Friday, April 3, 2009

இந்தியா முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம்.,கள் நேற்று வேலை செய்யவில்லை

யாரும் எந்த பேங்க் ஏ.டி.எம்.மிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எந்த ஏ.டி.எம்.மும் வேலை செய்யாமல் போய் விட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து, அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.மில் தான் பணம் எடுக்க வேண்டும் என்பதில்லை. எந்த பேங்கின் ஏ.டி.எம்.என்றாலும் பரவாயில்லை. அதில் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு சேவை கட்டணம் எதுவும் கிடையாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மாதத்தில் முதல் சில நாட்கள் வரை, பெரும்பாலானவர்கள் சம்பள பணத்தை எடுக்க ஏ.டி.எம்.,செல்வதால் அந்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுக்கலாம் என்றதால் அவரவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம்.களில் கடந்த இரண்டு நாட்களாக கடும் கூட்டம் இருந்தது. ஆனால் பணம் எடுக்க சென்றவர்களில் பலர் பணம் எடுக்க முடியாமல்தான் திரும்பினர். அவர்களுக்கு பணத்திற்கு பதிலாக வந்தது ' டிரான்ஸாக்ஷன் டிக்லைன் ' என்ற மெசேஜ் தான். இந்தியாவில் அதிகம் ஏ.டி.எம்.களை வைத்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ பேங்க் களின் உயர் அதிகாரிகள் இதனை ஒத்துக்கொண்டனர். மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஏ.டி.எம்.களை பயன்படுத்தியதால், இன்டர் - பேங்க் டிரான்ஸாக்ஷனை கவனிக்கும் நேஷனல் பைனான்ஷியல் ஸ்விட்ச் ( என்.எஃப்.எஸ்.) இல் ஓவர்லோட் ஆகி விட்டது. அதனால்தான் ஏ.டி.எம்.கள் வேலை செய்யாமல் நின்று விட்டன என்றனர்.
நன்றி : தினமலர்


உலக பொருளாதாரத்தை சரிசெய்ய 1.1 லட்சம் கோடி டாலர் நிதி உதவி : ஜி20 மாநாட்டில் முடிவு

1930 க்குப்பின் மோசமான நிலையில் இருக்கும் உலக பொருளாதாரத்தை சரிசெய்ய 1.1 லட்சம் கோடி டாலர் ( 750 பில்லியன் பவுண்ட் ) பணம் நிதி உதவி செய்ய லண்டனில் நடந்த ஜி20 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. லண்டனில் இரண்டு நாட்கள் நடந்த ஜி20 மாநாட்டின் முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டது, உலக பொருளாதாரத்தை எப்படி சரி செய்வது என்பதைப்பற்றியதாகத்தான் இருந்தது. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் தான் 1.1 லட்சம் கோடி டாலர் நிதி உதவி திட்டத்தை முன்மொழிந்தார். அதாவது 750 பில்லியன் பவுண்ட்டை ( 1.1 லட்சம் கோடி டாலர் - சுமார் 55 லட்சம் கோடி ரூபாய் ) பணக்கார நாடுகள், ஐ.எம்.எஃப்.,( இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் ) இடம் கொடுக்க வேண்டும். அந்த பணத்தில் இருந்து, பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்பதே அந்த திட்டம். இந்த ஒரு லட்சம் கோடி டாலரில், 50 ஆயிரம் கோடி டாலர் பணத்தை ஐ.எம்.எஃப்., ன் நிதி ஆதாரத்தை மூன்று மடங்காக பெருக்கிக்கொள்ள வைத்துக்கொள்ள வேண்டும். 25 ஆயிரம் கோடி டாலர் பணத்தை, உலக அளவிலான வர்த்தகத்தை சரி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும், மீதி 25 ஆயிரம் கோடி டாலர் பணத்தை, ஐ.எம்.எஃப்.,ல் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள்,பொருளாதாரத்தை சரி செய்ய உதவியாக பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இதனை வெகுவாக பாராட்டிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இது ஒரு திருப்புமுனை என்றார். விரைவில் பிரிட்டனின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் நிலையில் இருந்தாலும், இந்த திட்டத்தை கொண்டு வந்த பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், இந்த நிதியில் இருந்து நிதி எதையும் கேட்கவில்லை. மேலும் வங்கிகளில் கள்ளத்தனமாக பணம் சேமிக்கும் வழக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் மாநாட்டில் பேசப்பட்டது. வங்கிகளின் சேமிப்பு குறித்த விபரம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் வங்கிகள் இந்த விஷயத்தில் ரகசியத்தை காக்கும் போக்கு ஒழிக்கப்பட வேண்டும் என்றும். பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தலைவர்களால் கடுமையாக வலியுறுத்தப்பட்டது.

நன்றி : தினமலர்


11 மாதங்களில் ஆயுள் காப்பீட்டுத்துறை வளர்ச்சி வெறும் 0.06 சதவீதம்தான்

பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் பல துறைகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆயுள் காப்பீட்டு துறையும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல் அதனை உறுதி படுத்துகிறது. கடந்த 2008 ஏப்ரலில் இருந்து 2009 பிப்ரவரி வரையில் எடுத்த கணக்கெடுப்பில், ஆயுள் இன்சூரன்ஸ் துறை வெறும் 0.06 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. ஏப்ரல் - பிப்ரவரி 11 மாதத்தில் அந்த துறையில் வந்த பிரீமியம் தொகை ரூ.72,017.17 கோடி மட்டுமே. இது அதற்கு முந்தைய வருட காலத்தில் ரூ.71,971 கோடியாக இருந்தது. 0.06 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 11 மாத காலத்தில் அதிகம் நஷ்டமடைந்திருப்பது பஜாஜ் அலியான்ஸ் நிறுவனம்தான். அதன் வளர்ச்சி 28.29 சதவீதம் குறைந்திருக் கிறது. அதற்கு அடுத்ததாக அவிவா 27 சதவீதம், ஐசிஐசிஐ புருடென்ஷியல் 12.4 சதவீதம், ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்டு லைஃப் 6.34 சதவீதம், எல்.ஐ.சி.,4.03 சதவீதம் குறைந்திருக்கிறது. பொதுவாக இன்சூரன்ஸ் துறையில் அதிகம் வர்த்தகம் நடப்பது நிதி ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில்தான். ஆனால் இந்த நிதி ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் எதிர்பார்த்த வர்த்தகம் நடக்கவில்லை. எனவே மார்ச்சிலும் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.

நன்றி : தினமலர்


அதிகம் விலை கொடுக்க முன்வருபவருக்கே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் : போர்டு முடிவு

அதிகபட்ச ஏலத்தொகையில் 90 சதவீதம் வரைக்கும் யாரும் கேட்கவில்லை என்றால், யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு சத்யத்தை கொடுத்து விடுவது என்று அதன் போர்டு முடிவு செய்திருக்கிறது. இதற்காக இன்னொரு முறை ஏலம் அறிவிக்கப்பட மாட்டாது என்று அது தெரிவித்திருக்கிறது. சத்யத்தை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தவர்களின் டெக்னிக்கல் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விட்டன .அவைகள் திருப்தி அளிப்பவைகளாகத்தான் இருக்கின்றன. இனிமேல் அவர்கள் என்ன விலைக்கு கேட்கிறார்கள் என்ற விபரத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்றார் நீதிபதி பரூச்சா. சத்யத்தின் 51 சதவீத பங்குகளை விற்கும் வேலையை சரிபார்க்க இவரைத்தான் மத்திய அரசு நியமித்திருக்கிறது. சத்தயத்தின் பங்குகளை விற்கும் விதம் மாற்றப்பட்டிருப்பதால், இந்த விபரங்கள் செபிக்கும் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. சத்யத்தை வெளிப்படையான ஏலம் ( ஓப்பன் பிட் ) மூலம் தான் விற்க வேண்டும் என்று, அதனை வாங்க முதலில் விருப்பம் தெரிவித்து விட்டு பின்னர் பின்வாங்கிய பி.கே.மோடியின் ஸ்பைஸ் குரூப் சொன்னது. சத்யம் ஓப்பன் பிட் மூலமாக விற்கப்பட்டால் மீண்டும் அதனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்றும் சொல்லியது. இப்போது அது மீண்டும் சத்யத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபடுமா என்று கேட்டபோது, நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் எங்கள் போர்டு மீட்டிங்கில் இதனை தீர்மானிப்போம் என்றனர். அதிக பட்ச ஏலத்தொகையில் 90 சதவீதம் வரையுள்ள தொகைக்கு ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்டவார்கள் கேட்டிருந்தால், அவர்களை நேரில் வரச்செய்து ஏலம் விடப்படும். அதில் அதிகபட்ச தொகைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு சத்யம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி : தினமலர்


ராணி எலிசபெத்தை சந்தித்த போது மரபை மீறி நடந்துகொண்ட மிச்சல் ஒபாமா

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் அவரது மனைவி மிச்சல் ஒபாமாவும் பக்கிங்ஹாம் அரண்மணைக்கு சென்று, இங்கிலாந்து ராணி எலிசபெத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்தனர். ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். இதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் ராணி எலிசபெத்தை சந்திக்க செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் என்று நிறைய இருக்கின்றன. இந்த மரபைத்தான் மிச்சல் ஒபாமா மீறி நடந்துகொண்டார் என்று பிரச்னை ஆகி இருக்கிறது. ராணியை சந்திக்க செல்பவர்கள் ஆண்கள் என்றால் தலையை லேசாக குனிந்து வணக்கம் சொல்ல வேண்டும். பெண்கள் என்றால் ஒரு முழங்காலை மடக்கி வணக்கம் தெரிவிக்க வேண்டும். சந்திக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் இதை கடைப்பிடிக்க வேண்டும். இந்த மரபை ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா கடைப்பிடித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் ராணியை யாரும் தொட்டு பேசக்கூடாது. ஆனால் மிச்சல் ஒபாமா இந்த மரபை மீறி, ராணியின் முதுகில் தொட்டு, அவரை லேசாக அணைத்து சென்றதாக தெரிகிறது. இது மரபை மீறிய செயலாக பிரிட்டனில் கருதப்பட்டு பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி : தினமலர்


எலிசபெத் ராணிக்கு ' ஐபாட் ' பரிசளித்த பாரக் ஒபாமா தம்பதி

லண்டனில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் அவர் மனைவி மிச்சலும், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை, பக்கிங்ஹாம் அரண்மணைக்கு சென்று சந்தித்தனர். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மிச்சலும், ராணி எலிசபெத்துக்கு ஒரு ' ஐபாட் ' ஐ பரிசளித்தனர். அதில், ராணி எலிசபெத் 2007ம் வருடம் அமெரிக்கா சென்றிருந்தபோது, வாஷிங்டன் மற்றும் விர்ஜினியா வுக்கு போனபோது எடுத்த வீடியோ படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் ரிச்சர்ட் ரோட்கர்ஸ் என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர் கையெழுத்து போட்டிருந்த அரிய பாட்டு புத்தகம் ஒன்றையும் ராணிக்கு பரிசளித்தனர். பதிலுக்கு ராணியும் அவர் கணவர் பிலிப்பும், அவர்கள் இருவரும் இருக்கும் போட்டோ ஒன்றில் கையெழுத்து போட்டு, அதை ஒபாமா மற்றும் மிச்சலுக்கு பரிசளித்தனர்.
நன்றி : தினமலர்


மார்ச் மாதத்தில் ரூ.7,000 கோடி முதலீட்டை இழந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்

பரஸ்பர நிதி என்று சொல்லப்படும் மியூச்சுவல் பண்ட்டின் முதலீடு, மார்ச் மாதத்தில் ரூ.7,000 கோடிக்கு மேல் குறைந்திருக்கிறது. எனவே இப்போது மியூச்சுவல் ஃபண்ட்டின் மொத்த முதலீடு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழே சென்று விட்டது. ஆனால் மற்ற எல்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் மார்ச் மாதத்தில் முதலீட்டை இழந்திருக்கும்போது, ஹெச்.டி.எஃப்.சி.பேங்க் மட்டும் ரூ.1,000 கோடி முதலீட்டை கூடுதலாக பெற்றிருக்கிறது. மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருக்கும் 34 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் ( ' அசட் அன்டர் மேனேஜ்மென்ட் ' - ஏ யு எம் ) முதலீடு ரூ.7,709.10 கோடி ( 1.54 சதவீதம் ) குறைந்து ரூ.4,93,264.28 கோடியாகி விட்டது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் பண்ட் இன் இந்தியா தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மியூச்சுவல் பண்டில் செய்யப்பட்டிருந்த மொத்த முதலீடு ரூ.5,00,973.38 கோடியாக இருந்தது. இந்தியாவின் பிரபல முதலீட்டு நிறுவனங்களான ரிலையன்ஸ் எம்.எஃப், ஐசிஐசிஐ புருடென்ஸியல், யு.டி.ஐ.எம்.எஃப், மற்றும் எல்.ஐ.சி.எம்.எஃப்., ஆகியவை மட்டும் மொத்தமாக ரூ.4,3058.53 கோடியை மார்ச் மாதத்தில் இழந்திருக்கிறது. ஆனால் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் கூடுதலாக ரூ.1,092.05 கோடி முதலீட்டை பெற்றிருக்கிறது.
நன்றி : தினமலர்


படுத்துகிறது பணவீக்கம்: அபாயம் நீங்கிவிட்டதா?

கடந்த இரு மாதங்களாக தொடர் சரிவை சந்தித்த பணவீக்கம், சிறிது அதிகரித்திருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து சரியுமே தவிர தற்போதைக்கு பணவீக்கம் அதிகரிக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர். மார்ச் 21ம் தேதியுடன் முடிந்த வாரத்திற்கு பணவீக்கம் 0.31 சதவீதம் என்று சற்று அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு பணவீக்கம் 7.8 சதவீதம். பணவீக்கம் குறித்து கருத்து தெரிவித்த, 'கிரிசில்' பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி , 'பணவீக்க குறியீடு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு உயராது. குறைந்து வந்தது சற்று அதிகரித்ததும் மாற்றம் ஏற்படும் என்ற கருத்து தேவையில்லை. மாறாக பூஜ்யத்திற்கும் கீழாக குறைந்து விடும். அதனால் வட்டி குறைப்பு பற்றி ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்' என்றார்.
ஆனால், பணவீக்கம் பெரிய அளவில் குறைந்தாலும் விலைவாசி உயர்வு தொடர்கிறது. உற்பத்தி குறைந்திருக்கிறது. இது குறித்து பா.ஜ.,வின் பொருளாதார பிரிவு கன்வீனர் ஜகதீஷ் ஷெட்டிகார் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத வகையில் 0.2 சதவீதமாக பணவீக்கம் குறைந்திருக்கிறது. இது கவலை தரும் அம்சம். இரட்டை இலக்கமாக இருந்த பணவீக்கத்தை தேர்தல் கருதி மத்திய அரசு குறைக்க கருதி எடுத்த அவசர நடவடிக்கைகள் சரி அல்ல. அதன் விளைவாக பணப்புழக்கம் குறைந்து மேன்யுபேக்ட்சரிங் துறை நசிந்துவிட்டது.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை குறைவு என்பது வேறு விஷயம். சர்வதேச விலை வீழ்ச்சியும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்கள், காய்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை இரட்டை இலக்கத்தில் உயர்ந்திருக்கிறது. நல்ல பொருளாதார சூழ்நிலை என்றால் 4 சதவீதம் வரை பணவீக்கம் இருக்கலாம். தற்போதுள்ள பணச்சுருக்கம் (டிப்ளேஷன்) மக்கள் வாங்கும் சக்தியைக் குறைத்து வேலை வாய்ப்பைக் குறைக்கும். இந்த அபாயத்தைத் தடுக்க நகர்ப்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில், அதிகளவில் அரசுப்பணம் செலவழிக்கும் திட்டங்கள் தேவை. நதிநீர் இணைப்புத் திட்டம், அதிகளவில் வேலை வாய்ப்பை மேன்யுபேக்ட்சரிங் துறையில் ஏற்படுத்தும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தேவை. பொதுவாக இன்றைய நிலை கவலை தருகிறது. இவ்வாறு ஷெட்டிகார் கூறினார்.
நன்றி : தினமலர்


மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது நானோ

டாடா கார் ஷோரூம்களில், நானோ காரின் விற்பனைக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. வரும் 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை நானோ கார் புக்கிங் நடைபெறும். டாடா நானோ கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்ய விண்ணப்பப் படிவங்கள், நாடு முழுவதும் உள்ள ஆயிரம் நகரங்களில், 30 ஆயிரம் இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள கன்கார்டு ஷோரூம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள வி.எஸ்.டி., ஷோரூம்களில் புக்கிங் செய்வதற்கு வசதியாக விண்ணப்பப் படிவங்கள் நேற்று வழங்கப்பட்டன. வரும் 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை புக்கிங் நடைபெறும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களை குலுக்கல் மூலம் தேர்வு செய்து ஜூலை மாதம் முதல் கார்கள் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஒரு லட்சம் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. சென்னையில் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நானோ சி.எக்ஸ்.பி.எஸ். 3 என்ற மாடல் கார் விலை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்.
நானோ பி.எஸ். 3 கார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய். நானோ எல்.எக்ஸ்.பி.எஸ். 3 கார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காருக்கு 18 மாதம் அல்லது 24 ஆயிரம் கி.மீ., வரை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.6 கி.மீ., தூரம் கார் பயணிக்க வல்லது. அதிகபட்சமாக 105 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். புதிய 2 சிலிண்டர் சக்தி வாய்ந்தது. 624 சி.சி., திறன் கொண்ட அலுமினியம் எம்.பி.எப்.ஐ., பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மீட்டர் நீளத்தில் இன்ஜின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. வீல்கள் மூலைக்கு தள்ளப்பட்டு, ரூப் உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய கார்களை விட 21 சதவீதம் அதிக இடவசதியளிக்கும் படி நன்கு அகலமாக திகழ்கிறது. நானோ கார் புக்கிங் செய்ய முதல் விண்ணப்பத்தை சாயாதேவி பூர்த்தி செய்து கொடுத்து நிருபர்களிடம் கூறுகையில், ''நடுத்தர மக்களிடம் இந்த கார் நல்ல வரவேற்பு பெறும். மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் இந்த காரை சென்னை நகரில் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.
நன்றி : தினமலர்