Wednesday, July 15, 2009

மீண்டும் உயர்ந்தது பங்கு சந்தை

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட வளர்ச்சியை அடுத்து இந்திய பங்கு சந்தையிலும் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சென்சென்ஸ் 14,200 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 4,200 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் 2.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. இன்போசிஸ் மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்களை தவிர மற்ற எல்லா நிறுவனங்களுமே வளர்ந்திருந்தன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 399.54 புள்ளிகள் ( 2.88 சதவீதம் ) உயர்ந்து 14,253.24 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 122.10 புள்ளிகள் ( 2.97 சதவீதம் ) உயர்ந்து 4,233.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ஹின்டல்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிஎல்எஃப், ஹீரோ ஹோண்டா, பிஹெச்இஎல், ரிலையன்ஸ் பவர், மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவன பங்குகள் 6 முதல் 8.5 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது.
நன்றி : தினமலர்


2008 ல் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.2.5 லட்சம் கோடி

உலகம் கடும் பொருளாதார சிக்கலில் இருக்கும் போதும் கூட, வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் 2008 ம் ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ( ரூ.2.5 லட்சம் கோடி ) 52 பில்லியன் டாலர் என்கிறது உலக வங்கி . இது, அதற்கு முந்தைய ஆண்டு அனுப்பப்பட்ட ( ரூ. 2.16 லட்சம் கோடி ) 45 பில்லியன் டாலரை விட 15 சதவீதம் அதிகம். உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாப்ட்வேர் ஏற்றுமதி மூலம் 2008ம் ஆண்டு இந்தியாவுக்கு 47 பில்லியன் டாலர் மட்டுமே கிடைத்திருக்கும் போது, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மூலம் 52 பில்லியன் டாலர் கிடைத்திருப்பதால், அந்நிய பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவதில் முதல் இடத்தை அவர்களே பெறுகிறார்கள். ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பை விடவும் இந்தியாவுக்குள் அதிகம் டாலர்கள் வெளிநாட்டு இந்தியர்களால் வந்திருக்கிறது. முன்னேறும் நாடுகளை பொறுத்தவரை, இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிகோ நாட்டவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் சம்பாதித்து தங்கள் நாட்டுக்கு அதிகம் பணத்தை அனுப்புவதாக உலக வங்கி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்