Sunday, March 15, 2009

சத்யத்தை வாங்க போட்டி போடுபவர்கள் யார்

வியாழன், வெள்ளியில் உலகளவில் பெரிய சரிவுகள் ஏற்படாத வரையில், இந்திய சந்தைகள் மேலேயே துவங்கும் என்று முன்னர் கூறியிருந்தோம். உலகளவில் எந்தவிதமான சரிவும் ஏற்படவில்லை. அதே சமயம் ஆசிய அளவிலும், உலகளவிலும் பங்குச் சந்தைகள் மேலேயே ஆரம்பித்ததால், இந்திய சந்தைகள் அதைக் கொண்டாடின என்றே கூற வேண்டும். சந்தை 8,000 புள்ளிகள் அளவிற்கு சென்றதும், இதுதான் சமயம் என்று வாங்கியவர்களுக்கு இந்த 600 புள்ளிகள் வரை மேல் ஏறிய ஏற்றத்தில் லாபம் நிச்சயம் கிடைத்திருக்கும். பணவீக்க சதவீதம் குறைந்திருந்ததனால் சந்தைகள் ரிசர்வ் வங்கியின் இன்னொரு ரேட் கட்டை எதிர்பார்த்து வியாழனன்று மேலே சென்றன. குறிப்பாக வங்கிப் பங்குகள் மேலே சென்றன. பாரதி ஏர்டெல் கம்பெனியின் சி.இ.ஓ., தன்னிடம் இருந்த பாரதி ஏர்டெல் பங்குகளை விற்று விட்டார் என்ற செய்தி சந்தையில் வந்ததும், அந்தக் கம்பெனியின் பங்குகள் குறைய ஆரம்பித்தன. அது, வியாழனன்று சந்தை பெற்றிருந்த லாபத்தில் சிறிது புள்ளிகளை இழக்க வழி செய்தது. முடிவாக மும்பை பங்குச் சந்தை 183 புள்ளிகள் கூடுதலாக முடிவடைந்தது. வெள்ளியன்று, உலக சந்தைகளின் நடப்பை இந்திய சந்தைகளும் பிரதிபலித்தன. மேலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் பங்குகளை வாங்கவும் செய்தன. இவை இரண்டும் சேர்ந்து சந்தை மிகவும் மேலே சென்றது. இன்னொரு காரணம், நுகர்வோர் பொருட்கள் விற்பனை 2.5 சதவீதம் கூடியுள்ளது என்பது. சமீப காலத்தில் நுகர்வோர் பொருட்கள் விற்பனை தேங்கியிருந்தது. விற்பனை கூடியுள்ளது என்ற செய்தி வந்ததால் சந்தையும் கூடியது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 412 புள்ளிகள் கூடி 8,756 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 101 புள்ளிகள் கூடி 2,719 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வியாழன், வெள்ளியில் மட்டும் 595 புள்ளிகள் கூடியுள்ளது மிகவும் சந்தோஷமான செய்தி. வால் ஸ்டீரிட் தொடர்ந்து மூன்று நாட்களாக மேலே சென்று வருகிறது. அது தான் உலகளவிலும் பங்குச் சந்தைகள் மேலே செல்ல காரணமாக இருக்கிறது.
சத்யத்தை வாங்குவதற்கு கடைசியாக ரேசில் எல் அண்ட் டி, ஸ்பைஸ் டெலிகாம், டெக் மகிந்தரா ஆகிய நிறுவனங்களிடையே போட்டி உள்ளது.
கச்சா எண்ணெய் ஒரே நாளில் 11 சதவீதம் கூடியுள்ளது. வழுக்கியே விழுந்து கொண்டிருந்த எண்ணெய் ஒரேயடியாக ஜம்ப் செய்தது பலருக்கு ஆச்சரியம். குறிப்பாக எண்ணெய் உற்பத்தி கம்பெனிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. கெய்ர்ன் இந்தியாவின் பங்குகள் இந்த செய்தி கேட்டதும் மேலே சென்றது. டாலரும் ரூபாயும்: சரிந்து கொண்டிருக்கும் ரூபாயை பார்த்தால் பயமாக இருக்கிறது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் ஒரு டாலருக்கு 39 ரூபாய் என்று இருந்தது. அது தற்போது ஒரு டாலருக்கு 51 ரூபாய்க்கு மேல் வந்து நிற்கிறது. கிட்டத்தட்ட 39 சதவீதம் சரிவு. ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறிய நிம்மதி. டாலர் மதிப்பில் விலைகளைக் குறைத்து, மற்ற நாடுகளுடன் போட்டிப் போட இது ஒரு வாய்ப்பு. இறக்குமதிகள் சென்ற மாதம் 18 சதவீதம் குறைந்துள்ளது என்பதும் ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி. ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஜனவரியில் 11 சதவீதம் கூடியுள்ளது(அதாவது டிசம்பர் விற்பனையை வைத்துப் பார்க்கும் போது). அதே சமயம், சென்ற ஆண்டு ஜனவரியை வைத்துப் பார்த்தால் 5 சதவீதம் கூடியுள்ளது.
அட்வான்ஸ் டாக்ஸ் கட்டிய விவரங்கள் அடுத்த வாரம் வரத் தொடங்கும். அது நிச்சயம் சந்தைக்கு ஒரு தகவலைத் தருவதாக இருக்கும். நாடு எப்படிச் செல்கிறது... கம்பெனிகள் எப்படி செயல்படுகின்றன என்று தெரிய வரலாம். எதிர்பார்த்தது போல பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல தேய்ந்து வருவது ஒருவித பயத்தையும் ஏற்படுத்துகிறது. சென்ற வாரம் 3.03 சதவீதமாக இருந்தது 0.60 புள்ளிகள் குறைந்து 2.43 சதவீதமாக நிற்கிறது. சென்ற ஆண்டு இதே சமயத்தில் 6.21 சதவீதமாக இருந்தது. ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ரிசர்வ் வங்கியே பணவீக்கம் இவ்வளவு கீழே செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் இது தான் குறைந்த அளவாகும். குறையும் பணவீக்கத்தால் சந்தைக்கு செல்லும் போது பை நிறைகிறதோ இல்லையோ மனம் நிறைகிறது; புள்ளி விவரங்கள் தந்த ஆறுதல். தற்போது இருக்கும் நிலைமையை வைத்துப் பார்க்கும் போது அடுத்த வாரம் அட்வான்ஸ டாக்ஸ் வாரமாகத்தான் இருக்கும். அது நன்றாக இருந்தால் சந்தைகளும் அதை வரவேற்று மேலே செல்லும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்