Wednesday, November 4, 2009

வங்கி வாராக்கடன் 1.5 லட்சம் கோடி!

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொகை ஒன்றரை லட்சம் கோடியாக அதிகரித்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

இதில் ஓசையின்றி ரூ.15 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்பது புதிய செய்தியாகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் வங்கிகளின் செயல்பாடும் பணப் பரிவர்த்தனையும் அதிகரிக்கத் தொடங்கின. தனியார் வங்கிகள் ஏராளமாகப் பெருகின. தொழில் வளர்ச்சிக்கு வங்கிக் கடனுதவி அதிக அளவில் தேவைப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் தனியார் வங்கிகள் தங்களது கடனுதவித் திட்டங்களை விரிவுபடுத்தின.

ஆனால் ஏழை மக்களும் சிறு தொழில்துறையினரும் வங்கிக் கடனுதவி பெறுவது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது. வீட்டுக் கடனுதவி என்பது மிகவும் அரிதாக இருந்தது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனியார் வங்கிகள் அனைத்தையும் அவசரச் சட்டம் மூலம் நாட்டுடைமையாக்கினார். காலப்போக்கில் நாட்டுடைமையின் நோக்கத்திற்கு மாறாக வங்கிகள் செயல்படத் தொடங்கின.

சில வங்கிகள், தங்களது இயக்குநர்கள் குழு உருவாக்கிய விதிமுறைகளின்படி கடன் வழங்கத் தொடங்கின. எனவே இயக்குநர்கள் குழுவினர் பரிந்துரைக்கும் தகுதியற்ற நபர்களுக்குக் கடன் வழங்க வேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டது. இத்தகைய தகுதியற்ற நபர்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். எனவே வாராக்கடன் தொகை அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகியது.

இது ஒருபுறம் இருக்க, வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்பெற்ற பல தொழிலதிபர்களும் மோசடிப் பேர்வழிகளும் அந்தப் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டனர். வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களிடம் சிறிதும் இல்லை. இத்தகைய மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் திறமை வங்கி நிர்வாகிகளிடம் இல்லை. அரசியல் பிரமுகர்களின் ஆதரவும் பக்கபலமும் இருந்ததால் வாராக்கடனை வசூலிக்க அவர்களால் இயலவில்லை. அத்துடன் நமது ஆங்கிலேயர் ஆட்சிகால வழிமுறையில் வந்த நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை ஆணைகள் நந்தி போல குறுக்கே வந்து நின்றுகொண்டன.

எனவேதான் இதற்குத் தீர்வுகாணவும் வாராக்கடனை வசூலிக்கவும் கடன் உத்தரவாதம் மற்றும் அமலாக்கச் சட்டம் இயற்றப்பட்டது. கடனைச் செலுத்தாதவர்கள் ஈடாக வைத்திருந்த சொத்துகளை விற்று ஓரளவுக்குப் பணத்தைத் திரட்ட இதன்மூலம் வழியேற்பட்டது. ஆனால் இதற்கும் வேறு உருவில் கேடு வந்து சேர்ந்தது. வங்கி நிர்வாகிகளின் உதவியுடன் ஒன்றுக்கும் உதவாத சொத்துகளை ஈடாகக் காட்டி பல மோசடிப் பேர்வழிகள் கோடிக்கணக்கில் கடன் பெற்றிருந்தனர். எனவே அந்தச் சொத்துகளால் எவ்விதப் பயனும் இல்லாமல் போய்விட்டது. மேலும் சிலர் அத்தகைய சொத்துகளை, போலி பத்திரம் தயாரித்து பல்வேறு வங்களிடமும் கடன் பெற்றிருந்தது வாராக்கடனை வசூலிக்க சென்றபோதுதான் வங்கி அதிகாரிகளுக்கே தெரியவந்தது.

அமெரிக்காவில் ஒரு பிரபல தனியார் வங்கி அண்மையில் திவாலானது அனைவருக்கும் தெரியும். கேட்டவர்களுக்கு எல்லாம் வீட்டுக் கடன் முதல் நுகர்வோர் கடன் வரை சகட்டுமேனிக்கு கடன் அளித்த அந்த வங்கி, இறுதியில் சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஏராளமானோர் வேலையிழந்தனர். இதனால் அன்றாட வாழ்க்கைப் பிரச்னையால் அல்லல்பட்ட அவர்கள் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே அந்தத் தனியார் வங்கி திவாலாகி மூடப்பட்டது.

இதை இந்தியாவில் உள்ள அரசுடைமை வங்கிகள் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். மோசடிப் பேர்வழிகளுக்கு கடனுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும்.

ஈடு வைக்கப்படும் அசையா சொத்துகள் அனைத்தும் வங்கிகள் அளிக்கும் கடனுக்கு இணையாகுமா என்பதை நன்கு ஆய்வுசெய்ய வேண்டும். அதன் பிறகே கடன் வழங்க முற்பட வேண்டும்.

கடன் மீட்புத் தீர்ப்பாயத்தை அதிகாரம் மிக்க அமைப்பாகத் தரம் உயர்த்த வேண்டும். அதிகரித்துவரும் வாராக்கடன்களை வசூலிக்க நாடு முழுவதும் பரவலாகப் பல்வேறு நகரங்களிலும் சமரசத் தீர்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும்.

வாராக்கடன் விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவ ஆலோசனை மையத்தை அமைக்க வேண்டும் என்று வங்கிகள் அனைத்துக்கும் ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இதன்படி சில குறிப்பிட்ட வங்கிகள் மட்டும் ஆலோசனை மையத்தை அமைத்தன. இவ்வாறு தனி ஆலோசனை மையத்தை ஏற்படுத்துவதை விட கூட்டாக ஒரே மையத்தை தொடங்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டாக ஒரே ஆலோசனை மையத்தைத் தொடங்க இந்திய வங்கிகள் தரக்குழு நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

இந்த மையத்தில் 79 வங்கிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் பல வங்கிகளும் இதில் சேர உள்ளன. இந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் இத்தகைய மையங்கள் திறக்கப்பட உள்ளன.

முதல்கட்டமாக மும்பையில் உள்ள இதன் தலைமை அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி சமரசத் தீர்வு மையம் செயல்படத் தொடங்கியது. கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவர்கள் இந்த மையத்தை அணுகினால் வங்கிகளும் கடன்தாரர்களும் ஏற்கக்கூடிய சமரசத் திட்ட யோசனை வகுத்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் விட கடனை திருப்பிச்செலுத்த வேண்டும் என்ற எண்ணம், கடன் பெற்றவர்கள் மனதில் உருவானால் மட்டுமே முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வாராக்கடனை வங்கிகள் திரும்பப் பெற வழி ஏற்படும்.
கட்டுரையாளர் :டி . புருஷோத்தமன்
நன்றி : தினமணி

குரலை மாற்றும் வசதி கொண்ட செல்பேசிகளால் ஆபத்து

தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன.

தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு.

கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக் கொண்டே போகின்றன.

இந்நிலையில், சீன நாட்டுத் தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "வாய்ஸ் சேஞ்சர்' என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.

அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், "வாய்ஸ் சேஞ்சர்' பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும்.

இதில், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.

பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்துப் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார்.

இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலைச் சம்பவம் ஓர் உதாரணம்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயனிடம் (24) செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.

ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரிய வந்தது; ப்ரியா என்ற பெயரில் "வாய்ஸ் சேஞ்சர்' வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று.

இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.

முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ "வாய்ஸ் சேஞ்சர்' மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்குப் பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.

பொதுவாக, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தனக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மனநலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

ஆனால், உளவியல் அடிப்படையிலும், குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியது, "செல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை' என்கின்றனர்.

பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயகட்டுப்பாடு அவசியம்.
கட்டுரையாளர் : தி. இன்பராஜ்
நன்றி : தினமணி

சரிவில் இருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 507 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

நேற்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இன்று காலை தொடங்கும் போது ஏற்றத்தை சந்தித்தது. நேற்று இந்திய பங்கு வர்த்தகம், வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இரண்டு மாதங்கள் இல்லாத அளவு 491 புள்ளிகள் சரிந்து கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை வர்த்தகம் தொடங்கும் போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 218.29 புள்ளிகள் உயர்ந்து 15,623.23 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 64.10 புள்ளிகள் உயர்ந்து 4,628.00 புள்ளிகளோடு தொடங்கியது.
நேற்று கடும் சரிவினை கண்ட இந்திய பங்குச் சந்தை, இன்று மிகுந்த ஏற்றத்தை கண்டது, முதலீட்டாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஆர்.ஐ.எல்., பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வினை கண்டன.
மெட்டல் பங்குகள் 5.5 சதவீதமும், ஐ.டி., எண்ணெய், மற்றும் எரிப்பொருள், வங்கி, ஆட்டோ, ஹெத்கேர், எப்.‌எம்.சி.ஜி மற்றும் பவர் உள்ளிட்டவற்றின் பங்குகள் 2 முதல் 4 சதவீதம் வரை உயர்வினை கண்டன.
காலை வர்த்தகம் தொடங்கிய போது அதிகம் ஏற்றமடைந்த பங்குகள்: ரிலையன்ஸ் இன்டஸ்டிரி பங்குகள் 3.38 சதவீதம் உயர்ந்து 1,882.20 ரூபாய்க்கும், இன்போசிஸ் டெக்னாலஜிஸ் பங்குகள் 2.32 சதவீதம் உயர்ந்து 2,189 ரூபாய்க்கும், ஸ்டீர்லைட் இன்டஸ்டிரி 2.47 சதவீதம் உயர்ந்து 740 ரூபாய்க்கும், டாடா ஸ்டீல் பங்குகள் 0.43 சதவீதம் உயர்ந்து 447.50 ரூபாய்க்கும், டி.எல்.எப் லிமிடெட் பங்குகள் 2.96 சதவீதம் உயர்ந்து 346.50 ரூபாய்க்கும் வர்த்தமாயின.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 507.19 புள்ளிகள் குறைந்து 15912.13 புள்ளிகள் அதிகரித்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 146.90 புள்ளிகள் அதிகரித்து 4710.80 புள்ளிகளோடும் நிலைப்பெற்றது.
நன்றி : தினமலர்


விளையாடாதீர்!

பொதுமக்கள் எல்லோரும் ஆத்திரம் கொள்கிற, முகம் சுளிக்கிற விஷயங்கள் தடை செய்யப்படும்போது அதற்காக யாரும் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை.

சென்னை மாநகரில் காற்றாடி பறக்க விடுவோர் மாஞ்சா கயிறு பயன்படுத்தினால் தண்டனை என்று அறிவித்தபோது மக்கள் வரவேற்றார்கள். ஏனென்றால் இந்த மாஞ்சா கயிறு, நடந்து சென்றவர்கள் கழுத்தை அறுத்து மரணத்தை ஏற்படுத்தியது. அடுத்து, மாநகரில் காற்றாடி பறக்கவிடக்கூடாது என்றார்கள். அப்போதும்கூட யாரும் எதிர்ப்புச் சொல்லவில்லை. காற்றாடியால் அண்மையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியவர்களை மாநகர போலீஸôர் விரட்டி அடித்தனர். நடைப்பயிற்சி செய்வோருக்கு இடையூறாக இவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததால் இந்த நடவடிக்கை என்று போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக எந்த நடைப்பயிற்சி அமைப்புகளும் இவ்வாறாகப் புகார் தந்ததில்லை. கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவோர் வழக்கமான பந்துகளைப் பயன்படுத்துவதில்லை. டென்னிஸ் பந்துகளையே பயன்படுத்துகின்றனர். ஆகையால், நடைப்பயிற்சி செய்வோருக்கு அடிபட்டு, காயம் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை, நடைப்பயிற்சி செய்த ஏதோ ஓர் அதிகாரி மீது பந்து பட்டதால் வந்த கோபமும் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கக்கூடும்!

சென்னை மாநகரம் மட்டுமல்லாது, தமிழகத்தின் அத்தனை மாநகராட்சிப் பகுதிகளிலும் விளையாடுவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன. அதையும் மீறி வெளியே விளையாட வரும் சிறார்கள், இளைஞர்கள் குறைவு. அவர்களிலும் மிகமிகக் குறைவு - விளையாட அனுமதிக்கும் பெற்றோர். எப்போதும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக உட்கார்ந்திருக்கும் சிறார்கள், இளைஞர்களில் விளையாட வெளியில் வருவோர் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருப்பார்கள். இந்நிலையில், இதற்கும் தடை, கட்டுப்பாடுகள் என்றால், அவர்கள் எங்கே போய் விளையாடுவார்கள்?

மாநகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் தங்கள் விளையாட்டுத் திடல்களுக்கு மிக உயரமான சுற்றுச்சுவர் எழுப்பி, பூட்டி வைத்துள்ளன. அவர்களது மாணவர்கள் மட்டுமே விளையாட முடியும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், வேலைநேரம் அல்லாத வேளையில், தங்கள் விளையாட்டுத் திடலில் நடைப்பயிற்சி செய்வோரிடம் மாதக்கட்டணம், உறுப்பினர் சந்தா வசூலித்து, அடையாள அட்டையையும் கழுத்தில் மாட்டிவிடுகின்றன. அவர்களுக்கு கல்வி மட்டுமல்ல, நடைப்பயிற்சியிலும் காசு கிடைக்கிறது. கேட்டால், "சமூக விரோதச் செயல்களைத் தடுக்கிறோம்' என்கிறார்கள்.

மாநகரங்களில் ஆங்காங்கே இருக்கும் காலிமனைகள்தான் பெரும்பாலும் அந்தந்தப் பகுதி சிறார்கள், இளைஞர்களுக்கு விளையாட்டுத் திடலாக இருந்தது. நிலமதிப்பு கோடிக்கணக்கில் உயர்ந்த பிறகு, ரெüடிகளின் ஆக்கிரமிப்புக்குப் பயந்து, காலிமனைகளிலும் சுவர் எழுப்பி மறைத்துவிடத் தொடங்கிவிட்டனர்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் விளையாடுவதற்கான பொதுஇடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் பல குடியிருப்புகளில் பொதுஇடம் என்பதே கிடையாது. சில குடியிருப்புகளில் பொதுஇடத்தைப் "பார்க்கிங்' பகுதியாக மாற்றிவிட்டு, வரைபடத்தில் பார்க்கிங் பகுதியாகக் காட்டப்பட்ட அடுக்குமாடியின் கீழ்தளத்தைக் கடைகளுக்கு வாடகைக்கு விட்டு, அதில் கட்டடத்தைப் பராமரிக்கிறார்கள்.

சென்னை மாநகரில் ராஜரத்தினம் ஸ்டேடியம், நேரு விளையாட்டு அரங்கம் போன்ற பல திடல்கள் இருந்தாலும் இவை பொதுமக்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. நேரு உள்விளையாட்டரங்கம் என்பது கலைவிழாக்களுக்காகவே கட்டப்பட்டதோ என்றுதான் பல நேரங்களில் நினைக்கத் தோன்றுகிறது.

டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து ஆகியவற்றுக்கு தனி கிளப்புகள் உள்ளன. அவற்றில் உறுப்பினர்கள் மட்டுமே விளையாட முடியும். ஸ்நூக்கர் போன்ற விளையாட்டுக்கு ஒரு மணிநேரத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 20 தேவை.

இந்நிலையில் எங்கேதான் போவது? செலவில்லாமல் கடலோரம் கிரிக்கெட் விளையாடுவதைக்கூடத் தடை செய்தால் வேறு என்ன விளையாட்டை விளையாடுவது? விளையாடுபவர்களை விளையாடாதே என்று சொல்வது இவர்களுக்கு விளையாட்டாக இருக்கிறது.

விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு அல்லது உடல்ஆரோக்கியம் மட்டுமல்ல, மனஇறுக்கத்தைத் தளர்த்தும் ஒரே வழியும் விளையாட்டுதான். "...மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா' என்கிறார் மகாகவி பாரதி. கட்டணம் செலுத்தாமல் காவல்துறை தலையீடு இல்லாமல் விளையாட ஓர் இடமும் இல்லை என்றால் மாநகரம் வெறும் மா-நரகம்!
நன்றி : தினமணி

கைக்கு எட்டாத தூரத்தில் தங்கம் விலை

சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, எப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலை ஒரு சவரன், 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விட்டது. இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,559 ரூபாயாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 16 ஆயிரத்து 765 ரூபாயாகவும், பார் வெள்ளியின் விலை 28 ஆயிரத்து 345 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) ரூ. 30.30ஆக உள்ளது.
கடந்த அக்., 1ம் தேதி ஒரு கிராம் 1,457 ரூபாயாகவும், சவரன் 11 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்றது. அடுத்தடுத்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 27ம் தேதி ஒரு கிராம் 1,485 ரூபாயாகவும், சவரன் 11 ஆயிரத்து 880க்கும் விற்பனையானது.நாள்தோறும் கிராமுக்கு மூன்று, நான்கு ரூபாய் என உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை ஒரு சவரன் 12 ஆயிரத்தையும் தாண்டியது. ஒரு கிராம் 1,513 ரூபாயாகவும், சவரன் 12 ஆயிரத்து 104 ரூபாயாகவும் விற்றது.நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 17 ரூபாய், சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்தது. நேற்று காலை ஒரு சவரன் 12 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் 1,527 ரூபாயாகவும், சவரன் 12 ஆயிரத்து 216 ரூபாய்க்கும் விற் றது. சென்னை தவிர மற்ற மாவட் டங்களில், ஒரு கிராம் விலை ஒன்று முதல் மூன்று ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.மேலும், தங்கத்தின் விலை சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் 1,056 டாலராக உயர்ந்ததும் சர்வதே அளவில் தங்க மார்க்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவில் 12 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாதிரியாக இருந்து வந்தது. தற்போது தமிழகம் முழுதும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர். இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனால், சாமானிய மக்கள் தங்கத்தின் பக்கம் தலைகாட்டவே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''ஆன்-லைன் வர்த்தகமே விலை உயர் வுக்கு காரணம். பலமுறை அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அமெரிக்கா, லண்டன் சந்தையில் விலை நிர்ணயிப்பதால், நிமிடத்திற்கு நிமிடம் விலை மாறுபடுவதால் உறுதியான விலையில் விற்கமுடியவில்லை. ஆன்-லைன் வர்த்தகத்திற்கு தடைவிதித்தால் மட்டுமே விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 29.39 ரூபாய்க்கும், கிலோ 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கிறது.
நன்றி : தினமலர்

பிரிட்டானியாவின் புதிய பானம்

பிரபல பிரிட்டானியா நிறுவனம், குழந்தைகளுக்கான புதிய பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பானத்தின் பெயர், 'ஆக்டிவ் மைண்ட்!' இதை, பிரிட்டானியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வினிதா பாலி அறிமுகப்படுத்தி பேசுகையில், 'இந்நாளில், குழந்தைகளுக்கு படிப்புச் சுமையால் அதிக கவனம் தேவைப்படுகிறது. எல்லா குழந்தைகளுக்கும், முழு நினைவாற்றல் இருப்பதில்லை. 'மூளை சுறுசுறுப்படையவும், படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளவும், பால் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த பானம் நிச்சயம் கைகொடுக்கும். மூளைக்குப் புத்துணர்ச்சியும், நினைவாற்றலையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆக்டிவ் மைண்ட், படிக்கும் குழந்தைகளுக்கு முக்கியமான ஒன்று' என்று கூறினார்.புதிய பானம், 180 மில்லி கிராம் கொண்ட பாட்டிலில், மாம்பழம் மற்றும் ஸ்டிராபெரி ஆகிய சுவைகளில், தமிழகம் முழுவதும் கிடைக்கிறது.
நன்றி ; தினமலர்