Tuesday, September 16, 2008

பங்கு சந்தையில் இன்றும் சரிவு நிலைதான்

அமெரிக்காவின் நிதி நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால், மும்பை பங்கு சந்தையில் இன்றும் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ் , அதிகபட்ச குறைவான 13,051.73 புள்ளிகளில் இருந்து 467 புள்ளிகள் மீண்டு வந்துள்ளது. அதே போல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி, அதிக பட்ச குறைவான 3,919.35 புள்ளிகளில் இருந்து 155 புள்ளிகள் மீண்டு வந்திருக்கிறது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.47 புள்ளிகள் ( 0.09 சதவீதம் ) மட்டும் குறைந்து 13,518.80 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2 புள்ளிகள் ( 0.05 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,074.90 புள்ளிகளில் முடிந்துள்ளது. காலையில் வேகமாக இறங்கி வந்த பங்கு சந்தை மாலையில் ஏறி வந்ததற்கு காரணம், அப்போது பேங்க் மற்றும் ஆயில் நிறுவன பங்குகள் வேகமாக வாங்கப்பட்டதுதான். கடைசி நேரத்தில் பங்கு சந்தை எழுந்ததில் பெரும் பங்காற்றியது ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி., பேங்க், பெல் மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்குகள்தான்.
நன்றி : தினமலர்

ஓபக் அமைப்பில் சேர விடுத்த அழைப்பை நிராகரித்தது பிரேசில்

பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான ஓபக் இல் சேரும்படி, பிரேசிலுக்கு சவுதி அரேபியா விடுத்த அழைப்பை பிரேசில் நிராகரித்துள்ளது. எங்கள் நாட்டின் ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து நாங்களே பயன்படுத்த போகிறோம்.நாங்கள் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப்போவதில்லை. எனவே ஓபக் கில் சேரச்சொல்லி சவுதி அரேபியா விடுத்த அழைப்பை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்று பிரேசிலின் சுரங்கம் மற்றும் எனர்ஜி அமைச்சர் எடிசன் லாபோ தெரிவித்தார். பிரேசிலின் ஆழ்கடல் பகுதியில் புதிதாக எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் 55 பில்லியன் பேரல்கள் ( 5,500 கோடி பேரல்கள் ) கச்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றை எடுத்து பயன்படுத்தினாலே பிரேசிலுக்கு போதுமானது என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 92 டாலராக குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து கொண்டே வருகிறது.நியுயார்க் சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை நேற்று மட்டும் பேரலுக்கு 5.47 டாலர் குறைந்து 95.71 டாலராக இருந்தது. அதே போல லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 92.38 டாலராக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் இப்போது தான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு அதிகமாக குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் கிணறுகள் இருக்கும் மெக்ஸிகோ வளைகுடா பகுதியை, ஐக் சுறாவளி எதிர்பார்த்த அளவுக்கு தாக்காமல் கடந்து சென்றுவிட்டதுதான் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதற்கு காரணம் என்கிறார்கள். இருந்தாலும் அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நிதிநிறுவனமான லேமன் பிரதர்ஸ் திவால் ஆனதாக அறிவித்திருந்தும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது ஆச்சரியம்தான். ஆனால் இதிலும் ஓரு ஆதரவான செய்தி என்னவென்றால், மோசமான நிதி நிலையில் இருக்கும் இன்னொரு நிதி நிறுவனமான மெரில் லிஞ்ச் சை பேங்க் ஆப் அமெரிக்கா வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறது. மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்திற்கு 40 பில்லியன் டாலருக்கும் மேல் வராக்கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனமான ஏ ஐ ஜி யும் இப்போது நிதி பிரச்னையால் தள்ளாடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்