Friday, November 6, 2009

ஆலய நுழைவு அவசியம்... அவசியம்!

வாழ்வாதாரத்துக்குப் போராட வேண்டிய கம்யூனிஸ்டுகள் வழிபாட்டுக்காகப் போராடுவதா? என்ற கேள்வியை எழுப்புவதே ஆலய நுழைவுப் போராட்டத்தில் மைய விஷயமான ஜாதிய ஒடுக்குமுறையை மறைப்பதற்காக முயற்சி செய்வதாக இருக்கிறது. குறிப்பாக உடல் முழுவதும் காணப்பட்ட புண் முற்றிலும் குணமாகிவிட்டதாகவும், ஏதோ ஓர் இடத்தில் ஆறாத சிறு புண் இருப்பதை ஆவேசமாகச் சொரிந்து புண்ணாக்கி விடுகிறார்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள் என்பதும் தவறான குற்றச்சாட்டு.

நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழகத்தில் 7,000 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இருக்கிறது என்பது மாநில அரசின் ஆவணங்கள் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். டீக்கடைகளில் இரண்டு கிளாஸ், செருப்பு போட முடியாமை, குடிதண்ணீர் எடுக்க முடியாமை, சைக்கிளில் போக முடியாமை, கோயிலுக்குள் நுழைய முடியாமை, முடிவெட்டச் செல்ல முடியாமை, ஏன் செத்தால் சுடுகாடு செல்ல முடியாமை என்று பலவிதமான கொடுமைகள் தொடர்கின்றன. அந்தக் கொடுமைகளின் ஒரு பகுதி ஆலயத்தில் நுழைய முடியாமை, வழிபாட்டுத் தலங்களில் ஜாதிப்பாகுபாடு, இது ஏதோ ஓரிரு கோயில்களில் நடப்பதுபோலவும், அதுவும் தனியார் கோயில்களில் நடப்பதாகவும், அரசுப் பொறுப்பில் அறநிலையத்துறை சார்ந்த கோயில்களில் நடப்பதில்லை என்றும் ஒரு மிகப்பெரிய பொய் சொல்லப்படுகிறது.

"எவிடன்ஸ்' என்ற அமைப்பின் கள ஆய்வு அறிக்கையில், ஆலயங்களில் தீண்டாமை குறித்து பின்வரும் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2009-ல் தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 85 பஞ்சாயத்துகளில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வாகும் இது.

""எமது ஆய்வில் 85 பஞ்சாயத்துகளில் வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85 பஞ்சாயத்துகளில் 69 கோயில்களில் தலித்துகள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். 72 கோயில்களில் சன்னிதானம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 56 கோயில்களில் 54}ல் வழிபாட்டு நேரங்களில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகின்றன. 52 கோயில்களில் தலித்துகளுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. 33 கோயில்களில் தலித்துகளுக்கு வடம் பிடிக்க அனுமதி மறுப்பு. பிரசாதம் வழங்குவதில் 59 கோயில்களில் பாகுபாடு.

பாதிரியார்கள் மற்றும் பூசாரிகள் காட்டுகிற பாகுபாடுகள் 63 கோயில்களில் உள்ளன. கோயில் கலை நிகழ்ச்சிகளின்போது 64 கோயில்களில் தலித்துகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். பால்குடம், தீச்சட்டி போன்ற சடங்கின்போது 60 கோயில்களில் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன''.

இந்த ஆய்வு கூறும் உண்மை என்ன? ஆலய நுழைவு பாகுபாடு என்பது ஒரு சிறு புண் அல்ல. பல இடங்களில் நீக்கமற நிறைந்திருக்கிற ஒரு பெரும் ஜாதியக்கொடுமை. இதை எதிர்த்துப் போராடுபவர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக அரசியல் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டுவது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு அரசியல் நோக்கமே. அதுமட்டுமல்ல, தலித்துகளைப் பொறுத்தவரை சுதந்திரத்துக்குப் பின் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதையும், மத்திய, மாநில அரசுகளின் ஆவணங்களும், பல்வேறு ஆய்வுகளும் தெளிவுபடுத்தியுள்ளன. 1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகும், தலித் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமைகள் குறையவே இல்லை என்ற காரணத்தினால்தான் 1989-ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உருவாக்கப்பட்டது. இப்பொழுது இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இச்சட்டத்தில் வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிப்பதற்கென்று தனி நீதிமன்றம், தனி வழக்கறிஞர், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்பதற்கு குழுக்கள் என்று பல்வேறு ஏற்பாடுகளும், கடமையைப் புறக்கணிக்கும் அரசு அதிகாரிகளுக்குத் தண்டனை, குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், 20 ஆண்டு அனுபவம் என்ன? தமிழகத்தில் 1535 காவல்நிலையங்கள் உள்ளன.

சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 3 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் வன்கொடுமைச் சட்டத்தில் பதிவு செய்யப்படுகிற வழக்குகள் மிகமிகக் குறைவு.

2002-ல் 917 வழக்குகள், 2003-ல் 974 வழக்குகள், 2004-ல் 891 வழக்குகள், 2005-ல் 1056 வழக்குகள், 2006-ல் 851 வழக்குகள் என காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களில் இரண்டு சதவிகிதம்கூட பதிவாகவில்லை என்கின்றன ஆய்வுகள்.

அப்படிப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் ஐந்து சதவிகித வழக்குகளுக்கு மட்டும்தான் தண்டனை கிடைக்கிறது. 95 சதவிகித வழக்குகள் தள்ளுபடியாகின்றன. இதற்குப் பிரதான காரணம் வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்வது, புலனாய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் பாரபட்சமாக இருப்பதுதான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் அமலாவது குறித்து பரிசீலிக்க, ஒழுங்குபடுத்த மற்றும் தலித் மக்களின் பிரச்னை மீது அரசு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, மத்தியில் சிறப்புக்கமிஷன் ஒன்றும் அமைக்கப்பட்டு, பூட்டா சிங் தலைமையில் இப்பொழுது அது செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்தகைய கமிஷன்கள் இல்லை. ஆக, சுதந்திரத்துக்கு முன் இருந்த நிலையிலிருந்து, சுதந்திரத்துக்குப் பின் இருக்கும் நிலை என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, உண்மைகளை வேண்டுமென்றே மறைப்பதும் ஆகும்.

தலித் மக்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு நிலமில்லை, வீடு இல்லை, கல்வி வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீட்டுச் சட்டம் இருந்தும் அமலாகவில்லை. உரிய மருத்துவமில்லை. சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இவையனைத்தும் ஒருவகையில் வாழ்வாதாரப் பிரச்னைகள்.

இன்னொருவகையில் அவர்கள் தாழ்ந்த ஜாதி என்பதனால் ஏற்படுத்தப்படும் சமூகக் கொடுமைகள் என்பதனால் இந்தப் போராட்டங்களைப் பொருத்தவரை பொருளாதாரப் பிரச்னைகளாகவும், சமூகப் பிரச்னைகளாகவும் அவை கருதப்பட வேண்டும். ஆலய நுழைவு அவசியம்! அவசியம்!

கட்டுரையாளர் : கே. வரதராஜன்
நன்றி : தினமணி

இது யானைப் பள்ளம்

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையால் நிறையவே குழப்பம். கர்நாடகத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பணிகள், குறிப்பாக அண்மையில் நடந்த வெள்ள நிவாரணப் பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் இப்படியான ஒரு பிரச்னை.

தற்போது இந்தப் பிரச்னைக்குக் காரணமான கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே பதவி நீக்கப்படுவார் என்றும், பெல்லாரி மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பழையபடி கொண்டுவரப்படுவார்கள் என்றும் உடன்பாடு ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாகவே இருந்தாலும், எத்தனை நாளைக்கு இந்த அமைதி தொடரும் என்பது கேள்விக்குறிதான்.

இப்பிரச்னைக்குக் காரணம் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி இருவருக்கும் சுரங்கத் தொழிலில் உள்ள ஈடுபாடுதான். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சியிலும், முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது இதே சுரங்கப் பிரச்னையும், ஊழலும் முன்வைக்கப்பட்டன. தேர்தலின்போதும் இது பெரிதாகப் பேசப்பட்டது. ஆகவேதான், சுரங்கத் துறையில் எடியூரப்பா சற்று கெடுபிடியாக நடந்துகொண்டார் என்று சொல்வதற்கும் இடமிருக்கிறது.

ஆனால், "நம்ம ஆட்சி' என்பதால் தாராளமாக அரசு நடந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேறாததும், தங்களுக்குச் சாதகமான அதிகாரிகள் இடமாற்றப்பட்டதால் தொழிலுக்கு இடையூறுகள் ஏற்பட்டதும் ரெட்டி சகோதரர்களைக் கோபத்துக்கு ஆளாக்கி, எடியூரப்பாவையே முதல்வர் பதவியிலிருந்து நீக்குவது என்று கொடிஉயர்த்த வைத்துவிட்டது.

பாஜக எந்த சுரங்க, கனிம ஊழலை முன்வைத்ததோ தானும் அதே ஊழல் புதைகுழியில் இப்போது மாட்டிக்கொண்டு தவிக்கிறது. அப்போது அன்றைய முதல்வர் குமாரசாமிக்குப் பணம் கொடுத்திருக்கக்கூடிய இதே சுரங்க அதிபர்கள், நமக்கும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து சற்றே விலகியிருந்திருந்தால் இத்தனை சிக்கல் வந்திருக்குமா?

தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சியானாலும் களத்தில் இறங்கப் பணம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பணத்தின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போதுள்ள நிலையில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேண்டுமானாலும் ஒரு கோடி ரூபாய் தேவை என்று சொல்லப்படுகிறது. இத்தனை பணத்தையும் திரட்ட வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை நாடுகிறார்கள், தங்கள் தொண்டர்களை நாடுவதில்லை.

தொழிலதிபர்களும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இருவருக்குமே பணம் கொடுக்கிறார்கள். யாருக்கும் குறை வைப்பதில்லை. ஆனால் தங்களுக்குள் பேசிக்கொண்டு, எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொண்டு தாங்கள் வெற்றிபெற விரும்பும் கட்சிக்கு 50 சதவீதம் தொகையை கூடுதலாகத் தருகிறார்கள்.

இப்படியாக பணத்தை வாங்கிக்கொண்ட அரசியல் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தால் அவர்கள் கேட்பதைச் செய்தாக வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தால் பிரச்னையான கேள்வி எழுப்பாமல் சும்மா இருக்க வேண்டும். இதுதான் அரசியல் கட்சிகள் கொடுத்தாக வேண்டிய நன்றிக்கடன். நன்றி இல்லாத ஆளும்கட்சியின் நம்பிக்கைத் துரோகத்தை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலமாக பழிவாங்கவே துடிக்கிறது தொழில்துறை.

தேர்தல் நேரத்தில் எந்தெந்தக் கட்சிகள் யாரிடம் எத்தகைய அமைப்புகளிடம் நிதி பெற்றோம் என்பதைப் பட்டியலிடுவது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. அதாவது, குறிப்பிட்ட டாலருக்கு அதிகமாகப் பணம் கொடுத்தவர் தன் முகத்தை வெளியுலகுக்குக் காட்டியே தீர வேண்டும். இந்தக் கணக்குகள் முறையாகத் தணிக்கை செய்யப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு எப்படி நிதி கிடைத்தது என்பதைக் கணக்கு காட்டுவதே இல்லை.

ஒரு காலத்தில் இதே தமிழகத்தில் துண்டு ஏந்தி, தேர்தல் நடத்திய கட்சிகள் உண்டு. வீடுவீடாகச் சென்று, கடைவீதியில் ஒவ்வொரு கடையின் படிகளிலும் ஏறிப்போய் நிதி வசூலித்தனர் கட்சி வேட்பாளர்கள். மக்களும் அவர்களுக்குத் தங்களிடம் இருந்த சிறு தொகை, சில்லறை என மனமுவந்து கொடுத்தார்கள். ஆனால் அதன் பின்னர் நிதிவழங்கும் விழாக்கள் மட்டுமே தமிழகத்தில் நடக்கின்றன. பல லட்சங்கள் நிதி திரட்டியதாகச் சொல்லி வழங்கப்படுகிறது. இப்போதும் வேட்பாளர்கள் வீடுவீடாகச் செல்கிறார்கள். பணம் நன்கொடை பெற அல்ல, பட்டுவாடா செய்ய!

தொழில்துறையிடம் பணம் பெற்று, தேர்தலைச் சந்திப்பது மிக எளிதாக இருக்கலாம். ஆனால் இது ஒரு யானைப் பள்ளம். இதில் போய் மாட்டிக்கொண்டால் சில "கும்கி' கள் (மாட்டிக்கொண்ட யானையைப் பணியவைக்கப் பயன்படுத்தப்படும் யானைகள்) சொல்வதையெல்லாம் செய்தாக வேண்டும். கர்நாடகக் குழப்பத்துக்கு இதுதான் காரணம்.
நன்றி : தினமணி

பலவீனமாகும் ரயில் பாதுகாப்பு!

சில நாள்களுக்கு முன்பு மதுரா அருகே நின்று கொண்டிருந்த மேவார் எக்ஸ்பிரஸ் மீது கோவா எக்ஸ்பிரஸ் மோதி 22 பேர் பலியானார்கள்.
இந்தக் கோரச் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், மும்பையில் கல்யாணை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மீது மேம்பால கான்கிரீட் இடிந்து விழுந்து 3 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. இன்னொருபுறம், கோல்கத்தாவில் ஒரு ரயிலையே மாவோயிஸ்டுகள் கடத்தியிருக்கின்றனர்.
இதில் மூன்றாவது சம்பவம், சிக்கல்கள் நிறைந்த பல்வேறு அரசியல், சமூகப் பின்னணிகளைக் கொண்டது. ஆனால், முதல் இரு சம்பவங்களுக்கும் ரயில்வே நிர்வாகமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இப்போது நடந்துவரும் சம்பவங்களைப் பார்த்தால், யாரும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.

மதுரா விபத்துக்கு இருவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிவப்பு சிக்னலைக் கடக்கும்போது டிரைவர் கவனக்குறைவாக இருந்ததுதான் முக்கியக் காரணமாக ரயில்வே தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், சிக்னல் குறைபாடும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ரயில்வே அமைச்சரே மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த இரு காரணங்களில் எது சரியாக இருந்தாலும், ரயில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட பிறகும், ஒரு சிறு கவனக்குறைவுகூட பெரும் விபத்தை ஏற்படுத்தும் அளவுக்குத்தான் ரயில் பாதுகாப்பு இருக்கிறது. ஒரு மனிதத் தவறு, அதுவும் சிறு கவனக்குறைவு கூட பலரைப் பலிவாங்கும் விபத்துக்குக் காரணமாக அமைந்துவிடுவது வேதனையளிக்கும் விஷயம்.

மனிதத் தவறுகளை முழுமையாகத் தவிர்த்துவிட முடியாது என்பது உண்மைதான். அதேநேரத்தில், மனிதத் தவறுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ரயில்வேயில் இப்போது டிரைவர்களுக்கு "ஓவர்டைம்' எனப்படும் கூடுதல் பணிநேரம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. இந்த முறைப்படி பணிநேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் ரயிலை இயக்குவோருக்கு பணப் பயனும், வேறு சலுகைகளும் கிடைக்கும்.

அதேபோல் ஓய்வு நேரத்தில் பணி வழங்கப்பட்டாலும் இதுபோன்ற சலுகைகளும், கூடுதல் ஓய்வும் கிடைக்கும். அதாவது சலுகைகளைக் காட்டி, டிரைவர்களைக் கூடுதல் நேரம் பணியாற்ற வைக்கிறது ரயில்வே. இந்த முறைதான் டிரைவர்களின் கவனக்குறைவுக்கும், பெரும்பாலான ரயில் விபத்துகளுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன என ஒருசாரார் கூறுகின்றனர்.

ரயில்வேயில் பாதுகாப்புக்கென புதிய ஊழியர்களைத் தேர்வு செய்வதும், டிரைவர்கள் பற்றாக்குறையைப் போக்கி, "ஓவர்டைம்' முறையை முடிவுக்குக் கொண்டு வருவதும் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.

நிதீஷ் குமார் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில் பாதுகாப்புக்கென பத்தாண்டுத் திட்டம் (2003-2013) வகுக்கப்பட்டது. ரயில் என்ஜின் கேபின்களை நவீனப்படுத்துவது, ரயில்கள் மோதுவதைத் தவிர்க்கும் கருவிகளைப் பயன்படுத்துவது, சிக்னல்களை மேம்படுத்துவது ஆகியவை அதில் கூறப்பட்டிருந்தன. ஆனால் இன்றளவும் இவைகளெல்லாம் ஆங்காங்கே பயன்படுத்தப்படுகின்றனவேயன்றி முழுவீச்சிலான செயல்பாட்டுக்கு வரவில்லை.

விபத்துகள் நடப்பது ஒருபுறமிருக்க மீட்புப் பணிகளிலும் ரயில்வே நிர்வாகம் சுணக்கம் காட்டுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்தவகையில் மும்பையில் நடந்த விபத்து ரயில்வே வரலாற்றில் புதிய கறையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்தின்போது, மேம்பால கான்கிரீட் இடிந்து விழப்போவது தெரிந்ததும், அவசர பிரேக்கை டிரைவர் பயன்படுத்தியிருக்கிறார். இதனால், பாலத்தின் இடிபாடுகள் எஞ்சின் மீதே விழுந்து அவரை நசுக்கிவிட்டன. பலரது உயிரைக் காப்பாற்றிய அவரது உயிர் சில மணி நேரப் போராட்டத்துக்குப் பின் பிரிந்திருக்கிறது.

எஞ்சினில் சிக்கியிருந்த டிரைவரை மீட்பதற்கு உரிய உபகரணங்கள் இல்லை என்பதும், இருந்த ஒன்றிரண்டு உபகரணங்களும் சரியாகச் செயல்படும் நிலையில் இல்லை என்பதும் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களாக இருக்கின்றன. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களைக்கூட அரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு, ஆம்புலன்ஸ் வசதிகள் பெருகியிருக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒருங்கிணைப்பு வசதிகள்கூட கிடையாது. இருந்தாலும் தகவல் கிடைத்தும் மீட்புப் பணிகளில் இறங்கிவிடுகிறார்கள். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

ஆனால், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பான ரயில்வேயில், விபத்து நடந்த சில மணி நேரத்துக்குப் பிறகுதான் மருத்துவக் குழு சென்றிருக்கிறது. அதுவும் தனது ஊழியரே விபத்தில் சிக்கியிருந்தபோதும் அவரைக் காப்பாற்ற ரயில்வேயால் இயலவில்லை. எவ்வளவு பெரிய பலவீனம் இது.

இந்த இரு விபத்துகளும் ஒப்பீட்டளவில் சிறியவைதான். எனினும், இவை நடந்த விதங்கள் மிகவும் அபாயகரமானவை. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகாவது ரயில் விபத்துகளுக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய அரசு முற்பட வேண்டும்.

கட்டுரையாளர் : எம். மணிகண்டன்
நன்றி : தினமணி



அந்நிய நேரடி முதலீடு சரிந்தது

செப்டம்பர் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடு சரிவினை கண்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, அனைத்து நாடுகளும் ‌பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. இதனால் வேலையிழப்பு, ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மக்கள் சிக்கினர். ஆனால், இந்தியாவில் போதுமான அளவு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதன் காரணமாக, பொருளாதார சரிவில் இருந்து இந்தியா தப்பியது. இதனால், அந்நிய முதலீடு இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி, மகிழ்ச்சியையும் அதிகரித்தது. இந்நிலையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்து வந்த அந்நிய முதலீடு, இந்த செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், இந்த ஆண்டு செப்டம்பரில் அந்நிய முதலீடு 54 சதவீதம் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிய முதலீடு, 11 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது இந்தாண்டு 5 ஆயிரத்து 452 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது தவிர, கடந்த நிதி ஆண்டில் முதல் 6 மாதங்களில் 80 ஆயிரத்து 840 கோடி ரூபாயாக இருந்த அந்நிய முதலீடு, இந்த நிதியாண்டில் 71 ஆயிரத்து 910 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

நன்றி : தினமலர்



செல்போன் தயாரிப்பில் இறங்கியது வீடியோகான் நிறுவனம்

செல்போன் தயாரிப்பில் வீடியோகான் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. செல்போன் இல்லாதவரே இல்லை என்ற நிலைமை தற்போது நி‌லவி வருகிறது. இந்நிலையில், வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீடியோகான் நிறுவனம், புதியதாக செல்போன் தயாரிப்பில் இறங்கி உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், எம்.பி.3 மியூசிக், கேமரா, எப்.எம்., ரேடியோ, இரட்டை சிம் கார்டு வசதி மற்றும் மல்டிமீடியா உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய டச் போன் வசதியுடன் வீடியோகான் செல்போனை அறிமுகப் படுத்துகிருறோம். மேலும், செல்போன் முக்கியத்துவத்தையும், அதன் பயனாளர்கள் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய செல்போனைகளை அறிமுகப் படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்