Showing posts with label பணப்புழக்கம். Show all posts
Showing posts with label பணப்புழக்கம். Show all posts

Tuesday, December 22, 2009

விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

'உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.

இதை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் கூறியதாவது: இந்த மாதம், உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என்றால், பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, வட்டி வீதத்தை அதிகரிப்பது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட ரொக்க கையிருப்பு வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.


இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், கடந்த 18ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசி உள்ளார். இதனால், நிதிக் கொள்கைகள் கடுமையாக்கப்படலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, அடுத்த நிதிக் கொள்கையை, அடுத்த மாதம் 29ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல், அரசு செயலற்று இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இவ்விவகாரத்தால், பார்லிமென்ட் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. அதே சமயம், முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த பிமல் ஜலான் கருத்து தெரிவிக்கையில், 'அதிகப் பணப்புழக்கத்தை உறிஞ்சி எடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், விலைவாசி குறையும்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும், வியட்னாமும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தை சமீபத்தில் குறைத்திருப்பதையும் நிதித்துறையும் ரிசர்வ் வங்கியும் கவனித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Sunday, March 8, 2009

தேர்தல் வருவதால் அதிகரிக்கப்போகிறது பணப்புழக்கம்

ரிசர்வ் வங்கியின் ரேட் கட் வந்தால் சந்தை சிறிது உயிர் பெறும் என்று தான் எல்லாரும் 'பெட்' கட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், வியாழனன்று நடந்ததோ வேறு. ஏன் ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டுக்கு அப்புறமும் சந்தை கீழே விழுந்தது? சென்ற வாரம் வரை ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்தால் சந்தை உயிர் பிழைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். அப்படியே 50 புள்ளிகள் சதவீதம் குறைத்து புதனன்று சந்தை நேரத்திற்குப் பிறகு அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், வியாழனன்று துவக்கத்திலிருந்து சந்தைகள் விழுந்து கொண்டே தான் இருந்தன. சந்தை இன்னும் அதிகமான ரேட் கட்டை எதிர்பார்த்திருந்தது போலும்.
பணவீக்கம் ஒரேயடியாக விழுந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 50 புள்ளிகள் என்பது சந்தைக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆதலால், சந்தைகள் மேலே ஏறுவதற்குப் பதிலாக கீழே இறங்கியது. ஆச்சரியம், ஆனால் உண்மை. அன்றைய தினம் மட்டும் 248 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.
கடந்த 40 மாதங்களில் எவ்வளவு கீழ் நிலையை எட்டியிருந்ததோ அந்த நிலைக்கு அருகே சென்று விட்டது. பரமபதம் தான். பரமபதத்தை விளையாட்டில் தான் பார்த்திருக்கிறோம். விளையாட்டுக் குக் கூட சந்தையில் நினைத்ததில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கிறது.
வெள்ளியன்று சந்தை உலக சந்தைகளின் போக்கை வைத்து அதே போலவே கீழே சென்றது. வியாழனன்று உலகளவில் எல்லா சந்தைகளும் கீழேயே இருந்தன. அதன் போக்கு இங்கும் சந்தைகளில் பிரதிபலித்தது.
அன்றைய தினம் 100க்கு மேற்பட்ட புள்ளிகளை இழந்து சந்தை கலையிழந்து காணப்பட்ட நிலையில், இது தான் வாங்குவதற்கு நல்ல சமயம் என்று பலரும் வந்ததால் இழந்த புள்ளிகளையும் திரும்பப் பெற்று 127 புள்ளிகள் கூடுதலாகவும் பெற்று முடிவடைந்தது.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 127 புள்ளிகள் மேலே சென்று 8,325 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை 8,400க்கு கீழேயே முடிவடைந்துள்ளது என்பது ஒருவிதமான கலக்கம் தான்.
நல்ல பங்குகள் நல்ல பல பங்குகள் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சந்தையில் மலிவாக இருக்கிறதே என்று வாங்கப் போனால் இன்னும் விலை குறைகிறது. ஆதலால், முதலீட்டாளர்கள் பயப்படும் நிலை உள்ளது. ஒவ்வொரு இறக்கத்திலும் வாங்கினால் ஆவரேஜ் செய்யலாம்.
இந்த வார பணவீக்கம் 3.03 சதவீதம் அளவிற்கு வந்துள் ளது. ஒரே இறக்கமாகத் தான் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் எல்லாம் செலவழிக்கப் பயப்படுவதால் தான் இது போன்ற ஒரு நிலைமையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆடம்பரச் செலவுகள் இல்லை, அத்தியாவசியச் செலவுகள் மட்டும் தான் என்ற நிலை தான். குறைந்து கொண்டு வரும் வேகத்தைப் பார்த்தால் ஜெட் வேகம் தான்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரியும், ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைய முடிவு செய்த பின் பார்த்தால் ஒன்றிணைக்கப் பட்ட கம்பெனியான ரிலையன்ஸ தான் தற்போது உலகத்திலேயெ பெரிய ரிபைனரியாக இருக்கிறது. இதையடுத்து, வெனிசுவேலாவில் உள்ள பாராகவுனா, தென்கொரியாவில் உள்ள எஸ்.கே.கார்ப்., தென் கொரியாவில் உள்ள எல்.ஜி., - கால் டெக்ஸ், சிங்கப்பூரின் எக்சான் மொபில், பேடவுன் எக்சான் மொபில் என வரிசையில் வருகிறது. இந்த இணைப்பு முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு தூரம் பயனிளக்கப் போகிறது என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். நானோ காருக்கு விண்ணப் பம் விற்பதில் இருந்து, காருக்கு லோன் கொடுப்பது வரை ஸடேட் பாங்க் மட்டும் தான் என்று இருந்தது. தற்போது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவும் டாடா கம்பெனியின் அனுமதியைப் பெற்றுள்ளது.
தேர்தல் வந்துவிட்டது, பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகரிக்கும் பணப்புழக்கம் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும். அப்படி பொருட் கள் விற்பனை கூடி வியாபாரங்கள் கூடி சந்தையும் கூடினால் நாமும் கூடிக்கூடிப் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
வீடு வாங்கப் போகிறீர் களா? முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித்தது. வங்கிகளிடையே போட்டி உண்டாகியுள்ளது. கனரா வங்கி மற்ற வங்கிகளை விட ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்கி இன்னும் போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல வங்கிகளுக்கு இடையே போட்டி என்றால் மக்களுக்குத் தானே கொண்டாட்டம். ஆனால், இந்த வட்டி புதிதாக வாங்குபவர்களுக்குத் தான், முன் வாங்கியவர்களுக்கு இல்லை என்று எல்லோரும் கூறுவதால் கட்சி விட்டு கட்சி மாறும் காட்சிகள் (அதாவது வங்கி விட்டு வங்கி மாறும் காட்சிகள்) தேர்தல் சமயத்தில் அதிகமாகவே இருக்கும்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு 8,400 லெவலுக்கு கீழே வந்துள்ளது. இது தான் சமயம் என்று முதலீட்டாளர்கள் (உள்நாடு, வெளிநாட்டு) வரவேண்டும். அது மட்டும் தான் சந்தையைப் பலப்படுத்தும்.
நன்றி : தினமலர்


Thursday, November 20, 2008

மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது

இந்தியாவில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பதில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் பணப்புழக்கமும் அதிகரித்திருக்கிறது; மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதும் அதிகரித்திருக்கிறது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இன்டியாவின் சேர்மன் குரியன் தெரிவித்தார். பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் வேலை செய்திருக்கிறது என்றார் அவர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிப்பதற்கும் அது உதவியிருக்கிறது. அக்டோபரில் கடும் சிக்கலில் இருந்த மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரி, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் இந்த மாதத்தில் மீண்டு வந்துவிட்டது. அக்டோபருக்குப்பின் கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சி.ஆர்.ஆர்.,) 3.5 சதவீதமும், ரிபோ ரேட்டை 1.5 சதவீதமும் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதற்குப்பின் இந்த இன்டஸ்டிரியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரிக்கு இதுவரை 14 - 18 சதவீத வட்டிக்கு நிதி அளித்துக்கொண்டிருந்த இந்திய வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தலையீட்டுக்குப்பின் இப்போது 10.5 - 11 சதவீத வட்டிக்கு தாராளமாக நிதி அளிக்கின்றன என்றார் அவர்.
நன்றி : தினமலர்

Tuesday, November 18, 2008

ஏர்லைன்ஸ், ரியல் எஸ்டேட்ஸ், வாகன தயாரிப்பாளர்கள் விலையை குறையுங்கள் : சிதம்பரம் வேண்டுகோள்

வாகன தயாரிப்பாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் விமான கம்பெனிகள் கட்டணத்தை குறைக்குமாறு நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வேண்டுகோள் விடுத்தார். உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை தொடர்ந்து, கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் துறையினருக்கு எக்சைஸ் டூட்டியை குறைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். ஹோட்டல்கள் கண்டிப்பாக கட்டணத்தை குறைக்க வேண்டும். ஏர்லைன்ஸ்கள் கண்டிப்பாக கட்டணத்தை குறைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்கள், அவர்கள் விற்பனை செய்யும் வீடுகள் மற்றும் அபார்ட்மென்ட்களின் விலையை குறைக்க வேண்டும். கார் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விலையை குறைக்க வேண்டும் என்று சிதம்பரம் கேட்டுக்கொண்டார். புதுடில்லியில், உலக பொருளாதார அமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார். மக்களிடையே செலவு செய்யும் போக்கை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் அவ்வாறு பேசினார். தேவைப்பட்டால் எக்சைஸ் டூட்டியை குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி திருப்தி அளிக்கக்கூடிய விதமாக இருப்பதாக சொன்ன அவர், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, இந்த நிதி ஆண்டில் 200 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைய தவறிவிடும் என்று தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் , வளர்ந்த நாடுகளில் டிமாண்ட் குறைந்து விட்டதுதான் இதற்கு காரணம் என்றார்.
நன்றி : தினமலர்


Saturday, October 25, 2008

மொத்த வளர்ச்சி குறையும், பணப்புழக்கம் சீராகும்: ரிசர்வ் வங்கி தகவல்

ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட கடன் வசதிக் கொள்கையில் விசேஷ அறிவிப்புகள் ஏதும் இல்லை. வங்கிகளின் மொத்த ரொக்க கையிருப்பு விகிதம் உட்பட எவ்வித ரேட்டும் குறைக்கப்படவில்லை. ஆனால், மொத்த வளர்ச்சி 7.5 சதவீதமாக குறையும் என்றும், பணப்புழக்கம் சீராகும் என்றும் ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் படம் பிடிக்கிறது.மத்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டுக்கான இடைக்கால நிதி கொள்கையை நேற்று வெளியிட்டது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இம்மாத துவக்கத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் 9 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றிற்காக ரிசர்வ் வங்கி 1.65 லட்சம் கோடி வரை பணத்தை வெளியிட்டது.இவ்வளவு நடவடிக்கைக்கு பிறகும், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்., விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கூறியது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட இடைக்கால நிதி கொள்கைளில் பல அறிவிப்புகள் வெளிவரும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். மேலும், ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பு ஏற்றுள்ள சுப்பாராவ் வெளியடும் முதல் நிதிக் கொள்கை என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் இடைக்கால நிதிக் கொள்கையை வெளியிட்டு பேசுகையில் கூறியதாவது:
சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உள்நாட்டில் நிதிச்சந்தைகளில் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நமது பொருளாதார நிலைமை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதால் இந்த அளவுக்கு சமாளிக்க முடிகிறது.விரைவில் இந்த நிலைமை மாறி முன்னேற்றம் ஏற்படும். வங்கிகளில் பணப்புழக் கத்தை சரிசெய்ய ரிசர்வ் வங்கி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பயனாக, வங்கி ரேட் விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்யப்படவில்லை ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்க வேண்டிய மொத்த ரொக்க கையிருப்பு விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும். குறுகிய கால கடன்களை வழங்க வங்கிகளுக்கான ரெபோ ரேட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இது 8 சதவீதமாக இருக்கும். அது போல் ரிசர்வ் ரெபோ ரேட்டும் 6 சதவீதமாக இருக்கும்.கடன்களுக்கான வட்டி, டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) 8 சதவீதமாக இருக்கும் என முன்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அது, தற்போது 7.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்குள் வர வாய்ப்பு இருக்கிறது.பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பது நெருக்கடியை கொடுப்பதாக உள்ளது. தற்போது உலக சந்தையில் பொருட்களின் விலை குறைந்து வருவதாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாலும், பணவீக்கத்தை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 7 சதவீதத்திற்குள் கொண்டு வருவதில் உன்னிப்பாக உள்ளோம்.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறோம்.
வங்கிகளின் நிதி நிலைமை, கடன் நிலை, போன்றவற்றை பல்வேறு நிலைகளில் ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக ஸ்திரமான நிதி நிலைமை இருப்பதற்கு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நிதிச்சந்தைகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க விழிப்புடன் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.சிதம்பரம் கருத்து: கடந்த 6ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் ளாக பணப்புழக்கத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல் வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. எனவே, பணப்புழக்கத்தை தக்கவைப்பதற்காக, மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். ரேட் விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்' என்றார்.
நன்றி : தினமலர்