Saturday, October 25, 2008

மொத்த வளர்ச்சி குறையும், பணப்புழக்கம் சீராகும்: ரிசர்வ் வங்கி தகவல்

ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட கடன் வசதிக் கொள்கையில் விசேஷ அறிவிப்புகள் ஏதும் இல்லை. வங்கிகளின் மொத்த ரொக்க கையிருப்பு விகிதம் உட்பட எவ்வித ரேட்டும் குறைக்கப்படவில்லை. ஆனால், மொத்த வளர்ச்சி 7.5 சதவீதமாக குறையும் என்றும், பணப்புழக்கம் சீராகும் என்றும் ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் படம் பிடிக்கிறது.மத்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டுக்கான இடைக்கால நிதி கொள்கையை நேற்று வெளியிட்டது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இம்மாத துவக்கத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் 9 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றிற்காக ரிசர்வ் வங்கி 1.65 லட்சம் கோடி வரை பணத்தை வெளியிட்டது.இவ்வளவு நடவடிக்கைக்கு பிறகும், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்., விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கூறியது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட இடைக்கால நிதி கொள்கைளில் பல அறிவிப்புகள் வெளிவரும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். மேலும், ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பு ஏற்றுள்ள சுப்பாராவ் வெளியடும் முதல் நிதிக் கொள்கை என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் இடைக்கால நிதிக் கொள்கையை வெளியிட்டு பேசுகையில் கூறியதாவது:
சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உள்நாட்டில் நிதிச்சந்தைகளில் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நமது பொருளாதார நிலைமை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதால் இந்த அளவுக்கு சமாளிக்க முடிகிறது.விரைவில் இந்த நிலைமை மாறி முன்னேற்றம் ஏற்படும். வங்கிகளில் பணப்புழக் கத்தை சரிசெய்ய ரிசர்வ் வங்கி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பயனாக, வங்கி ரேட் விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்யப்படவில்லை ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்க வேண்டிய மொத்த ரொக்க கையிருப்பு விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும். குறுகிய கால கடன்களை வழங்க வங்கிகளுக்கான ரெபோ ரேட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இது 8 சதவீதமாக இருக்கும். அது போல் ரிசர்வ் ரெபோ ரேட்டும் 6 சதவீதமாக இருக்கும்.கடன்களுக்கான வட்டி, டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) 8 சதவீதமாக இருக்கும் என முன்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அது, தற்போது 7.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்குள் வர வாய்ப்பு இருக்கிறது.பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பது நெருக்கடியை கொடுப்பதாக உள்ளது. தற்போது உலக சந்தையில் பொருட்களின் விலை குறைந்து வருவதாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாலும், பணவீக்கத்தை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 7 சதவீதத்திற்குள் கொண்டு வருவதில் உன்னிப்பாக உள்ளோம்.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறோம்.
வங்கிகளின் நிதி நிலைமை, கடன் நிலை, போன்றவற்றை பல்வேறு நிலைகளில் ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக ஸ்திரமான நிதி நிலைமை இருப்பதற்கு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நிதிச்சந்தைகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க விழிப்புடன் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.சிதம்பரம் கருத்து: கடந்த 6ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் ளாக பணப்புழக்கத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல் வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. எனவே, பணப்புழக்கத்தை தக்கவைப்பதற்காக, மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். ரேட் விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்' என்றார்.
நன்றி : தினமலர்


ரத்தம் சொட்டும் பங்கு சந்தை

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தையில் நேற்று ரத்தம் சொட்டும் வகையில் எங்கு பார்த்தாலும் சிவப்பாக காணப்பட்டது. நேற்று மட்டும் 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. முதலீட்டாளர்கள் கதிகலங்கிப்போய் உள்ளனர்.பங்குச்சந்தையில் நிலைமை எப்போது சரியாகும் என்பது புதிராக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. நேற்று முன்தினம் அமெரிக்கப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்ததால், நேற்று மும்பை, தேசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் துவங்கியது.மத்திய ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதி அறிக்கையில் நல்ல அறிவிப்புகள் என்ற எதிர்பார்ப்பு தென்பட்டதால் சந்தையில் மந்தமான நிலை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆசிய பங்குச்சந்தைகளிலும் தொய்வு நிலை காணப்பட்டதால், 500 புள்ளிகள் வரை சரிந்து கொண்டிருந்தது. டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத வகையில் சரிவு கண்டது.அடுத்து, மத்திய ரிசர்வ் இடைக்கால நிதி அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்ற செய்தி வந்ததன் தாமதம் பலரும் பங்குகளை போட்டி போட்டுக்கொண்டு விற்க வந்தனர். வட்டி குறைப்பு பற்றியோ, டிபாசிட்டுகளுக்கு வட்டி அதிகரிப்பு பற்றியோ எவ்வித அறிவிப்பும் இல்லை என்பதால் வங்கி பங்குகள் அடி வாங்கின. இதனால் சென் செக்ஸ், 'நிப்டி' அதலபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.வங்கித்துறை, ரியல் எஸ்டேட், ஆயில் காஸ் பங்குகளின் விலை சடசடவென சரிந்தன.
எல்லா பங்குகளும் சிவப்புமயமாக காணப்பட்டன. தங்கள் முதலீடு முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டதைக் காட்டுவது போல் நேற்று ரத்தம் வடியும் பங்குச்சந்தையாக இருந்தது.
கடந்த ஜனவரியில் இருந்து இதுவரையில் 53 சதவீதத்திற்கு பங்குகள் விலை குறைந்துள்ளன. கடந்த ஜனவரி 21ம் தேதி 1,408 புள்ளிகள் ஒரே நாளில் சரிந்தது. அதற்குப் பிறகு நேற்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. நேற்று வர்த்தகம் முடியும் போது, 'சென்செக்ஸ்' 1,071 புள்ளிகள் சரிந்து 8,701.07 என்ற நிலையில் முடிந்தது.
'நிப்டி' 359 புள்ளிகள் சரிந்து, 2,584 என்ற நிலையில் முடிந்தது. பங்குச்சந்தையை தூக்கி நிறுத்த கடந்த சில நாட்களில் தீவிரமாக செயல்பட்ட ரிசர்வ் வங்கி நேற்றை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
பெரிய கம்பெனிகளுக்கு பணப் புழக்கம் சீராக இல்லாத நிலை, உலக அளவில் ஏற்படக்கூடிய தொழில் துறை தேக்கம் ஆகியவை இங்கு எதிரொலிக்கின்றன. குறிப்பாக பரஸ்பர நிதிநிறுவனங்கள் பணமின்றி இருப்பதும், அன்னியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு தேய்வதும் பல்வேறு பிரச்னைகளாக இங்கே எதிரொலிக்கின்றன.இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக சந்தை நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், வர்த்தக அமைச்சர் கமல்நாத் இந்த வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை தேவை என்றார்.
நன்றி : தினமலர்