Friday, November 27, 2009

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ஆனந்த் சர்மா

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டுள்ளது. இது நேற்று பங்குச் சந்தை, கடன் சந்தை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இன்று துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. துபாய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குச்சந்தையில் எதிரெலித்து கடும் சரிவினை கண்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, துபாய் பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, ரியல் எஸ்டேட் தொழிலுகோ எந்த வித பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார். மேலும் , இந்திய பொருளாதாரம் பரந்த அளவிலானது. துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இங்கும் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை நன்கு செயல்பட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


லிபரான் அறிக்கை: அத்வானிக்கு புது வாழ்வு?

பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சிப் பூசலும், ராஜ்நாத் சிங்குக்குப் பிறகு புதிய தலைவர் யார் என்கிற சர்ச்சையும் ஓய்ந்துள்ள நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை முன்கூட்டியே வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி கடந்த ஜூன் 30-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில் நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வெளியானது. பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர் மீது கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாஜகவின் புதிய தலைவர் நிதின் கட்காரி என்று முடிவு செய்யப்பட்டு, அவர் இந்த ஆண்டு கடைசியில் பதவியேற்க உள்ளார். இதேபோல மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைவராக அருண் ஜேட்லி தொடர்ந்து நீடிப்பார் என்பதும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எல்.கே.அத்வானி ராஜிநாமா செய்த பிறகு, அந்தப் பதவியை சுஷ்மா சுவராஜ் வகிக்க இருக்கிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.

கட்சிக்குப் புதிய தலைவரும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அத்வானி தனது நண்பர்களிடம் கூறிவருகிறார். புதிய தலைமை செயல்படும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதற்குத் தம்மை யாரும் பொறுப்பாக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு முக்கிய காரணம்.

முரளி மனோகர் ஜோஷிதான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவதின் விருப்பம். ஆனால், இதற்கு அத்வானி உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங்கப்பரிவாரத் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நீடித்துவந்த நிலையில், நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என்று தெரிகிறது.

லிபரான் அறிக்கை தாக்கல், அத்வானியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும் என்பது பலரது கருத்தாகும். அதாவது இந்த அறிக்கை மீதான நடவடிக்கையாக அத்வானி சிறைக்குச் சென்றால் அது கட்சிக்கு வலுசேர்க்கும் என்றும் பலர் கருதுகின்றனர். எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த அறிக்கையின்பேரில் அத்வானியின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்குப் புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பாது. ஆனால், அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று கூறிவரும் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய லோகதளம் தலைவர் லாலு பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தக்கூடும்.

மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. அதாவது கரும்புக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்கும். மாநில அரசு இதற்கு மேல் விலை நிர்ணயம் செய்தால் அதைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு, அதைத் திசைதிருப்பும் முயற்சியில் லிபரான் கமிஷன் அறிக்கையைக் கசிய விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபரான் கமிஷன் அறிக்கை இந்தக் கூட்டத்தொடரின் கடைசியில்தான் தாக்கல் செய்யப்பட இருந்தது.

கரும்பு கொள்முதல் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். மிகவும் முக்கியமான விஷயத்தில் சரத் பவார் முன்யோசனையுடன் செயல்படாதது ஏன் என்று காங்கிரஸôர் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மைத் தேர்தல்களில் வெற்றிபெற்றபோதிலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்னையைக் கையிலெடுத்துக் கொண்டு தங்களை முற்றுகையிடக்கூடும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. மக்களவையில் அது திமுகவின் ஆதரவையே பெரிதும் நம்பியுள்ளது. "ஸ்பெக்டரம்' ஊழல் விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அக்கட்சி ஏற்கெனவே காங்கிரஸýக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ-க்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். இது காங்கிரஸýக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை, தொலைத் தொடர்புத்துறையில் ஊழல், மதுகோடா விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடாமல் இருக்க காங்கிரஸ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவை அடக்கிவைக்கும் பொருட்டு லிபரான் கமிஷன் அறிக்கையை கையிலெடுத்துக் கொண்டுள்ளது.

அயோத்தி விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட நிலையில், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்துவிட்ட நிலையில் லிபரான் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் அயோத்தி பேச்சு எழுந்துள்ளது.

17 தொகுப்புகளைக் கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி வேண்டும் என்றே பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி செயல் கமிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காங்கிரûஸ ஆதரிக்காத முஸ்லிம்கள் இதுகுறித்து மௌனமாக இருந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது பிரதமர் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கமிஷன் கூறியுள்ளது.

பாஜக தலைவர் அத்வானி சரிவரச் செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களாக சங்கப் பரிவாரங்கள் அவரைக் குறைகூறி வந்தன.

மேலும் அத்வானி ஆதரவாளர்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறிவந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்னர் அத்வானியை அனுசரித்துச் செல்ல முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

பாஜகவின் அடுத்த தலைவராக நிதின் கட்காரியை அத்வானிதான் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. நரேந்திர மோடியை கட்சித் தலைவராக்கிவிட வேண்டும் என்று அத்வானி விரும்பினார். அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் கட்சித் தலைவர் பதவியை ஏற்க மோடி தயாராக இல்லை.

புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள நிதின் கட்காரி சரிவரச் செயல்படத் தவறும்பட்சத்தில் அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

லிபரான் கமிஷன் அறிக்கை வெளியீடும், அதன் தொடர் நிகழ்வுகளும் அத்வானி எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர வழிவகுக்கலாம். அதை பாஜக தலைமையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கிறாரோ இல்லையோ நிச்சயம் இது அவரது கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

3ஜி மொபைல் பேன்சி எண்கள் ஏலம்

பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வர்த்தக ரீதியாக வெளியிட்ட '3ஜி' மொபைல் இணைப்பின் 'பேன்சி எண்' விரும்புவோர் ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. அதிகப்படியான தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு விரும்பிய எண் வழங்கப்படுகிறது.

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,தற்போது இரண்டாம் தலைமுறை '2ஜி' சேவையில் இருந்து முன்னேறி வீடியோ கால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 3ஜி சேவைக்கு மாறியுள்ளது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி சமீபத்தில் '3ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்பே, இச்சேவையை பெற விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று சென்னை தொலைபேசி அறிவித்திருந்தது.
தற்போது '2ஜி' சேவை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், 3ஜி சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிம்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர,' 2ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி '3ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியையும் சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. சிம் கார்டை மாற்ற வேண்டியதில்லை என்றாலும், கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு 59 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது '3ஜி 'மொபைல் இணைப்பு எண்களில் 'பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய '3ஜி' இணைப்புகள் அனைத்தும் '94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை பேன்சி எண்களாக குறிக்கப்படுகின்றன.

சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கென குறைந்த பட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் ஆயிரம் ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கடைசி 5 எண்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகை குறைந்த பட்ச இருப்பு தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள் இந்த தொகையை தொடர்ந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது.

இந்தவகையில், சென்னையில் '3ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள் பேன்சி எண்களாக பிரிக்கப்பட்டு, அவற்றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம் ரூ. 1.50 மட்டுமே. பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரீபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 300 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி வரையில் ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் '2ஜி' சேவைக்கான மொபைல் எண்கள் ஏலம் முடிந்தது. அதில், 250 பேன்சி எண்கள் ஏலம் விடப்பட்டன.இந்த ஏலத்தில் தான் விரும்பிய மொபைல்போன் எண்ணிற்காக ஒருவர் அதிகபட்சமாக ' 55 ஆயிரம்' ரூபாய் செலுத்தி எடுத்துள்ளார். தொடர்ந்து தற்போது '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதில் 293 எண்கள் ஏலத்தில் விடப்படுகிறது. '2ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் சென்னை தொலைபேசிக்கு 4.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. சென்னை தொலைபேசி தவிர தமிழ்நாடு தெலைதொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலைபேசி எண்கள் ஏலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு எண்கள் ஏலம் விடப்படும் நிலையில், பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கும் அதிகளவில் வருமானம் கிடைக்கும். தற்போது நடந்துவரும் 3 ஜி மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மக்களிடமும் விழிப்புணர்ச்சி அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற ஏலம் நடத்தப்படுவது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித் தருவதாக அமைகின்றது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' 2 ஜி மொபைல் எண்கள் ஏலத்தை விட இதில் அதிக தொகை நிறுவனத்திற்கு கிடைக்கும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால் அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அதே நேரத்தில் அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால் 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள் திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால் அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.

நன்றி : தினமலர்

இந்திய ஐ.டி., துறையில் அதிகரிக்கிறது வேலைவாய்ப்பு

இந்தியாவில் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு வருகின்றன. அனைத்து நாடுகளிலும் இயல்புநிலை ஏற்படத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. இதனையடுத்து, இவ்வாண்டில், இத்துறையில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று நாட்டின் சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குனர் (மனிதவள மேம்பாடு) மோகன்தாஸ் பை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, ஐ.டி., துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம் என்று தெரிவித்தார். மேலும் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


தகிக்கிறது தங்கம் : சவரன் ரூ.13,464

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 13,464 ரூபாயை எட்டியது. தங்கத்தின் விலை நேற்று மாலை சற்று குறைந்து 13,368 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை எப்போதுமில்லாத வகையில் தற்போது 13 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,655 ரூபாயாகவும், ஒரு சவரன் 13,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது.
ஒரு கிராம் 1,675 ரூபாயாகி, ஒரு சவரன் 13,400 ரூபாயை எட்டிப்பிடித்தது. மாலை கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 1,671, சவரன் 13,368 ரூயாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1683 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ஆயிரத்து 464 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 18 ஆயிரத்து 100 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 31.80 ரூபாயாக உள்ளது. பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 715 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலை நாளுக்குள் நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், சில நாட்களில் சவரன் 14 ஆயிரம் ரூபாயை எட்டிப்பிடிக்கும் என தெரிகிறது.
நன்றி : தினமலர்