Thursday, September 10, 2009

ஜில்லென்று பயணித்த பயணம் போல சுகம்...

கடந்த மாதம் முழுவதும் சந்தை, 15,000க்கும் 16,000க்கும் இடையே இருந்து முதலீட்டாளர்களை சிறிது கலங்கச் செய்தது உண்மை தான். ஆனால், இந்த வாரம் ஜம்மென்று 16,000 புள்ளிகளையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜில்லென்ற மழையில், சுகமான காற்றுடன் ரயிலில் பயணம் செய்த அனுபவம் தான் அது. ஆமாம், ஜில்லென்று பரவலாக பெய்த மழையும் இந்த ஏற்றத்திற்கு ஒரு காரணம் தான். இந்த வாரம் ஏன் கூடியது? உலகளவில் பங்குச் சந்தைகள் நன்றாக இருந்தது. மேலும், இந்திய பங்குச் சந்தை முதலீடு செய்ய நல்ல இடம், அதுவும் தற்சமயம் சரியான நேரம் என்று, பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. சீசன் முடியும் போதும் மழையும் நன்கு பெய்ய ஆரம்பித்து, இருந்த பற்றாக்குறையை சிறிது போக்கி சென்றதும் ஒரு காரணம். ஜி 20 நாடுகளின் கூட்டணி நாடுகளின் பொருளாதாரத்தை நிலை நிறுத்த பாக்கேஜ்கள் தொடரும் என்று அறிவித்ததும் ஒரு காரணம்.
திங்கள் முதல் நேற்று வரை சந்தை 493 புள்ளிகள் கூடியது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 59 புள்ளிகள் கூடி 16,183 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 9 புள்ளிகள் கூடி 4,814 புள்ளிகளுடனும் முடிந்தது. சந்தை கடந்த 15 மாதத்தின் அதிகபட்சத்தை எட்டியுள்ளது. புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகளில் தற்போது இருக்கும் வெளியீடு ஆயில் இந்தியாவாகும். மற்ற வெளியீடுகள் நன்றாக பட்டியலிடப்பட்டிருக்கும் பட்சத்தில், ஆயில் இந்தியாவும் அமோகமாக செலுத்தப்பட்டிருக்கும். இன்று கடைசி தேதி என்று இருக்கும் போது, நான்கு தடவைகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு ஒரு தடவை கூட இன்னும் எட்டவில்லை. தற்போது வரும் எல்லா வெளியீடுகளும் விலை அதிகமாக இருப்பது போல் தோன்றுவதாலும், பட்டியலிடப்படும் போது முதலீட்டாளர்களுக்கு வட்டிக்கு கூட கட்டாமல் போய்விடுவதாலும் அதிகம் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது. இது சந்தைக்கு நல்லதல்ல. கம்பெனிகள் முதலீட்டாளர்களுக்கு சிறிது லாபம் வரும் படி விலைகளை நிர்ணயிக்கவேண்டும்.

வட்டி விகிதங்கள்: வங்கிகளிடையே பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாலும், அதிகம் பெரிய கம்பெனிகள் கடன்கள் வாங்காததாலும் வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கின்றன. வருங்காலங்களில் மக்களின் தேவைகள் அதிகமாகும் போது, கம்பெனிகள் தங்கள் உற்பத்தி தேவைகளுக்கு கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். ஆதலால், வட்டி விகிதங்கள் கூடும் வாய்ப்பு உள்ளது.

ஸ்டேட் பாங்கின் லாபங்கள்: வரும் இரண்டாவது காலாண்டு முடிவில் ஸ்டேட் பாங்க் தனது லாபம் 30 முதல் 35 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் வங்கி. மேலும் நிறைய லாபங்களை சம்பாதித்து வருகிறது. ஒவ்வொரு காலாண்டும் சிறப்பாக பரிணமித்து வருகிறது. ஆதலால், நீண்டகால அடிப்படையில் வாங்கி வைக்கலாம் இந்த வங்கியின் பங்குகளை.

தகிக்கும் தங்கம்: சாதாரண மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு தங்கம் சென்று விட்டது. ஒரு அவுன்ஸ் ஆயிரம் டாலர்களையும் தாண்டி விட்டது. முன்பு, 1,000 டாலர்களைத் தாண்டியிருந்தாலும், டாலர் எதிரான ரூபாயின் மதிப்பு அப்போது வலுவாக இருந்ததால் விலை உயர்வு தெரியவில்லை. தற்போது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வேறு விழுந்து வருகிறது. ஆதலால், 10 கிராம் சுத்தத் தங்கம் 16,000 ரூபாய் வரை சென்று நிற்கிறது. தங்கம் என்று பிள்ளைகளுக்கு பெயர் வைத்து மட்டுமே கூப்பிட முடியும் போல் இருக்கிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -

நன்றி : தினமலர்