Saturday, May 23, 2009

ஆறு மாதங்களில் பொருளாதார நிலை சீராகும்: ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை

'அடுத்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதார நிலைமை சீராகும்' என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார். மும்பையில் நிதித்துறை நிர்வாக உச்சி மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற அவர் பேசியதாவது: உலகச் சந்தையில் அமைதி திரும்புகிறது, நாம் எடுத்திருக்கும் நிதித்துறை நடவடிக்கைகளும் பலன் தரத் துவங்கியிருக்கின்றன. மெர்சண்டைஸ் ஏற்றுமதி அளவு இந்தியாவைப் பொறுத்தளவில் குறைவு. அது இழப்பீட்டைக் குறைத்திருக்கிறது. வசதியான அன்னியச் செலாவணி, பணவீக்கம் அதிகரிக்காத போக்கு ஆகியவை நமக்குச் சாதகமான அம்சங்கள். இவை எல்லாம் சேர்ந்து பொருளாதார மந்த நிலையை அகற்றும்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்ற பாதிக்கப்பட்ட நாடுகளை ஒப்பிடும் போது அதிக வலி ஏற்படாத செயலாக அமைந்தது. அடுத்து வரும் 2009-2010ம் ஆண்டுகளில் மொத்த வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். உலகச் சந்தை நிலவரங்களைப் பார்த்தால் இன்னமும் அபாயம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஏற்கனவே அளிக்கப்பட்ட ஊக்குவிப்புகளை வைத்து நாம் எப்படிச் செயல்படுகிறமோ, அதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.
உலக நாடுகளில், தொழில்துறை தேக்கம் ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், திருப்பிச் செலுத்தப்படாத கடன் வங்கிகளில், தேக்கம் அதிகமாக வாய்ப்பு உண்டு. ஆனால், பெரிய அளவு நடைமுறைப் பாதிப்பை ஏற்படுத்தி விடாது.
அதே சமயம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, அதைத் தொடர்ந்து நிதி ஊக்குவிப்புச் சலுகைகள் அளித்த செயல் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியது என்று எல்லாம் சேர்ந்து கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவித்திருக்கிறது. இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்