Friday, June 26, 2009

ஏறியது பங்கு சந்தை

ஜூலை சீரியஸின் முதல் நாளான இன்று, பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. கேப்பிட்டல் குட்ஸ், பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி மற்றும் ரியஸ் எஸ்டேட் பங்குகளின் வளர்ச்சியால் சந்தை குறியீட்டு எண்களான நிப்டி 4350 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14700 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து முடிந்திருக்கிறது. கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஓ என் ஜி சி, எல் அண்ட் டி, இன்போசிஸ், பெல், டிசிஎஸ், பார்தி, எஸ்பிஐ, ஸ்டெர்லைட், செய்ல், ஹெச்டிஎப்சி,மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால், சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இருந்தாலும் சன் பார்மா, ரான்பாக்ஸி லேப், ஹீரோ ஹோண்டா, எம் அண்ட் எம், மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சன் பார்மா வின் பங்கு மதிப்பு இன்று 11.5 சதவீதத்திற்கு மேல் குறைந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 419.02 புள்ளிகள் ( 2.92 சதவீதம் ) உயர்ந்து 14,764.64 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 133.65 புள்ளிகள் ( 3.15 சதவீதம் ) உயர்ந்து 4,375.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

நன்றி : தினமலர்



டாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்தது

2008 - 09 நிதி ஆண்டில், உலகின் ஆறாவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 2,045 பேர்களின் வேலை பறிபோகும் என்றும் தெரிகிறது. ஐரோப்பாவில் ஸ்டீலுக்கான தேவை குறைந்து போனதையடுத்து கடும் நெருக்கடியில் இருக்கும் ஆங்கிலோ - டச் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையை விட இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்றார் டாடா ஸ்டீலின் மேலாண் இயக்குனர் முத்துராமன். பொருளாதார மந்த நிலையால், ஸ்டீலை அதிகம் பயன்படுத்தும் கட்டுமான துறை மற்றும் ஆட்டோமொபைல் தொழில் மோசமாக நலிவடைந்து போய் இருக்கிறது. எனவே ஆர்செலர் மிட்டல் போன்ற பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களே உற்பத்தியை வெகுவாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை, இரண்டாம் உலகப்போருக்குப்பின் இந்த வருடம் தான் ஸ்டீலுக்காவ தேவை இந்தளவுக்கு மோசமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


இன்போசிஸ் துணை தலைவர் நந்தன் நிலேகனி ராஜினாமா ; மத்திய அரசு பணியில் சேர்ந்தார்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸில் துணை தலைவராக இருப்பவர் நந்தன் நிலேகனி. அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியில் சேர்ந்திருக்கிறார். இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் தலைவராக நிலேகனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனம் துவக்கப்பட காரணமானவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். 2007ல் அந்த நிறுவனத்தின் துணை தலைவரான பின், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தார். 21 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடைய இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


மைக்கேல் ஜாக்ஸனின் மரணம் குறித்த செய்தியை அறிய இன்டர்நெட்டை மொய்த்த அவரது ரசிகர்கள்

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்ததாக செய்தி வெளியான உடனேயே அவரை குறித்த செய்திகள் மற்றும் விபரங்களை அறிய, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இன்டர்நெட்டை மொய்க்க ஆரம்பித்து விட்டனர். அதிகம் பேரால் பார்க்கப்பட்டது கூகிள் வெப்சைட்தான். அவரது மரணம் குறித்த செய்திகளை விட அவர் குறித்த விபரங்களை அறிய நிறைய பேர் கூகிள் வெப்சைட்டை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் அவரது மரணம் குறித்த செய்திகளை அறிய லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெப்சைட்டை அதிகம் பேர் பார்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏனென்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்திருக்கிறார்.எனவே உள்ளூர் பத்திரிக்கையான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இல் தான் அவர் குறித்த செய்திகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருதியிருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்