Tuesday, April 21, 2009

கடந்த பத்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை 216 சதவீதம் உயர்ந்திருக்கிறது

1999-ஆம் ஆண்டில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.3,850 என்ற அளவில் தான் இருந்தது. அப்போது ஒருவர், 10 கிராம் தங்கம் வாங்கி வைத்திருந்தார் என்றால், அது இன்றைய தேதியில் 216 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்திருக்கும் என உலக தங்க கவுன்சிலின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த பத்து ஆண்டுகளில், தங்கத்தின் விலை ஆண்டுக்கு சராசரியாக 24 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. நடப்பு 2009-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்திருந்தது. அதாவது, அதன் விலை அப்போது சராசரியாக ரூ.14,180 என்ற அளவில் இருந்தது. ( பிப்ரவரி மாதம் 24-ந் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,780 வரையிலும் உயர்ந்திருந்தது ) 2006-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.8,791 ஆகத்தான் இருந்தது. அது, 2008-ஆம் ஆண்டில், அதிகபட்சமாக ரூ.12,147 ஆகத்தான் உயர்ந்திருந்தது. ஆக, இந்த இடைப்பட்ட காலத்தில், தங்கத்தின் விலை 38 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சென்ற ஆண்டு பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் விலை : சன் மைக்ரோசிஸ்டத்தை ஆரக்கிள் வாங்குகிறது

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சன் மைக்ரோசிஸ்டத்தை, பிரபல கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் வாங்குகிறது. சன் நிறுவனத்தின் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிள் வாங்கிக்கொள்கிறது. அதன் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர் ( சுமார் 35,000 கோடி ரூபாய் ) என்று சொல்லப்படுகிறது. கடந்த வெள்ளி அன்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கின் முடிவு விலை என்னவாக இருந்ததோ, அதிலிருந்து 42 சதவீதம் பிரீமியம் வைத்து அதன் பங்குகளை ஆரக்கிள் வாங்கிக் கொள்கிறது. சன் விற்கப்படுவதை அடுத்து நேற்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கு மதிப்பு 27 சதவீதம் உயர்ந்தும், ஆரக்கிளின் பங்கு மதிப்பு 5.56 சதவீதம் குறைந்தும் இருந்தது. ஏற்கனவே, சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்குகளை பங்கு ஒன்றுக்கு 9.40 டாலர் வரை கொடுத்து வாங்கிக்கொள்வதாக ஐ.பி.எம்.தெரிவித்திருந்தது. இருந்தாலும் ஐ.பி.எம்.மின் கோரிக்கையை சன் நிராகரித்து விட்டது. அதன் பின் ஒரு மாதத்திற்குப்பின் இப்போது பங்குக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிளுக்கு கொடுக்கு முன் வந்திருக்கிறது. ஆரக்கிளிடம் சன் மைக்ரோசிஸ்டத்தை விற்பதற்கு அதன் போர்டு ஆப் டைரக்டர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டனர். இருந்தாலும் பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒப்புதலை பெற்று இது விற்கப்படும் என்று சன் தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஆக்ஸிஸ் பேங்க் சேர்மன் ராஜினாமா : ஷிகா சர்மாவை எம்.டி.யாக நியமித்ததற்கு எதிர்ப்பு

ஆக்ஸிஸ் பேங்க்கின் அடுத்த மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.வாக ஷிகா சர்மாவை போர்டு நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சேர்மன் பி.ஜே.நாயக் ராஜினாமா செய்திருக்கிறார். நேற்று சுமார் 7 மணி நேரம் நடந்த ஆக்ஸிஸ் பேங்கின் போட்டு மீட்டிங்கில், அடுத்த மேலாண் இயக்குனராக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சுவந்தபோது, அதன் நியமன கமிட்டி ஷிகா சர்மாவின் பெயரை சொன்னது. ஆனால் அதற்கு நாயக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது, அதில் நாயக் மட்டுமே ஷிகா சர்மாவுக்கு எதிராக ஓட்டளித்திருந்தார். மற்ற 8 உறுப்பினர்களும் ஷிகாவுக்கு ஆதரவாக ஓட்டளித்திருந்தனர். மேலும் அந்த பதவிக்கு நாயக் சிபாரிசு செய்த ஹேமந்த் கவுல் ஐ விட, ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் இல் எம்.டி.மற்றும் சி.இ.ஓ.,வாக இருந்து நல்ல அனுபவம் பெற்றிருக்கும் ஷிகா சர்மாதான் பொருத்தமானவர் என்று போர்டு கருதியது. ஹேமந்த் கவுர், ஆக்ஸிஸ் பேங்க்கின் ரீடெய்ல் நடவடிக்கைகளுக்கு எக்ஸிகூடிவ் டைரக்டர் பொறுப்பாக இருப்பவர்.

நன்றி : தினமலர்



முன்கூட்டியே டிக்கெட் வாங்கினால் குறைந்த கட்டணத்தில் பறக்கலாம் : ஏர் இந்தியா அறிமுகம்

ஏர் இந்தியா விமானங்களின் பயணம் செய்யும் பயணிகள், அதற்கான டிக்கெட்டை முன்கூட்டியே வாங்கினால் குறைந்த கட்டணம்தான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். உள்நாட்டு விமான சேவையில் குறிப்பிட்ட 35 இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சலுகை ஏப்ரல் 17 ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அட்வான்ஸ் பர்சேஸ் எக்ஸ்கர்சன் ஃபேர்ஸ் ( அபெக்ஸ் ) என்ற இந்த திட்டப்படி, சென்னையில் இருந்து மதுரை அல்லது ஐதராபாத் அல்லது விசாகப்பட்டணம் அல்லது பெங்களுர் செல்ல விரும்பும் பயணிகள், 10 நாட்களுக்கு முன்பே அதற்கான டிக்கெட்டை வாங்கி விட்டால் ரூ.2,694 தான் கட்டணம். அதையே 20 நாட்களுக்கு முன்பு வாங்கினால் ரூ.2,494 தான் கட்டணம். இதில் பேசிக் ஃபேர், பேசஞ்சர் சர்வீஸ் ஃபீ, மற்றும் பியூயல் சர் சார்ஞ் ஆகியவை அடங்கி விடும். ஆனால் சில விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் யூசர் டெவலப்மென்ட் ஃபீ மட்டும் கட்டவேண்டியிருக்கும். மேலும் இந்த திட்டத்தில் வாங்கப்படும் டிக்கெட்களை கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெற முடியாது. கோடை காலத்திற்காக ஏற்கனவே ஏர் இந்தியா அறிமுகப்படுத்திய, 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் எடுத்தால் குறைந்த கட்டணம் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த திட்டமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


பொறுப்புள்ள செயலா...

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41-வது பிரிவுக்குத் திருத்தம் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகு, அதை அரசு கெஜட்டில் வெளியிடாமல் நிறுத்திவைப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
""மிகவும் முற்போக்கான நடவடிக்கை, மனித உரிமைகளைக் காப்பதற்கு இதைவிட வேறு வழியே இல்லை'' என்று வெகுவாகப் பாராட்டப்பட்ட ஒரு சட்டத் திருத்தம், வழக்கறிஞர்கள் சங்கத்தின் பலமான ஆட்சேபம் காரணமாகக் கைவிடப்படும் அல்லது திருத்தப்படும் நிலையை எட்டியிருக்கிறது. இந்த நடவடிக்கை அடிப்படையாகச் சில கேள்விகளை எழுப்புகிறது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் விரிவாகவும் ஆழமாகவும் விருப்பு வெறுப்பு இல்லாமலும் விவாதித்துத் தீர்வு காண்பார்கள் என்றுதான் நாடு நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த 2008-வது ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவில்லை.
எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் சட்டத் திருத்தமாக இருந்தாலும் அதன் மீது 3 கட்டங்களில் பரிசீலனை நடக்கிறது. முதலில் அந்தச் சட்டம் அல்லது சட்டத் திருத்தம் வரைவு நிலையில் தயாரித்து முடிக்கப்பட்டு அவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்துப் பார்க்கவும், விவாதத்துக்குத் தயார் செய்து கொள்ளவும் இப்படிச் செய்யப்படுகிறது.
அடுத்தபடியாக அதே சட்ட வரைவு மசோதா அல்லது சட்டத் திருத்த மசோதா அந்தந்தத் துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவில் விவாதிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக இந்த மசோதா மீது பொது விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்குப்பின் நிறைவேற்றுகிறார்கள்.
சர்ச்சைக்குரிய இந்தக் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதாவில், சில வகைக் குற்றங்களுக்கு போலீஸ் அதிகாரிக்கு இருந்த ""கைது அதிகாரம்'' நீக்கப்பட்டிருக்கிறது. அதாவது 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாகத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச் செயல்களாக இருந்தால், ""விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும்'' என்று எழுதி வாங்கினால் போதும், கைது செய்ய வேண்டாம் என்று திருத்தம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தமே 41 (ஏ) என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் திருத்தத்தின் மூலம் போலீஸ் அதிகாரியின் வரம்பற்ற கைது அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படும் நடவடிக்கைகள் இனி குறைந்துவிடும் என்றும், மனித உரிமை ஆர்வலர்களும், சட்டக் கமிஷன்களும் நெடுநாள்களாக வலியுறுத்தி வந்த விஷயத்துக்கு இத் திருத்தம் வடிவம் கொடுத்துவிட்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எல்லா சிறைச்சாலைகளும் நிரம்பி வழிவதால், சாதாரணக் குற்றங்கள் செய்கிறவர்களையும் அடைத்தால் அவர்களைப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது என்பதால் இப்படித் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் கூட அப்போது கூறப்பட்டது. இப்படிக் கைது அதிகாரத்தை மட்டுப்படுத்தினால் சிறிய குற்றங்கள் பெருகிவிடும்; வரதட்சிணைக் கொடுமை போன்ற வழக்குகளில் பெண்கள் தரும் புகார்கள் மீது மாமியார், நாத்தனார், மாமனார், கணவர் போன்றோரைக் கைது செய்யத் தடை ஏற்பட்டுவிடும். அதன் பிறகு இக் கொடுமைகளைச் செய்வோருக்கு அதுவே ஊக்குவிப்பாகிவிடும் என்று பல மகளிர் அமைப்புகள் சுட்டிக்காட்டின.
பெண் சீண்டல், பெண்களைக் கேலி செய்தல், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவான தண்டனைகளே விதிக்கப்படுவதால் அத்தகைய குற்றங்கள் பெருகிவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
வழக்கறிஞர் சங்கங்கள்தான் இந்தத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்தன. ""ஜாமீன் வாங்கித்தருவதன் மூலம்தான் வழக்கறிஞர்களுக்கு நிறையப் பணம் கிடைக்கிறது; அந்த வழக்குகளில் பெரும்பாலானவை இனி அடிபட்டுப் போய்விடும் என்பதால் வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்'' என்று கூறப்பட்டது. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம்; ஆனால் வழக்கறிஞர்களுடைய ஆட்சேபத்தில் வலுவும், நியாயமும் இருக்கிறது.
""குற்றவியல் சட்டத்தின் 41-வது பிரிவு "ஏ'-வுக்கு இப்படி எதிர்ப்பு என்றதும் கைவிடுகிறீர்களே, இதை ஏன் முதலில் ஏற்றுக் கொண்டீர்கள்?'' என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேட்டதற்கு, ""மலிமத் கமிட்டி பரிந்துரைத்தது, சட்டக் கமிஷனும் இதை அமல் செய்யும்படி கூறியது'' என்று மட்டும் பதில் அளித்திருக்கிறார். இது ஏற்கும்படியான விளக்கமாக இல்லை.
""வரும்பொருள் உரைத்தல் மந்திரிக்கழகு'' என்பது முதுமொழி. இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை ஊகித்தறிய முடியாதவர்களா சிதம்பரங்களும், கபில் சிபல்களும், ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்களும்? நம்பவே முடியவில்லை.
நன்றி : தினமணி