Wednesday, September 2, 2009

சர்க்கரை விலை கிலோ 40 வரை அதிகரிக்கும் அபாயம்

சர்க்கரை விலை கிலோ 40 வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் மாதங்கள் விஷேச பண்டிகைகள் அதிகம் வரும் மாதங்கள் என்பதால், சர்க்கரை உபயோகம் அதிகமாகும். இந்தியாவில் விவசாயிகள் கரும்புகள் பயிரிடுவதை குறைத்து விட்டதால், சர்க்‌கரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கியூபா உள்ளிட்ட நாடுகளின் இருந்து இந்தியாவிற்கு சர்க்கரை இறக்குமதி செய்யப் பட உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை விலை கி‌லோவிற்கு ரூ. 40 வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கோதுமைக்கு கொள்முதல் விலை அதிகம் கொடுக்கப் படுவதால், விவசாயிகள் கோதுமை பயிரிடுவதை அதிகரித்து, கருப்பு பயிரிடுவதை குறைந்துள்ளதும் இதற்கு காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


தேசிய நூலாகட்டும் திருக்குறள்!

திருக்குறள் தோன்றியது தமிழில் என்றாலும், அது, தமிழ்நாட்டையோ, தமிழ்மொழியையோ, தமிழ் இனத்தையோ, தமிழ் மன்னர்களையோ எந்த இடத்திலும் சுட்டிக்காட்டாத பொதுமை கொண்டது. திருக்குறள் சுட்டும் நாட்டின் இலக்கணம் எந்த நாட்டுக்கும் பொருந்தும். இந்தியப் பண்புகளுள் சிறந்ததான, மதச்சார்பின்மைக்கு நல்லிலக்கியமாக மலர்ந்துள்ள இத்திருக்குறள் கடவுளை மறுக்கவில்லை. அதே சமயம், எந்தச் சமயத்தையும் முன்னிறுத்தவில்லை. இல்லறத்தாருக்கும் நல்லறம் புகலும் இவ்விலக்கியம், துறவறத்தாரையும் இணைத்துச் சிந்திக்கிறது. தன்னளவில் உள்ள பண்புகளை விட்டுக்கொடுக்காமலும், உலக அளவில் நேயம் பேணுவதையும் முன்னிறுத்தி, எல்லாச் சாதியினருக்கும், எல்லாச் சமயத்தாருக்கும், எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழியினருக்கும் ஏற்ற நீதியை, இந்தியப் பொது அறத்தை நடுநிலைமையோடு மொழிகிற உன்னத இலக்கியம் திருக்குறள்.

கார்லைல் என்ற பேராசிரியர், ""மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்'' என்று குறிப்பிடுகிறார். அந்த வகையில், இந்தியத் திருநாட்டிற்கு ஏற்ற தேசிய இலக்கியம் திருக்குறள்தான்.

""இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வலியுறுத்துகிறது. இந்திய நாட்டின் இணையற்ற தேசிய இலக்கியமாகத் திருக்குறளை ஏற்றுக்கொண்டு, இந்தியத் திருநாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும், திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும்'' என்பார் திருக்குறளுக்கு இயக்கம் கண்ட குன்றக்குடி அடிகளார்.

தவஞானி ஸ்ரீஅரவிந்தர், தமிழ் கற்றதோடு, திருக்குறளின் முதல் இரு அதிகாரங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் "இந்தியாவின் ஆன்மா' என்ற நூலில் திருக்குறட் பெருமையை, இந்திய இலக்கியங்களோடு இனிது ஒப்பிட்டுப் பின்வருமாறு விளக்குகிறார்.

""பிரதேச மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பாலும் இசைப்பாடல்கள், பக்திப்பாடல்கள், காதல்-வீரப்பாடல்கள் முதலியவைகளே. ஆனால் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிர ஞானியான ராமதாசரின் சமய ஒழுக்கப்பாடல்களையும், அரசியல் கருத்தமைந்த பாடல்களையும் திருவள்ளுவநாயனார் இயற்றிய திருக்குறளையும் குறிப்பிடலாம். அதன் கட்டுக்கோப்பிலும், எண்ணத்தின் திண்மையிலும் சொல்லாட்சித் திறனிலும் திருக்குறள் குறுவடிவில் பொதுவான உண்மைகளை வெளியிடும் கவிதை வகையில் தலைசிறந்து விளங்குகின்றது'' என்கிறார்.

"திருக்குறளின் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதி, தமிழச்சாதி அமரத்தன்மை உடையது' என்று பாடிய பாரதியாரின் உள்ளக்கிடக்கையோடு ஒத்துப்போகிறது அரவிந்தர்தம் திருக்குறள் பற்றிய கருத்தோட்டம். இந்தியச் சிந்தனையாளர்களோடு, ஏனைய தமிழ் ஞானிகளையும் முன்னிறுத்தித் திருவள்ளுவரைப் போற்றுகிறார் அரவிந்தர்.

இந்தியர் மட்டுமன்றி, உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றி, ஏற்றுக் கொண்ட பெருமை திருக்குறளுக்கு உண்டு.

ஐரோப்பியத் தமிழறிஞரான பெஸ்கி பாதிரியார், 1730-இல் முப்பாலான திருக்குறள் முதலிரு பால்களையும், லத்தீனில் மொழிபெயர்த்தார்.

தலைசிறந்த பிரெஞ்சுமேதை எம்.ஏரியல், 1848-இல் திருக்குறளின் சில பகுதிகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்தார். அவருக்கு முன்பே, 1730-இல் பெயர் தெரியாத ஓர் ஆசிரியர் செய்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பை நினைவுகூரும் அவர், திருக்குறள் ஃபிரான்சு தேசத்தின் தேசிய நூலகத்தில் இருப்பதையும்

சுட்டுகிறார்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கிராஸ் என்பாருக்குத் திருக்குறளின் ஆங்கில நூல் ஒன்று பரிசளிக்கப்பட்டது. திருக்குறளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர், மூலத்தில் படிப்பதற்காகவே தமிழ் கற்றார். பின்னர், 1854-இல் ஜெர்மனியிலும், 1856-இல் லத்தீனிலும் மொழிபெயர்த்தார். எனினும், அதனால் திருப்தியுறாத அவர், ""எந்த மொழிபெயர்ப்பும் மனங்கவரும் அதன் மாண்பினை வெளிக்கொணரமுடியாது. அது உண்மையில் வெள்ளி வேலைப்பாடு கொண்ட தங்க ஆப்பிள் கனி'' என்று அறிவித்தார்.

தமிழ்மாணவன் என்று தம்மை அழைத்துக்கொண்ட ஜி.யு.போப், 1886-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அவர், திருக்குறளை முன்வைத்து மொழிந்த வாசகங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. ""குறளுக்குப் புகழ் சேர்க்கும் மிக முக்கிய அம்சம், அதன் இணையற்ற கவிதை வடிவம். அந்தத் தலைசிறந்த தமிழ்ச் சொல்லோவியரின் கூற்றுக்கு இந்த வடிவம் செறிவினைக் கொடுத்திருக்கிறது'' என்று திருவள்ளுவருக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கிறார்.

இவ்வாறு, திருக்குறளை உணர்ந்து ஓதிய பெருமக்கள் தத்தம் மொழிகளில், அதனை மொழியாக்கம் செய்து மேன்மை பெற்றிருக்கிறார்கள். இதுவரையில் நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரிபோலி' உள்ளிட்ட 34 மொழிகளில், திருக்குறளுக்கென்று 130 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. லத்தீன், ஜெர்மன், ஃபிரெஞ்ச், டச்சு, பின்னிஷ், போலிஷ், ரஷ்யன், சீனம், பிஜி, மலாய், பர்மியம் ஆகிய அயல்நாட்டு மொழிகளிலும், வடமொழி, இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இத்தகு மேன்மை கொண்ட திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாகட்டும். திருவள்ளுவ நெறியில் மனிதகுலம் உயரட்டும்.


கட்டுரையாளர் : கிருங்கை சேதுபதி

நன்றி : தினமணி


தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்? - பழ. நெடுமாறன்

"விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ?' என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடியதற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.

நூறாண்டு காலம் முடிந்த பிறகும்கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

இலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு சொல்லொணாத சித்திரவதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளும் சுகாதார வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவம் மட்டுமல்ல, இயற்கையும் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பருவ மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தமிழர்களைச் சூழ்ந்திருக்கிறது.

கூடாரங்களுக்குள்ளும் வெளியிலும் பெரும் வெள்ளம் புகுந்து கொண்டதால் அதற்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் நடுக்கும் குளிரிலும் நோயாளிகள், குழந்தைகள் உள்பட அனைவரும் மழையில் நனைந்தவண்ணம் தவிக்கிறார்கள். கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ளவர்களுக்குக் கடந்த சில நாள்களாக உணவும் வழங்கப்படவில்லை. வெள்ளத்திலிருந்தும் மழையிலிருந்தும் தப்பித்து வெளியேறுவதற்கு முயற்சி செய்த மக்களை சிங்களப்படையினர் சுற்றி வளைத்துத் தடுத்துத் தப்பிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னரும் அப்பகுதிக்குப் பத்திரிகையாளர்களையும் மற்ற ஊடகங்களையும் சிங்கள அரசு அனுமதிக்காததை சர்வதேசப் பொதுமன்னிப்பு சபை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மற்றொரு கடுமையான குற்றச்சாட்டையும் சர்வதேசப் பொது மன்னிப்பு சபை கூறியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமி ழர்கள் சிக்கியிருந்த பகுதிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகள் அமைக்கப்பட்டிருந்ததைக் காட்டும் சான்றுகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுவதாகவும் இப்பகுதியில் சிங்கள ராணுவம் தாக்குதலைத் தீவிரப்
படுத்துவதற்கு முன்பாக ஏப்ரல் 19-ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் இடுகாடு எதுவும் காணப்படவில்லை என்றும், ஆனால் போர் முடிவடைந்த பிறகு மே 24-ம் தேதி எடுத்த படத்தில் அந்தப் பகுதியில் 1346 சவக்குழிகள் இருப்பதைக் காண முடிகிறது என்றும், ஒவ்வொரு சவக்குழியிலும் நூற்றுக்கணக்கான உடல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் சர்வதேசப் பொதுமன்னிப்பு சபை மிகக் கடுமையான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.

ஐ.நா. பேரவையோ அல்லது உலக நாடுகளோ இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் குறைந்தபட்சம் ஏன் என்று கேட்கவும்கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இன்றைய மனித உரிமை மீறல்கள் நாளைய அகதிகள் உருவாக்கத்திற்கு அடிப்படை என்ற உண்மையை உலகம் உணரத் தவறியது ஏன்?

ஐ.நா. அமைப்பு: இரண்டாம் உலகப்போரின்போது பல்வேறு நாடுகளில் அகதிகள் உருவானார்கள். எனவே இதுபற்றி ஆராய்ந்த ஐ.நா. பேரவை ஐ.நா. அகதிகள் ஆணையர் ஒருவர் தலைமையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவதென முடிவு செய்தது.

அப்படி உருவாக்கப்பட்ட அமைப்புதான் மசஏஇத ஆகும். 1951-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிற்று. உலகெங்கும் எந்த நாட்டில் அகதிகள் உருவானாலும் அவர்களுடைய துயரம் துடைக்கும் பணியில் இது முழுமையாக ஈடுபட்டது. இதற்கான பட்டயத்தில் 125 நாடுகள் கையெழுத்திட்டன.

ஆனால் இந்தியாவும் இலங்கையும் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஐ.நா. அகதிகள் ஆணையம் பராமரிப்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எந்த நாடும் மீறுவதில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே ஐ.நா. அகதிகள் ஆணையம் தங்கள் நாடுகளில் உள்ள அகதிகள் பிரச்னையில் தலையிடுவதை அனும
திக்க மறுத்து வருகின்றன.

1948-ம் ஆண்டு ஐ.நா. பேரவை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப் பிரகடனம் மிகமிக முக்கியமானதாகும். சொந்த நாட்டில் வாழ இயலாத நிலையில் அன்னிய நாடுகளில் அடைக்கலம் புகுவது சட்டரீதியாக ஏற்கத்தக்கது என மனித உரிமை குறித்த உலகப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

அடைக்கலம் புகுந்த நாட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் அகதிகளுக்கும் உண்டு என்பதை இந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது. ஆனால் ஐ.நா. பட்டயத்தில் கையெழுத்திடாத இந்தியாவும் இலங்கையும் தமிழ் அகதிகளை ஐ.நா. பிரகடனங்களுக்கு எதிராக நடத்துகின்றன.

இரு நாடுகளிலும் உள்ள தமிழ் அகதிகள் உரிமைகளை இழந்து போதுமான அளவுக்கு உணவு மற்றும் உதவிகள் இல்லாமல் தவிக்கும் அவல நிலையை உலகம் அறிந்துவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு ஐ.நா. அமைப்பின் தலையீட்டை இந்நாடுகள் அனுமதிக்கவில்லை.

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாட்டு அகதிகளைத் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்திய அரசு நடத்துகிறது. இதையும் உலகம் தட்டிக் கேட்கத் தவறியது ஏன்?

இந்தியாவில் அடைக்கலம் புகுந்த திபெத் அகதிகள் சுதந்திரமாக நடமாடவும் சொந்தமாகத் தொழில் வணிகம் புரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் புரிய அன்னிய நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இந்தியாவில் அவர்களின் குடியிருப்புகள் வழிபடு தளங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது.

அதைப்போல இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வங்க அகதிகள் நடுவே தொண்டாற்றுவதற்கு அன்னை தெரசா தலைமையிலான தொண்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. வேறு பல நாடுகளும் உதவிகள் புரிந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் வங்க அகதிகளுக்கு உதவுவதற்காக மக்களிடம் நிதி திரட்டி அளித்தன. எல்லாவற்றுக்கும் மேலாக வங்க அகதிகள் அந்தமான் -நிக்கோபார் தீவுகளில் குடியேற்றப்பட்டு விவசாயம் செய்வதற்கு நிலமும் வீடுகட்ட உதவியும் வழங்கப்பட்டு அவர்கள் மிக நல்ல நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உதவிகள் எதுவும் இலங்கையில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. மற்ற நாடுகளோ, உலகத் தொண்டு நிறுவனங்களோ அவர்களுக்கு உதவவும் இந்தியா அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் திபெத் அகதிகள் 10,80,000 பேர்களும், வங்க அகதிகள் 5,35,000 பேர்களும், இலங்கை அகதிகள் மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட 7,35,000 பேர்களும் உள்ளனர். இவர்கள் தவிர, மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்பட பல்வேறு நாட்டு அகதிகளும் உள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சுதந்திரமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். தமிழ் அகதிகளுக்கு மட்டுமே சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு தரும் சொற்ப உதவியில் அவர்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. 1965-ம் ஆண்டு ஸ்ரீமாவோ - சாஸ்திரி உடன்பாட்டின் விளைவாக இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்த ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றளவும் வாழ முடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். அவர்களை அந்த மான் தீவுகளில் குடியேற்றி நிலமும் வீடும் அளிக்க வேண்டுமென மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 1982-ம் ஆண்டில் அனைத்துக்கட்சிக் குழு, தில்லி சென்று பிரதமர் இந்திராவைச் சந்தித்து வலியுறுத்தியது.

ஆனால் அந்தக் கோரிக்கை இன்று வரையி லும் நிறைவேற்றப்படவில்லை. 1983-ம் ஆண்டிலிருந்து சிங்கள ராணுவ வெறியர்களின் தாக்குதல்களுக்குத் தப்பிப் படகுகள் மூலம் தமிழகத்துக்கு ஓடிவரும் ஈழத் தமிழர்களை சிங்களக் கடற்படை துரத்தித் துரத்திச் சுடுகிறது. அதில் தப்பி ராமேஸ் வரம் வந்து சேரும் அகதிகளை தமிழகப் போலீஸôரும், இந்திய அரசின் உளவுத்து றையினரும் மிகக் கடுமையான விசாரணைக்கு உட்படுத்துகின்றனர். போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைச்சாலைக ளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் சொல்ல முடியாத சோகங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பலர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆண்டுக்கணக்கில் விசாரணை எதுவுமில்லாமல் வாடுகிறார்கள். இலங்கைக்குப் பொருள்களைக் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணை விடுதலை பெற்ற பிறகும்கூட அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. இன்னும் சிலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்த பிறகும், அரசு அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது.

சட்டவிரோதமான முறையில் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துத் தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து சில நாள்களுக்கு முன்னால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பிறகு சிலரை மட்டும் தமிழகஅரசு விடுதலை ெய்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் போரில் படுகாயம் அடைந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருந்தவர்களை தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. அங்ககீனமான பலர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தேசிய மனித உரிமைக் கமிஷனிடம் நான் புகார் செய்தபோது, கமிஷனின் தலைவராக இருந்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, வேலூர் சிறப்பு முகாமுக்கு வந்து அவர்களை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களையெல்லாம் உடனே விடுதலை செய்யும் ஆணையைப் பிறப்பித்தார். ஆனால் இதற்கு சில ஆண்டுகள் ஆயின என்பதுதான் மிகக் கொடுமையானதாகும்.

இலங்கையில் மின்வேலி முகாமுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை உடனடியாக விடுவித்து அவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கை அரசோ அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அலட்சியமாகப் பதில் கூறுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் ஈழத்த மிழர்களை இந்தியா அடைத்து வைத்திருக்கும்போது, நாங்கள் சில ஆண்டுகள் அவர்களை முகாம்களில் வைப்பதில் என்ன தவறு.,என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு 3 ஆண்டுகளில் குடியுரிமையே வழங்கப்படுகிறது. வேறுபல ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறே செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தஞ்சம் புகுந்தஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இத்தகைய
மனித நேய உதவிகளும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

இலங்கையும், இந்தியாவும் தமிழ் அகதிகளை நடத்தும் விதத்தை உலகம் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக் கொண்ட பல லட்சம் தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்தியா தவறியது வேறு.

ஆனால் உலகம் ஏன் தவறிற்று? குறிப்பாக ஐ.நா. பேரவை அடியோடு செயலற்றுப் போயிற்றே, அது ஏன்? இந்தக் கேள்விகள் உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் குடைந்துகொண்டு இருக்கின்றன. 1991-ம் ஆண்டில் இராக்கின் வடபகுதியி லிருந்து 15 லட்சம் குர்தீஷ் இன மக்கள் இராக்கிய ராணுவத்தினரால் சுற்றி வளைத் துக் கொள்ளப்பட்டபோது, 5-4-1991-ல் ஐ.நா. பாதுகாப்புக் குழு கூடி குர்தீஷ் மக்க ளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயம் சர்வ தேச அமைதிக்கும் பாதுகாப்புக்குமே அபாயகரமானது என்ற தீர்மானத்தை (எண் 688) நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு எல்லா வகையான உதவியும் செய்ய வேண்டுமென அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

மேலும் ஐ.நா.பட்டயத்தின் ஏழாவது பிரிவில் கூறியுள்ள படி, குர்தீஷ் மக்களுக்கு முழுமையான பாது காப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும் என்றும், அதற்காக வான், கடல், நில வழியா கப் படைகள் உடனடியா அனுப்பப்பட்டு சர்வதேச அமைதியை நிலைநிறுத்த உதவ வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் வலியுறுத்திற்று. அதன்படி ஐ.நா. படை அனுப்பப் பட்டது. 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் குர்தீஷ் மக்களைப் பராமரிக்கும் பொறுப்பு ஐ.நா. அகதிகள் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைப்போல முன்னாள் யுகோஸ்லோ வாகியாவில் இணைந்திருந்த போஸ்னியா வைச் சேர்ந்த சரயேவோ நகரில் சிக்கிக்கொண்ட ஐந்து லட்சம் மக்களைப் பாது காக்க ஐ.நா. பாதுகாப்புப் படையை அனுப்புவது என பாதுகாப்புக்குழு முடிவு செய்தது. அதேபோல குரோμயாவில் உள்ள செர்பிய மக்களைப் பாதுகாக்கவும் ஐ.நா. பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 35 லட்சம் மக்கள் பாது காக்கப்பட்டனர்.

போஸ்னியா நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானம் மூலம் உதவிப்பொருள்களை வீசி, அவர்களைப் பாதுகாக்கும் கடமையையும் ஐ.நா. செய்தது. இந்தப் பணியில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு எடுத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் பல பகுதிகளில் இவ்வாறெல்லாம் மனித நேயமுடன் செயல்பட்ட ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் இலங்கையில் சிங்கள ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லையே, ஏன்?
மேற்கு நாடுகளின் சரக்குகளை விற்பனை செய்வதற்குரிய மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருவதும் அந்த இந்தியா, இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பதும் இதற்குக் காரணமா? அல்லது தங்களின் பெரிய சந்தையை இழக்க மேற்கு நாடுகள் விரும்பாதது இதற்குக் காரணமா?

""யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற உன்னதமான தத்துவத்தை உலகுக்கு அளித்த இனம், தமிழினம். அதுமட்டுமல்ல; சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலகக் கண் ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர் போன்ற பெரும் புலவர் கள் தாங்கள் உருவாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்துக்குச் சொந்தமானது.

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த, தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ளசிந்தனை எதிர்காலத்தில் தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

ஏழரை கோடி ரூபாய் செலவில் சென்னையில் சினிப்ளக்ஸ் தியேட்டர்

சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் எட்டு நவீன சினிப்ளக்ஸ் தியேட்டர்கள், வரும் ஜனவரியில் திறக்கப்படுகின்றன. இது குறித்து சத்யம் சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி டேன் நகரோன்கா, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஆறு மாடிகளுடன் 10 லட்சம் சதுரடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அவென்யூவில் நான்கு மாடிகளில் சில்லரை வணிக வளாகங்கள், உணவகத்துடன் கூடிய பொழுது போக்கு பூங்காங்களும் சர்வதேச தரத்துடன் அமையவுள்ளன. இந்த வளாகத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில், எட்டு சினிப்ளக்ஸ் தியேட்டர்கள் அமையவுள்ளன. இதற்காக எக்ஸ்பிரஸ் அவென்யூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், இரண்டு பெரிய தியேட்டர்களும், ஆறு சிறிய தியேட்டர்களும் ஏழரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. இவை, 2010ம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட உள்ளன. இவ்வாறு டேன் நகரோன்கா கூறினார்.
நன்றி : தினமலர்


அரசு உருவாக்கும் புதிய இனம்

உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ. 26,352; பேராசிரியர்களுக்கு ரூ. 62,085 மாத ஊதியமாகக் கிடைக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மிகக் கெüரவமான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. ஒரு சமூகத்தில் கல்வியாளர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை, அந்தச் சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அந்த வகையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்த அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ. 557.49 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏற்கெனவே, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 30 சத ஊதிய உயர்வு காரணமாக ஆண்டுக்கு ரூ. 5,155.79 கோடி தொடர் செலவினத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழக அரசு மட்டுமல்ல; மத்திய அரசும் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுமே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுச் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளன. மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது என்பது நியாயமானது மட்டுமல்ல; அரசின் கடமையும்கூட.

அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் தவிர்த்து, நாட்டின் பெருவாரியான மக்களுக்கு இந்தச் செய்தி ஏன் உவப்பானதாக இல்லை என்பதை அரசு யோசிக்க வேண்டும். ஏனெனில், இதுவும் அரசின் கடமைதான்.

நம் நாட்டின் ஆகப் பெரும்பான்மையினர் - அதாவது, 93 சதவீதத்தினர் அமைப்புசாரா வேலைகளிலேயே இருக்கின்றனர். நாடு சுதந்திரமடைந்து இந்த 62 ஆண்டுகளில் இவர்களுடைய பணிப் பாதுகாப்புக்கு, பணி நலனுக்கு அரசு செய்தது என்ன என்று கேட்டால், சட்டப் புத்தகங்களிலுள்ள விதிகளைத் தவிர்த்து அரசால் உருப்படியான பதில்களைத் தர முடியாது.

தேசத்தின் உயிர்நாடியான விவசாயிகளின் கூலிப் பிரச்னையில் அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? கடந்த பல ஆண்டுகளாகவே குறைந்தபட்சக் கூலியை ரூ. 150-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு என்ன செய்கிறது? இப்போதுதான் ரூ. 100-ஆக நிர்ணயிப்பது தொடர்பாகவே யோசிக்கத் தொடங்கியுள்ளது.

சரி, நெசவாளிகளின் நிலை எப்படி இருக்கிறது? 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையைவிட இப்போது இன்னும் மோசம். ஒரு நெசவாளி - குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு நாள் முழுவதும் உழைத்தால்கூட மாதம் ரூ. 5,000 ஈட்டுவது கடினம். நெசவாளிகளுக்கு உதவும் "சிகிடா'க்கள் ரூ. 2,000 ஈட்டினால், அது அதிர்ஷ்டம்.

இவர், அவர் என்றில்லாமல் நாட்டின் பெரும்பான்மைத் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை இதுதான். இவர்களுடைய நலன்களில் அரசு எடுத்துக்கொள்ளும் அக்கறை என்ன?

முன்னெப்போதுடனும் ஒப்பிட முடியாத இப்போதைய மோசமான சூழலையே எடுத்துக்கொள்வோம். விலைவாசி கடுமையான உச்சத்திலிருக்கும் இன்றைய சூழலில்தான் இந்திய முதலாளிகள், உலகப் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு என்று "தீபாவளி' கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலனில் அரசு காட்டும் அக்கறை என்ன?

ஆக, அரசு என்ன நினைக்கிறது என்றால், அதிகாரத்தைத் தம்முடன் பகிர்ந்துகொள்ளும் சக பங்காளிகளின் நலன் மட்டுமே தன்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறது. எஞ்சியோருக்கு ரூ. 1-க்கு ஒரு கிலோ அரிசி, ரூ. 80 கூலி, 100 நாள் வேலை போதும் என்று நினைக்கிறது.

இந்தப் போக்கு அநீதியானது மட்டுமல்ல; ஆபத்தானதுமாகும். அரசின் மனோபாவம் இந்தியாவில் அரசு ஊழியர்களை மட்டும் சகல கடவுளர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக மாற்றி வருகிறது.

சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக் கூடிய ஒரு புதிய இனமாக அரசு ஊழியர்களை மாற்றி வருகிறது.

இந்த உண்மையை எல்லோரையும்விட சாமர்த்தியசாலிகள் - குறிப்பாக - அரசு ஊழியர்கள் சீக்கிரம் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பாருங்கள். ஓர் அரசு ஊழியர் அவர் ஆணோ, பெண்ணோ திருமண வயதில் இருந்தால், அவர் தேடும் இணையை அரசு ஊழியராகவே தேடுகிறார். அரசுப் பணியில் இருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தேடும் வரன்களும் அரசு ஊழியர்கள்தான்.

இப்படியாக ஓர் இனம் உருவாகிறது; சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக்கூடிய ஒரு புதிய இனம். சமூகத்தின் ஏனைய தரப்பினர், அரசையும் அது உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் புதிய இனத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கே போய் முடியும்?
கட்டுரையாளர் : சமஸ்
நன்றி : தினமணி

டாடா இண்டிகாமில் புதிய திட்டம் அறிமுகம்

டாடா இண்டிகாமில் 'பே பர் கால்' எனும் புதிய திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டாடா இண்டிகாம், சென்னை வட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹேமந்த் குமார் கூறியதாவது: முதன்முறையாக 'பே பர் கால்' இந்தியா முழுவதும் அறிமுகப் படுத்தப்படுகிறது. குழப்பமான கட்டணத் திட்டங்கள், பகல் - இரவு கட்டணங்கள், ஆன் நெட் - ஆப் நெட் உள்ளிட்ட காரணங்களால் வாடிக்கையாளர்களிடம் ஏற்படும் குழப்பங்களை, இந்த புதிய திட்டம் குறைக்கிறது.
பல்வேறு கட்டணத் திட்டங்களில் ஒரு பைசா, 30 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய் என்று மாறுபட்ட கட்டணங்களை செலுத்தி வரும் நிலை மாறி, ஒரு அழைப்பை எவ்வளவு நேரம் பேசினாலும், உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு ரூபாயும், எஸ்.டி.டி.,க்கு மூன்று ரூபாயும் செலுத்தும் வசதி அளிக்கப்படுகிறது. 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. துவக்கத்தில் இந்த வசதி, பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். டாடா இண்டிகாமின் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும். தற்போதுள்ள வாடிக்கையாளர்கள், 96 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இந்த வசதியைப் பெறலாம். இவ்வாறு ஹேமந்த் குமார் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்