Sunday, July 5, 2009

சூடு பிடிக்குது வீட்டுக்கடன் : வட்டிவீத போர் வங்கிகள் போட்டா போட்டி

ரியல் எஸ்டேட் வர்த்தகம் மந்தமாக இருந்தாலும், வீட்டுக்கடன் தருவதில், வங்கிகள் இடையே மீண்டும் போட்டா போட்டி சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் ரியல் எஸ்டேட் வர்த்தகம், இரண்டாண்டுக்கு முன் இருந்த நிலையில் இப்போது இல்லை; 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பலமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளன. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு, வேலை பறிப்பு போன்ற காரணங்களால், பலமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனை படுத்துவிட்டது. சாப்ட்வேர் ஊழியர்களை நம்பி, பல லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் தருவதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு வட்டியையும் குறைத்தன. சாப்ட்வேர் ஊழியர்கள் வேலை போய் விட்டதால், வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் தவித்தது ஒரு பக்கம் இருக்க, அவர்களை நம்பி கட்டிய பல கோடி ரூபாய் பலமாடிக் குடியிருப்பு வீடுகளும் விற்பனை ஆகாமல் முடங்கின. இப்போது தான் ஓரளவு ரியல் எஸ்டேட் வியாபாரம் சற்று தலைதூக்கி உள்ளது. விலையைக் குறைத்து வீடுகளை விற்பனை செய்வதில் பில்டர்கள் தீவிரமாக உள்ளனர். அதனால், வீடு வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் வீட்டுக்கடனைப் பெறத் துடிக்கின்றனர். வீட்டுக்கடன் பாக்கி சரிவர வராமல் இருந்தால், கிடுக்கிப்பிடி போட்டு வந்த வங்கிகள் இப்போது ஓரளவு கெடுபிடிகளையும், வட்டி வீதத்தையும் குறைத்துக் கொண்டு வருகின்றன. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை மீண்டும் தலைதூக்க வைக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வரு கிறது. ரிசர்வ் வங்கியும் வட்டி வீதத்தைக் குறைக்க அவ்வப்போது வங்கிகளுக்கு உதவி வருகிறது. இந்நிலையில், வட்டி வீதம் 8 சதவீதம் வரை வந்து விட்டது. ஆறரை சதவீதத்துக்கு கொண்டு வருவது தான் மத்திய அரசின் எண்ணம். வீட்டுக்கடன் தரும் வங்கிகள் இடையே இப்போது வட்டி வீதப் போர் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. வட்டி வீதத்தைக் குறைத்து, போட்டா போட்டியை உருவாக்குவதில் முன்னர் எச்.டி.எப்.சி., வங்கி இருந்தது. இப்போது, அந்த பணியை ஸ்டேட் பாங்க் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. வட்டி வீதத்தை ஏற்றுவதாக இருந்தாலும், குறைப்பதாக இருந்தாலும், முதலில் இருக்கும் எச்.டி.எப்.சி., இப்போது திடமான முடிவுகளை எடுத்து வருகிறது. மற்ற வங்கிகள் வட்டியைக் குறைத்தாலும், அதற்கு போட்டியாக இன்னும் வட்டியைக் குறைக்கும் முடிவை எடுப்பதே இல்லை. வீட்டுக்கடன் பட்டுவாடாவில் முதலில் இருப்பது ஸ்டேட் பாங்க் தான். அடுத்து, எல்.ஐ.சி., உள்ளது. சமீபத்தில் ஸ்டேட் பாங்க், வீட்டுக் கடன் வட்டி வீதத்தைக் குறைத்தது மட்டுமின்றி, வீட்டுக்கடன் வாங்குவோருக்கு புதிய சலுகைத் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, 'ஈசி ஹோம் லோன்' மற்றும் 'அட்வான்டேஜ் ஹோம் லோன்' என்ற இரு திட்டங்களை ஸ்டேட் பாங்க் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு திட்டங்களிலும் கடன் பெறுவோர், முதலாண்டு 8 சதவீதம் வட்டியில் தவணையைக் கட்டலாம்; அடுத்த இரு ஆண்டுகளில் படிப்படியாக வட்டி வீதம் 9.5 சதவீதம் வரை அதிகரிக்கும். அதன் பின், புளோட்டிங், பிக்சட் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்து தவணையை கட்டலாம். ஸ்டேட் பாங்க் அவ்வப்போது நிர்ணயிக்கும், 'ஸ்டேட் பாங்க் அட்வான்ஸ் ரேட்' படி இந்த சலுகை அளிக்கப்படுகிறது. இந்த விகிதத்தின் படி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பலன் கிடைக்கும். ஸ்டேட் பாங்க் இப்படி சலுகை திட்டங்களை அறிவித்தாலும், எச்.டி.எப்.சி., வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. 'உண்மையில் எங்களின் வட்டி வீதம் தான் குறைவானது. ஆண்டுக்கணக்கின் அடிப்படையில் வட்டி வீதத்தைக் கணக்கிட்டால் இந்த உண்மை தெரியும்' என்று விளக்கம் அளித்துள்ளது. இந்த வங்கிகள் இடையே எல்.ஐ.சி., வீட்டு வசதி கழகமும் வட்டி வீதத்தை குறைத்து வர்த்தக போட்டியை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுக்கடன் வட்டி வீதம் தொடர்பாக வங்கிகள் நடத்திய போர், மீண்டும் பெரிய அளவில் தலை தூக்கும் என்று தெரிகிறது.
நன்றி ; தினமலர்


தங்கம் ரூ. 17,000ஐ எட்டும்?

ஏற்கனவே 14ஆயிரத்தை தாண்டிய நிலையில், 10 கிராம் தங்கம் விலை 17 ஆயிரம் ரூபாயை எட்டும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பல மடங்கு எகிறி விட்டது. பொருளாதார சரிவு, நிதி நெருக்கடி போன்ற காரணங்களால், அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், அதை பாதுகாப்பான டிபாசிட் டாக எப்படி கருத முடியும் என்ற பயம் அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் வந்து விட்டது. அதனால், தங்கத்தில் முதலீடு செய் வது அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் தங்கத்தின் விலையும் அதிகரித்த நிலையில் உள்ளது. இப்போது 15 ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ள தங்கம், 17 ஆயிரத்தை விரைவில் எட்டி விடும் என்று மும்பை தங்க வியாபாரிகள் கருதுகின்றனர்.
கடந்த பிப்ரவரியில் சர்வதேச அளவில் தங்கம் விலை அவுன்ஸ் 50 ஆயிரத்தை தொட்டது. அப்போது இந்தியாவில் பாதிப்பில்லை என்றாலும், இப்போது விலை உயரும் என வியாபாரிகள் கருதுகின்றனர்.
நன்றி : தினமலர்