Friday, November 7, 2008

முன்னேறியது பங்கு சந்தை : சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று மும்பை பங்கு சந்தை ஏற்றத்தில் முடிந்திருக்கிறது. பவர், ஆயில், மெட்டல், டெலிகாம், டெக்னாலஜி மற்றும் கேப்பிடல் குட்ஸ் பங்குகள் உயர்ந்திருந்தன.உலக அளவில் பங்கு சந்தைகளில் இன்றுஏற்பட்டிருந்த முன்னேற்றம் இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. சென்செக்ஸ் 10,000 புள்ளிகளையும், நிப்டி 3000 புள்ளிகளையும் இன்று மீண்டும் எட்டியது. காலையில் உயரத்துவங்கிய இன்டக்ஸ், மதிய வேளையில் கொஞ்சம் இறங்கியது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் உயர துவங்கி விட்டது. அதிக அளவில் பங்குகள் வாங்கும் போக்கு தென்பட்டதால் சென்செக்ஸ் உயர துவங்கியது. இன்றைய முன்னேற்றத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி., டி.சி.எஸ்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எஸ்.பி.ஐ., ரிலையன்ஸ் இன்ஃராஸ்டெரச்சர், ஹெச்.டி.எப்.சி., ஹெச்.டி.எப்.சி., பேங்க், ஆகியவை காரணமாக இருந்தன. இன்றைய முக்கிய வர்த்தக வேளையில் 10,065.37 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 230.07 புள்ளிகள் ( 2.36 சதவீதம் ) உயர்ந்து 9,964.29 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. 3,010.00 புள்ளிகள் உயர்ந்திருந்த நிப்டி, வர்த்தக முடிவில் 80.35 புள்ளிகள் ( 2.78 சதவீதம் ) உயர்ந்து 2,973.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. மொத்தம் ரூ.49,664 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரக் ஒபாமா, விரைவில் நிதி அமைச்சர் யார் என்பதை அறிவிக்க இருக்கிறார். மேலும் அவரது பொருளாதார குழுவைறயும் அறிவிக்க இருக்கிறார். இதையடுத்தும் சந்தையில் இனிமேல் மாற்றம் எற்படும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


ரான்பாக்ஸியின் 63.92 சதவீத பங்குகளை பெற்றது டெய்ச்சி சான்க்யோ

இந்திய பார்மாசூடிக்கல் கம்பெனியான ரான்பாக்ஸியின் 63.92 சதவீத பங்குகளை ஜப்பானின் டெய்ச்சி சான்க்யோ நிறுவனம் முறையாக வாங்கிக்கொண்டது. ரான்பாக்ஸியில் மல்விந்தர்மோகன் சிங் குடும்பத்திற்கு இருந்த 34.8 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் டெய்ச்சி கைக்கு மொத்தம் 63.92 சதவீத பங்குகள் வந்துள்ளன. நாங்கள் வாங்க திட்டமிட்டிருந்த பங்குகளை எல்லாம் வாங்கி விட்டோம் என்று டெய்ச்சி சான்க்யோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தகாஸி ஷோடா தெரிவித்தார். இதனை ரான்பாக்ஸியின் தலைமை செயல் அதிகாரி மல்விந்தர் மோகன் சிங்கும் ஒத்துக்கொண்டார். கடந்த ஜூன் மாதத்தில் ரான்பாக்ஸியில் மல்விந்தர் சிங் குடும்பத்திற்கு இருக்கும் பங்குகளில் 34.8 சதவீத பங்குகளை வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்திருந்தது. மேலும் வெளி சந்தையில் பங்கு ஒன்றுக்கு ரூ.737 என்ற விலை வைத்து 20 சதவீத பங்குகளையும் ரூ.22,000 கோடிக்கு அது வாங்கியது. இதன் மூலம் டெய்ச்சிக்கு மொத்தம் 63.92 சதவீத பங்குகள் வந்து விட்டன. மேலும் ரான்பாக்ஸியுடன் கூட்டு வைத்திருக்கும் இன்னொரு நிறுவனமான ஜெனோடெக்கின் பங்குகளையும் வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ரூ.699 கட்டணத்தில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானம்

மலேஷியாவை சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் - ஏசியா, டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து கோலாலம்பூருக்கும் திருச்சிக்குமிடையே தினசரி நேரடி விமான சேவையை துவங்குகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு அனுப்ப இருக்கும் நேரடி விமான சேவைக்காக புத்தம்புது ஏர்பஸ் ஏ - 20 விமானத்தை ஏர் -ஏசியா பயன்படுத்த இருக்கிறது என்று ஏர் - ஏசியா வெளியிட்ட செய்தி குறிப்பு சொல்கிறது. மேலும் இதனை கொண்டாடும் விதமாக, கோலாலம்பூரில் இருந்து திருச்சி வர ரூ.699 மட்டும் ( ஏர்போர்ட் டாக்ஸ்கள், எரிபொருள் சர்சார்ஜ் தனி ) ஸ்பெஷல் கட்டணமாக வசூலிக்க அது முடிவு செய்திருக்கிறது. ஆனால் இந்த குறைந்த கட்டணத்திற்கான டிக்கெட்டை பயணிகள், அக்டோபர் 30ம் தேதியில் இருந்து நவம்பர் 9 ம் தேதிக்குள் வாங்கி விட வேண்டும். பயண நாள் அடுத்த வருடம் ஜூலை 31 க்குள் இருக்கலாம். திருச்சியை தவிர மற்ற இந்திய நகரங்களுக்கும் இன்னும் ஒன்றரை வருடத்தில் நாங்கள் விமான சேவையை துவங்க திட்டமிட்டிருக்கிறோம் என்று ஏர் - ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்ணான்டஸ் தெரிவித்தார்.சென்னை, கோல்கட்டா, கொச்சி, பெங்களுரு நகரங்களுக்கும் அதன் பின் புதுடில்லி மற்றும் மும்பைக்கு விமான சேவை நடத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்றார் ஃபெர்ணான்டஸ்.
நன்றி : தினமலர்


பெட்ரோல் விலை குறையாது

பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு பற்றி இன்னும் அரசு யோசிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, பெட்ரோலியத் துறை செயலர் ஆர்.எஸ் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி எவ்வித பரிசீலனையும் செய்யப்படவில்லை. பெட்ரோல் விற்பனையின் மூலம் கிடைக்ககூடிய லாபம் கணிசமாக அதிகரித்த போதிலும் டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தை ஈடுகட்ட வேண்டியுள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு நிலை இல்லாமல் ஏற்றம் இறக்கத்தில் உள்ளது.
பனிரெண்டு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மூலம் லாபம் ஈட்ட துவங்கியுள்ளன. இருப்பினும் மற்ற மூன்று வகைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.155 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்