Thursday, April 9, 2009

டெபாசிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் அபாயம்!

பொதுமக்களின் டெபாஸிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் என்று இந்திய வங்கிகள் சங்க தலைவர் டிஎஸ் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்புச் சலுகைகளைப் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்துவது குறித்து நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கித் தலைவர் டி சுப்பாராவவுடன் பேசினார் நாராயணசாமி. பின்னர் அவர் கூறியதாவது: "ரிசர்வ் வங்கி மிகச் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இனி கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இடமில்லை. வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். ஆனால் வங்கி நடைமுறைகள் இதற்கு இடமளிக்கவில்லை. இப்போது குறைக்கப்பட்டுள்ள கடன் வழங்கல் வட்டியைச் சரிகட்ட, பொதுமக்களின் வைப்புகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டியைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அனைத்து வங்கிகளும் வைப்புத் தொகை வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளன", என்றார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி இன்னும் 2 சதவிகிதம் அளவுக்கு முதன்மைக் கடன் வழங்கலுக்கான (PLR) கடன்களுக்கான வட்டி விகிதத்தை அனைத்து வணிக வங்கிகளும் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இல்லை எந்த வங்கியும். மாறாக மக்களின் வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியில் கை வைக்க முடிவு செய்துவிட்டன.இது கடன் வழங்கலை மட்டுமல்ல, மக்களின் சேமிப்பையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணம் தேக்கம்!இன்னொரு பக்கம், கடன்களுக்கான வட்டிகள் குறையாமலே உள்ளதாலும், கடன் வழங்கும் நடைமுறைகளை வங்கிகள் மிகவும் கடினமாக்கி வைத்திருப்பதாலும் அனைத்து வணிக வங்கிகளிலும் ரூ.1,22,000 கோடிக்கும் அதிகமாக பணம் தேங்கி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் ரிசர்வ் வங்கியில் 3.5 சதவிகித வட்டியில் டெபாஸிட்டாக வைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெற ஆர்வம் காட்டததாலும், பொதுமக்கள் கடன் பெறும் அளவு 34 சதவிகிதம் குறைந்துவிட்டதாலும் இந்த நிலை என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஓபி பட் தெரிவித்துள்ளார்.

நன்றி : தட்ஸ்தமிழ்



எல்லாம் தேர்தல் மயம்

திங்களன்று சந்தைகளின் துவக்கமே அபாரமாக இருந்தது. சந்தை 186 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. ஏறியதற்கு காரணம், ஜி-20 மாநாட்டின் தொடர்ச்சியாக விளையப்போகும் நன்மைகளும், ஷார்ட் கவரிங்கும் இருந்ததாலும் சந்தை மேலே சென்றது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியதும் சந்தை மேலே சென்றதற்கு ஒரு காரணம்.நேற்று துவக்கமே சந்தையில் பெரிய சரிவில் தான் துவங்கியது. 362 புள்ளிகள் கீழே சென்று 10,171 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், பீனிக்ஸ் பறவை போல சந்தை உயிர்த்தெழுந்து 362 புள்ளிகள் நஷ்டத்தையும் சரி செய்து பின்னர் 207 புள்ளிகள் மேலேயும் சென்றது. நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.இறுதியாக 207 புள்ளிகள் கூடி 10,741 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. இது, 30 சதவீதத்திற்கும் மேலே சென்றிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் இது தான் அதிகபட்ச உயர்வு. எல்லாம் தேர்தல் மயம்.ஏற்றுமதி புள்ளி விவரங்கள் ஏமாற்றம் தருவதாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் 17.25 பில்லியன் அளவு ஏற்றுமதி செய்திருந்தோம். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் அது 12 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. இது, 30 சதவீதம் குறைவு.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்