Tuesday, October 13, 2009

குறுக்குச் சால் ஓட்டலாமா?

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூலி குறைவாக வழங்கப்படுவதாகக் கூறி, தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல் நடப்பதும், அப்பகுதியின் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்வதும் வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.

கூலியைக் குறைத்துக் கொடுத்தார்கள் என்ற பேச்சு எழுந்தவுடனே, தொடர்புடைய அலுவலர் அல்லது உள்ளாட்சிப் பதவியில் உள்ள மக்கள் தலைவர் இந்தப் பணத்தில் கை வைத்துவிட்டார் என்பதுதான் எல்லாருக்கும் மனதில் தோன்றும். ஆனாலும், பல இடங்களில், பல வேலைகளில், முறைகேடாகக் கூலி கேட்டு பிரச்னை செய்பவர்கள் கிராமத்து மக்களே என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

பல இடங்களில் இத்தகைய எதிர்ப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் நடப்பது இதுதான்:

இத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் அல்லது ஏரிக் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும்போது, கிராமத்தில் உள்ள ஏழை விவசாயக் கூலிகள் மட்டுமன்றி, கிராமத்தில் உள்ள மற்றவர்களும் வேலைக்கு வருகிறார்கள். இவர்களில் பாதிப்பேர் வெட்டிக் கதைகள் பேசி உட்கார்ந்து கொண்டிருக்க, சிலர் மட்டும் உழைக்கிறார்கள்.

பகல் 2 மணிக்கெல்லாம் "கூலி கொடு போகணும்' என்கிற குரல் எழுந்துவிடுகிறது. இத்தனை பேர் ஈடுபடும் வேலையில் இந்தப் பரப்பளவுக்கு இத்தனை அடி ஆழத்துக்குத் தூர் வாரப்பட்டிருக்க வேண்டும் என்று பணியின் தன்மையை அரசு நிர்ணயிக்கிறது. அதை ஓரளவாகிலும் ஈடுசெய்ய வேண்டும் என்று அலுவலர்கள் வலியுறுத்தினால், ரகளை தொடங்குகிறது. "உனக்கென்ன! அரசுப் பணம்தானே! கணக்கெழுதிட்டுப் போய்யா' என்கிற அதிகாரம் அதிகமாக இருக்கிறது.

அரசு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, மக்களே இப்படியாகப் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம்? அதிலும், கிராமத்திற்கு வளம் சேர்க்கும் நீர்ஆதாரத் திட்டங்களில் இத்தகைய முறைகேடுகளில் மக்களே ஈடுபடலாமா?

சில மாதங்களுக்கு முன்பு, இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்திய ஒரு தன்னார்வ அமைப்பு, அரசுக்கு அளித்த பரிந்துரையில், 100 நாள் வேலைத் திட்டத்தை 120 நாள்களாக அதிகரிப்பதோடு, உண்மையான ஏழைகளை மட்டுமே வேலைக்கு ஈர்க்கும் வகையில், ஊதியத்தில் 20 சதவீதத்தைக் குறைத்து வழங்கினால், ஏழைகள் மட்டுமே இந்த வேலைக்கு வருவார்கள். ஏழைகள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்று கூறியிருந்தது.

அந்தச் செய்தியைப் படித்த நேரத்தில் முட்டாள்தனமான பரிந்துரை என்று தோன்றினாலும், இப்போது, கிராமத்தில் ஏழைகள் அல்லாதவர்களும் இதில் வந்து உட்கார்ந்துகொண்டு, வேலையையும் கெடுத்து, கூலியையும் கேட்கிறார்கள் என்பதைக் கேட்கும்போது, அந்த அறிக்கையில் அர்த்தம் இருப்பதை உணர முடிகிறது. பல மாநிலங்களிலும் மக்களிடம் இத்தகைய மனப்போக்கு இருப்பதால்தான் இந்த அறிக்கை அவ்வாறு தரப்பட்டுள்ளது என்று புரிகிறது.

கிராமங்களில் விவசாயப் பணிகள் நடைபெறாத காலத்தில் அந்த மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில், ஏழை விவசாயக் கூலிகளுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் கிராம மக்களுக்கு குறைந்தபட்ச வேலை கிடைப்பதுடன் ஓரளவு பணமும் கிடைக்கிறது என்பதால்தான், மத்திய அரசு இத்திட்டத்துக்கு 2009-10-ம் நிதியாண்டில் ரூ.39,100 கோடியை ஒதுக்கியுள்ளது. (சென்ற நிதியாண்டைக் காட்டிலும் 144 சதவீதம் அதிகம்). குறைந்தபட்சக் கூலி ரூ.84 என்றும் நிர்ணயித்துள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 75 சதவீதப் பணிகள் வாய்க்கால் வெட்டுதல், தூர் வாருதல், ஏரி, குளத்தை ஆழப்படுத்துதல் ஆகியன. ஆனால், இதில் ஒரு பணி நடந்தது என்பதன் அளவு, விரிவு, ஆழம் ஆகியவற்றை உறுதிப்படுத்தி, அதற்குப் பொறுப்பேற்கவும், தொடர்ந்து கண்காணிக்கவுமான பொறுப்புகள் யாருக்கு என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

மேலும், இத்திட்டத்தில் இன்னொரு ஆபத்தும் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயப் பணிகள் நடைபெறாத நாள்களில் மட்டுமே இத்திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், கிராமத்தில் அறுவடை நடைபெறும் வேளையிலும் இத்தகைய தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும்போது, அறுவடைக்குப் போகாமல் இப்பணிக்கு வருவதையே விரும்புகிறார்கள். காரணம், உழைக்காமல் கூலி கிடைக்குமே!

விவசாயக் கூலிகளுக்கு வேலை உறுதியாகக் கிடைக்கக் கூடிய நாள்களில் அரசே இவ்வாறு குறுக்குச் சால் ஓட்டினால், திட்டத்தின் நோக்கமே- விவசாய வேலை இல்லாத நாளில் ஏழை விவசாயிக்கு வேலைவாய்ப்பு என்பது- பாழ்பட்டுப்போவதுடன், விவசாயமும் பாழ்படும். இதனால் உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படும். இறக்குமதி செய்ய எந்தவொரு அமைச்சரும் ஆர்வமுடன் முன்வந்து நிற்க "காரணங்கள்' உண்டு. ஆனால், நஷ்டப்படுவது நாடுதானே!

அக்டோபர் 2-ம் தேதி முதலாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன். காந்தி பெயருக்கு மாறியது என்பதற்காக, உழைக்காமலேயே கூலியை "காந்தி கணக்கில் எழுதும்' திட்டமாக இது அமைந்துவிடக் கூடாது!
நன்றி : தினமணி

இந்திய சாலைகளில் பவனி வர காத்திருக்கும் அமெரிக்க பைக்

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்ஸன் பைக் உலகளவில் பிரசித்தி பெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவிலும் இந்த பைக் விற்பனை துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த பைக் இந்தியாவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சார்பில் பல மாடல்களில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில், குறைந்தபட்சம் 15 மாடல் பைக்குகளாவது, இந்தியாவில் கிடைக்கும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டது.
ஹார்லி டேவிட்ஸன் பைக் விற்பனைக்கான டீலர்ஷிப் பெற, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத வகையில், இந்தியாவில் இந்த பைக்குக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. எனவே, டீலர்ஷிப் பெறுவதிலும் ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். துவக்கத்தில் பஞ்சாப், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் டில்லியில் மட்டும் டீலர்ஷிப் துவக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது காணப்படும் வரவேற்பை கருத்தில் கொண்டு, டீலர்ஷிப்புக்காக விண்ணபிக்கும் காலக்கெடு நவம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த பைக் கிடைக்கும் வகையில், டீலர்ஷிப்பை விரிவுப்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்கின் விலை ரூ.3.5 லட்சம் என்ற அளவில் இருக்கும்.
நன்றி : தினமலர்


நின்ஜா 250 ஆர் பைக் விலை ரூ.2.69 லட்சம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜப்பானின் கவாஸாக்கி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் பல சொகுசு பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாக்கி பஜாஜ் சார்பில், நின்ஜா 250 ஆர் என்ற பெயரில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த பைக்கின் விலை ரூ.2.69 லட்சமாக இருக்கும். ஐரோப்பிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. இந்தியாவில் ஏற்கனவே, யமஹா மற்றும் சுசூகி நிறுவனங்கள் சார்பில் சொகுசு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக தற்போது, நின்ஜா 250 ஆர் பைக் களத்தில் குதித்து உள்ளது. டெலஸ்கோபிக ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் யுனி டிரக் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கின் முன்பக்க மற்றும் பின் பக்க பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக், கவாஸாக்கி நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் ஒன்றாக இணைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து முழுமையான பைக்காக இறக்குமதி செய்தால், 100 சதவீத வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே, உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு முழு மைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக 11 சதவீத வரி தான் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், நின்ஜா 250 ஆர் பைக்கின் விலை ரூ.2.69 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.
நன்றி : தினமலர்


முடிவற்ற கலப்படம்!

இரு தினங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மளிகைக் கடைகள் மற்றும் தேநீர்க் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி தேயிலைத் தூள் பொட்டலங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் 50 சதவீத தேயிலைத் தூள் கலப்படமானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நல்ல தேயிலையுடன் சாயம் தோய்க்கப்பட்ட மரத்தூள் கலந்து விற்கப்பட்டுள்ளது. சில தேயிலைத் தூள்களில் தேநீர் வாசனை தரும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை உடல்நலனுக்குத் தீங்கானவை என்பதில் சந்தேகம் இல்லை.

இதுபோன்று சோதனைகள் நடத்தப்படுவது புதிதல்ல. கடந்த மார்ச் மாதம் உதகையில் உள்ள ஒரு தேயிலைத் தொழிற்கூடத்தில் தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி, 16,000 கிலோகிராம் கலப்படத் தேயிலைத் தூளைப் பறிமுதல் செய்தனர். செப்டம்பர் மாதம் சென்னை மாநகரில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகளில் 300 கிலோ கிராம் கலப்படத் தேயிலை கண்டறியப்பட்டது. தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது, 3,000 கிலோகிராம் கலப்படத் தேயிலைத் தூள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு தேநீர்க் கடை இருக்கிறது. இந்தியாவில் உள்நாட்டில் தேயிலையின் பயன்பாடு ஆண்டுக்கு 802 மில்லியன் கிலோகிராம். அதாவது ஒவ்வொரு தனிநபரும் 750 கிராம் தேயிலையைப் பயன்படுத்துகிறார்.

ஆனாலும், கலப்படத் தேயிலைத் தூள் நடைமுறையில் இருந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க முடியாததன் முதல் காரணம், தேயிலையின் அபரிமிதமான விலை. தேயிலைச் சந்தையில் கலப்படம் ஏற்பட முதல் காரணம் தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள்தான். ஏனென்றால் இவர்கள்தான் விலையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதனால், தேநீர்க் கடைகள் மற்றும் ஓட்டல்கள் தங்களுக்குக் கட்டுபடியான விலையில் தேயிலைத் தூளைத் தேடும்போது, அவர்களுக்குக் கிடைப்பது பெரும்பாலும் கலப்படத் தேயிலைத் தூளாகத்தான் இருக்கிறது.

பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, சிறு தேயிலைத் தோட்டங்களை வைத்திருப்போர் தங்கள் தேயிலையைத் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்த காலகட்டத்தில், பெரும் நிறுவனங்களைக் காட்டிலும் விலை மலிவாக நல்ல தரமான தேயிலை கிடைத்தது என்பது உண்மையே.

ஆனால், பெரிய நிறுவனங்களின் விலைக்கும் சிறு தேயிலைத் தோட்டங்களின் விலைக்கும் இடையே காணப்பட்ட பெரிய இடைவெளி, இடைத்தரகர்களை சிறுதேயிலைத் தோட்டங்களிடம் ஒட்டுமொத்த கொள்முதல் வணிகத்தில் ஈடுபட வைத்தது. நாளடைவில் இந்த இடைத்தரகர்கள்தான் பெரும் நிறுவனங்களின் வணிகப்பெயர்களில் தேயிலைப் பொட்டலங்களைச் சந்தைக்கு அனுப்புவதும், கலப்படத் தேயிலையை தேநீர்க் கடைகளுக்கு விநியோகம் செய்பவர்களுமாக மாறினர். இவர்கள் யார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியாதது அல்ல. ஆனாலும், "எல்லாரும் அறிந்த காரணங்களால்' இந்தக் கலப்படம் முடிவில்லாமல் தொடர்கிறது.

தேயிலைத் தூள் விலை அதிகமாக இருக்கும்வரை சந்தையில் கலப்படத் தேயிலைத் தூள் நுழைவதைத் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே. தேயிலை விலையை முறைப்படுத்தி, குறைந்த விலையில் கிடைக்கச் செய்தால் கலப்படம் தானாகவே ஒழியும். ஆனால் அதற்கு இந்தப் பெரிய நிறுவனங்கள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் போனால் போகட்டும் என்று மனமிரங்கினாலும்கூட நடக்காது. ஏனென்றால், இப்போது சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்டங்களை நேரடியாகவும் பினாமி பெயர்களிலும் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பவர்களில் பலரும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள்தான். இவர்கள் தங்கள் லாபத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள்.

தேயிலை விற்பனையில் இந்த நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையிலும், ஏற்றுமதியிலும் அடையும் லாபம் பல நூறு மடங்கு. இதில் முன்னிலை வகிப்பவை பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களுடன் டாடா தேயிலை போன்ற உள்நாட்டு ஜாம்பவான்கள் சிலரும் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கின்றனர். பன்னாடு, அல்லது உள்நாடு எந்த நிறுவனமாக இருந்தாலும் இவர்களின் ஒரே நோக்கம்-இந்தியத் தேயிலையை உலகச் சந்தையில் விற்றுப் பெரும் பணம் சம்பாதிப்பது மட்டுமே! முந்தைய நிதியாண்டில் இந்தியத் தேயிலை ரூ. 1,889 கோடிக்கு ஏற்றுமதியானது. இந்த ஆண்டு 20 சதவீதம் மேலும் கூடியுள்ளது. அதாவது ரூ. 2,275 கோடிக்கு ஏற்றுமதி.

இவ்வளவு வருவாயைப் பெறும் தேயிலைத் தொழில்துறையின் வருத்தமெல்லாம், உலகச் சந்தையில் தங்கள் பங்கு மிகக் குறைவாக இருக்கிறதே என்பதுதான். உள்நாட்டில் இப்படியான அதிக விலை நிர்ணயிப்பதால் கலப்படத் தேயிலை மிகுந்துபோய், மக்கள் நோய்க்கு ஆளாகிறார்களே என்று கவலைப்பட யாருமில்லை. அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இவர்களோடு "தொழிலதிபர்'களாகக் கலந்துவிட்டபோது, இந்தக் கலப்படம் குறித்து மக்களோடு மக்களாகக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?
நன்றி : தினமணி

கையூட்டு உயர கட்டணம் உயரும்!

எந்தவொரு வியாபாரியும், தன் தொழில்சார்ந்து யாருக்காவது கையூட்டுக் கொடுக்க வேண்டியிருந்தால், அந்தத் தொகையை அவர் தனது கொள்ளை லாபத்தில் கழித்துக் கொள்ள மாட்டார். மாறாக, தனது உற்பத்திப் பொருள்மீதுதான் விலையை ஏற்றி விற்பார். கல்விக் கட்டணங்களிலும் இதேதான் நிலைமை.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்து, தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்த பெற்றோர்கள் அனைவருமே, "ஒரு லட்சம் ஆயிடுச்சுங்க' என்று விழிபிதுங்குகிறார்கள். அப்படியானால் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்குக் கல்விக்கட்டணம் ரூ. 40,000 என்று நிர்ணயிப்பது ஏன்? அரசுப் பொறியியல் கல்லூரியில் என்ன கட்டணமோ அதே கட்டணம்தானே அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுதானே நியாயம்? தேர்வுக் கட்டணம்கூட கல்லூரிக்குக் கல்லூரி மாறுவது ஏன்? இதை எப்படி அனுமதிக்கிறார்கள்? இக் கேள்விகளுக்கு ஒரே பதில், கல்வியில் ஊழல் என்பதுதான்.

உயர்கல்விக்கான யஷ்பால் கமிட்டி அறிக்கை மற்றும் தேசிய அறிவுக் குழுமத்தின் பரிந்துரைகளை விவாதிப்பதற்காக இந்திய தொழில்துறை சம்மேளனம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை அண்மையில் சென்னையில் நடத்தியது. இதில் முக்கியமான கல்வியாளர்கள் பலர் பங்குகொண்டனர். இதில் பங்குகொண்டு பேசிய முன்னாள் துணைவேந்தரும், யஷ்பால் கமிட்டி உறுப்பினருமான மு. ஆனந்தகிருஷ்ணன், "இப்போதெல்லாம் ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 20 கோடி வரை பணம் கொடுத்தால் துணைவேந்தர் பதவியை வாங்கிவிடலாம்' என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்தக் கசப்பான உண்மை இவர் சொன்னதால் மட்டும் தெரியவந்ததல்ல. சில துணைவேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளும், கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களுமே இத்தகைய முறைகேட்டுக்குச் சாட்சிகள். அண்ணா பல்கலைக்கழகத்தை நான்காகப் பிரித்து, நான்கு துணைவேந்தர்கள் நியமித்ததை மாணவர்கள் நலனுக்காக என்று கருதிய நம் நம்பிக்கைகள் தகர்ந்துபோன அன்றைய தினமே தெரியவந்தவைதாம்.

ஆனால், இந்த அளவுக்கு மோசமான நிலைமையின் காரணமாக கல்விக் கட்டணம் தாறுமாறாக, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உயர்த்தப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் படைத்தவர்கள் வாளாவிருக்கிறார்கள். ""வட்டியில்லாமல் கல்விக் கடன் கிடைக்கிறதே, வாங்கிக் கட்டுங்கள்'' என்று இலவச அறிவுரையும் தருகிறார்கள்.

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே அடிபட்டுவிட்டது என்றும், கல்வித் துறை சார்ந்த மாநில அரசு அதிகாரிகள் முதல் மத்திய அரசு வரை கல்விக்கட்டணம் மற்றும் நன்கொடைகளில் பங்கு போய்க் கொண்டு இருக்கிறது என்றும் இந்தக் கூட்டத்தில் பேசிய கல்வியாளர்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளனர். இந்த அளவுக்கு வெளிப்படையாகப் பேச முன்வந்த அவர்களைப் பாராட்ட வேண்டும்.

பணத்தைக் கோடி கோடியாகக் கொடுத்து துணைவேந்தர் பதவியை வாங்கியவர், "வாங்காமல்' எப்படிச் செயல்படுவார்? கலை அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கும் குறைந்தது "கால்கோடி பணம்' வேண்டும் என்று கல்வித் தரகர் சொல்லக் கேட்டு ஆடிப்போய் விட்டது ஓர் ஆன்மிக அமைப்பு. தொழிற்கல்வி என்பது மட்டுமல்ல, வெறும் கலைப் படிப்பு என்றாலும் கல்விக் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி, பெற்றோரைக் கசக்கிப் பிழியும் நிர்பந்தத்தை உருவாக்குகிறது கல்வி ஊழல்.

இதன் விளைவுகள் என்னவாகும்? இக்கூட்டத்தில் பேசிய மு. ஆனந்தகிருஷ்ணன், ""மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகளை உருவாக்க விரும்பினால், அதை விரைவாகச் செய்து முடிக்க ஒரே வழி கல்விக் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்துவதும், கல்விக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக எண்ணிக்கையில் அனுமதி அளிப்பதும்தான்'' என்றும் கூறியுள்ளார்.

கட்டுப்பாடற்ற அதிக கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு தேசிய வங்கிகளில் கல்விக் கடன் அளித்து, வட்டியை ஏற்க முன்வருகிறது அரசு. மாவோயிஸ்டுகளை ஒடுக்க ரூ.7,300 கோடி செலவிட அரசு தயாராகிறது. ஆனால், கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தினால் மேற்சொன்ன கருவூலச் செலவுகளுக்கு அவசியமே இருக்காதே என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறது.
அரசியல்வாதிகள் சம்பாதிப்பதைப்போலவே அறிவாளிகளும் தீயவழியில் சம்பாதிக்க நினைப்பது முறையல்ல என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இந்த "அறிவாளி' சம்பாதிக்கக்கூடிய "வழி'களில் அரசியல்வாதி தானே வழிமறித்து நிற்கிறார் என்பதுதான், பணத்தைக் கோடிகோடியாய் கொட்டிவிட்டு, அசலைப் புரட்ட முடியாமல் திணறும் அறிவாளிகளின் அங்கலாய்ப்பு.

"படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்' என்கிறான் பாரதியின் புதிய கோணங்கி!
நன்றி : தினமணி

வீட்டுக் கடன்களுக்கு இனி 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான்

இதுவரை வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்பட்ட 'பிக்சட்' வட்டிவீதம் போய் இனி, 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. சாதாரணமாக வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி நிரந்தர வட்டி எனப்படும் பிக்சட் வட்டி வீதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட்டி வீதங்களில் இருந்த மாற்றம் ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பிக்சட் வட்டி வீதத்தை விரும்பினர். அப்போதைய நிலவரப்படி பிக்சட் வட்டிக்கும் மாறும் வட்டி எனப்படும் 'ப்ளோட்டிங்' வட்டிக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததில்லை. அதுவே வங்கிகளுக் கும் பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்போது சில ஆண்டுகளாக, நிரந்தர மற்றும் மாறும் வட்டி வீதங்களுக்கிடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக மாறி வருகிறது. இவற்றின் வித்தியாசம் 5.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதம் வரை வங்கிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டகாலம் வரை நிரந்தர வட்டியும் அதற்குப் பின் மாறும் வட்டியும் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன.
நிரந்தர மற்றும் மாறும் வட்டி வீதங்களுக்கிடையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் வந்தது ஏன்? உலகப் பொருளாதார மந்தநிலை இந்தியப் பங்கு மற்றும் நிதிச் சந்தையில் ஏற்படுத்திய பாதிப்பு, அரசின் கடன் வாங்கும் கொள்கை இவற்றால் தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்த வித்தியாசத்தால் பொதுமக்களுக்கு நிரந்தர வட்டி தான் லாபம் என்றாலும், வங்கிகளுக்கு நிரந்தர வட்டி என்பது நஷ்டத்தைத் தரக்கூடியதாக இருந்தது. 2002-03 காலகட்டங்களில் இரு வட்டிகளுக்கும் இடையிலான வித்தியாசம் 50லிருந்து 200 அடிப்படைப் புள்ளிகள் வரை மாறியது. மக்களோ, கடன்களுக்கு நிரந்தர வட்டியையே தேர்வு செய்தனர். வித்தியாசத்தால் ஏற்பட்ட விளைவு வங்கிகளையே பாதித்து வந்தது. 2006ல் இந்த நஷ்டம் வங்கிகளைப் பெருமளவில் பாதித்தது. இப்போது, இந்த நிரந்தர வட்டி முறையை நீக்கிவிட்டு, மாறும் வட்டியை நிரந்தரமாக்கலாமா என்று வங்கிகள் யோசித்து வருகின்றன. கூடிய விரைவில் 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான் அமலாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


வீடுகள், மனை விலை 10 சதவீதம் அதிகரிப்பு

ரியல் எஸ்டேட் நிலவரத்தில் இப்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார தேக்க நிலையால் இந்தியாவில் சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறை கடும் சரிவை சந்தித்திருந்தது. வீட்டு மனை, வீடு விலை 30 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருளாதாரம் படிப்படியாக சீரடைந்து வருகிறது. இந்நிலையில், மக்களின் வாங்கும் திறன் உயர்ந்துள்ளது. இப்போது, நிலைமை மீண்டும் மாற்றம் கண்டதால், ரியல் எஸ்டேட் விலை நிலவரம் ஏற்றம் கண்டுள்ளது. கடந் தாண்டை விட, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில், மனை விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது; டில்லியில் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அப்பார்ட் மென்ட்களை பொருத்தமட்டில் மும்பை போன்ற பெரு நகரங்களில் விலை 38 சதவீதம் உயர்ந்துள்ளது.
நன்றி : தினமலர்