Saturday, November 29, 2008

ஒபராய் ஹோட்டல் தாக்குதலில் யெஸ் பேங்க் சேர்மன் கொல்லப்பட்டார்

மும்பை ஒபராய் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் யெஸ் பேங்க் சேர்மன் அசோக் கபூர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த புதன் கிழமை அன்று இரவில் மும்பையில் பல இடங்களில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் இரண்டு இடங்கள் பிரபல சொகுசு ஹோட்டல்களான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஓபராய் டிரைடன்ட். தீவிரவாதிகள் நுழைந்த அதே புதன் கிழமை இரவுதான் ஓபராய் ஹோட்டலுக்கு மனைவியுடன் டின்னர் சாப்பிட போயிருந்தார் யெஸ் பேங்க் சேர்மன் அசோக் கபூர். டின்னர் சாப்பிடப்போயிருந்த அசோக் கபூர், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அங்குதான் இருந்திருக்கிறார். அதன் பின்னர் நேற்று மாலை வரை அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. தீவிரடவாதிகளுடன் தாக்குதல் நடத்த ஓபராய் ஹோட்டலுக்குள் நுழைந்திருந்த கமாண்டோ படையினர், ஓபராய் ஹோட்டலில் எல்லா வேலைகளும் முடிந்து என்றும், எல்லோரையும் வெளியேற்றி விட்டேம் என்றும் அறிவித்து விட்டனர். இருந்தாலும் அசோக் கபூர் என்ன ஆனார் என்றும் அவர் உயிருடன் தப்பி விட்டாரா அல்லது இறந்து விட்டாரா என்றும் தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில் அவர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அசோக் கபூருடன் சென்றிருந்த அவரது மனைவி மது கபூர் கமாண்டோ படையினரால் காப்பாற்றப்பட்டு விட்டார். ஹோட்டலுக்குள் என்ன நடந்தது என்று சொன்ன மது கபூர், உள்ள நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவன் எங்களுக்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். அந்த குழப்பமான சூழ்நிலையில் நாங்கள் சிலர் எப்படியோ அங்கிருந்து நகர்ந்து விட்டோம். பின்னர் ஒரு ஸ்பானிஷ் தம்பதியின் உதவியுடன் நான் ஒரு இடத்தில் பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் தெரிந்தது, அங்கு என் கணவர் இல்லை என்பது. நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தேன். அவர் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. பின்னர் நான் கமாண்டோ படையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். அதன்பின் நான் அவரை பார்க்கவே இல்லை என்றார்.
நன்றி : தினமலர்


அரசு கேபிள் 'டிவி'யில் 800 சேனல்கள் ; வாடகைக்கு 'செட்டாப் பாக்ஸ்': உமாசங்கர் தகவல்

''அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன், வியாபார நோக்கத்தில்தான் செயல்படும்; இதனால், எல்லாத் தரப்பினருக்கும் பலன் கிடைக்கும்,'' என்று, தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் தெரிவித்தார்.
அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷனின் செயல் பாடுகள் குறித்த கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உமாசங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன், வியாபார நோக்குடன்தான் செயல்படும். ஒரு மடங்கு முதலீடு செய்தால் மூன்று மடங்கு வருவாய் பார்க்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷனுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பயன்படுத்தாத அளவுக்கு அதிநவீன தொழில் நுட்பத்தில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதனால், மிக மிகத்துல்லியமாக டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு இருக்கும் என்பதோடு, 800 சேனல் கூட தர முடியும்.

வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறும் சேனல் களை அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் கேபிள் இணைப்புகளுக்கும், இங்கிருந்து பெறும் சேனல்களை பிற நிறுவனங்களின் இணைப்புகளுக்கும் மாற்றித்தருவது (பைரசி) சட்டத்துக்குப் புறம்பானது.

'செட்டாப் பாக்ஸ்'களை விலைக்கும், வாடகைக்கும் வழங்கலாம் என்று இரு வகையான ஆலோசனை உள்ளது. 30 ரூபாயிலிருந்து, 35 ரூபாய் க்குள் வாடகை வசூலிக்கலாம். கேபிளை வெட்டுவது சட்டவிரோதச் செயல். கேபிளை யார் வெட்டினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கேபிளில் விரைவில் எல்லா சேனல்களும் வரும்; அதற்கான முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. சட்டரீதியான முயற்சிகளுடன்,பேச்சுவார்த்தை மூலமாகவும் முயற்சி எடுக்கப்படுகிறது. கேபிள் தொழிலுக்கு எதிர்காலம் நன்றாகவுள்ளது. கேபிள் இணைப்பில் ஏதாவது பிரச்னை என்றால், நீங்கள் உடனடியாக சரி செய்து கொடுப்பீர்கள். ஆனால், டி.டி.எச்., உபகரணத்தில் ஏதாவது பிரச்னை என்றால் அதை சரி செய்ய பல நாட்களாகி விடும். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் கேபிள் களை வெளியாட்கள் யாரும் வெட்ட வாய்ப்பில்லை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.

கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இடையிடையே உமாசங்கர் தலையிட்டு கூறிய கருத்துக்களுக்கு பெரும் கைத் தட்டல் கிடைத்தது. இதுவரையிலும் அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் தேறுமா என்ற எண்ணத்தில் இருந்த ஆபரேட்டர்கள் பலரும், நேற்று நடந்த கூட்டத்துக்கு வந்த பின், புதிய நம்பிக்கை உடன் திரும்பினர்.

அரசு கேபிள் 'டிவி' சார்பில்

அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தற்போது செயல்பாட்டுக்கு வந்து விட்டது. வேலூர் மற்றும் சென்னையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் 'செட்டாப் பாக்ஸ்' உடன் இணைப்பு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் சார்பில், நடுநிலையான தமிழ் செய்தி சேனல் ஒன்றும், உள்ளூர் சேனல் ஒன்றும் துவக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசிடமிருந்து இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் எந்த நிபந்தனைக்கும் உட்படாமல் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. கோவையில் 100 சதவீத ஆபரேட்டர்கள், 'செட்டாப் பாக்ஸ்' வேண்டுமென்கின்றனர். 'செட்டாப் பாக்ஸ்' வைத்தால் இலவச சேனல்களைத் தவிர்த்து, கட்டண சேனல்களுக்கு ஒரு சேனலுக்கு ஐந்து ரூபாய் வீதம் கொடுத்தால் போதுமானது. கட்டண சேனல் வேண்டாமென்றால் இலவச சேனல்களுக்குரிய மாதாந்திர கட்டணம் செலுத்தினால் போதும். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் சார்பில் இதுவரை 70 ஆயிரம் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. மேலும் மூன்று லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு உமாசங்கர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


மும்பை தாக்குதல்களால் டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடும் பாதிப்பு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்திய டெக்ஸ்டைல் ஏற்றுமதி துறை, மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களால் மேலும் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மும்பையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய திடீர் தாக்குதல்களல் மேலைநாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பீதி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்றைக்கு முந்தின நாள் இரவில் இருந்து இப்போது வரை, முடியாமல் தொடர்ந்து வரும் மும்பை ஹோட்டல்கள் தாக்குதல்களை அடுத்து, மும்பை வருவதாக இருந்த பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் தங்களது வருகையை ரத்து செய்து விட்டனர். மும்பையின் பிரபல இரண்டு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களால் நாங்கள் எங்களது ' டிரிப் 'பை கேல்சல் செய்து விட்டோம் என்றும், வேறு தேதியில் வருகிறோம் என்றும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருக்கும் பல இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அவர்களில் பெரும்மாபாலானவர்கள் டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி இறக்குமதியாளர்கள். டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி துறையை சேர்ந்த டிசைனர்கள் மற்றும் வியாபாரிகள் அடிக்கடி இந்தியா வருவது வழக்கம். இங்கு வரும் அவர்கள் இங்குள்ள ஏற்றுமதியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களது ஆர்டர்களை உறுதி செய்வது வழக்கம். ஏனென்றால் டெக்ஸ்டைல் துறையை பொருத்தவரை, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் ஃபேஷன் மாறி விடும். மேலும் சீசனுக்கு தகுந்தபடியும் ஃபேஷன் மாறுவதுண்டு. எனவே அங்கிருந்து வரும் வியாபாரிகளுடன் டிசைனர்களும் அடிக்கடி இங்கு வந்து அவர்கள் கொடுத்திருக்கும் ஆர்டரை பார்வையிடுவது வழக்கம். அதன் தரத்தை நேரடியாக பார்த்து, அதன் பின்னரே அதற்கான விலையை உறுதி செய்வார்கள். மும்பையில்தான் பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களின் தலைமையகம் இருக்கிறது என்பதாலும், அதுதான் இந்தியாவின் வர்த்தக தலைநகராக இருப்பதாலும் அவர்கள் எல்லோரும் மும்பைக்குதான் வருவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்குவதும் இப்போது தாக்குதலுக்கு உள்ளான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல்களில்தான் என்கிறார் ஃபெரரேஷன் ஆப் இன்டியன் எக்ஸ்போர்ட் ஆர்கானிஷேசன் தலைவர் ( மேற்கு பகுதி ) எஸ்,கே,ஷராப். நேற்று மட்டும் அனேக வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் மும்பை டிரிப் பை கேன்சல் செய்து விட்டதாக தகவல் சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் பெரிய இறக்குமதியாளர்கள் என்றார் அவர். ஜெர்மனி மற்றும் அமெரிக்க இறக்குமதியாளர்கள், அந்நாட்டு வியாபாரிகளை இப்போது இந்தியா போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன என்றார் அவர்.
நன்றி : தினமலர்


தீவிரவாதிகளை அடையாளம் கண்டுகொள்ள உதவிய சிசிடிவி

சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் தீவிரவாதிகளின் தாக்குதலை நம்மால் தடுக்க முடியாதுதான் என்றாலும், தாக்க வந்த தீவிரவாதிகள் யார் என்றும் அவர்கள் ஏகே 47 மற்றும் எம் 5 மூலம் யார் யாரை சுட்டார்கள் என்பதையும் துள்ளியமாக போலீசாருக்கு காட்டி கொடுத்து விட்டது. போலீசாரின் விசாரணைக்கு இது மிக உதவியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கள் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை துள்ளியமாக படம் பிடித்திருக்கின்றன.பொதுவாக மும்பையில் பல இடங்களில் சிசிடிவி மற்றும் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டிருக்கின்றன. செக்யூரிட்டி சாதனங்கள் தயாரிக்கும் ஸைகாம், ஹனிவெல், சீமன்ஸ் மற்றும் கோத்ரஜ் போன்ற பிரபல நிறுவனங்கள், மும்பை முழுவதும் ஆங்காங்கே சிசிடிவி யை வைத்திருக்கின்றன. நகர் முழுவதிலும் என்ன நடக்கிறது என்பது 24 மணி நேரமும் ரெக்கார்ட் செய்யப்படுகிறது. சி.எஸ்.டி. டெர்மினஸில் ( முன்னர் இது விக்டோரியா டெர்மினஸ் ) இருந்து தானே வரையுள்ள 30 கி.மீ.பாதை முழுவதிலும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கிறது. சர்ச்கேட்டில் இருந்து விரார் என்ற இடத்திற்கு செல்லும் 60 கி.மீ.பாதையெங்கும் ஸைகாம் நிறுவனம் 820 சிசிடிவி களை வைத்திருக்கிறது. இது தவிர மும்பை முழுவதும் டிராபிக்கை கண்காணிக்க ரூ.4 கோடி செலவில் 100 சிசிடிவி களையும் அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. தாதரில் இருக்கும் பிரபல சித்திவிநாயகர் கோயிலிலும் சிசிடிவி வைக்கப்பட்ட கண்காணிக்கப்படுகிறது. இவைகள் மூலம் போலீசார் எளிதில் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்