Wednesday, September 3, 2008

மீனவ பயிற்சி நிலையம்: டாடாவுடன் அரசு ஒப்பந்தம்

நவீன தொழில்நுட்பத்துடன் மீனவ தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிலைய திட்டத்தை நிறுவ 'டாடா' நிறுவனத்துடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
மீனவர்கள் மீன் பிடிப்பதிலும், மீன்களை சேதமின்றி பதப்படுத்தி விற்கவும், நவீன உத்திகளை கடைபிடித்து, அதிக வருவாய் ஈட்டுவதற்காக, வெளிநாடுகளில் உள்ளது போல கடலில் கூண்டுகளில் மீன் வளர்த்தல், நண்டு வளர்ப்பு போன்றவற்றில் மீனவர்கள் ஈடுபடவும், பாசி வளர்த்தல், மீன் பொருட் களை பதப்படுத்துதல் ஆகியவற்றை பெண் கள் மேற்கொள்ளவும், தேவையான பயிற் சியை அளிக்க, 'நவீன் மீன்பிடி தொழில் நுட்ப பயிற்சி மையம்' ஒன்று அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தை நிறைவேற்ற 'மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையம்- பிட்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப் பட்டது. இப்பயிற்சி மையத்தை அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காடு கிராமத்தில் 1.16 எக்டேர் நிலத்தை அசு இலவசமாக வழங்கியது. இத்திட்டத்துக்கு, லாப நோக்கம் ஏதுமின்றி தொழில்நுட்ப உதவி உட்பட அனைத் துவகை உதவிகளையும் வழங்க 'டாடா' நிறுவனம் முன்வந்தது.'டாடா' குழுமத்தின் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று காலை கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் மீன்வளத் துறை முதன்மைச் செயலர் லீனா நாயரும், 'டாடா' சார்பாக கிருஷ்ணகுமாரும் கையெழுத்திட்டனர். இத்திட்டத்தின் மூலம், 'டாடா' நிறுவனம் உருவாக்கும் சொத்துக் கள், திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசு, மீன்துறை, டாடா நிறுவனம் ஆகியவற்றுக்கும், பயனாளிகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு நிறுவனமாக 'பிட்' சங்கம் செயல்படும். மீனவ தொழில் நுட்ப பயிற்சி நிலையத்தின் ஆரம்ப கட்ட வளர்ச்சிப் பணிக்குரிய செலவுகளை மேற் கொள்ள, முதல்கட்ட உதவியாக ஒரு கோடி ரூபாய்க் கான காசோலையை முதல்வர் கருணாநிதி, இச்சங்கத்தின் கவுரவத் தலைவரான மீன் வளத் துறை முதன்மை செயலர் லீனா நாயரிடம் நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், மீன்வளத் துறை அமைச்சர் சாமி, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறைச் செயலர் ஞானதேசிகன், மீன்வளத் துறை ஆணையர் சம்பு கல்லோலிகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்றி : தினமலர்

தீயணைப்பு சான்றிதழே பெறாமல் ஐந்து மாடியில் கடை

'தீ விபத்து நடந்த சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை நிர்வாகத்தினர், தீயணைப்பு சான்றிதழ் பெறாமல் கடையை நடத்தியுள்ளனர். கடையில் தீயணைப்பு கருவிகள், தண்ணீர் எடுத்துச் செல்லும் பைப் லைன்கள் பெயரளவில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், தீயை விரைந்து அணைக்க முடியவில்லை,'' என தமிழக தீயணைப்புத் துறை இயக்குனரான கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணை போலீஸ் தரப்பில் நடந்து வருகிறது. தீப்பிடித்தது எப்படி என்ற விசாரணையில், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அச்சம்பவத்தில் இரண்டு உயிர்கள் பலியாகின. சம்பவ இடத்தை பார்வையிட்டேன். பல தவறுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.தீ விபத்து ஏற்பட்ட ஐந்து மாடிக் கட்டடத்தில், தரைதளத்தில் இருந்து ஐந்தாவது தளத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டு, கேட் வால்வு பொருத்தப்பட வேண்டும். அதை முறைப்படி செய்யாமல், பெயரளவில் செய்துள்ளனர். வெறும் பிளாஸ்டிக் பைப் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. கேட் வால்வு இல்லை; அதனால், விரைவில் தண்ணீரை, தீப்பிடித்த தளத்திற்கு கொண்டு செல்ல முடியாதது, விசாரணையில் தெரிய வந்தது.அது தவிர, விபத்து நடந்த கடையில், தீயணைப்புத் துறையினரால் வழங்கப்படும் சான்றிதழ் பெறவில்லை. அதனை பெறாமல் எப்படி கடையை நடத்தினர் என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு கருவிகள் பொருத்தப்படவில்லை. சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடைக்கு தீயணைப்புத் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. தீ விபத்து நடந்த நிறுவனத்தின் குறைகளை சுட்டிக்காட்டி, கோர்ட் டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த சம்பவம், தீயணைப்பு விதிகளை மீறும் அனைத்து நிறுவனத்திற்கும் பாடமாக இருக்க வேண்டும்.தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள வர்த்தக நிறுவனத்தினர் பலர், ஐகோர்ட்டில் பல்வேறு தடை உத்தரவுகளை வாங்கியுள்ளனர். மாநகராட்சி விதி முறையை மீறி அனுமதிக்கப்பட்ட தளங்களுக்கு மேல், ஏறக்குறைய எல்லா நிறுவனத்தினரும் கட்டடம் கட்டியுள்ளனர். அவர்கள் அதைக் குறிப்பிட்டு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் உள்ள வர்த்தக நிறுவனத்தினரை நேரில் அழைத்து, தீ தடுப்பு உத்திகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளோம். அத் துடன், வர்த்தக நிறுவனங்களில் பொருத்த வேண்டிய தீ தடுப்பு கருவிகள் உட்பட முக்கிய அம்சங்கள் குறித்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் செய்து முடிக்காவிட்டால் நடவடிக்கை தொடரும்.
தமிழகத்தில் 968 பெரிய அடுக்கு மாடிக் கட்டடங்கள் உள்ளன. அதில், சென்னையில் மட்டும் 661 கட்டடங்கள் உள்ளன. பல மாடி கட்டடங்கள் கட்டுபவர்களுக்கு, 2006ம் ஆண்டு ஐகோர்ட் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, இனிமேல் கட்டப்படும் புதிய கட்டடங்களை சுற்றி நாலாபுறமும் ஏழு மீட்டர் காலியிடம் அமைக்க வேண்டும். தீயணைப்பு சான்றிதழ் வழங்கும்போது இதனை கண்டிப்பாக பின்பற்ற உள்ளோம்.
கட்டடம் முழுதும் தீப்பற்றி எரியும்போது, கட்டடத்திற்குள் துளையிட்டு நுழைவதற்கு நவீன துளையிடும் கருவியை, இந்த விபத்தில் பயன்படுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த மெஷினின் மதிப்பு ரூ.50 லட்சத்தைத் தாண்டும். அதைத் தமிழக தீயணைப்புத் துறைக்கு வாங்க அரசிடம் அனுமதி கோரப்படும்.
இவ்வாறு ஷியாம் சுந்தர் கூறினார்.
நன்றி : தினமலர்