Monday, April 13, 2009

திவால் நோட்டீஸ் கொடுக்கும் வேலையை பாருங்கள் : ஜெனரல் மோட்டார்ஸூக்கு அமெரிக்க அரசு ஆலோசனை

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் உலகின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெனரல் மோட்டார்ஸ், வரும் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் திவால் நோட்டீஸ் கொடுப்பதற்கான வேலையை இப்போதே பார்ப்பது நல்லது என்று அமெரிக்க அரசின் நிதித்துறை ஆலோசனை தெரிவித்திருப்பதாக தெரிகிறது. பொருளாதார சரிவால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸூக்கு ஏற்கனவே அமெரிக்க அரசு 13.4 பில்லியன் டாலர்கள் நிதி உதவி செய்திருக்கிறது. அந்த உதவியை செய்யும் போதே அது, ஜெனரல் மோட்டார்ஸ் அதன் நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தது. அப்போது தான் அதன் விற்பனை மற்றும் மதிப்பு நிரந்தரமாக பாதிக்கப்படாமல் இருக்கும் என்றது. ஆனால் அரசு சொல்லிய மாற்றங்களை இன்னும் ஜெனரல் மோட்டார்ஸ் செய்யாமல் இருக்கிறது. மேலும் அதற்கு இன்னும் நிறைய பண உதவி தேவைப்படுகிறது. அதை அமெரிக்க அரசு கொடுக்க தயாராக இல்லை. வேறு வழிகளில் தேவையான பணத்தை தயார் செய்ய முடியாமல் போனால் அது திவால் நோட்டீஸ் கொடுப்பதே நல்லது என்று அமெரிக்க அரசின் நிதித்துறை தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


ஏறியது பங்கு சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பேங்கிங், மெட்டல், ரியல் எஸ்டேட், ஆட்டோ, ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் இன்று பெருமளவில் வாங்கப்பட்டதால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன. இன்று வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 11,000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,400 புள்ளிகளுக்கு மேலும் சென்றது. காலை வர்த்தகம் ஆரம்பித்து மதியம் ஆகியும் சந்தை அவ்வளவாக உயராமலும் குறையாமலும்தான் இருந்தது. பின்னர்தான் வேகமாக உயர துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 163.36 புள்ளிகள் ( 1.51 சதவீதம் ) உயர்ந்து 10,967.22 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 40.55 புள்ளிகள் ( 1.21 சதவீதம் ) உயர்ந்து 3,382.60 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. சத்யத்தின் பங்குகள், பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் டெக் மகேந்திராவுக்கு விற்கப்படுவ தால், சத்யத்தின் பங்கு மதிப்பு இன்று 3.61 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதன் பங்குகள் இன்று 239.40 சதவீதம் கூடுதலாக கைமாறி இருக்கிறது.
நன்றி : தினமலர்


இன்னும் 3 முதல் 5 வருடங்களில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் : மாருதி சுசுகி திட்டம்

விற்பனையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் கம்பெனியாக இருக்கும் மாருதி சுசுகி, இன்னும் 3 முதல் 5 வருடங்களில் எலக்ட்ரிக் மற்றும் எல்.பி.ஜி. கார்களை தயாரித்து வெளியிட முடிவு செய்திருக்கிறது. இவ்வகை கார்களில் மூன்று முதல் நான்கு மாடல்களை தயாரித்து இந்திய சந்தையில் விற்பனைக்கு விட அது முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் சிறிய கார் சந்தையில், பெட்ரோல் டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருளை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த அது திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து மாருதி சுசுகியின் மேலாண் இயக்குனர் ஷின்சோ நாகானிஷி தெரிவிக்கையில், நாங்கள் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு விட திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு ஐந்து அல்லது அதற்கு மேல் வருடங்கள் ஆகலாம் என்றார். இது குறித்து மாருதி சுசுகியின் சேர்மன் பார்கவா தெரிவிக்கையில், நாங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இப்போது ஒரு காரை எல்.பி.ஜி. காராக மாற்ற வேண்டுமானால் அதற்கான சாதனங்களின் விலை ரூ.40 ஆயிரமாக இருக்கிறது. அது கொஞ்சம் விலை உயர்வுதான். எனவேதான் நாங்கள் அவ்வகை கார்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறோம். ஆனால் அது 2010 அல்லது 2011 ல் தான் வெளிவரும் என்றார்.
நன்றி : தினமலர்


டெக் மகேந்திராவின் கைக்கு செல்கிறது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் வாங்கிக்கொள்வதாக டெக் மகேந்திரா தெரிவித்திருந்ததால், அவர்களிடம் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகள் விற்கப்படுகிறது. பங்கு ஒன்றை ரூ.49.50 என்ற விலையில் வாங்கிக்கொள்வதாக லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் தெரிவித்திருந்ததால் அவர்களுக்கு சத்யம் கிடைக்காமல் போய் விட்டது. சத்யத்தை வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்கள், என்ன விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை இன்று ( 13.04.09 ) காலை 9 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சத்யம் கம்ப்யூட்டர்ஸின் போர்டு தெரிவித்திருந்தது. வாங்க விருப்பம் தெரிவித்தவர்கள் எல்லோரும் இரண்டு கவர்களை கொடுத்திருந்தனர். ஒன்றில் அவர்களது டெக்னிக்கல் விபரங்கள் இருந்தது. இன்னொன்றில் நிதிநிலை குறித்த விபரம் இருந்தது. டெக்னிக்கல் விபரங்களில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஒருவரது நிதி நிலவரம் குறித்த விபரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், ஒரே மாதிரியான விலையை குறிப்பிட்டு, ஒரே வரிசையில் இருந்தால், அவர்களில் ஒருவர் ஓப்பன் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் இருந்தது. ஆனால் இப்போது அதற்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. மகேந்தியா அண்ட் மகேந்திராவின் கம்ப்யூட்டர் பிரிவு நிறுவனமான டெக் மகேந்திரா தான் அதிக விலைக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்திருப்பதால், அவர்களுக்கே சத்யத்தில் 51 சதவீத பங்குகளை விற்க அதன் போர்டு முடிவு செய்திருக்கிறது. எனினும் அதன் இறுதி முடிவு கம்பெனி லா போர்டு கையில் தான் இருக்கிறது. இது குறித்து கம்பெனி லா போர்டு தெரிவிக்கையில், சத்யத்தின் 31 சதவீத பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் வாங்கிக்கொள்ள முன்வந்திருக்கும் டெக் மகேந்திரா, ஒரு விண்ணப்பத்தை வரும் வியாழக்கிழமைக்குள் எங்களிடம் அளிக்க வேண்டும் என்றும், அதற்கு 24 மணி நேரத்திற்குள் பதில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. சத்யத்தை வாங்க எல் எண்ட் டி, டெக் மகேந்திரா, காஹ்னிசென்ட்,மற்றும் வில்பர் ரோஸ் நிறுவனங்கள் போட்டியிட்டன.
நன்றி : தினமலர்