Tuesday, July 15, 2008

இன்றைய பங்கு சந்தையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி


மும்பை : மும்பை பங்கு சந்தையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கரடிகளின் ஆதிக்கம் இன்று கடுமையாக இருந்தது. இதனால் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸூம் தேசிய பங்கு சந்தையில் நிப்டியும் கடும் வீழ்ச்சியை அடைந்தது. இன்றைய வீழ்ச்சியில் பெரும் பங்கேற்றது வங்கித்துறைதான். கேப்பிடல் பொருட்கள், மெட்டல், பவர், ரியால்டி, பார்மா மற்றும் ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டன. சென்செக்ஸூம் நிப்டியும் இந்த வருடத்தில் இன்றுதான் பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தன. இந்தியா உள்பட ஆசிய நாடுகள் அனைத்திலும் மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையிலும் கடும் வீழ்ச்சியே இருந்தது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைய துவங்கிய சென்செக்ஸ் மாலை வரை அப்படியே நீடித்தது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 654.32 புள்ளிகள் ( 4.91 சதவீதம் ) குறைந்து 12,676.19 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 178.60 புள்ளிகள் ( 4.42 சதவீதம் ) குறைந்து 3,861.10 புள்ளிகளில் முடிந்தது. உலக அளவில் இன்று பங்கு சந்தையில் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் அமெரிக்க நிதி துறையில் ஏற்பட்ட கடும் நெருக்கடிதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க வங்கித்துறை இப்போது கடும் வீழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரிட்டனிலும் கடந்த மாதத்தில் வீடுகளின் விலை கடுமையாக குறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியால் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை இன்னும் 0.5 சதவீதம் உயர்த்தும் என்று தெரிகிறது.

நன்றி : தினமலர்



கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆசிய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி


ஹாங்காங் : ஆசியா முழுவதும் இன்று செவ்வாய்கிழமை பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்ற வீழ்ச்சி ஏற்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆசிய பிராந்தியத்தில் பைனான்ஸ் துறையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதும், பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. யுரோவுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளதும் பங்கு சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஜப்பானின் மிகப்பெரிய மூன்று வங்கிகள் அமெரிக்க நிதி நிறுவனங்களான ஃபேன்னி மே மற்றும் ஃபிரடி மேக் ஆகியவைகளில் 44.3 பில்லியன் டாலர்கள் டெப்ட் செக்யூரிடியில் முதலீடு செய்திருப்பதாகவும், இப்போது அந்த நிதி நிறுவனங்கள் கடும் நிதி சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நலிவடைந்திருக்கும் இந்த இரு அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உதவி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இதனால் அங்கு பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பங்கு சந்தையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. டோக்கியோவில் நிக்கி 255.60 புள்ளிகள் குறைந்து 12,754.56 புள்ளிகளுக்கு வந்து விட்டது.இது தவிர ஹாங்காங் பங்கு சந்தையில் 839.69 புள்ளிகள் குறைந்து 21,174.77புள்ளிகளாகவும், சீனாவில் 98.81 புள்ளிகள் குறைந்து 2,779.45 புள்ளிகளாகவும், தைவானில் 322.72 புள்ளிகள் குறைந்து 6,834.24 புள்ளிகளாகவும், கொரியாவில் 49.29 புள்ளிகள் குறைந்து 1,509.33 புள்ளிகளாகவும் இருந்தது.


நன்றி : தினமலர்