Wednesday, February 25, 2009

சிறிது முன்னேறி முடிந்தது பங்கு சந்தை

உற்பத்தி வரி மற்றும் சேவை வரியில் தலா 2 சதவீதத்தை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவித்தது, ஆசிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற நிலை போன்றவற்றால் இந்திய பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே ஏறி இருந்த குறியீட்டு எண்கள், மாலை வரை தொடர்ந்தது. இன்று ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி, ஆட்டோ, மெட்டல், பேங்கிங் மற்றும் பவர் பங்குகள் விலை உயர்ந்திருந்தன. ஹெச்.டி.எப்.சி, எல் அண்ட் டி., டி.எல்.எப், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரான்பாக்ஸி, ஏபிபி, அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் ஏசிசி நிறுவன பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 80.50 புள்ளிகள் ( 0.91 சதவீதம் ) உயர்ந்து 8,902.56 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 28.60 புள்ளிகள் ( 1.05 சதவீதம் ) உயர்ந்து 2,762.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட் விலையை குறைக்கின்றன

இந்தியாவின் முன்னணி டிரக் தயாரிப்பாளர்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட், டிரக் விலையை குறைப்பதாக அறிவித்திருக்கின்றன. உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை தலா 2 சதவீதம் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து இந்த இரு நிறுவனங்களும் டிரக் விலையை குறைக்கின்றன. உற்பத்தி வரி குறைப்பால் எங்களுக்கு மிச்சமாகும் பணம் முழுவதையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கே கொடுத்து விட முடிவு செய்திருக்கிறோம் என்று அசோக் லேலாண்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு வாகன தயாரிப்பாளர்களும் ரூ.16,000 வரை விலையை குறைப்பார்கள் என்று தெரிகிறது. உற்பத்தி வரியை 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், சேவை வரியை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் மத்திய அரசு குறைத்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஜப்பானின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்து விட்டது

உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் அதிகம் முன்னேறிய நாடாகவும், ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் இருக்கும் ஜப்பானின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 45 சதவீதம் குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவின் காரணமாக ஜப்பான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் இந்த வருடம் ஜனவரி மாதத்தின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்திருப்பதாக அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அமெரிக்கான ஏற்றுமதி 53 சதவீதமும், ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி 47 சதவீதம் குறைந்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஜப்பானின் டிரேட் டெபிசிட் 9.9 பில்லியன் டாலராக அதிகரித்து விட்டது. உலக அளவில் ஜப்பானின் கார்களுக்கான டிமாண்ட் 69 சதவீதம் குறைந்திருக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து போனதால் ஜப்பானின் எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் டிமாண்ட் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜப்பானின் பொருளாதாரமே ஏற்றுமதியை நம்பித்தான் இருப்பதால், ஏற்றுமதி குறைந்திருப்பது அந்நாட்டு பொருளாதாரத்தை பெரிதாக பாதித்திருப்பதாக சொல்கிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின் இப்போதுதான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். எனவே உலகின் முதல் பொருளாதார நாடான அமெரிக்காவும், இரண்டாவது பொருளாதார நாடான ஜப்பானும் இணைந்து, ஜப்பானின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
நன்றி : தினமலர்


சென்னையில் வீடுகளின் விலையை ரூ.13 லட்சம் வரை குறைத்தது டி.எல்.எஃப்

சென்னையில் கட்டியிருக்கும் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளின் ( பிளாட்) விலையில் ரூ.13 லட்சம் வரை குறைப்பதாக, இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப்.,அறிவித்திருக்கிறது. டி.எல்.எஃப்.,இன் அறிவிப்பை தொடர்ந்து மற்ற கட்டுமான நிறுவனங்களும் வீடுகளின் விலையை குறைக்கும் என்று தெரிகிறது. டி.எல்.எஃப்., நிறுவனம், வீடுகளின் விலையை குறைப்பதில் சென்னை மூன்றாவது நகரமாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களுரு மற்றும் ஐதராபாத்தில் உள்ள வீடுகளின் விலையை டி.எல்.எஃப்., குறைத்தது. இப்போது சென்னையிலும் விலை குறைப்பது அமல்படுத்தப்படுகிறது. இது தவிர குர்காவ்ன், பஞ்ச்குலா மற்றும் கொச்சியிலும் அவர்கள் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட இருக்கிறார்கள். ' குறிப்பிட்ட சில நகரங்களில் கட்டுப்படியான விலையில் வீடுகள் ' என்ற திட்டத்தின் கீழ் இவைகள் கட்டப்படுவதாக டி.எல்.எஃப்., உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் புதிதாக வீடுகள் வாங்க இருப்பவர்களும், ஏற்கனவே வாங்கியவர்களும் இந்த விலை குறைப்பால் பயனடைவார்கள் என்றார் அந்த உயரதிகாரி . சென்னையில் இவர்கள் குடியிருப்பை கட்ட ஆரம்பித்த மார்ச் 2008ல், வீடுகளின் விலையை சதுர அடிக்கு ரூ.2,800 என்று வைத்திருந்தார்கள். ஆனால் அது கட்டி முடிக்கப்பட்டபோது ரூ.3,000 ஆக உயர்ந்து விட்டது. இப்போது அது புது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,500 ஆகவும், இனிமேல் வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,550 ஆகவும் குறைக்கப்படுகிறது என்று டி.எல்.எஃப்., தெரிவித்திருக்கிறது. இதனால் வீடுகளின் அளவை பொருத்து, வீடு வாங்குபவர்களுக்கு ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை மிச்சமாகும். சென்னையில் டி.எல்.எஃப்., நிறுவனம் மொத்தம் 3,493 வீடுகளை கட்டியிருக்கிறது. அதில் 1,500 வீடுகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கிறது.
நன்றி : தினமலர்