Sunday, April 12, 2009

10 நாளில் தங்கம் சவரனுக்கு 700 ரூபாய் குறைவு: அட்சய திருதியை நெருங்குவதால் விலை எகிறும்?

ஏறுமுகமாகவே இருந்த தங்கத்தின் விலை, 10 நாட்களில் சவரனுக்கு 650 முதல் 700 ரூபாய் வரை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தங்கத்தை சாமானிய மக்களால் எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு, ஓராண்டாகவே விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. அதிகபட்சமாக ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 1,435 ரூபாய் வரை தொட்டது. சவரன் 11 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்றது.கடந்த ஜனவரி 10ம் தேதி 1,312 ரூபாய்க்கும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்றது. பிப்ரவரி 10ம் தேதி ஒரு கிராம் 1,316 ரூபாய்க்கும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்றது. மார்ச் 10ம் தேதி 1,421 ரூபாய்க்கும், ஒரு சவரன் 11 ஆயிரத்து 368 ரூபாய்க்கும் விற்றது.ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே சீராக இல்லாமல், ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரு கிராம் 1,344 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 752 ரூபாய்க்கும் விற்றது.கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஆபரணத் தங்கம் கிராம் 1,418 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்றது. இது படிப்படியாகக் குறைந்து 10 நாட்களில் சவரனுக்கு 650 முதல் 700 ரூபாய் வரை குறைந்துள்ளதாக பாரிமுனை தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.அட்சய திருதியை நெருங்கும் சமயத்தில் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துவிடும் என வியாபாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து சென்னை தங்க நகை மொத்த வியாபாரி சங்கத் துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், ''சமீபத்தில் லண்டனில் நடந்த 'ஜி-20' மாநாட்டில், நிலையில்லாமல் இருந்த பங்கு வர்த்தகத்தை நிலை நிறுத்துவது, கச்சா எண்ணெய் விலையேற்றம் சீராக வைத்திருப்பது உள்ளிட் டவை விவாதிக்கப்பட்டன.''அதேபோல், உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் (ஐ.எம்.எப்.,) திட்டத்தில், 400 டன் தங்கத்தை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அளிப்பதாக முடிவு செய்யப் பட்டது. ''இதனால், தற்போது பங்கு வர்த்தகம் நிலையாக இருக்கிறது. இதன் காரணமாகவும் சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அட்சய திருதியை நெருங்குவதால் தங்கத்தின் விலை ஒரே சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
நன்றி : தினமலர்


பந்தய குதிரை போல் பாய்கிறது பங்குச்சந்தை

கடந்த மூன்று வாரங்களாக வெள்ளியன்று பங்குச்சந்தை விடுமுறை காரணமாக வர்த்தகம் நடப்பதில்லை. வியாழன் மட்டுமே வர்த்தகம் நடக்கிறது. இந்த வாரமும் அப்படித் தான் இருந்தது.சமீபகாலமாக ஏறிக்கொண்டே செல்லும் பங்குச்சந்தைக்கு வியாழன் மட்டும் விதிவிலக்கா என்ன? வியாழனன்று வெளியான பிப்ரவரி மாத தொழில் துறை உற்பத்தி புள்ளிவிவரம் ஜனவரியை விட குறைவாக இருந்தும், சந்தை மேலே சென்றது, ஏன்? இது போல குறையும் என்றும் முன்னமேயே எதிர்பார்த்திருந்ததால் சந்தையில் அதிகம் மாற்றங்கள் இல்லை.இருந்தாலும், காலையில் 182 புள்ளிகள் வரை மேலே சென்ற சந்தை, பின் அவ்வளவு லாபத்தையும் இழந்து ஒரு கட்டத்தில் 95 புள்ளிகள் வரை கீழேயும் சென்றது.பின் சுதாரித்து 62 புள்ளிகள் கூடி முடிவடைந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 171 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை வாங்கின.பணவீக்கம் இந்த வாரம் 0.26 சதவீதமாகக் குறைந்தது. அதனால், வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி இன்னும் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் வங்கிப் பங்குகள் மேலே சென்றன. கடந்த பல வாரங்களாகவே டிபாசிட்களின் வட்டி விகிதங்கள் குறையும் என்று கூறி வந்தோம்.அது போலவே தற்போது ஸ்டேட் பாங்க் தனது வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் அளவு குறைத்துள்ளது. சத்யம் கம்பெனியின் நஷ்டம் கணக்கெடுத்துப் பார்த்ததில் 6,000 கோடி ரூபாய் அளவு இருக்கும் என தீர்மானித்திருக்கின்றனர்.இதில், அதிகம் லாபமடைந்தது ராஜு குடும்பத்தினர் (2,580 கோடி). அதிகம் நஷ்டமடைந்தது யார் தெரியுமா? எல்.ஐ.சி., (950 கோடி). தற்போது சத்யத்தை வாங்க காக்னிசன்ட் கம்பெனியும் போட்டியில் இருக்கிறது. அடுத்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்.வார இறுதியில் மும்பை பங்குச்சந்தை 62 புள்ளிகள் குறைந்து, 10 ஆயிரத்து 804 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், 3,342 புள்ளிகளில் முடிவடைந்தது.முதலீட்டாளர்களின் ஒரு மாத லாபம்சந்தை முன்னேறிச் செல்லும் வேகத்தில் முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் அடைந்த லாபம் மட்டும் ஏழு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். கம்பெனிகள் படி பார்த்தால் ரிலையன்ஸ் மற்றும் ஓ.என்.சி.ஜி., ஆகியவை அதிகம் முன்னேறியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் தற்போதைய குறியீடான 10804, கடந்த ஆறு மாத காலத்தில் அதிகபட்சம்.இது காலாண்டு முடிவுகளின் சீசன். பெரிய கம்பெனிகள் என்று பார்க்கப் போனால், என்.டி.பி.சி.,யின் முடிவுகள் வந்துள்ளன. சென்ற ஆண்டு லாபத்தை விட 5.56 சதவீதம் கூடி, 7,827 கோடி ரூபாய் லாபம் இந்த ஆண்டில் சம்பாதித்துள்ளது.சந்தை 10 ஆயிரத்தையும் தாண்டி பந்தயக் குதிரை போலத் தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், காலாண்டு முடிவுகள் சந்தையை கீழே தள்ளிவிடாமல் இருக்க வேண்டும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்