Sunday, December 21, 2008

பங்குச் சந்தை மெதுவாக மேலெழும்ப காரணம் என்ன?

குறைந்து வரும் பணவீக்கம், வியாழனன்று சந்தை ஜம்மென ஒரு தூக்கு தூக்கிச் சென்றது. வங்கிப் பங்குகள் குறிப்பாக மேலே சென்றன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 9 சதவீதத்திற்கும் மேலாகவும் சென்றது.
வெள்ளியன்று பாங்க் ஆப் ஜப்பானின் வட்டி வீதங்கள் குறைப்பு, பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி வீதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் மேலும், கீழுமாக இருந்த சந்தையை வெள்ளியன்று மேலே தூக்கி நிறுத்தின. வியாழனன்று 361 புள்ளிகளும், வெள்ளியன்று 23 புள்ளிகளும் மும்பை பங்குச் சந்தை கூடியது.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 23 புள்ளிகள் கூடி 10,099 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 16 புள்ளிகள் கூடி 3,077 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தை 10,000 புள்ளிகளுக்கும் மேலாகவும், நிப்டி 3,000 புள்ளிகளுக்கும் மேலாகவும் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.
பரவலாக வாங்குவதும் நடக்கிறது. அதாவது நல்ல பங்குகள், குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற எண்ணத்தில் வாங்குவது தொடர்வதால், சந்தை சிறிது சிறிதாக மேலே செல்கிறது.
புதனன்று 30 சதவீதத்திற்கும் மேலே சரிந்த இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி., கம்பெனியான சத் யம், வியாழனன்று 7 சதவீதம் கூடியது. ஆனால், வெள்ளியன்று 3 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து முடிவடைந்தது. விலைகள் தடாலடியாக குறைந்துள்ளதால், கம்பெனியும் பைபேக் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறது. ஆயிலும், டாலரும்: கச்சா எண் ணெய் பேரலுக்கு 40 டாலர் அளவிலும், டாலர் ரூபாய்க்கு எதிராக 47.37 அளவிலும் வந்து நின்றது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் என்று ஒபெக் தெரிவித்தும், விலை கூடுவது போலத் தெரியவில்லை. ஏனெனில், உலக அளவில் உபயோகங்கள் குறைந்துள்ளன. இன் னும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையுமா? இன்னும் ஒரு முறை குறைக்க வாய்ப்புகள் உண்டு என்று தான் பலரும் எதிர்பார்க்கின்றனர். அதிகம் வெளிநாட்டு பண வரவுகள் இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக கூடி வருகிறது. ஏற்றுமதியாளர்கள் குழப்பத் தில் உள்ளனர். டாலர் ஏறி/இறங்குவதால் மனதும் அதுபோல ஏறி/ இறங்குகிறது. இப்படி ஏறி/இறங்குவதால், ஏற்றுமதி கான்ட்ராக்ட்கள் போடும் போது எப்படி விலை குறிப்பிடுவது என்று தெரியாமல் சிறிய ஏற்றுமதியாளர்கள் கவலையடைகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணவீக்கம்12.91 சதவீதம் அளவில் சென்று நின்று எல்லாரையும் மலைக்க வைத்தது. அரசாங்கத்தின் முயற்சிகளாலும், மக்கள் வாங்குவதை தள்ளிப் போட்டதாலும் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது ஆச்சரியப்படத்தக்க வகையில் 6.84 அளவில் வந்து நிற்கிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் எல்லாரும் 7 சதவீதம் அளவில் வந்து நிற்கும் என நினைத்தனர். ஆனால், பங்குச் சந்தை 22,000யிலிருந்து பாதிக்கு வந்தது போல பணவீக்கமும் தடலடியாக பாதியளவில் வந்து நிற்கிறது. மக்கள் கைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பெரிய அளவில் பொருட்கள் வாங்குவது ஏதும் நடக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், அது பண வாட்டத்தில் கொண்டு செல்லும். அதாவது பணவீக்கம் மைனசில் இருக்கும். எல்லாரும் அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்தால் நாட்டுக்கு நல்லதல்ல. வீட்டுக் கடன் வட்டி குறைந்தது மட்டும் சந்தையை தூக்கி நிறுத்தாது. வீடு விலைகளும் குறைய வேண் டும். கட்டுமானத்துறையின் ஜாம்பவான்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து விலைகளை சிறிது குறைப்பார்களேயானால், வீட்டுச் சந்தை மறுபடி உயிர் பெறும்.
தங்கம் ஏன் கூடுகிறது?: வீடு வாங்க ஓடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தற்போது வெயிட் அண்ட் வாட்ச் என்ற பாலிசியில் இருக்கின்றனர். பணம் எல்லாம் பத்திரமாக பணமாகவோ அல்லது தங்கமாகவோ இருக்கிறது. இது தங்கம் விலை கூடுவதற்கு ஒரு காரணம். இரண்டாவது, இப்போது இருக்கும் சூழ்நிலையில், இது மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று பலரும் கருதுவதாலும். தங்கம் உலகத்தின் பொதுவான நாணயமாயிற்றே. அதாவது, எங்கும் தங்கத்தை கொண்டு சென்று பணமாக்கிக் கொள்ளலாம்.எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) டிசம்பரில் விற்றதை விட வாங்கியது அதிகம்.இது சந்தையை மேலே கொண்டு சென்றதற்கு ஒரு காரணி.பாங்க் ஆப் ஜப்பானின் வட்டி வீதங்களைக் குறைத்துள்ளது. அமெரிக்காவின் ஆட்டோ கம்பெனிகளின் மீட்பு முடிவுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் ரேட் குறைப்பு ஆகியவை, சந்தையின் அடுத்த வாரப் போக்கை நிர்ணயிக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


எல்.ஐ.சி., வீட்டுக்கடன் வட்டி குறைப்பு

பொதுத்துறை வங்கிகளை அடுத்து எல்.ஐ.சி., வீட்டுக்கடன் நிறுவனமும் வட்டி குறைப்பு செய்துள்ளது. இது பற்றி, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.ஆர்.நாயர் தெரிவித்துள்ளதாவது: மொத்தம் 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25 சதவீதமாகவும், அடுத்து வரும் ஆண்டு களுக்கு 9.75 சதவீதமாகவும் இருக்கும். 20 லட்சத்திற்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு, 11.50 சதவீதத்தில் இருந்து 11.25 சதவீதமாக வட்டி குறைக்கப் பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு, முன் கூட்டியே கடனை திருப்பி செலுத்தும் போது விதிக்கப்படும் அபராதத்திற்கு விலக்கு போன்ற சலுகைகளும் உண்டு. இவ்வாறு நாயர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


எரிபொருள் விலை வீழ்ச்சி : விமான கட்டணம் குறைகிறது

விமான எரிபொருளின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், விரைவில் விமான கட்டணமும் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, விமான எரிபொருளின் விலையும் கடந்த 36 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதையடுத்து, கடுமையாக உயர்த்தப்பட்ட விமான கட்டணம் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், விமான கட்டணம் குறைப்பு குறித்து, விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது:
விமான எரிபொருளுக்கான விலை குறிப்பிடத் தக்க அளவில் குறைந்துள்ளது. இதன் பலன், சாதாரண பயணிகளுக்கும் கிடைக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவனம், இன்னும் சில நாட்களில் கட்டணத்தை குறைப்பது குறித்து அறிவிக்கும். இதையடுத்து, தனியார் விமான நிறுவனங்களும் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்