Saturday, August 22, 2009

நீக்கப்பட்ட விமானிகளை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் ஸ்டிரைக்

செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்குவோம் என ஜெட் ஏர்வேஸ் விமானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த முறையான நோட்டீஸை ஜெட் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டு அனுப்பியுள்ளது. ஜெட் நிர்வாகத்தில் நீக்கப்பட்ட ஜி பலராமன் மற்றும் சாம் தாமஸ் ஆகிய விமானிகளை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க முடியாது என்றும் ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தெரிவி்த்திருந்தனர். விமானிகள் கில்டில் இந்த இரு விமானிகளும் சேர்ந்ததைக் காரணம் காட்டித்தான் அவர்களை பணிநீக்கம் செய்தது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே விமானிகள் கில்டு ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது. 700 விமானிகள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு ஜெட் நிர்வாகம் இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டாமல் உள்ளது. இதைத் தொடர்ந்தே இன்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது விமானிகள் கில்டு.
நன்றி : தினமலர்


ஈழம்: உள்ளும் புறமும் எழும் குரல்

"ஈழப்போர் 4' முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு கடந்த மே 19 அன்று அறிவித்துவிட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகளும் மறுப்புகளும் ஊடகங்களிலும் இணையதளப் பதிவுகளிலும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கி நடத்துவார் என்று சுட்டிக்காட்டப்பட்ட செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டு கொழும்புவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

கைது செய்யப்படுவதற்கு முன்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரிவின் இணையதளக் கட்டுரைகளில் அந்த இயக்கத்தின் அடுத்தகட்டப் பயணம் பற்றிய விளக்கங்களை பத்மநாதன் அளித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதங்களை மவுனிக்கச் செய்து அரசியல் ராஜதந்திரப் பாதையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது என்பது அதன் தலைவர் முள்ளிவாய்க்காலில் வைத்து எடுத்த தீர்மானம் என்று அழுத்தமாகக் கூறும் பத்மநாதன், இரண்டு முக்கிய சர்வதேச நிலைமைகளைக் கவனப்படுத்தியுள்ளார்:

1. தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது லட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது.

2. இலங்கைத் தீவில் ஆயுதப் போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வர வேண்டும் என்பதிலும் அனைத்துலகும் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்திற்கும் உலக ஆதரவைத் திரட்டுவது சாத்தியமற்றதாகவிருந்தது''.

இந்தப் பின்புலத்தில், "தமிழீழ விடுதலைப் போராட்டம்' எதிர்கொண்ட பெரும் பின்னடைவைக் கருத்தில்கொண்டு அரசியல் ராஜதந்திர வழிமுறையே சாத்தியமானதும் வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்தது. இந்த அரசியல் ராஜதந்திரப் பாதையை முன்னெடுக்கும் அதேவேளையில் ஆயுதப் போராட்டத்தையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கிறது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்குப் பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்'' என்றும் பத்மநாதன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய யூனியனில் செயல்படும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஒன்றை ஜெர்மனியில் நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவையாகும்.

வன்னியிலிருந்து ராணுவ நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டு முள்கம்பி வேலிகளுக்குள் ராணுவம் சுற்றி வளைத்துள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதற்குரிய நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும். இலங்கை அரசிடம் சரண் அடைந்ததாகக் கூறப்படும் சுமார் பத்தாயிரம் இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் புனர்வாழ்வுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; முகாம்களில் உள்ளவர்களில் குற்றவாளிகளென இலங்கை அரசு அடையாளம் காட்டுபவர்களை நீதி விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்; முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்களை மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்; சர்வதேச உதவிகள் அந்த மக்களின் புனர்வாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்; மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவி வழங்கிய நான்கு தமிழ் மருத்துவர்களையும் முல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்; ஏற்கெனவே அகதிகளாக உள்ள முஸ்லிம் தமிழ் மக்களையும் சமகாலத்தில் தத்தம் இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என்ற தீர்மானங்களை உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஏற்று, ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு ஒத்துழைக்குமாறு அந்த இயக்கம் கேட்டுக் கொண்டது.

விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றது. இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரையறுத்து வருவதாகவும், அதனை விரைவில் வெளியிடுவதாகவும் தெரிவித்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி தேவை. காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் என முக்கிய அதிகாரங்கள் எங்களுடைய கையில் இருக்க வேண்டும்' என்ற வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று கோடிட்டுக் காட்டினர். கூடவே "இலங்கை இனப்பிரச்னைக்கு இந்தியாவுடன் இணைந்தே தீர்வைக் காண முடியும்' என்றும், "இலங்கை அரசுடனும் அனைத்துலக சமூகத்துடனும் பேசுவதற்குத் தயாராக உள்ளோம்' என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு வெளியே நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனைக்குழு ஒன்று இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டமைப்பையும் அதனது ஆட்சிக்குழுவைத் தோற்றுவித்து நடைமுறைப்படுத்தும் பாதையையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இக்குழு அதேவேளையில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய அபிலாஷைகளை ஜனநாயக, அமைதி வழிகளில் வென்றெடுப்பதிலும் தன் கவனத்தைச் செலுத்துமென உறுதி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்புகள் எல்லாம் அரசியல் ராஜதந்திரத் தீர்வு என்பதை முன்னிலைப்படுத்தி உள்ளபோதிலும், இவற்றில் தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கை கைவிடப்படவில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது. ஈழத்தமிழர் தேசம், தமிழர் தேசியம், தாயகம், தனித்துவமான சுயநிர்ணயம் என்ற வாசகங்களில் இது உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது புரிந்துகொள்ளக்கூடியதே. தமிழ் ஈழம் என்ற கோட்பாடு இந்த இயக்கங்களின் இருப்புக்கு அடிப்படையானது. எனினும் அது நீண்டகால லட்சியம் என்ற அளவில் மட்டும் தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடிக் கோரிக்கையாக அரசியல் தீர்வு முன்வந்துள்ளது என்பது ஒரு நல்ல அம்சம்.

ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் தகவல்கள் அங்குள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த ஆழமான கவலைகளை எழுப்புகின்றன.

வவுனியாவில் உள்ள முகாம்களில் 60 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை முன்னுரிமை அடிப்படையில் சொந்தக் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிப்பதாகக் கூறும் இலங்கை அரசு, அவர்களின் குடும்பத்தாரை மட்டும் முகாம்களிலேயே நீடிக்க வலியுறுத்துகிறது. இதன் காரணமாக இத்தகைய முதியவர்களில் 400 பேர் மட்டுமே முகாம்களை விட்டு வெளியேற, மற்றவர்கள் குடும்பத்தோடு முகாம்களிலேயே அல்லல்படுகின்றனர்.

இதே முகாம்களில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து அனாதைகளாக அடைபட்டுக் கிடக்கும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களைப் பராமரிக்க முன்வரும் தன்னார்வ அமைப்புகளுக்கும் இலங்கை அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. மாறாக, 13 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களைத் தனியாகப் பிரித்து ஒரு புனர்வாழ்வு முகாம் அமைக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது. இது அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பதற்கான ஏற்பாடாகத் தெரிகிறது.

180 நாள்களுக்குள் முகாம்களில் உள்ளவர்களை மீள் குடியமர்த்துவோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணி கண்ணி வெடிகளை அகற்றுவது என்ற பெயரால் தாமதப்படுத்தப்படுகிறது. இலங்கை அதிபரின் சகோதரரும் அவரது அரசியல் ஆலோசகருமான பாசில் ராஜபட்ச, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஐரோப்பாவை உதாரணங்களாகச் சுட்டிக்காட்டி அங்கெல்லாம் உள்நாட்டிலேயே அகதிகளாக இருந்தவர்களைக் குடியமர்த்துவதற்குப் பல பத்தாண்டுகளும், ஒரு நூற்றாண்டு காலம் கூடப் பிடித்திருக்கிறது என்று பேசியுள்ளது இந்த இழுத்தடிப்பை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இலங்கையில் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான அரசுப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்: ""போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட லட்சக்கணக்கிலான மக்கள் இன்று அகதி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களைச் சென்று பார்வையிடவும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஊடகவியலாளர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. முள்கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கம்பிகளுக்கு அப்பால் தாயும் மறுபக்கத்தில் பிள்ளையும் என்ற நிலைமையே காணப்படுகிறது. தொடர்ந்தும் அந்த மக்களின் உரிமைகள், சுதந்திரம், சகவாழ்வு மறுக்கப்படுவதாக இருந்தால் முகாம்களுக்குள்ளேயே அவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை'' என்றார் அவர். சிங்கள இனவாதத்தின் குரலாகச் சித்திரிக்கப்படுகிற ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு பேச நேரிட்டுள்ளது என்பது அங்குள்ள சற்றொப்ப மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் மனிதப் பேரவலத்திற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிறுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் துயர் துடைப்புப் பணியும் அவர்கள் முகாம்களிலிருந்து சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்பக் கொண்டு செல்லப்பட்டுக் குடியமர்த்தப்படுவதும் இலங்கை அரசின் முன்னுள்ள அவசர அவசியக் கடமை. கடுமையான சர்வதேச நிர்பந்தம் இருந்தால் ஒழிய ராஜபட்ச அரசு இதில் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த அக்கறையுடனும் செயல்படும் என்றும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் ""13-வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் கூடுதலாக'' அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறி வருகிறது. ஆனால், தமிழர் வாழும் பகுதிகளில் தனி மாநிலம் என்பதையோ, சுயாட்சி அதிகாரம் என்பதையோ ஏற்க முடியாது என்றும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதைத் தடுக்க இயலாது என்றும் இலங்கை ஆட்சியாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வை நோக்கி ராஜபட்ச அரசு அடியெடுத்து வைக்குமா என்கிற ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இந்தப் பின்னணியில் இலங்கைக்கு உள்ளும் புறமுமாக அரசியல் தீர்வை வலியுறுத்தி எழுந்துள்ள குரல்களும் இதுகுறித்து இந்திய அரசின் தலையீடு குறித்த எதிர்பார்ப்புகளும் இந்திய அரசு தன் செயல்பாட்டில் வேகத்தையும் விவேகத்தையும் காட்ட வேண்டியதை வலியுறுத்துவனவாக உள்ளன. மன்மோகன் சிங் அரசு இத்திசையில் இனியேனும் பயணிக்குமா?

கட்டுரையாளர் : உ . ரா. வரதராசன்
நன்றி : தினமணி

நோக்கியா நிறுவனம் விரைவில் நெட்புக் தயாரிக்கவிருக்கிறது

செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நெட்புக் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
கம்ப்யூட்டரும் செல்போனும் இரண்டு பயன்பாடுகளையும் உள்ளடக்கிய 'நெட்புக்' சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மூன்றாம் தலைமுறை செல்போன் சேவை தொடங்க உள்ளதால் இதுபோன்ற நெட்புக் சாதனங்களுக்கு மவுசு அதிகரிக்கும். இதன் அடிப்படையில் நெட்புக் தயாரிப்பது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.மேலும் இந்தியாவில் குறைந்த விலைத் தயாரிப்பு கருவிகள்தான் அதிகம் விற்பனையாகும் என்ற கணிப்பும் பொய்த்துப் போயுள்ளது. நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய உயர் ரக என்-97 மற்றும் இ-75 ரக செல்போன்கள் மிக அதிக அளவுக்கு விற்பனையாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினர்.நோக்கியா நிறுவனத் தயாரிப்புகள் மிக அதிக அளவில் விற்பனையாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப குறைந்த விலை செல்போன் சாதனங்களை நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கும் என்றும் அவர் கூறினார்.நோக்கியா நிறுவனத்துக்கு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பூதூரில் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மிக அதிக எண்ணிக்கையில் செல்போன் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் செல்போன்களில் 50 சதவீதம் 59 நாடுகளுக்கு ஏற்றுமதியாவதாக அவர் குறிப்பிட்டார்.
நன்றி : தினமலர்


வெற்றியும் தோல்வியும்!

ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. எதிர்பாராத அதிர்ச்சி எதுவும் இல்லைதான் என்றாலும், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சில எச்சரிக்கைகளையும், வாக்காளர்களின் மன ஓட்டத்தையும் படம்பிடித்துக் காட்டாமல் இல்லை.

இடைத்தேர்தலில் பணம் விளையாடியது, அதிகார துஷ்பிரயோகம் நடந்தது, ஆளும்கட்சித் தரப்பு தேர்தல் தில்லுமுல்லுகளிலும், கள்ள வாக்குகளைப் பதிவு செய்வதிலும் முனைப்புக் காட்டியது - இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுவது புதியதொன்றும் அல்ல. அதிமுக ஆட்சியில் திமுகவும், திமுக ஆட்சியில் அதிமுகவும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் குற்றச்சாட்டுகள்தான் இவை என்பதால், அதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

இயல்பாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குச் சாதகமான ஒரு சூழ்நிலை இருப்பது இயல்பு. இடைத்தேர்தல்களால் ஆட்சி மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது என்பதால், வாக்காளர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சி வேட்பாளருக்குச் சாதகமாக வாக்களிப்பதைத் தான் விரும்புவார்கள். தங்களது சட்டப்பேரவை அல்லது மக்களவைப் பிரதிநிதி ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தால் தங்களது தொகுதிக்கு நல்ல சில திட்டங்கள் வந்து விடாதா என்கிற எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம். அதனால், நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆளும் கட்சியின்மீது அளவுக்கு அதிகமான அதிருப்தி ஏற்பட்டிருந்தால் ஒழிய இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிக்குச் சாதகமாக அமைந்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் அதிகார துஷ்பிரயோகம், பணம் விளையாடியது போன்ற விமர்சனங்களுக்கு அர்த்தமில்லை என்பதுதான் நமது கருத்து. ஆளும் கட்சியின் செயல்பாடுகளில் பல குறைகள் இருப்பது உண்மைதான் என்றாலும், மிகப்பெரிய அதிருப்தி எதுவும் மக்கள் மத்தியில் இல்லை என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன என்று சொன்னாலும் தவறில்லை.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியைவிட, போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகிவிட்ட அதிமுக கூட்டணியின் தவறான முடிவுதான் பளிச்சிடுகிறது. வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்னைகளை முன்வைத்துப் போராடத் தயங்கும் எந்தவொரு கட்சியோ அல்லது அணியோ அரசியல் அரங்கத்தில் தாக்குப்பிடித்ததாகச் சரித்திரம் இல்லை. இந்த விஷயத்தில், திமுகவிடமிருந்து ஒரு முக்கியமான பாடத்தை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கற்றுக்கொள்ளத் தவறி விட்டது என்றுதான் கூற வேண்டும்.

1972-ல் திமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு நடந்த திண்டுக்கல் மக்களவைக்கான இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றது என்பதுடன், இரண்டாவது இடத்தை பழைய காங்கிரஸ் பிடித்து ஆளும் திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அப்போது தொடங்கி, இடையில் 1980 மக்களவைத் தேர்தல், மயிலாடுதுறை மற்றும் அண்ணாநகர் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் தவிர ஏனைய தேர்தல்களில் எல்லாம் திமுக தோல்வியைத்தான் தழுவியது.

1972-ல் தொடங்கி 1989-ல் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்வரை தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டபோதும், திமுக தலைவர் கருணாநிதி துவளவில்லை என்பது மட்டுமல்ல, தொடர்ந்து கட்சிப் பணி, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட்டம் என்று களத்தில் இருந்தார் என்பதை எப்படி மறந்துவிட முடியும்? ஏதாவது ஒரு கட்டத்தில் அவர் சோர்ந்து போயிருந்தால், ஐந்து முறை முதல்வரான பெருமை அவருக்குக் கிடைத்திருக்குமா என்ன?

அதிமுகவிடமும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமும் இல்லாத துணிவும் சுறுசுறுப்பும் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் காணப்படுவதை மக்கள் அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் சுமார் 20,000-க்கும் அதிகமான வாக்குகளை தேமுதிக பெற்றிருக்கிறது என்பதும் மூன்று தொகுதிகளில் வைப்புத் தொகையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதும், அதிமுகவுக்கு மக்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு.

அதிமுக அணியின் தேர்தல் புறக்கணிப்பை வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதில் அதிசயம் இல்லை. மக்களாட்சியில் எந்த ஓர் ஆளும் கட்சிக்கும் ஓர் எதிர்க்கட்சியோ, எதிர்க்கட்சிக் கூட்டணியோ இயற்கையாகவே ஏற்பட்டுவிடும். அது தவிர்க்க முடியாதது. எதிர்க்கட்சியே இல்லாமல் நாங்கள் ஆட்சி செய்வோம் என்று ஓர் ஆளும் கட்சியோ, இந்த ஆளும் கட்சியின்மீது அதிருப்தி ஏற்பட்டால் மாற்றாக இருக்கும் எதிர்க்கட்சி தாங்கள் மட்டும் தான் என்று எந்த ஒரு எதிர்க்கட்சியோ மக்களாட்சியில் இறுமாப்புடன் இருந்துவிட முடியாது. அதிமுக அணியின் தேர்தல் புறக்கணிப்பு தேமுதிகவின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி இருக்கிறது என்பதும், அந்தக் கட்சி பெற்ற வாக்குகளில் பெரும்பகுதி அதிமுக அணியின் வாக்குகள்தான் என்பதும் தெளிவு.

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி அரசியல் நடத்துவது என்றும், தோல்வி பயத்தில் ஒதுங்கி நிற்பது என்றும் அதிமுக தொடர்ந்து நினைத்தால், மக்கள் அந்தக் கட்சியை ஓரம்கட்டிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பது அல்ல கேள்வி. தோல்வி அடைந்தது என்னவோ, தேர்தலில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருந்த அதிமுகவின் ராஜதந்திரம்தான், சந்தேகம் இல்லை!

நன்றி : தினமணி

உணவு மற்றும் உணவு பொருட்களை வாங்க 'மீல் கார்டு' : ஐ.என்.ஜி., வைசியா வங்கி அறிமுகம்

உணவு மற்றும் உணவு பொருட்களை வாங்க ஐ.என்.ஜி., வைசியா வங்கி பிரத்யேகமாக 'மீல் கார்டு' அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டை உபயோகித்து எந்த ஒரு உணவு மற்றும் பிவரேஜஸ் கடைகளில் உணவு, உணவு பொருட்களை ( பலசரக்கு பொருட்களை), குளிர் பானங்கள், காபி, டீ உள்ளிட்ட பல வகை பிவரேஜஸ்களை வாங்கி கொள்ளலாம். ஐ.என்.ஜி., வைசியா வங்கி சமீபத்தில் ஆஸ்பைரா என்ற பெயரில் சம்பள கணக்கு ஒன்றை துவங்கியது. இதனை சார்ந்து இப்போது மீல் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீல் கார்டை பயன்படுத்தி கார்டில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த கார்டுகளுக்கு ரகசிய பின் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பழைய மீல் வவுச்சர்களில் இருந்த நடைமுறை சிக்கல்கள் களையப்படும் என வங்கி அதிகாரி சோனாலி பாண்டா தெரிவித்துள்ளார். பின் நம்பர் அடிப்டையில் பிளாஸ்டிக் கார்டுகள் கொடுக்கப்படுவதால் இவற்றை திருட மு‌டியாது எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி : தினமலர்



ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படுமா?

வங்கிக் கணக்கு இல்லாத, மற்ற வங்கி ஏ.டி.எம்.,களில், மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல்,வாடிக்கையாளர்கள், பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் செலுத்தும் முறை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக, வங்கி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்செய்தியை, இந்திய ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்டதாவது:
மற்ற வங்கி ஏ.டி.எம்.,களில், ஐந்து முறைகளுக்கு மேல், பணம் எடுப்பவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை, உத்தரவாக வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாக இந்த நடைமுறை உள்ளது. இது குறித்து அந்தந்த
வங்கிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். பிற வங்கி ஏ.டி.எம்.,களில், ஒரு தடவைக்கு 10 ஆயிரம்
ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் திட்டம் கொண்டு வரவும், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 40 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் உள்ளன. இவற்றில், 30 ஆயிரம் ஏ.டி.எம்.,கள், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகரங்களில் உள்ளன. 10 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் மட்டுமே, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. நாடு முழுவதிலும், 80 பொதுத் துறை, தனியார், கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கிகள், ஏ.டி.எம்., சேவையை வழங்கி வருகின்றன. இந்த ஏ.டி.எம்.,களில், நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பணம் எடுப்பவர்கள் 90 சதவீதம் பேர். அதே சமயம், ஒரு தடவைக்கு, 1,000 ரூபாய்க்கு குறைவாக பணம் எடுப்பவர்களை, அனுமதிக்கக் கூடாது என்ற யோசனையை, ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியளவிலான தொகை எடுப்பவர்கள், மிகக்குறைவாக உள்ளனர். சிறிய தொகையை மற்ற ஏ.டி.எம்.,களில் இருந்து எடுப்பதால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கணக்கு வைப்பதில், சில பிரச்னைகள் மற்றும் தவிர்க்க முடியாத செலவு ஏற்படுகிறது. பிற வங்கி வாடிக்கையாளர்கள், கணக்கில் உள்ள பணத்தை தெரிந்து கொள்ள, பணம் எடுக்க, மீண்டும் கணக்கில் மீதம் உள்ள பணத்தை அறிய, அடிக்கடி ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் வசூலிக்கும் திட்டம், ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதை இன்னமும் அமல்படுத்தவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்