Showing posts with label விலைவாசி. Show all posts
Showing posts with label விலைவாசி. Show all posts

Wednesday, January 6, 2010

வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும்!

ஒரு நாட்டின் பொருளாதார இயக்கமும், வளர்ச்சியும், பலமும், வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி என்கிற இரண்டு வார்த்தைகளில்தான் மறைந்திருக்கின்றன. இன்றைய நவீன பொருளாதார யுகத்தில், பல நாடுகளின் வளர்ச்சியை, அந்த நாட்டு மக்களின் வாங்கும் சக்தி எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை, ஒரு முக்கிய அடிப்படையாகக் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

÷நம் நாடு, கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததைவிட, இப்பொழுது நன்கு வளர்ந்துள்ளது என்பது தெளிவு. ஒருகாலத்தில், இந்தியா முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் கார்கள்கூட உற்பத்தி செய்து, விற்பனை செய்ய முடியாத காலம் மாறி, தற்போது ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதுடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறோம். தவிர, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்வது மட்டுமன்றி, மக்களின் தேவைக்கேற்ப வாங்கும் சூழ்நிலையும், அதற்குத் தேவையான தொகையைக் கடனாகப் பெறுவதற்கு ஏதுவாக வாய்ப்புகளும் ஏற்பட்டிருப்பது நம் நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

÷விவசாயிகள் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலையைக் கேட்டு, ஒவ்வோராண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதை நாம் காண்கிறோம். குறிப்பாக, பால், கரும்பு, நெல், கோதுமை, பருத்தி, காய்கறிகள், பழங்கள் ஆகிய பொருள்களுக்கு நியாயமான விலையை விவசாயிகள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. விவசாய உற்பத்திச் செலவுகள் விலை உயர்வதால், விற்கும் பொருள்களின் விலையும் உயரும் என்பது தீர்க்கமான உண்மை.

÷நம் நாட்டில் விவசாயிகள் தங்களின் விவசாய உற்பத்திக்கான பொருள்களின் விலை அதிகரித்திருப்பதைக் கண்டித்துக் கிராமங்களிலும், விவசாயப் பொருள்களின் விலையேற்றத்தால் தங்களின் தாங்கும் சக்தி மீறியதைக் கண்டித்துப் பொதுமக்கள் நகரங்களிலும் போராடுவதுமான எதிர்மறைச் செயல்களைப் பார்க்கிறோம்.

÷தங்கத்தின் விலையேற்றம், அன்னியச் செலாவணி மாற்றம், அதிகமான பணவீக்கம், பணம் பற்றாக்குறை சூழ்நிலை, உலக அளவில் அதிகமான வட்டி விகிதம், பொருளாதாரச் சரிவு போன்ற உலகச் சூழ்நிலைகள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் போன்றவை கண்டிப்பாக நம் நாட்டையும் பாதிக்கும். நம் நாட்டின் இயற்கைச் சூழலும், பருவ மழை குறைவும், மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் காரணிகளாக அமையக் கூடும்.

÷ஆக, உற்பத்தி செய்வதற்குத் தேவையான நேரத்தில், தேவையான அளவு பணவசதி இருக்க வேண்டும். அதேபோல, நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வசதிகள் பெறுவதற்குத் தேவையான வழிவகைகளை வகுக்க வேண்டும். தவிர, மக்கள் செலவு செய்வது மட்டுமன்றி, நியாயமான அளவு பணம் சேமிப்பும் இருக்க வேண்டும். அப்படிச் சேமிக்கும் பணத்துக்கு அரசாங்கம் நியாயமான அளவு வட்டியும் அளிக்க வேண்டும்.

÷வங்கிகளில் போடும் பணத்துக்கு நியாயமான வட்டியும், வங்கிகளின் நிர்வாகச் செலவுகளுக்கு உலக அளவில் உள்ள நியாயமான தொகைகளும் இருக்க வேண்டும். தவிர, வட்டிக்குக் கடன் கொடுப்பதும் நியாயமான வட்டி விகிதத்தில் இருக்க வேண்டும். இத்தகைய சீரான இலக்கால் மட்டுமே மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் அதிகரிக்கும்.

÷ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் வரும்போது, ஒவ்வோர் அரசாங்கமும் தங்களுடைய வரவு செலவுகளுக்கும், திட்டச் செலவுப் பணிகளுக்காகவும், நிர்வாகச் செலவுக்கேற்ப, வரிவிதிப்பு முறைகளை மேற்கொள்கிறார்கள். இது எல்லோரும் அறிந்ததே.

÷சாதாரண நடுத்தர மக்கள், மாதாந்திரச் சம்பளம் வாங்குவோர், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்போர், சிறு தொழில் முனைவோர் போன்ற சமுதாயத்தின் இடைத்தட்டு மக்கள் எதிர்நோக்கும் சவால் வேறு வகையானது. ""மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் பற்றாக்குறைக்கு கூடுதல் வரிவசூல் செய்து விடுகிறார்கள் அல்லது வெளிநாடுகளில் கடன் தொகையாகப் பெற்று, நிர்வாகம் செய்கிறார்கள். ஆனால், யாருமே எங்களைப் பற்றியோ, எங்களது குடும்ப பட்ஜெட் தாங்குமா, எங்களால் குடும்ப நிர்வாகம் செய்ய முடியுமா என்று எள்ளளவும் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லையே என்பது அவர்களின் நியாயமான ஆதங்கம்.

÷ஒரே நேரத்தில் உணவுப் பொருள்கள், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டுவாடகை உயர்வு, பஸ் மற்றும் ரயில் கட்டண உயர்வு, மருத்துவச் செலவு உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் குடும்ப நிதிநிலை பற்றாக்குறைக்கு அவர்கள் என்ன செ ய்ய முடியும்? அதைச் சரிக்கட்ட அவர்கள் எங்கிருந்து கடன் வாங்குவது? அப்படி வாங்கிய கடனை எப்படித் திருப்பிக் கொடுப்பது? இன்றைய அத்தியாவசியத் தேவைகளான டி.வி., கம்ப்யூட்டர், ஆளுக்கொரு செல்போன் போன்றவைகளை வாங்கும் சக்தியின்றி, நடுத்தர வர்க்கத்தினர் மன அதிருப்தியில் உழல்கிறார்கள்.

÷இன்றைய இந்தச் சூழ்நிலையில், பலதரப்பட்ட குடும்பங்கள் அவர்கள் பெறும் சம்பளம், அவர்களின் மாதாந்திர வீடு, உணவு செலவினங்களுக்கும், அவர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகளுக்கும், மற்றைய இதர போக்குவரத்துச் செலவுகளுக்கும் போதுமான அளவில் இருக்கிறதா, அவர்கள் செலுத்தும் வரிவிகிதம் மாறிய சூழ்நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப பொருள்களை வாங்கும் சக்தி அவர்களிடம் உயர்ந்து உள்ளதா என்பதையும், அதனைத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பது பற்றியும் பொருளாதார நிபுணர்கள் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் மற்றும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் பிரச்னைகளுக்கும் தரப்படும் கவனம் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கிடைப்பதில்லை.

÷நம் நாட்டில் 80 சதவிகித மக்களின் மாத வருமானம் ரூ. 5,000, 10,000, 15,000, 30,000 ஆகிய இந்த நான்கு பிரிவுகளில் அடங்கிவிடும். அப்படிப்பட்ட மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப திருப்தியாக இருப்பதற்கு வழிவகைகள் என்ன என்பதை அரசாங்கம் தொடர்ந்து ஆராய வேண்டும்.

பல பெரியவர்கள் நாங்கள் எல்லாம் அன்றைய காலத்தில் மிகக் குறைந்த வருவாயில் தங்கம் சவரன் ரூ.15 லிருந்து ரூ.100 விற்ற காலங்களில் நிறைய தங்க நகைகள் வைத்திருந்தோம். கவலையின்றி நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் எங்கள் பேரக் குழந்தைகளோ, நல்ல மேற்படிப்பு படித்திருந்தும், அத்தியாவசியத் தேவையான ஒரு சொந்த வீடு கூட இல்லாமல், நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வதைப் பார்க்கலாம்.

÷எல்லா மக்களும் தங்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, ஓய்வூதியப் பாதுகாப்பு, முதியோர் நலத் திட்டங்கள் என்ற அளவில், ஏழை பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல், சமவாய்ப்புக் கிடைப்பதுடன், கீழ்தட்டில் இருப்பவர்களை உயர்த்துவதற்குத் திட்டங்கள் தீட்டி, புதிய சமுதாயம் உருவாக்க வேண்டும்.
அதேநேரத்தில், மத்தியதர வகுப்பினரின் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் திட்டங்கள் தீட்டுவதும், நிதிநிலை அறிக்கை தயாரிப்பதும் செய்யப்பட வேண்டும்.

÷மத்திய, மாநில அரசுகள், சமுதாய நலம் பேணும் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். ஆனாலும், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அன்றாடச் செலவுகளைச் சந்திப்பது குறித்து பயந்துகொண்டே வாழ்கிறார்கள்.

திடீரென உடல்நலக் குறைவோ அல்லது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்தாலோ, அவர்களின் பாடு பெரும் திண்டாட்டம்தான். திடீர் விலையேற்றத்தால் உணவுப் பொருள்கள் வாங்குவதுகூட மிகவும் கடினமாகி விடுகிறது.

÷பெரும்பாலானோர் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் கடைகளில் திடீரென அதிக விலைக்கு விற்றால், அந்தப் பணம் ஏதோ அந்தப் பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குச் செல்வதாக எண்ணுகிறார்கள்.
ஆனால், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையில் இருக்கும் ஒருசிலர்தான் அந்த விலையேற்றத்தின் பலனை அனுபவிக்கிறார்கள். இந்த நிலை மாறி உற்பத்தியாளருக்கு நியாயமான விலையும், வாங்கும் சக்தியும் இருப்பதை அரசுதான் உறுதி செய்ய முடியும்;
செய்ய வேண்டும்.

÷அதேபோல, உணவுப் பொருள்கள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவோருக்கும் நியாயமான விலைக்கு வாங்கும், தாங்கும் சக்தி இருக்க வேண்டும். பட்ஜெட் மற்றும் பொருள்களின் விலை உயர்வு, வரி உயர்வு போன்றவை பலதரப்பட்ட மக்களுக்கும் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் தொடருமா என்பதன் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும்.

÷செலவுக்கேற்ற வரவை அரசுகள் செய்து கொள்ள முடியும். பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அது அசாத்தியம். ஆகவே, அவர்கள் வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் வகையில் மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இருப்பதை உறுதி செய்வதுதான் மத்திய, மாநில அரசுகளின் கண்ணோட்டமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செயல்பாடு இருந்தால் மட்டுமே அரசு மக்கள் நல அரசாக இருக்கும். சுதந்திரம், மக்களாட்சி என்பதற்கெல்லாம் அர்த்தம் இருக்கும். வாங்கும் சக்தி அதிகரிப்பது மட்டுமே வளர்ச்சிக்கு அறிகுறி அல்ல. தாங்கும் சக்தியும் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்துவதுதான் நல்லதொரு பொருளாதாரக் கண்ணோட்டமாக இருக்கும்.
கட்டுரையாளர் :ஜெம் ஆர். வீரமணி
நன்றி : தினமணி

Thursday, December 31, 2009

பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவு பொருட்கள் விலை உயர்வு : பிரபல நிறுவனங்கள் முடிவு

சர்க்கரை, பால் மற்றும் வெண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால், பிரபல நிறுவனங்களின் பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்த, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (எப்.எம்.சி.ஜி.,) தயாரிப்பு நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே மற்றும் குஜராத்

கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எப்.,) போன்றவை தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. உணவுப் பொருட்கள் பணவீக்கம் கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவாக, தற்போது 20 சதவீதத்தை அடைந்துள்ளது. எனவே, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்க பிரிட்டானியா நிறுவனம், தங்கள் தயாரிப்பு பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப்பொருட்களின் விலையை, 5 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில், பார்லே நிறுவனம், 'பார்லி ஜி' (88 கிராமின்) விலையை 4 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேபோன்று பால் விலை அதிகரிப்பை தொடர்ந்து,

அமுல் நிறுவனம், தயாரிப்புகளின் விலையை பிரிவு வாரியாக 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மற்றொரு பெரிய நிறுவனமாக ஐ.டி.சி., அடுத்த இரண்டு வாரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இத்துறையில் உள்ள பிற பெரிய நிறுவனங்கள், தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

இதுகுறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வினிதா பாலி

கூறுகையில், 'எங்களின் அனைத்து பிராண்டுகளின் விலையையும், 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை, சமீபத்தில் அதிகரித்துள்ளோம். நாங்கள் லாபகரமான வளர்ச்சியையே எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இதுகுறித்து, குஜராத் கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க, தயாரிப்புகளின் விலையை 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம். 100 கிராம் வெண்ணெயின் விலையை 23 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளோம். சமீபத்தில், எங்கள் அனைத்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் விலையையும் அதிகரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எனினும், 'தங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது இல்லை' என, டாபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் துகால் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


Monday, December 28, 2009

சுமக்கிறவனுக்குத்தான் வலி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னைக்காக அவைத் தலைவரின் உள்வட்டத்திற்குள் நுழைந்து கூச்சல் போட்டதற்குக் காரணம்,​​ தேர்ந்தெடுத்த மக்கள் தங்களைப் பார்த்து சங்கடமான கேள்விகளைக் கேட்டுவிடக்கூடாதே என்ற எண்ணத்தினால்தான்.​ பத்திரிகைகளும் ஊடகங்களும் விலைவாசி உயர்வில் இவர்கள் காட்டிய அதீத அக்கறையைக் கண்டு,​​ நல்லெண்ணம் கொண்டுவிடுவார்கள் என்பதால்தான்.​ ​

ஆனாலும்,​​ மத்திய அரசு இதைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ அல்லது மிகச் சரியாகவே புரிந்துகொண்டதாலோ என்னவோ, நாடாளுமன்ற உணவுக்கூடத்தில் சப்பாத்தி ஒரு ரூபாய்,​​ டீ ஒரு ரூபாய்,​​ சாப்பாடு ரூ.12.50,​ பிரியாணி ரூ.22 என்று - பாவம் வறுமையில் பரிதவிக்கும் மக்களவை உறுப்பினர்களுக்காக குறைந்த விலையை நிர்ணயம் செய்தது.​ பொதுச் சந்தையில் எந்தவொரு பொருளின் விலையும் ஒரு பைசாகூட குறையவில்லை.

இது போதாதென்று,​​ மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்தப் பாடுபட வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சொல்ல,​​ மத்திய அரசின் தவறான கொள்கையால்தான் விலையேற்றம்; இதை மாநில அரசின் மீது தள்ளிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் பதிலடி கொடுக்க,​​ ஒரு சொற்போர் நடந்துகொண்டிருக்கிறது.​ இதனால் எந்தப் பொருளின் விலையும் ஒரு ரூபாய் கூட குறையப் போவதில்லை.

ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறது மத்திய அரசு.​ விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்றும் கூறுகிறது.​ ஆனால் பொருள்களின் விலையோ தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகிறது.​ இந்திய அரசு விலைவாசி உயர்வை மொத்தவிற்பனை விலைப் பட்டியல் ​(ஹோல்சேல் பிரைஸ் இன்டக்ஸ்)​ மூலம் கணக்கிடுகிறது.​ மொத்தவிற்பனை விலைப் பட்டியல் வாரம் தோறும் கணக்கிடப்பட்டாலும்கூட,​​ இதன் மூலம் கிடைக்கும் விலைஉயர்வு சராசரியாக 0.3 சதவீதமாகவே இருக்கிறது. ஏனென்றால்,​​ மொத்தக் கொள்முதல் செய்து அதைப் ​ பதுக்கி,​​ அல்லது சில்லறை வணிகமாக மாற்றப்படும்போதுதான் ஒரு பொருளின் விலை குறைந்தபட்சம் 100 சதவீதத்திலிருந்து 400 சதவீதம் வரை உயர்கிறது.

அரசு வெளியிடும் நுகர்வோர் விலைப் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகத் தெரியும்.​ ஒவ்வொரு மாதமும் வெளியாகும் இந்தப் பட்டியலில் விலைஉயர்வு என்பது 9 முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

விலைவாசி உயர்வைக் கணக்கிடும்போது குறைந்தபட்சம் 435 வகைப் ​ பொருள்களின் விலையைக் கணக்கிடுகின்றனர்.​ இதில் அதிக முக்கியத்துவம் தரும் பொருள்ககளான-​ மின்சாரம்,​​ பெட்ரோலியப் பொருள் போன்றவைகளின் விலை மாற்றமின்றி இருக்கின்றன.​ ஆனால் கணக்கிடுவதில் குறைந்த முக்கியத்துவம் பெறும் காய்கறிகள்,​​ இறைச்சி போன்ற உணவுப் பொருள்களின் விலை சந்தையில் தாறுமாறாக உயர்ந்து கிடக்கிறது.​ இதனால்தான் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அரசு சொன்னாலும்,​​ நடுத்தரக் குடும்பத் தலைவனின் கையைக் கடிக்கிறது.

சாதாரணமாக இந்தியர்கள் உணவுக்காகத் தங்கள் வருவாயில் 42 சதவீதத்தைச் ​ செலவழிக்கின்றனர்.​ போக்குவரத்துக்கு 9 சதவீதமும்,​​ பொழுதுபோக்குக்கு 8 சதவீதமும் செலவிடுகின்றனர்.​ மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது.​ இதில் உணவுப் பொருள்களின் விலை கூடிக்கொண்டே வந்தால்,​​ அவர்கள் தங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை உணவுக்கே கொடுத்துவிட்டால்,​​ மற்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள்.​ இவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும்,​​ தங்கள் மருத்துவச் செலவுக்கும்,​​ சேமிப்புக்கும் என்ன செய்வார்கள்?

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் கிலோ ஒரு ரூபாய் அரிசியை அனைத்துக் குடும்பங்களுமே வாங்கி,​​ அதைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை நிஜம் என்றே வைத்துக்கொண்டாலும்,​​ எண்ணெய்,​​ பருப்பு,​​ மிளகாய்,​​ மிளகு,​​ பூண்டு,​​ வெங்காயம் இவற்றின் விலைஉயர்வு சாதாரண குடும்பத்துக்குத் தாளமுடியாத சுமையாக இருக்கிறது.​ தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு ரூபாய் அரிசிதான் வாங்குகிறார்கள் என்றால்,​​ பொன்னி அரிசியின் விலை வாங்குவார் இல்லாததால் குறைந்திருக்க வேண்டுமல்லவா,​​ 25 கிலோ சிப்பம் விலை ரூ.1000-த்தை நெருங்குகிறதே ஏன்?​ ​

கடந்த ஆறு மாதங்களில் சமையல் எண்ணெய்,​​ பருப்புவகை,​​ அரிசி,​​ கோதுமை,​​ காய்கறிகள் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.​ விலை உயர்வு என்பது,​​ தேவை -​ உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி பெருகினால்தான் உண்டாகும் என்ற பொருளாதார வாய்ப்பாடுகள் எல்லாமும் பொய்யாகும் வகையில் இந்த விலை உயர்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விந்தையிலும் விந்தை.

2008-09 சாகுபடி ஆண்டுக்கான விளைச்சல் பட்டியலில் 233 மில்லியன் "ரெக்கார்டு' உற்பத்தி என்று அரசு சொல்கிறது.​ அதாவது அரிசி 99 மில்லியன் டன்,​​ கோதுமை 80 மில்லியன் டன்,​​ 39 டன் தானிய வகைகள்,​​ 15 டன் பருப்பு வகைகள் என்று புள்ளிவிவரம் தரப்படுகிறது.​ இதில் பருப்பு வகைகள் மட்டும் தேவையைவிட 4 மில்லியன் டன் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,​​ மற்றவர்கள் யாரும் பற்றாக்குறை இருப்பதாகச் ​ சொல்லவில்லை.​ அப்படியானால் ஏன் விலை உயர்கிறது.​ அல்லது யார் விலையை உயர்த்துகிறார்கள்?

ஓட்டல்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்திவிட்டன.​ டீக் கடைகளில் ஒரு கோப்பை தேநீர் விலை கிராமப்புறங்களில் ரூ.4 ஆகவும் நகரங்களில் ரூ.5 ஆகவும் உயர்ந்துவிட்டது.​ மற்ற உணவுப் பண்டங்களின் விலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.​ அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு செய்தி வந்தவுடன் முதலில் உயர்ந்தது வீட்டு வாடகை என்பது,​​ வாடகைக்குக் குடியிருப்போருக்குத் தெரியும்.

இதிலும் ராஜதந்திரிகளாகச் செயல்படும் பெரும் நிறுவனங்கள் தங்கள் நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளின் ​ விலையை உயர்த்தாமல் அதில் உள்ள எடையை மட்டும்,​​ 100 கிராம் என்பதை 80 கிராமாகக் குறைத்து மாயாஜாலம் காட்டுகின்றன.​ முன்பெல்லாம் 250 கிராம் இருந்த பாக்கெட்டுகள் எல்லாமும் இப்போது 200 கிராம் பாக்கெட்டுகளாக மாறி ரொம்ப காலமாகிறது.​ நுகர்வோர்தான் பாவம்,​​ அரை கிலோ பாக்கெட் விலையில் பாதிதான் கால்கிலோ பாக்கெட் விலையும் என்று நினைத்து ஏமாறும் நுகர்வோர் அதில் அச்சிட்டுள்ள எடையைப் பார்த்தால் தெரியும்,​​ ஏமாந்துகொண்டிருப்பது.

​ மாதம் ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஒழிய சராசரி இந்தியன் இன்றைய விலைவாசியில் வாழ வழியே இல்லை போலிருக்கிறதே!
நன்றி : தினமணி