Thursday, August 14, 2008

8 சதவீதம் நிச்சயம்: சிதம்பரம் நம்பிக்கை


'நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் 8 சதவீதத்தை நெருங்கும்' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தாண்டு 7.7 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆலோசனை கவுன்சில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. என்னை பொருத்தமட்டில் உறுதியாக சொல்வேன் கண்டிப்பாக 8 சதவீதத்தை நெருங்கும். பொதுத்துறை நிறுவனங்களில் மிதமிஞ்சி நிதியில் 60 சதவீதத்தை பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யும்படி வலியுறுத்த வேண்டும் என, பொதுத் துறை நிறுவனங்களை நிர்வாகிக்கும் துறையிடம் வலியுறுத்தினேன். உற்பத்தி துறைகளுக்கு தேவையான கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என வங்கிகளை கேட்டு கொண்டுள்ளேன். நிதி கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் தனிநபர் கடனில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ரயில் எஸ்டேட் துறையில் கடன் வழங்குவதில் தான் சில கட்டுப்பாடுகளை வங்கிகள் விதித்துள்ளன. இருப்பினும் இத்துறையில் கடன் கோருவோர் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான வங்கிகள் தங்களின் பிரதான கடனுக்கு வட்டியை 0.75 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இருப்பினும் வீட்டு கடனுக்கு தற்போதுள்ள நிலையே நீடிக்கிறது. புதிதாக வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

நன்றி : தினமலர்


'மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக இருக்கும்'

'நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) நடப்பாண்டில் 7.7 சதவீதமாக இருக்கும்' என, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக உள்ள சி.ரங்கராஜன், ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பதால் தலைவர் பதவியில் இருந்து விலகினார். புதிய தலைவராக, கவுன்சில் உறுப்பினராக இருந்த சுரேஷ் டெண்டுல்கர் பொறுப்பு ஏற்கிறார். பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும், 'பொருளாதார நிலைப்பாட்டு அறிக்கை' நேற்று வெளியிடப்பட்டது. இதை ரங்கராஜனும், சுரேஷ் டெண்டுல்கரும் வெளியிட்டு, இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்கி கூறியதாவது: நடப்பாண்டில்(2008-09) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக இருக்கும். கடந்தாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக இருந்தது. வரும் மார்ச் மாதத்திற்குள் பணவீக்கம் 8 சதவீதம் முதல் 9 சதவீதத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள கடும் நடவடிக்கை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பொருளாதார கொள்கைகளின் மூலம் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இருப்பினும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலையால், இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் சரியான பாதையில் பயணிப்பதற்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகள் அவசியமானதே. கடந்த நான்கு ஆண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து இருந்து வந்தது. கடந்தாண்டில் விவசாய உற்பத்தி 4.5 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில் இது 2 சதவீதத்தை மட்டுமே எட்டும். தொழில் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


புள்ளி விவரங்கள் கிளப்பிய பீதியால் தடுமாறியது பங்குச் சந்தையின் ஓட்டம்

சந்தை தடுமாறுகிறது; ஆனால், தடம் புரளவில்லை; பாதுகாப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. திங்கள் மேலே சென்றது. நேற்று முன்தினமும், நேற்றும் அந்த ஏற்றத்தை பறித்துக் கொண்டன. கச்சா எண்ணெய் விலை குறைவு சந்தையை திங்களன்று 336 புள்ளிகள் மேலே செல்ல வழிவகுத்தது. ஆனால், சந்தை நேற்று முன்தினம் ஏன் குறைந்தது? ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டில் தொழில் உற்பத்தி 5.2 சதவீதமாக இருந்தது. இது, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட பாதியளவே ஆகும். தொழில் உற்பத்தி குறைவதற்கு கூடிவரும் பணவீக்கம், கூடிவரும் வட்டி விகிதங்கள் முக்கியமானவை. மேலும், உலகளவிலும் பங்குச் சந்தைகள் கீழேயே இருந்தன. இதுவும் சரிவுக்கு ஒரு முக்கியமான காரணமாகும். இதனால் தான், இவைகள் பங்குச் சந்தையை நேற்று முன்தினம் ஒரு பாடுபடுத்தி விட்டது. அதாவது 291 புள்ளிகள் வரை குறைய வழிவகுத்துவிட்டது. நேற்றும் சந்தை கீழேயே துவங்கியது. அதாவது, 100 புள்ளிகளுக்கும் அதிகமாக கீழேயே இருந்தது. நடுவில் சிறிது மேலே சென்றது. மறுபடி கீழே வந்தது. முடிவாக 119 புள்ளிகள் கீழே சென்று முடிவடைந்தது. ரோலர் கோஸ்டர் போல இருந்தது. காரணம் செபி பார்ட்டிசிபேட்டரி நோட் சம்பந்தமாக ஒரு கூட்டம் கூட்டுவதாக இருந்தது தான். வெளிநாட்டு பி-நோட்டுகளை முடிப்பதற்காக விதிக் கப்பட்டிருந்த காலக்கெடுவான 18 மாதங்கள், 24 மாதங்களாக தள்ளி வைக்கப் படும் என தெரிய வருகிறது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 15,093 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,529 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சுருக்கமாக சொன்னால், தொழில் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, பி-நோட் என புள்ளி விவரங்களால் கிளம்பிய பீதியால் பங்குச் சந்தையின் ஓட்டம் தடைபட்டது. முதலீடு செய்தீர்களா? சந்தையில், 13,000 அளவிலிருந்து சிறிது சிறிதாக முதலீடு செய்து வந்தவர்களுக்கும், வங்கிப் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கும் நிச்சயம் லாபம் கிடைத்திருக்கும். அதே போல ஒவ்வொரு இறக்கத்திலும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வந்தவர்களுக்கும் லாபம் கிடைத்திருக்கும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை 15,000 அளவிலேயே கடந்த சில நாட்களாக இருப்பது ஒரு ஆறுதலான விஷயம். நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதத்திற்குள் இருக்கும் என பலரும் கணித்துள்ளனர். அது போலவே இருந்தால் சந்தையில் பெரிய பாதிப்பு இருக்காது. சந்தை சீராக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இன்று வாரத்தின் கடைசி வர்த்தக நாள் என்பதால் அடக்கி வாசிக்கப்படலாம். பக்கவாட்டிலேயே நகருவதற்கு வாய்ப்புகள் அதிகம். 10, 20 சதவீதம் லாபம் இருந்தால் காசாக்க பாருங்கள்.
தங்கம் ஏன் விலை குறைகிறது?: கடந்த பல மாதங்களாக, தங்கம், கோலோச்சிக்கொண்டிருந்ததை யாரும் மறுக்கமுடியாது. பங்குச் சந்தை விழுந்திருந்ததும், கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் முக்கியமான காரணங்களாக இருந்தன. தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆதலால் உலகளவில் தங்கம் விலையும் குறைந்து வருகிறது. மேலும் டாலர் மதிப்பு ரூபாய்க்கு எதிராக அதிகரித்து வருகிறது. அதுவும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் அது பங்குச் சந்தையின் எழுச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. சந்தை மேலே செல்லும் போது முதலீட்டாளர்கள் ஆர்வமாக பங்குச் சந்தைக்கு வருவது சகஜம். ஆதலால், தங்கம் விலை குறைய ஆரம்பித்தது. தங்கம் விலை குறைய ஆரம்பித்தால், இன்னும் சிறிது நாட்களில் கூடலாம் என்ற நினைப்பில் வாங்க ஆரம்பிப்பார்கள். இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


கள்ள நோட்டுக்களை கண்டறிய ரிசர்வ் வங்கி வழிமுறைகள்

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் கலந்து உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வழிகாட்டி முறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.உ.பி.,யில் சமீபத்தில் வங்கி கருவூலத்தில் இருந்து நிஜ ரூபாய் நோட்டுக்களுடன் போலி ரூபாய் நோட்டுக்கள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது. போலி நோட்டுக்களை கண்டறிய ரிசர்வ் வங்கி அவ்வப்போது அனைத்து வங்கிகளுக்கும் வழிமுறைகளை அனுப்பி வருகிறது.உண்மையான ரூபாய் நோட்டுக்களைப் பற்றி அறிய பொதுமக்கள் ரிசர்வ் வங்கியின், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.அசல் ரூபாய் நோட்டுக்களை கண்டறிய சில வழிமுறைகள்:* ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை லேசாக மடித்துப் பார்த்தால், அதில் பச்சை நிறத்துடன் மற்றொரு பக்கத்தின் நீல நிறமும் பார்க்கமுடியும்.* இந்தியில் அச்சிடப்பட்டுள்ள ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவை தொட்டுப் பார்த்தால் அதன் எழுத்துக்கள் சிறிது மேடாக இருக்கும்.
* ஆயிரம் ரூபாய் நோட்டில், 'பாரத்' என்ற சொல் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும்.
* மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் பாங்கின் சீல் கேரன்டி, அசோக ஸ்தம்பம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து 10 ரூபாய் நோட்டுத் தவிர மற்ற எல்லா நோட்டுக்களிலும் விசேஷ இன்டாக்லியோ பிரின்டிங் கால் தயார் செய்யப்பட்டுள்ளன.
* 'அல்ட்ரா வயலட்' விளக்கின் உதவியால் நோட் டின் விசேஷ ஆப்டிகல் பைபர் மற்றும் மையை பார்க்க முடியும்.
நன்றி : தினமலர்