Tuesday, November 24, 2009

என்றும் பதினாறு-மதுரப் பதினேழு!

தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டெஸ்ட் வரிசையில் டான் பிராட்மனுக்கு இரண்டாவது. ஒரு தினப் போட்டியில் விவியன் ரிச்சர்டுக்கு இரண்டாவது என்று கிரிக்கெட் பஞ்சாங்கமான "விஸ்டன்' ஆரூடம் கணித்தது. ஆனால் சாதனைகள் என்று வரும்போது அவர்தான் இன்று "நம்பர்-ஒன்' இதைச் சொல்ல எந்த விஸ்டனும் தேவை இல்லை.

இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால் சச்சின் அதன் கடவுள் என்று பாரி ரிச்சர்டு சொன்னார். இப்போது 439 ரன்கள் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ள பள்ளி மாணவன் சர்ஃப்ராஸ் கானும் அதைத்தான் சொல்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 12,877 ரன்கள். ஒருதினப் போட்டியில் 17,178 ரன்கள். முதல்தர ஆட்டத்தில் 21,662. 20-20 போட்டியில் ஒரே ஓர் ஆட்டத்தில்தான் ஆடி இருக்கிறார். அதில் வெறும் பத்து ரன்கள்.

டெஸ்டில் 43 சதங்கள் 53 அரைச் சதங்கள். ஒருதினப் போட்டியில் 45 சதங்கள் 91 அரைச்சதங்கள். அதிகபட்ச "ஸ்கோர்' டெஸ்டில் 248; ஒருதினப் போட்டியில் 186. அதிகமான ஆட்ட - தொடர் நாயகன் விருதுகள்.

டெஸ்டில் அதிக சதங்கள் என்று வந்தபோது கவாஸ்கர், டெஸ்டில் அதிக ரன்கள் என்றபோது பிரையன் லாரா, அதிக அரைச் சதங்கள் என்று வந்தபோது ஆலன் பார்டர் ஆகியோரது சாதனைகள் தகர்ந்தன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் பத்துச் சதங்கள் என்பது எழுபது ஆண்டுகள் நிலை நின்றிருந்த ஜேக் ஜொப்சையே முறியடித்த சாதனை.

பொது வாழ்க்கையில் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், விளையாட்டில் உயர் வகை விருதான அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்ன இவர் கையடக்கியவை. இனி "பாரத ரத்னா'தான் பாக்கி. அது விரைவில் வீடு வந்துசேரும் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. "விஸ்டன்' ஓராண்டு இவரை அந்த ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அறிவித்தது. பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் ஒரு படி மேலே போய், சம்பிரதாயங்களைப் பற்றிக் கவலைப்படாது பிரிட்டனின் உயரிய விருதான ""சர்'' பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அமெரிக்க "டைம்' சஞ்சிகை, ""அவர் தேர்ந்தெடுத்த துறையில் இன்று உயிர் வாழும் மிக உன்னதமான பிறவி'' என்று வர்ணித்தது.

"லிட்டில் சாம்பியன்' லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் ப்ளாஸ்டர், டெண்டியா என்பவை இவரது நண்பர்களும் அபிமானிகளும் இவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர்கள்.

மராத்திய எழுத்தாளர் ரமேஷ் டெண்டுல்கர் தன் செல்லப் பிள்ளைக்கு சூட்டிய பெயர் தன் அபிமானத்துக்குரிய இசைக் கலைஞரான சச்சின் தேவ் பர்மனுடைய பெயர்.

வேகப் பந்து வீச்சில் பயிற்சி பெற டென்னிஸ் லில்லியை இவர் அணுக, ""தம்பி இதற்கு நீ சரிவர மாட்டாய் வேறு வேலை இருந்தால் பார்'' என்று திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் இவருடைய துரோணாச்சாரியார் ராம்காந்த் அச்ரேகர். இவர் உள்ளில் உறையும் அர்ஜுனனை அடையாளம் கண்டு கொண்டார்.

1988-ல் இவர் தனது பள்ளிக்காக ஆடிய எல்லாப் போட்டிகளிலும் சதம் பெற்றதோடு, வினோத் காம்பிளியுடன் இணைந்து 664 ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார். அதில் சச்சினின் பங்கு மட்டும் 326 ரன்கள். 2006-ம் ஆண்டு வரை, ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முறியடிக்கும் வரை அது உலகச் சாதனையாக இருந்தது.

இவரது 14-வது வயதில் கவாஸ்கர் தன்னுடைய மெல்லிய கால் காப்புகளை இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அது நடந்து இருபது ஆண்டுகள் கழித்து அதே கவாஸ்கருடைய 34 சதங்கள் என்ற மகத்தான சாதனையை சச்சின் முறியடித்தார்.

15-வது வயதில் குஜராத்துக்கு எதிராக மும்பைக்காக ஆடிய கன்னி ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்தார். அதன் மூலம் முதல்தர ஆட்டத்தில் இத்தகைய சாதனை புரிந்த மிக இளைய ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். ரஞ்சி, தியோதார், துலீப், ஈரானி ஆகிய அத்தனை விருதுகள் போட்டியிலும் சதம் பெற்றவர் சச்சின். இந்த விஷயத்தில் வேறு யாரும் இவர் அருகில் கூட வர முடியாது.

1998-ல் ஆஸி. அணிக்கு எதிராக மும்பை ஆடியபோது பிரேபோன் மைதானத்தில் இவர் பெற்ற இரட்டைச் சதம் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. காரணம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அது எளிதான காரியமல்ல.

இங்கிலாந்தில் யோர்க்ஷயர் அணி வெளிநாட்டவர் எவரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரே வெளிநாட்டவர் சச்சின்தான். அந்த சீசனில் அவர் 16 போட்டிகளில் 1070 ரன்கள் எடுத்தார். சராசரி 46.52.

1989-ல் தனது 15-வது வயதில் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் பிரவேசம். இந்த டெஸ்டில்தான் வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுசும் தன் டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு போட்டியில் அப்துல் காதருக்கு எதிராக ஓர் ஓவரில் சச்சின் 28 ரன்கள் எடுத்ததை மறக்க முடியாது என்கிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

1990-ல் இங்கிலாந்தில் தான் இவரது கன்னிச் சதம் வந்தது. 91-92-ல் சச்சினின் ஆட்டத்தைப் பார்த்த மெர்வ் ஹியூஸ் ஆலன் பார்டரிடம் ""பார், இந்தப் பொடியன் உன் சாதனையை முறியடிக்கப் போகிறான்'' என்றார். அது நடந்தது.

கிரிக்கெட்டில் அவர் சாதனை படைக்க முடியாமல் போனது ஒரே ஒரு விஷயத்தில்தான். இரண்டு முறை கேப்டனாக இருந்தும் அந்தப் பதவியில் அவர் சோபிக்கவில்லை.

வாழ்நாளில் ஒருமுறைதான் சச்சின் போன்ற ஓர் ஆட்டக்காரரைச் சந்திக்க முடியும் என்றார் வாசிம் அக்ரம், 99.9 சதவீத பரிபூரண ஆட்டக்காரர் சச்சின் என்றார் விவியன் ரிச்சர்ட். சச்சினை ஒரு ஜீனியஸ் என்றார் சர் ரிச்சர்ட் ஹாட்லீ. இப்படி பல்வேறு சொற்றொடர்களால் ஆலன் பார்டர், பிரையன் லாரா ஆகியோர் புகழ்ந்திருக்கிறார்கள்.

சச்சினை மகிமைப்படுத்தும் இன்னொரு விஷயம் சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர்கள் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் இல்லை. சச்சினுக்குப் பிறகு அதிக ரன்கள் பெற்றுள்ள சனத் ஜயசூர்யா 4,000 ரன்கள் பின்னால் நிற்கிறார். அவரது ஆட்ட நாள்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. சதங்களில் அவரைத் தொடக்கூடும் என்று நம்பப்பட்ட ரிக்கி பாண்டிங்கும் அப்படியே. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனையிலும் அவரை மிஞ்ச யாரும் இருப்பதுபோல் தோன்றவில்லை.

விளம்பர வருவாயில் மாத்திரம் ஒருவர் அவரை முந்தி இருக்கிறார். அவர் தோனி. மற்றபடி வேறு எந்தச் சாதனையிலும் சச்சினை மிஞ்ச எவரும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

அவருடைய சமூகப் பிரக்ஞைக்கும், மனித நேயத்துக்கும் ஒரு சான்று. அவரது மாமியார் நடத்தி வரும் ""அப்னாலயா'' மூலம் அவர் 200 குழந்தைகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

சென்னையில் ஓர் ஆட்டத்தில் அவர் சதம் பெற்றார். ஆனால் இந்தியா தோற்றுப் போய்விட்டது. நான் வர்ணனை நடக்கும் மாடியில் நிற்கிறேன். சச்சின் தலை குனிந்த வண்ணம் பஸ் ஏறப் போகிறார். அவரது சகா அவரை ஆதரவாக அணைத்தவண்ணம் வழிநடத்தி வருகிறார். உற்றுப் பார்த்தபோது சச்சினின் கண்களின் கண்ணீர்.

சென்ற ஆட்டத்தில்கூட 175 ரன்கள். 17,000 ரன்கள் என்ற மந்திர இலக்கைக் கடந்த அற்புதச் சாதனை.

ஆட்ட நாயகன் விருது, என்றாலும் சச்சினின் கண்களில் நீர்கோர்ப்பு. தொண்டை கம்மி இருந்தது. தனக்கு இத்தனை புகழ் வந்தென்ன; நாடு தோற்றுவிட்டதே என்கிற சோகம். சோகத்தால் அவர் தலை குனிந்தது. ஆனால் அவரது அப்பழுக்கற்ற தேச பக்தியை எண்ணி - அவரது சாதனைகளை நினைந்து ஒவ்வோர் இந்தியரும் பெருமையுடன் தலைநிமிர்ந்தார். நம் தேசம் நம் சச்சின்.

(கட்டுரையாளர்: அப்துல் ஜப்பார், வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்).
நன்றி : தினமணி

ஃபாஸ்ட்புட்டை பின்னுக்கு தள்ள வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தமிழக இட்லி

தமிழர்களுக்கு இட்லி இப்போது இந்திய அளவில் பிரபலமாகி விட்டது. ஆனால் உலகஅளவில் இட்லிக்கு எந்த மவுசும் ஏற்படவில்லை. வெளி நாட்டுக்காரர்கள் இந்தியா வரும் போதும் இட்லியை சாப்பிட்டு விட்டு அதன் ருசியை பாராட்டுவது உண்டு. இருப்பினும் நாம் இன்னும் வெளிநாடுகளில் இட்லியை அறிமுகப்படுத்தாததால் அவை இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழ்நாட்டுக்குள் முடங்கி கிடக்கின்றன.
சீனாவில் பிறந்த “நூடுல்ஸ்”, வெள்ளைக்காரர்களில் கண்டுபிடிப்பான “பர்க்கர்” போன்றவை இன்று உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்து விட்டன. இப்போது இந்த இடத்துக்கு இட்லியையும் கொண்டு வரும் திட்டத்தை தஞ்சாவூரில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப மையம் உருவாக்கியுள்ளது. இட்லியை பதப்படுத்தி அனுப்புவதுதான் பெரிய பிரச்சினை அதை மட்டும் கண்டுபிடித்து விட்டால் இட்லியையும் உலக அளவில் சந்தைப்படுத்தி விடலாம். அதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த மையம் முயற்சித்து வருகிறது. இது பற்றி இந்த மைய இயக்குனர் அழகு சுந்தரம் கூறியதாவது: இட்லியை உற்பத்தி செய்து, பதப்படுத்தி வெளிநாட்டு விற்பனைக்கு அனுப்ப 3 வருட ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். பர்க்கர் போன்ற உணவுகளை விட இட்லியில் அதிக சத்தும், ருசியும் இருக்கிறது. இருந்தாலும் ஏன் இதை உலக அளவில் பிரபலப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது. இட்லி மிகவும் சத்தான உணவு. விலை மலிவான உணவு. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம்.
எனவே இதை தொழில் உற்பத்தி பொருளாக்கி சந்தை படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். இதன் முதல் கட்ட ஆராய்ச்சிக்காக இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் ரூ.2 கோடியே 60 லட்சம் வழங்கி உள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஒரு பகுதியாக குடும்ப பெண்கள் பங்கேற்கும் “இட்லி மேளா” என்ற விழாவை டிசம்பர் 3ந் தேதி தஞ்சாவூரில் நடத்த உள்ளோம். அப்போது குடும்ப பெண்கள் ஒவ்வொரு வரும் இட்லியை தயாரித்து கொடுக்கலாம். அதில் எந்த இட்லி ருசியாக இருக்கிறது. எப்படி தயாரிப்பதால் இந்த ருசி வருகிறது? என்று ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


காட்பரி நிறுவனத்தை வாங்க கடும் போட்டி

பிரிட்டிஷின் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான காட்பரி விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்க சர்வதேச நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. காட்பரி நிறுவனத்துக்கு 16.5 பில்லியன் டாலர் வரை தர க்ராப்ட் புட்ஸ் முன்வந்துள்ளது. ஆனால் இப்போது அமெரிக்காவின் ஹெர்ஷே நிறுவனமும் களத்தில் குதித்துள்ளதால், போட்டி கடுமையாகியுள்ளது. க்ராப்ட் புட்ஸ் நிறுவனத்தைவிட 0.5 பில்லியன் டாலர் அதிகம் தர ஹெர்ஷே முன் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இன்னும் வாய்திறக்காமல் உள்ளது காட்பரி. இந்நிலையில் காட்பரியை வாங்க தங்களுக்கும் விருப்பமுள்ளது என்று அறிவித்துள்ளது புகழ்பெற்ற நெஸ்லே நிறுவனம். காட்பரி நிறுவனத்தை வாங்க நெஸ்லே, 18 பில்லியன் டாலர் வரை தரவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


பயன்படுத்தாத பழைய நகைக்கு வட்டி : எஸ்பிஐ அறிவிப்பு

பயன்படுத்தாத பழைய தங்க நகைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் அவற்றை ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்து, வட்டியும் பெறலாம். மதிப்பு மீது கடனும் பெறலாம். கோல்டு டெபாசிட் திட்டத்தை நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அடிக்கடி பயன்படுத்தாத பழைய தங்க நகைகள், டெபாசிட்டாக ஏற்கப்படும். இத்திட்டத்தில் பெறப்படும் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சடிப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு நகைகள் உருக்கப்பட்டு, கழிவுகள் நீக்கப்படும். சுத்தத் தங்கமாக்கி (999 சுத்தம்) பிஸ்கெட்டுகளாக மாற்றப்படும்.
அதன் மதிப்பை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளருக்கு அந்த தொகைக்கு தங்க டெபாசிட் சான்றிதழ் அளிக்கப்படும். தங்க டெபாசிட் தொகை மீது 1.5 சதவீதம் வரை வட்டியை வங்கி அளிக்கும். இந்த திட்டத்தின்கீழ் டெபாசிட் செய்ய குறைந்தபட்சம் 500 கிராம் (62.5 பவுன்) நகை தேவை. குறைந்தது 3 ஆண்டு கால டெபாசிட்டாக ஏற்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


கனடா செல்ல ஒரே நாளில் விசா பெறலாம்

கனடா வரவிரும்பும் இந்தியருக்கு, எக்ஸ்பிரஸ் விசா சேவையின் கீழ் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வருகையை அனுமதிக்கும் விசா வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. கனடா குடியேற்றத் துறை அமைச்சர் ஜாஸன்கீனே டொரான்டோவில் நடைபெற்ற, இந்திய-கனடா வர்த்தக சபை கூட்டத்தில் இதனை அறிவித்தார். இந்திய தூதர் பிரீத்தி சரண் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் இந்திய பயணத்தையொட்டி விசா விதிகளை கனடா தளர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்