Wednesday, July 16, 2008

எங்களின் பங்கு மதிப்பு குறைந்ததற்கு பிரபல நிறுவனமே காரணம் : ரேன்பாக்ஸி குற்றச்சாட்டு


மும்பை : கடந்த ஜூன் 11ம் தேதி இந்திய பார்மாசூடிக்கல் கம்பெனி ரேன்பாக்ஸியின் 34.8 சதவீத பங்குகளை ஜப்பான் நிறுவனமான டெய்ச்சி சான்க்கியோ, 4.6 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்வதாக அறிவித்திருந்தது. அவ்வாறு அது வாங்கிக்கொண்டால் ரேன்பாக்ஸி நிறுவனம் டெய்ச்சியின் இந்திய கிளை நிறுவனமாகி விடும். ஆனால் அப்போது ஒத்துக்கொண்ட டெய்ச்சி இப்போது அதிலிருந்து பின் வாங்குவதாக தெரிகிறது.காரணம் என்னவென்றால் ரேன்பாக்ஸி நிறுவனம் அமெரிக்க அரசிடம் தவரான தகவல்களை கொடுத்துள்ளதாக அதன் மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் இந்திய பங்கு சந்தையில் ரேன்பாக்ஸியின் பங்குகள் 10.45 சதவீதம் குறைந்து விட்டது. டெய்ச்சி எங்கள் நிறுவன பங்குகளை வாங்கிக்கொள்வதில் இருந்து பின்வாங்கவில்லை என்று ரேன்பாக்ஸி சொல்லி வருகிறது. இந்நிலையில் எங்கள் பங்குகள் குறைந்ததற்கு இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்றுதான் காரணம் என்று ரேன்பாக்ஸி குற்றம் சாட்டியிருக்கிறது. ரேன்பாக்ஸியின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் மால்வீந்தர் மோகன் சிங் நிகழ்ச்சி ஒன்றில் இதனை தெரிவித்தார். எங்கள் நிறுவனத்தில் குழப்பத்தையும் தேவையில்லாத வதந்தியையும் ஏற்படுத்தி எங்கள் பங்குகளின் மதிப்பை குறைக்க அந்த நிறுவனம் ஏற்பாடு செய்கிறது என்றார் அவர். ஆனால் அந்த நிறுவனத்தின் பெயரை அவர் சொல்ல மறுத்துவிட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை அன்று 14.01 சதவீதம் குறைந்து ரூ.409.25 விலையில் இருந்த ரேன்பாக்ஸியின் பங்குகள், இன்று 10.56 சதவீதம் உயர்ந்து ரூ.452.45 விலையில் இருந்தது.

நன்றி :தினமலர்


இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை


மும்பை :வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் வரை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பாலும் பணவீக்கம் 13 சதவீதம் வரை உயர்ந்து விடும் என்ற அச்சத்தாலும் இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் சரிந்தன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 100.39 புள்ளிகள் ( 0.79 சதவீதம் ) குறைந்து 12,575.80 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 44.40 புள்ளிகள் ( 1.15 சதவீதம் ) குறைந்து 3,816.70 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்.டி.எஃப்.சி, எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி, டி.எல்.எஃப், யுனிடெக் ஆகிய பங்குகள் விலை குறைந்திருந்தது


நன்றி : தினமலர்


தங்கம் விலை என்றுமில்லாத அளவாக உயர்ந்துள்ளது


லண்டன் : சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்றுமில்லாத அளவாக உயர்ந்துள்ளது. செவ்வாய் அன்று லண்டன் சந்தையில் அது அவுன்ஸ் ஒன்றுக்கு 983.50 டாலர் வரை வந்து விட்டது. அதாவது கிராம் ஒன்றுக்கு சுமார் ரூ.1,352.21 ஆக இருந்தது. கடந்த நான்கு மாதங்களில் இப்போதுதான் அவுன்ஸ் ஒன்றுக்கு 980 டாலருக்கும் மேல் விலை வந்துள்ளது. அமெரிக்காவில் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம், டாலரின் மதிப்பு வீழ்ச்சி, பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இப்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில்தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதனால் தான் தங்கம் விலை உயர்வதாக சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிலை சரியாக இல்லதாதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நேற்று அவுன்ஸ் ஒன்றுக்கு 980 டாலர் வரை வந்திருந்த தங்கத்தின் விலை, இந்த மாதத்திற்குள் 1000 டாலரை எட்டி விடும் என்று யு பி எஸ் என்ற நிதி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நன்றி : தினமலர்