Monday, June 29, 2009

லேசான ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை

வெள்ளி அன்று 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்த பங்கு சந்தை இன்று லேசான ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ஆயில் அண்ட் கேஸ், மெட்டல், ரியல் எஸ்டேட், பேங்கிங் ( ஐசிஐசிஐ நீங்கலாக ), குறிப்பிட்ட இன்ஃப்ராஸ்டரக்சர் கம்பெனிகள் நல்ல லாபம் பார்த்தன. அதே நேரம் ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், சுஸ்லான், சன் பார்மா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஐடிசி, ஐடியா, டாடா பவர், ஹீரோ ஹோண்டா போன்ற நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. காலையில் இருந்தே ஏற்றத்தில் இருந்த சந்தையில் மாலை வர்த்தகம் முடியும் போது, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 21.10 புள்ளிகள் ( 0.14 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,785.74 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 15.45 புள்ளிகள் ( 0.35 சதவீதம் ) உயர்ந்து 4,390.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


தங்கம் இறக்குமதி 44 சதவீதம் குறைந்தது

உச்சத்தில் இருக்கும் விலை ; டிமாண்ட் இல்லை போன்ற காரணங்களால், ஜூன் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி, அதற்கு முந்தைய மாத இறக்குமதியை விட 44 சதவீதம் குறைந்திருக்கும் என்று தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மே மாதத்தில் 18 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அது ஜூன் மாதத்தில் 10 டன்னாக குறைந்திருக்கும் என்று பாம்பே புல்லியன் அசோசியேஷன் தெரிவிக்கிறது. இனிமேலும் தங்கத்தின் விலை குறையவில்லை என்றால், இறக்குமதி அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று பாம்பே புல்லியன் அசோசியேஷன் இயக்குனர் சுரேஷ் ஹூன்டியா தெரிவித்தார். கடந்த வாரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.14,600 ஐ ஒட்டியே இருந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் ( 28.34 கிராம் ) தங்கத்தின் விலை 938.55 டாலராக இருந்தது. தங்கத்தின் எனவே,கடந்த வருடம் ஜனவரி - ஜூன் காலத்தில் 139 டன்னாக இருந்த தங்கத்தின் இறக்குமதி, கடுமையான விலை உயர்வால் இந்த வருடம் ஜனவரி - ஜூன் காலத்தில் 50 டன்னாக குறைந்திருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15 ஆயிரத்தை ஒட்டி இருந்தபோது, இந்தியாவில் தங்கம் இறக்குமதியே செய்யப்படவில்லை என்கிறார் ஹூன்டியா. ஆனால் ஏப்ரலில் வந்த ' அக்ஷய திருதி 'யை முன்னிட்டு அந்த மாதத்தில் மட்டும் 20 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
நன்றி : தினமலர்


சிமெண்ட் விலை மூடைக்கு ரூ.5 குறையலாம்

50 கிலோ எடை கொண்ட சிமெண்ட் மூடையின் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை குறையலாம் என்று தெரிகிறது. சிமெண்டுக்கான தேவை குறைந்திருப்பதாலும், சிமெண்ட்டின் சப்ளை அதிகரித்திருப்பதாலும் அடுத்த மாதத்தில் இருந்து விலை குறையலாம் என்று டீலர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் மும்பை, குஜராத், மற்றும் தென் இந்தியா வில் அதன் விலை இனிமேல் மூடைக்கு ரூ.255 ஆகவும், வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் அதன் விலை ரூ.245 ஆகவும் இருக்கும் என்கிறார்கள். ஜூலை - ஆகஸ்ட்டில் சிமெண்ட்டின் சப்ளை அதிகரிக்கும் என்பதாலும், பருவ மழை காலத்தில் கட்டுமான தொழிலில் தேக்கநிலை ஏற்படும் என்பதால் சிமெண்ட்டுக்கான தேவை குறையும் என்பதாலும், அடுத்த மாதத்தில் அதன் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனடியாக இல்லை : முரளி தியோரா

எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உடனடியாக உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை எவ்வாரெல்லாம் மாறுகிறது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதன் அடிப்படையில்தான் இந்தியாவில் விற்கப்படும் சில்லரை விலை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாறுதல் செய்யப்படும் என்றார் அவர். அவர் மேலும் தெரிவித்தபோது, நாம் வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயிலின் விலை வெள்ளிக்கிழமை அன்று பேரலுக்கு 68.54 டாலராக இருந்தது. அது உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் அந்த விலை மேலும் உயருகிறதா என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எப்படி இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தும் முன், மத்திய அமைச்சரவை கூடி விவாதித்துதான் முடிவு செய்யும் என்றார். இப்போது இந்திய எண்ணெய் கம்பெனிகள், ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்கும் போதும் ரூ.2.96 நஷ்டம் அடைகின்றன. பெட்ரோலி விற்கும் போது ரூ.6.08 நஷ்டம் அடைகின்றன.
நன்றி : தினமலர்