![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGeHsZ9AzL5engSIdXU9z5pUsh1b1DtdGtQWTK4ojsplFKJtueuz03Uc0Ze0SRVYJfP9kMkzEXqLO1i8ab9lPYGjBPcSr82FbsfTLVnFNd8yDn4c1Xhd0jp32PLG4FS8kH08g__Dch_BE/s320/2623975.jpg)
வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இது வீட்டுக் கடன் வசதி, கார் வாங்க கடனுதவி, பெர்சனல் லோன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் குறைய வழிவகுக்கும். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், இந்தியாவில் நிதிச்சந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், பணப் புழக்கத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்தது. இவற்றின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் பெற்று, அதை வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வந்தன. இந்த கடனுக்கு (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி 9 சதவீதம் வசூலித்து வந்தது. தற்போது, இதில் 100 புள்ளிகளை குறைத்து, 8 சதவீத வட்டி ஆக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் பயனாக முதலீட்டாளர்கள் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. வீடு கட்டுபவர்கள், தனிநபர் கடன் பெறுவோர், வாகன கடன் பெறுபவர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை குறைத்துள்ளது. சிதம்பரம் வரவேற்பு: டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் கூறுகையில், 'ரெபோ ரேட்டை குறைத்துள்ளதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேம்படும், பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்படும். கடன் பெறுவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும்' என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இணை நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் கூறுகையில், 'ரிசர்வ் வங்கியின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் போதிய பணப்புழக்கம் இருக்கும். நிதிச்சந்தைகள் சுமுக செயல்பாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்' என்றார். இனி வங்கிகள் டிபாசிட் மற்றும் கடன் மீதான வட்டி குறித்து மறுபரிசீலனை செய்து எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பால் ஏற்பட்ட நிதிச்சுனாமிக்கு இது ஓரளவு ஆறுதலாக இருப்பதுடன், மக்களிடம் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்