Sunday, January 3, 2010

நாளை முதல் 9 மணிக்கு தொடங்குது இந்திய பங்குச்சந்தை

இந்த புது வருடம்(2010) முதல் இந்திய பங்குச்சந்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. டிசம்பர் 18ம் தேதி முதல் காலை 9 மணிக்கு வர்த்தக நேரம் மாற்றப்படுவதாக இருந்தது. ஆனால், இதற்கு புரோக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் செபி அமைப்பிற்கு கடிதம் அனுப்ப போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், வர்த்தக நேரம் மாற்றம் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. <ணீ>இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை, 2010ம் ஆண்டின் முதல் பங்குவர்த்தக நாளான ஜனவரி 4ம் தேதி முதல் காலை 9மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக பங்குச்சந்தை காலை 9.55 மணிக்கு தொடங்கும். நாளை முதல் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடியும்.
நன்றி : தினமலர்


காளை பாய்ச்சலுக்கு பங்குச் சந்தை தயார்

சந்தையில் நல்ல முன்னேற்றங்களை காட்டி 2009ம் ஆண்டு முடிந்து விட்டது. 2008ம் ஆண்டு விட்டுப் போன அழியாத தடங்களால், எப்படி இருக்குமோ என்ற பயத்துடனே, 2009ம் ஆண்டு ஆரம்பித்தது. ஆனால், 2009ம் ஆண்டும் அழியாத தடத்துடனே முடிந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதிக லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த பெருமையுடன் முடிந்துள்ளது. ஆண்டின் கடைசி தினமான வியாழனன்று, மும்பை பங்குச் சந்தை 120 புள்ளிகள் அதிகமாகி, 17,464 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை 'நிப்டி', 31 புள்ளிகள் அதிகமாகி, 5,201 புள்ளிகளில் முடிந்தது. நிப்டி 5,000க்கும் மேல், அதே சமயம் மும்பை பங்குச் சந்தையும் 17,000க்கும் மேல் சென்று நின்றிருக்கிறது. சென்டிமென்டாக ஒரு நல்ல விஷயம். அதே லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை, 2008 நஷ்டங்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறது. பல புதிய முதலீட்டாளர்களுக்கு, அபரிமிதமான லாபத்தை தந்து சென்றிருக்கிறது. சந்தை, 81 சதவீத லாபத்துடன் முடிந்திருக்கிறது. இதை விட அதிக லாபம் பெற்ற சந்தை என்றால், அது இலங்கை, இந்தோனேசியா மற்றும் பிரேசில் தான். சந்தையில் அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த பங்குகள்: சந்தையில், 2009ம் ஆண்டு அதிகம் லாபம் சம்பாதித்து கொடுத்த பங்குகள், ஆரக்கிள் (405 சதவீதம்), டாடா மோட்டார்ஸ் (398 சதவீதம்), சீசா கோவா (379 சதவீதம்), ஜிண்டால் ஸ்டீல், பவர் (363 சதவீதம்), எம்பசிஸ் (363 சதவீதம்).
சந்தையில் அதிகம் லாபமடைந்த துறைகள்: மெட்டல் (233 சதவீதம்), ஆட்டோ (204 சதவீதம்), சாப்ட்வேர் (132 சதவீதம்), கேபிடல் குட்ஸ் (104 சதவீதம்)


சந்தை இந்தளவு கூடியது எப்படி? அதிகமாக வந்த வெளிநாட்டு முதலீடுளே சந்தை கூடியதற்கு காரணம். வெளிநாட்டு நிறுவனங்கள், 83,000 கோடி ரூபாயை, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. அதுவே, சந்தையை இந்த அளவு தூக்கிச் செல்ல காரணம்.

2010ம், புதிய வெளியீடுகளும்: 2010ம் ஆண்டு, புதிய வெளியீடுகளின் ஆண்டாக இருக்கும். அதாவது, இரண்டு வாரத்திற்கு ஒரு புதிய வெளியீடு என்ற வகையில், பல வெளியீடுகள் வரவிருக்கின்றன. அவற்றில் பல அரசு வெளியீடுகள். தயாராக இருங்கள். புதிய வெளியீடுகளில் பணம் பார்க்கும் வாய்ப்புகள் இருக்கும்.

2010 எப்படி இருக்கும்? ஜன., 1 முதல் 3ம் தேதி வரை, சந்தை விடுமுறை. 4ம் தேதி(நாளை) முதல் நீங்கள், 'டிவி' பெட்டிக்கு முன் 9 மணிக்கே உட்கார வேண்டியிருக்கும். ஆமாம், சந்தை 9 மணிக்கே தொடங்கிவிடுகிறது. வாக்கிங் செல்பவர்கள் இன்னும் அதிகாலையிலேயே சென்று விடுவது உடலுக்கும் நல்லது, சந்தைக்கும் நல்லது. இதே காளை பாய்ச்சல் இருக்கும் என்று எல்லாரும் ஒருமித்து நம்புகின்றனர்.

அரசும் ஜி.டி.பி., வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. அதனால், சந்தை 20,000 முதல் 23,000 புள்ளிக்குள் முடியும் வாய்ப்பு அதிகம்.

எங்கு முதலீடு செய்வது? சந்தை இப்படி தாறுமாறாக போய் கொண்டிருப்பதால், எந்த பங்கில் முதலீடு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் வரும். நடுத்தர மற்றும் சிறிய பங்குகளுக்கு, மவுசு இன்னும் அதிகம் இருக்கிறது. அவை, சிறப்பாக பரிணமிக்க வாய்ப்புகள் அதிகம். இது தவிர, சாப்ட்வேர், மெட்டல், கட்டுமானத்துறை, மின்சாரம், வங்கித்துறை ஆகியவை பிரகாசிக்க வாய்ப்பு அதிகம் உண்டு. சில மருந்து கம்பெனிகள் நன்கு பிரகாசிக்கும். அதே சமயம், ஏற்ற இறக்கங்கள் நிறைய இருக்கும். ஆதலால், முதலீடுகளை ஒவ்வொரு சரிவிலும் தொடர்ந்து செய்து வாருங்கள். லாபம் பெருகும்.

- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்