான நிறுவனங்களின் பயண கட்டணங்கள் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் விமான எரிபொருள் விலை 3 சதவீதம் அதிகரித்ததையடுத்து, ஜெட் ஏர்-வேஸ்,கிங் பிஷர் ஏர்-லைன்ஸ் ஆகியவை, தங்கள் விமான பயண கட்டணத்தை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. சாதா வகுப்பு, உயர் வகுப்புகளுக்கான கட்டணம் முறையே 5 சதவீதம் மற்றும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கிங்பிஷர்-டெக்கான் பயண கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. தற்போது, குறைந்த பயண கட்டணமாக டில்லி-மும்பைக்கு ஆறாயிரத்து 800 ரூபாய் மற்றும் இதர செலவுகள் சேர்த்து ஏழாயிரத்து 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. விரைவில் ஏர்-இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்களும் தங்கள் விமான பயண கட்டணத்தை உயர்த்த உள்ளன. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக விமான பயண கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

நன்றி : தினமலர்


வீட்டுக்கடன் வட்டி விகிதம் இம்மாதம் முதல் உயர்கிறது


இம்மாதம் முதல் வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு, 20 ஆண்டு தவணை எடுத்தவர்களின் மாதத்தவணை குறைந்தபட்சம் 52 ரூபாய் அதிகரிக்கும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளால், பல்வேறு வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதம் இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இம்மாதத் தவணையை அடுத்த மாதம் செலுத்தும் போது, கூடுதல் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும். இதன்படி, 20 ஆண்டு தவணைக்கு ஒரு லட்சம் கடன் வாங்கியோரின் மாதத்தவணை குறைந்தபட்சம் 52 ரூபாய் அதிகரிக்கும். எச்.டி.எப்.சி., வங்கி, புதிதாக வீடு வாங்க கடன் வாங்குவோருக்கான புளோட்டிங் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 11.75 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 12 சதவீதம் முதல் 12.25 சதவீதம் வரை இந்த வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளது. எச்.டி.எப்.சி.,யின் பிக்சட் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 14 சதவீதமாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ.,யின் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 15.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இதேபோல, அனைத்து வங்கிகளும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளன. இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்.டி.எப்.சி., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.,யில் பிக்சட் வட்டி விகிதத்தின் அடிப்படையில், ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியோருக்கு, வட்டி உயர்த்தப்படவில்லை. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி டிபாசிட்களுக்கான வட்டிவிகிதத்தை 0.75 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. நிறுவனங்களுக்கான வட்டி மற்றும் மொத்தக்கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் 17.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, எஸ்வங்கி, ராஜஸ்தான் வங்கிகளும் வட்டி விகிதத்தை மாற்றி உள்ளன.


நன்றி : தினமலர்


பாதுகாப்புக்காக கோடிகளை இறைக்கும் தனியார் நிறுவனங்கள்


உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையாலும், அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாலும், பல்வேறு நிறுவனங்களும் பாதுகாப்புக்காக, கோடி கோடியாக செலவிட்டு வருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த குண்டு வெடிப்புச் சம்பவங்களால், நாடே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ள தொழில்துறை மீது பயங்கரவாதிகள் குறிவைத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சுதாரித்துக் கொண்ட பல்வேறு நிறுவனங்களும், பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பயங்கரவாத தாக்குதல் காப்பீடு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. சமீப ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள், பாதுகாப்புக்காக செலவிடும் தொகையை பெரிதும் அதிகரித்தள்ளன. 97 சதவீத நிறுவனங்கள் பாதுகாப்பை மிக முக்கியமானதாக கருதுகின்றன. பாதுகாப்புக்காக தனியார் நிறுவனங்கள் செலவிடும் தொகை பற்றிய புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும், நடுத்தரமான ஒரு நிறுவனம், ஆண்டு ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் வரை செலவிடுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு துறையில் உள்ள நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. குருப் 4 செக்யூரிட்டீஸ் நிறுவனம், பயிற்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பாதுகாவலர்களை பணியில் அமர்த்தி உள்ளது. தற்போது நாடு முழுவதும், 50 லட்சம் தனியார் பாதுகாவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்துறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் புரளுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொண்டாலும், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இல்லாதது பல்வேறு நிறுவனங்களுக்கும் ஒரு குறையாகவே இருக்கிறது. தனியார் நிறுவன பாதுகாவலர்கள் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு அளிக்க, இந்திய சட்டம் இடம் கொடுக்கவில்லை. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம், போலீஸ் பாதுகாப்பை கோர வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணமாக உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களை கருத்தில் கொண்டு, இவற்றுக்கு விரைவில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நன்றி : தினமலர்