Sunday, December 27, 2009

மார்ச் மாதத்திற்குள் 25,000 ஏடிஎம்.,கள் : ஸ்டேட் பேங்க்

வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25,000 ஏடிஎம்களை திறக்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார பொது மேலாளர் விஜி கண்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது இத்தகவலை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது : தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் கடந்த 2 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர ஒவ்வொரு கிளையும் ஆண்டுக்கு இரு குழந்தைகளை தத்தெடுத்து கல்வி செலவை அளித்து வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25 ஆயிரம் ஏடிஎம்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1,388 ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பயோ மெட்ரிக் எடிஎம்களை திறக்கவும் வங்கி ஏற்பாடு செய்து வருகிறது. இம்முறையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கைரேகையை ஏடிஎம்மில் பதிவு செய்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். ஒருவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பணம் எடுக்க முடியாது. ஏற்கனவே இத்தகைய ஏடிஎம் சென்டர்கள் மதுரை, மேலூர், செய்யாறு ஆகிய இடங்களில் திறக்கப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏடிஎம்மில் பணம் எடுக்க பழகி கொள்ள வேண்டும். மாதத்தின் முதல் வாரத்திலேயே மொத்த பணத்தையும் எடுக்க முயற்சிக்க கூடாது. ஏனெனில் ஒரு மிஷினில் ரூ.32 லட்சம் மட்டுமே வைக்க முடியும் என்றார்.
நன்றி : தினமலர்