Friday, December 5, 2008

வீட்டு கடன் வட்டி விகிதம் குறையும்

ஆட்டோ மொபைல் துறையில், பல லட்சக்கணக்கானோர் வேலை இழப்பை தவிர்ப்பதற்காக, வர்த்தக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் சுங்க வரி குறைத்து அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரம், வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள வீட்டுக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. நிதித்துறையைக் கையில் எடுத்துக் கொண்ட பின், பிரதமர் மன்மோகன் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு பற்றி அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில், முக்கியமாக கேபினட் செயலர் கே.எம். சந்திரசேகர் தலைமையிலான செயலர்கள் கமிட்டி, முக்கிய முடிவுகளை நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து ஆலோசித்ததால், இன்று கடன் வட்டிவிகித அளவு குறைப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டும், 65 பேர் வேலையிழந்தது குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. தற்போது உரிய முடிவு எடுக்கப்படாவிட்டால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுவிடும். அதே நேரத்தில், குறைந்த கால கடன்களுக்கான வட்டி விகித்தத்தை ரிசர்வ் வங்கி குறைக்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் 2,000 கோடி ரூபாயில் திட்டமும் அறிவிக்கப்பட உள்ளது. நிறுவனங்கள் பணப்புழக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொள்ள, விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. வர்த்தக வாகன உற்பத்தி துறையில், உற்பத்தி சரிந்து வருவதைத் தொடர்ந்து, அவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சுங்க வரியில் சலுகை அளிக்கப்பட உள்ளது. தற்போது, பஸ்களுக்கு 12 சதவீதமும், டிரக்குகளுக்கு 14 சதவீதமும் சுங்க வரி விதிக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளில் தேவை அதிகரிப்பு இருந்தும் கூட, கடந்த அக்டோபர் மாதத்தில், ஏற்றுமதியாளர்கள் 12 சதவீத சரிவை சந்திக்க நேர்ந்தது. இதைத் தவிர்க்க, நிச்சயம் சலுகை அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்