Tuesday, July 21, 2009

பிரக்ஞையிழந்து நிற்கும் சமூகம்...

பரிணாம வளர்ச்சியால் சிந்திக்கும் திறனுள்ள மனிதனாக உருமாற்றம் அடைந்த விலங்கினம், தனித்தனிக் குழுக்களாகத் திரிந்தபோது, தங்களது பாதுகாப்புக்காகக் கட்டமைத்ததுதான் சமூகம்.
கடைசியில், அந்தச் சமூகத்தைக் காப்பதற்காகவே போர்களை நடத்தி, தங்களைத் தாங்களே, மனித இனம் பலியிட்டுக் கொள்ளத் தொடங்கியது.
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இனம், மதம், மொழி, இடத்தின் பெயரால் சமூகத்தில் நடந்த மோதல்களால், ரத்தக் கறை படியாத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு, "போர்' எனும் கிருமி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது.
தற்போதைய போர்களில் பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்கள், நோய்க் கிருமிகளைவிட அதிகமான மனிதர்களைக் கொல்கின்றன.
நவீன மருத்துவ உதவியுடன், கிருமிகளையாவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தி விட முடியும்.
ஆனால், படைப்பின் நோக்கத்தையே சிதைக்கும் போர்களைத் தடுக்க, மேற்கொள்ளப்படும் எல்லாவித அஹிம்சை முறைகளும் தோற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒருபுறம் மனிதர்கள் கூட்டம், கூட்டமாகக் கொல்லப்படுவதை மற்றொருபுறம் மெüன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே நீடிக்கிறது.
சூடான், நைஜீரியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் உள்நாட்டுப் போர்களால் மிகப் பெரிய அகதி முகாம்களாகி விட்டது கண்கூடு.
அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு நிவாரணம் மேற்கொண்டு, புரையோடிய புண்ணுக்கு மருந்திடும் பணியை மட்டுமே, சர்வதேச அமைப்புகள் செய்து வருகின்றன.
கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் அதீத வளர்ச்சியால், உலகம் சுருங்கியது. ஆனால், நாடு பிடிக்கும் வேட்கையில் சர்வாதிகாரிகள் நடத்திய போர்கள், கோடிக்கணக்கான மக்களை, அவர்களது வாழ்விடத்தோடு சேர்த்து அழித்தன.
இரண்டாகப் பிளக்கப்பட்ட நாடுகளிடையே தீராத பிரச்னைகள் உருவாக்கப்பட்டு, மேலை நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ், நிரந்தரமாக அவை கொண்டு வரப்பட்டன.
கடந்த நூற்றாண்டில் சமூகம் எதிர்கொண்ட இரு பேரழிவுகளான உலகப் போர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கு மேல் என்கிறது ஓர் ஆய்வு.
இயற்கைப் பேரழிவின்போது கூட, இதுபோன்ற அதிகமான உயிரிழப்புகள் குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டதில்லை.
இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா முதன்முதலாக பரிசோதித்த இரு அணுகுண்டுகள், ஜப்பான் நாட்டின் இரு நகரங்களையே தரைமட்டமாக்கின.
துயரமான வரலாற்றுப் பதிவாகிவிட்ட அந்நிகழ்வில், ஓரிரு வினாடிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அணுகுண்டுத் தாக்குதலின் கதிரியக்கப் பாதிப்புகள், ஆயிரம் ஆண்டுகளுக்கேனும் நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வநாசம் நிச்சயம் என்பதை உணர்ந்தும், ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒரே நாளில் அழிப்பதற்குண்டான அளவுக்கு அணு ஆயுதங்களை, வல்லரசு நாடுகள் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, அதிநவீன போர் உத்திகளால் படைத்திறனைப் பன்மடங்கு பெருக்கி, விண்வெளி யுத்தத்துக்கே மேலைநாடுகள் தயாராகிவிட்ட நிலையில், இனியோர் உலக யுத்தம் மூண்டால், புவியும் ஓர் நெருப்புக் கோளமாகி, பேரண்டத்தில் சுற்றிவரும் என்பதில் சந்தேகமில்லை.
இதில், வளரும் நாடுகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.
குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கூட தன்னிறைவை அடையாத அந்நாடுகளும், ஆயுதங்களை வாங்க பெரும் பணத்தைச் செலவிட்டு வருகின்றன.
ஆயுதப் போட்டியை உருவாக்கி, வளரும் நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களை முடக்கி, அந்நாடுகள் எப்போதும் தங்களிடம் கையேந்திகளாக நிற்கும் தந்திரத்தை, மேலைநாடுகள் செயல்படுத்தி வருகின்றன.
இதனால், கோடிக்கணக்கான ஏழைகள் வறுமைக் கோட்டுக்குள்ளேயே, விட்டில் பூச்சிகளைப் போல வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலம் நீடிக்கிறது.
ராணுவத்துக்கு, இந்தியா ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடும் நிதி, சில ஆண்டுகளுக்கேனும் சுகாதார மேம்பாட்டுக்குத் திருப்பி விடப்பட்டால், அத்தனை ஏழைகளுக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்கலாம் அல்லது அத்தொகையில், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்துவிடலாம் போன்ற செய்திகள் வியப்பை அளிக்கவில்லை.
போர்களற்ற சமுதாயம் உருவாக மதங்களாவது துணை நிற்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பல நாடுகளில் மத மோதல்கள் தீராத பிரச்னையாக நீடிக்கின்றன.
தெற்காசியாவில் அதிகமான இசுலாமியர்களை ஏவுகணைகளால் அழித்த நாடுகள் எவை எனக் கேட்டால், ஈராக், பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் கூட பதில் அளித்துவிடும் அளவுக்கு கிழக்கும், மேற்கும் நட்பு (?) பாராட்டி வருகின்றன.
புத்த மதம் தழுவிய நாடும், பெரும் போரை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்திருப்பது, புவி சந்தித்திருக்கும் விநோதங்களில் ஒன்று.
நேயம், சக உயிர்களைக் காத்தல் உள்ளிட்ட எந்தவிதமான மத சித்தாந்தங்களுக்கும் இடம் கொடாமல், காட்டு விலங்குகளைப் போல மனிதர்களை வேட்டையாடி அழிக்கும் கொலைத் தொழிலான போர், துரதிருஷ்டவசமாக தற்போதைய நவீன சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
எதிர்காலத்தில் ஆயுதப் போட்டியாலும், சர்வாதிகார மனப்பான்மையாலும் நடத்தப்படும் போர்களால்தான், மனித குலத்துக்கு பேராபத்து ஏற்பட உள்ளது.
நுகர்வுக் கலாசாரத்தால் சுயநலம் மிகுந்திருக்கும் காலகட்டத்தில், பிரக்ஞையிழந்து நிற்கும் சமூகம் எதிர்கொண்டுள்ள பேராபத்து போர்தான்.
போருக்குப் பின் அமைதி திரும்பும் என்று, எந்தவொரு நாட்டின் தலைவராவது உறுதி அளித்தால், அது மயான அமைதியாகத்தான் இருக்கும்..!
அங்கே வாழ்வை இழந்து, வேரற்ற மரங்களைப் போல விழும் மனிதர்களைப் புதைக்கக் கூட மனிதர்கள் இல்லாமல் போகலாம்..!
கட்டுரையாளர்: ப. செ. சங்கரநாராயணன்
நன்றி : தினமணி

சரிவில் முடிந்த பங்கு சந்தை

கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 13.4 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்த மும்பை பங்கு சந்தை இன்று சரிவில் முடிந்திருக்கிறது. இன்று வர்த்தக நேரத்தில் 15,234 மற்றும் 14,955 புள்ளிகளுக்கிடையே இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 128.52 புள்ளிகள் குறைந்து 15,062.49 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 33.15 புள்ளிகள் குறைந்து 4,469.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஐ.டி, பவர், ரியாலிட்டி,மற்றும் பேங்கிங் பங்குகள் சரிந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் ஐ.டி. இன்டக்ஸ் 1.7 சதவீதம் குறைந்திருந்தது. டி.சி.எஸ்., எம்பசிஸ், மற்றும் டெக் மகிந்திரா பெரும் சரிவை சந்தித்த நிறுவனங்கள். அதே போல் பவர் இன்டக்ஸ் 1.7 சதவீதமும், பேங்கிங் இன்டக்ஸ் 1.4 சதவீதமும் சரிந்திருந்தன. பேங்கிங் பிரிவில் இன்டுசின்ட் பேங்க், ஓ.பி.சி.,மற்றும் கோடக் மகேந்திரா பேங்க் பெரும் சரிவை சந்தித்திருந்தன. ரியாலிட்டி இன்டக்ஸ் 1.2 சதவீத சரிவை அடைந்திருந்தது. ஆனால் மெட்டல் இன்டக்ஸ் 1.2 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது.
நன்றி : தினமலர்


குறைந்த விலை வாட்ச்சுகளை தயாரித்து விற்பனை செய்ய கேஸியோ திட்டம்

வாட்ச்சுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பிரபல ஜப்பான் நிறுவனமான கேஸியோ, குறைந்த விலை வாட்ச்சுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர நகர்களில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டில் வாட்ச் விற்பனையில் 40 சதவீத வளர்ச்சியை அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதே போல் அதன் சேல்ஸ் பாயிண்ட்களையும் இரட்டிப்பாக்க முடிவு செய்திருக்கிறது. நாங்கள் எங்கள் பிசினஸ் செயல்திட்டத்தை மாற்றி விட்டோம். மெட்ரோ நகரங்களில் இருந்து சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கு செல்ல தீர்மானித்து விட்டோம் என்றார் கேஸியோ இந்தியாவின் தலைவர் ( சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் ) குல்புஷன் சேத். இப்போது இந்தியாவில் 600 அவுட்லெட்களில் எங்களது வாட்ச்சுகள் கிடைக்கின்றன. அதை 2010ல் 1,200 ஆக உயர்த்த முடிவு செய்திருக்கி றோம். அவைகள் பெரும்பாலும் சிறிய நகரங்களில் இருக்கும் என்றார் அவர். அவர் மேலும் தெரிவித்தபோது, இந்த ஆண்டில் மட்டும் நாங்கள் 70 - 80 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அவைகள் ரூ.3,000 க்கும் குறைவான விலையில் இருப்பவை. இன்னும் பல புது மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போது கேஸியோவின் சுமார் 800 வகையான வாட்ச்சுகள் இந்தியாவில் விற்கப்படுகின்றன. அவைகள் ரூ.30,000 வரை விலையில் இருப்பவை. மேலும் இவைகள் அனைத்தும் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு இங்கு விற்கப்படுகின்றன.

நன்றி : தினமலர்


கற்றலில் கேட்டலே நன்று!

கல்வி என்பது எப்போதுமே ஏதாவது ஒரு விவாதத்தில் சிக்காமல் இருப்பதில்லை. இந்த முறை பத்தாவது வகுப்புக்கு பொதுத் தேர்வு அவசியமா, தேர்வே இல்லாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பிவைத்துவிடலாமா என்ற சர்ச்சை மூண்டிருக்கிறது. இந்த சர்ச்சையின் நாயகர் மத்திய அரசில் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்சர் கபில் சிபல் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வழக்கறிஞரான கபில் சிபல் சற்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார் என்பதுடன் விபரீதமாகவும் சிந்தித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
நம் நாட்டில் இப்போது அடுத்து அடிபடும் வார்த்தை சமச்சீர் கல்வி. அதாவது எல்லோரும் ஒரே மாதிரியான பாடங்களை, ஒரே மாதிரியான பட்டங்களுக்கு எல்லா மாநிலங்களிலும் எல்லா பல்கலைக்கழகங்களிலும் படிக்க வேண்டும், அப்போதுதான் கல்வி சமச்சீராக இருக்கும் என்பதாகும். எனவே மாநிலக் கல்வி வாரியம், மத்திய கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி வாரியம் என்றெல்லாம் பிரிவினைகள் தேவையில்லை என்பதே இதை வலியுறுத்துவோரின் வாதம். இவர்களுடைய வாதங்கள் எல்லாம் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு எழுத வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
பொது நுழைவுத் தேர்வு இல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்களைச் சேர்த்தால் நகர்ப்புற மாணவர்களோ அல்லது கல்வியில் சிறந்து விளங்கும் ஓரிரு மாநிலங்களின் மாணவர்களோ மட்டும் உயர் கல்விக் கூடங்களில் இடம்பெற்று விடுவார்கள் என்பதே இவர்களுடைய அச்சம். அதற்காகத்தான் சமச்சீர் கல்விக்கு அழுத்தம் தருகிறார்கள்.
மாணவர்களில் 3 ரகம் என்று அந்நாளிலேயே தரம் பிரித்திருக்கிறார்கள். கற்பூரம், கரித்துண்டு, வாழைமட்டை ஆகியவற்றைப் போல அறிவாற்றல் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த சமச்சீர் கல்வி, தரத்தை உயர்த்த எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும்?
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன பிறகும் கல்வி வளர்ச்சி நாம் விரும்பியபடி இல்லை. அரசு பள்ளிக்கூடங்களும் அரசு கல்லூரிகளும் தரம் குறைந்தவையாகவும், மாணவர்களின் கல்வித் தரத்திலும் ஒழுக்கத்திலும் அக்கறை இல்லாதவையாகவும் இருக்கின்றன.
அரசு பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு கெüரவமான ஊதியம் அளித்து, படித்து தங்களுடைய ஆற்றலை பெருக்கிக் கொள்ள போதிய அவகாசமும் கொடுக்கிறார்கள். அதை அவர்கள் நன்றாகப் படித்து மாணவர்களுக்குக் கற்றுத்தர பயன்படுத்துகிறார்களா? "டியூஷன் சென்டர்'களை நடத்துவது, உபரி வியாபாரத்தில் முதலீடு செய்வது, கந்து வட்டிக்குக் கடன் கொடுப்பது, அந்தத் தொழில்களில் அதிக அக்கறை செலுத்தி அவற்றை மேம்படுத்துவது என்று தங்களுடைய ஆற்றலையும் நேரத்தையும் அவர்கள் செலவிட்டால் கல்வித் தரம் எப்படி உயரும்?
அரசுக் கல்லூரிகள், பள்ளிகள் இப்படி இருக்க, தனியார் கல்வி நிறுவனங்களில் பண வசூல் மட்டுமே குறியாக இருக்கிறது. ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக நடத்தி, மாணவர்களுக்கு மனப்பாட சக்தியை மட்டும் வளர்த்து தேர்வில் ""100 சதவீத வெற்றி'' என்ற சாதனையைப் படைத்தால் அறிவு எப்படி வளரும்?
பள்ளிக்கூடத்தில் ஆரம்பத்தில் விளையாட்டு, பாட்டு, நடனம் ஆகியவற்றைக் கற்றுத்தந்து படிப்பதில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். பிறகு தாய்மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும். மெள்ள மெள்ள நம் மண்ணுக்கேற்ற வகையில் பாடங்களைச் சொல்லித்தந்து நம்முடைய இலக்கியம் வரலாறு ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். படிப்பில் ஆர்வமும் திறமையும் ஏற்பட்ட பிறகு கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றில் மதிப்பெண் மட்டுமே லட்சியமாகக் கொள்ளாமல் அவற்றில் புலமை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
அறிவியல், கலைப்பிரிவு பாடங்களை மேல்நிலைப் பள்ளிக்கூடம் தொடங்கி இப்போது சைவ, அசைவ உணவு வகைகளைப் போல கல்வியாளர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். கலைப்பாட மாணவனுக்கு அறிவியல் பாடத்திலும், அறிவியல் பாட மாணவனுக்கு கலைப் பாடத்திலும் ஆர்வம் இருந்தாலும் படிக்க முடியாதபடி பெரிய தடுப்புச்சுவர் உள்ளது.
அத்துடன் ஓவியம் வரைதல், கைத்தொழில் செய்தல், பாடுதல், இசைக்கருவிகளை வாசித்தல், விளையாட்டு போன்றவற்றால் அறிவு வளராது என்று முடிவே செய்து அவற்றைக் கல்வி திட்டத்திலிருந்தே விலக்கி வைத்திருக்கிறார்கள் கல்வித்துறை ஒüரங்கசீப்புகள்.
நீச்சல், கார்-பைக் ஓட்டுதல், சிலம்பம், கராத்தே, ஜூடோ போன்ற வீர விளையாட்டுகளையும் கற்றுத்தந்து மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் உரம் வாய்ந்தவர்களாக்குவதும் கல்வித்துறையின் கட்டாயக் கடமை. இவற்றை பால் வேறுபாடு இன்றி மாணவிகளுக்கும் கற்றுத்தர வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான ""மனித ஆற்றல்'' வெளிப்படும்.
நாம் ஊதுகிற சங்கை ஊதிவிட்டோம், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்...

நன்றி : தினமணி



ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் - ரிலையன்ஸ் நேச்சரல் ரிசோர்சஸ் மோதல் - செப் 1 ல் மறு விசாரணை

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கே.ஜி.பேசின் ) முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எடுக்கும் கேஸை பகிர்ந்து கொள்ளும் விதம் குறித்து, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சரல் ரிசோர்சஸ் நிறுவனங்களுக்கிடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பாம்பே ஐகோர்ட் அளித்த இடைக்கால உத்தரவில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சசுக்கு 28 எம்எம்எஸ்சிஎம்டி ( மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு க்யூபிக் மீட்டர் பெர் டே ) கேஸை, எம்எம்பிடியு ( மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் ) ஒன்றுக்கு 2.34 டாலர் என்ற விலையில் 17 வருடங்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸோ, எம்எம்பிடியு ஒன்றுக்கு 2.34 டாலர் விலையில் கொடுக்க முடியாது என்றும் 4.2 டாலர் விலையில்தான் விற்க முடியும் என்றும் தெரிவித்தது. எனவே இரு நிறுவனங்களும் இந்த குறித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்று பாம்பே ஐகோர்ட் தெரிவித்திருந்தது. தேவைப் பட்டால் இந்த விஷயத்தில் முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தாய் கோகிலாபென்னின் கருத்தையும் கேட்டுக்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. இந்த இடைக்கால உத்தரவால் பயன் அடைந்தது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனம் தான். ஏனென்றால் அவர்களுக்கு 2.34 டாலர் விலையில் 28 எம்எம்எஸ்சிஎம்டி கேஸ் கிடைத்து விடும். அது தவிர என்டிபிசி நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் கொடுக்க இருக்கும் 12 எம்எம்எஸ்சிஎம்டி கேஸை, அது பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த கேஸூம் ரிலையன்ஸ் ரிசோர்சசுக்கே வந்து விடும். அப்போது அதற்கு 40 எம்எம்எஸ்சிஎம்டி கேஸ் கிடைத்து விடும். ஆனான் பாம்பே ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்த மறு விசாரனையை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கு அடியில் கிடைக்கும் கேஸ் அரசாங்கத்திற்கு தான் சொந்தம். எனவே அதை பிரித்துக்கொள்வது பற்றி இரு நிறுவனங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக செப்டம்பர் ஒன்றாம் தேதி விசாரித்துக்கொள்ளலாம் என்று சுப்ரீம் தெரிவித்திருக்கிறது.

நன்றி : தினமலர்



எண்ணெய் நிறுவனங்களுக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் கடன் ரூ.950 கோடி

இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.950 கோடிக்கு மேல் கடன் வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த கடனை பெறுவதற்காக மத்திய அரசு, பேங்க் கியாரன்டி எதையும் பெறவில்லை. பார்லிமென்டில் எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா இதனை தெரிவித்தார். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு ரூ.599 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு ரூ.314 கோடியும், இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு ரூ.37.36 கோடியும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பாக்கி வைத்திருக்கிறது என்றார் முரளி தியோரா. இந்த நிதி ஆண்டின் துவக்கத்தில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்ததால் விமானங்களுக்கான எரிபொருளின் விலையும் உயத்தப்பட்டது. அதிலிருந்து இந்த கடன் தொகை அதிகரித்துக்கொண்டே வந்து இப்போது ரூ.950 கோடிக்கு மேல் போய் விட்டது.
நன்றி : தினமலர்