
இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டரக்ஸன் கம்பெனியான எல் அண்ட் டி, அணுஉலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது. இதற்காக, இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் அணுஉலை தொழிலில் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஹிட்டாச்சி என்ற நிறுவனத்துடனுன், பிரான்சின் அரேவா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள இருக்கிறது. ஏற்கனவே எல் அண்ட் டி நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த ஆட்டம்ஸ்டிராய்எக்ஸ்போர்ட் நிறுவனத்து டனும், அமெரிக்காவை சேர்ந்த டோஷிபா வெஸ்டிங்ஹவுஸ் என்ற நிறுவனத்துடனும், கனடாவை சேர்ந்த ஆட்டோமிக் எனர்ஜி ஆஃப் கனடா என்ற நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. எல் அண்ட் டி யின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதன் மூலமாக, சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் தொழிலில் வேகமாக வளர முடியும் என்று எல் அண்ட் டி கருதுகிறது. நியூக்கிளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் இந்தியா சேர்ந்ததில் இருந்து, சிவில் வேலைக்காக, அணு உலை அமைக்க, தேவையான மூலப் பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீங்கி யிருக்கிறது. வரும் 2032ம் வருடத்திற்குள் இந்தியா, அணுசக்தி மூலம் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே இதன் மூலம் சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்கள் வர இருக்கின்றன.