உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். இன்று நேற்றல்ல, பல நூறாண்டுகளாகத் தமிழர்கள் பல நாடுகளில் குடியேறி அந்நாடுகளையே தங்கள் சொந்த நாடுகளாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். அதிலும் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்படுவதற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பே இருபுறத்திலும் வாழ்ந்த தமிழர்கள் மொழியாலும் பண்பாட்டாலும் மிக நெருங்கியவர்களாக இருந்தார்கள்.
சங்க காலப் புலவரான ஈழத்து பூதந்தேவனார் காலத்திலிருந்து சென்ற நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் காலம் வரையிலும், அதற்குப் பிறகு இன்றுவரையிலும் மட்டுமல்ல, இனி எதிர்காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள உறவு என்பது தொப்புள் கொடி உறவாகும்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல பிறநாடுகளில் வாழ்கிற தமிழர்களும் தங்களது பண்பாட்டுத் தாயகமாகக் கருதுவது தமிழ்நாட்டையே ஆகும். தமிழ்நாட்டுக்கும் பிற நாடுகளில் வாழ்கிற தமிழர்களுக்கும் இடையே உள்ள உறவு என்பது தாய்-சேய் உறவு ஆகும்.
மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் எங்கும் நடைபெறும் தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஈழத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள், தமிழகத்து அறிஞர்கள் வ.அய். சுப்பிரமணியம், சாலை இளந்திரையன் போன்ற பலரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
முதல் உலகத் தமிழராய்ச்சி மாநாடு மலேசியாவில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இம்மாநாட்டில் பங்கு பெற்றனர். அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் தலைமையில் இரா. நெடுஞ்செழியன், பி.டி.ராஜன் உள்பட பலகட்சித் தலைவர்கள் தமிழகக் குழுவாகச் சென்று கலந்து கொண்டனர்.
1968-ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10-ம் தேதி வரை சென்னையில் 2-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோதும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர். ராஜாஜி, பெரியார், காமராசர், ஜீவா, ம.பொ.சி. போன்ற பலவேறு கட்சித் தலைவர்களையும் முதலமைச்சராக இருந்த அண்ணா,நேரில் சென்று அழைத்து இம்மாநாட்டில் சிறப்புரையாற்ற வைத்தார். அவர்களும் அவருடன் ஒத்துழைத்தனர். அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு வலிமை சேர்த்தனர்.
1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரிசிலும் 1974-ம் ஆண்டு நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்திலும் ஒற்றுமை குலையாத வகையில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாநாட்டில் சிங்கள ராணுவம் புகுந்து சுட்டு 9 தமிழர்கள் உயிர் துறந்த துயர நிகழ்ச்சியும் நடைபெற்றது.
1981-ம் ஆண்டு ஜனவரி 4 முதல் 10-ம் தேதி வரை மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விடுத்த அழைப்பை அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஏற்று மாநாட்டில் பங்கு கொண்டனர். ஆனால் தி.மு.க. தலைவரான கருணாநிதி மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். அன்றிலிருந்து இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
1995-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது மாநாட்டின் போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதிலும் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. இம்மாநாட்டின் போதுதான் தமிழர்களை அவமதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவீடன் நாட்டுத் தமிழறிஞர் பீட்டர் சால்க், ஈழத் தமிழறிஞர் சிவத்தம்பி ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டு, இங்கு வந்த பிறகு அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றிய வெட்ககரமான நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தமிழர்கள் அனைவரும் இதை வன்மையாகக் கண்டித்தனர்.
1998-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற 6-வது உலக சைவ மாநாட்டில் கலந்து கொள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பலர் வந்திருந்தனர். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த வீரபத்திரன், இலங்கையைச் சேர்ந்த மனோன்மணி சண்முகதாஸ், பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் சிவதாசன் தம்பதியினர் ஆகிய நால்வர் வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிராக மாநாட்டுப் பிரதிநிதிகள் அறவழியில் போராடினர். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
அதற்குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாடு நடைபெற்றபோது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதற்குத் தடைவிதித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு என்று தெரிந்தும் இந்தத் தடை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தலையிட்டு அந்தத் தடையை நீக்கி மாநாட்டுக்கு அனுமதி வழங்கியது.
÷2004-ம் ஆண்டு பெங்களூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது மாநாட்டைத் தொடங்கிவைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன், சென்னை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். அதற்குரிய காரணம் எதுவும் அவருக்கு அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இந்த நாடுகளுக்குள் சுற்றுப்பயணம் செய்து வருவதற்கு விசா எதுவும் தேவையில்லை. இந்த விதியும் மீறப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தனுக்கு உரிய விசா இருந்தும் அவர் திருப்பி அனுப்பப்பட்ட அவலம் நேர்ந்தது. அப்போதும் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12, 13-ம் தேதிகளில் சேலம் நகரில் உலகத் தமிழர் பேரமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு மாநாடு நடைபெற்றபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதற்குத் தடைவிதித்தார். இந்தத் தடையும் உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
2009-ம் ஆண்டு டிசம்பர் 26, 27-ம் தேதிகளில் தஞ்சை நகரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதுவும் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியின்போதுதான் நடைபெற்றது.
உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தமது பிரச்னைகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை என்பதை இந்த வெளியேற்ற நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டைத் தங்கள் தாயகமாகக் கருதுகின்ற வெளிநாட்டுத் தமிழர்கள், தமிழகம் வரும்போதெல்லாம் இப்படி விரட்டியடிக்கப்படுவது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அவமானமாகும்.
ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளில் பங்கேற்க வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் பிரளயம் எதுவும் நேர்ந்திருக்காது. தமிழறிஞர்களை அவமதித்த குற்றமும் முதலமைச்சர்கள் மீது படிந்திருக்காது. வெளியேற்றப்பட்ட தமிழறிஞர்கள் ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் அவர்கள் அனைவரும் தமிழகத்திற்குப் புதியவர்கள் அல்லர். எத்தனையோ முறை வந்து சென்றவர்கள். ஜெயலலிதா வேண்டுமானால் அவர்களைப் பற்றி அறியாமல் இருக்கலாம். ஆனால் கருணாநிதி அவர்கள் குறித்து நன்கு அறிந்தவர். என்றாலும் தில்லியின் தமிழர் அவமதிப்பு போக்கினைத் தடுத்து நிறுத்தி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட இருவருமே தவறிவிட்டனர்.
இந்தியாவில் பிற மொழி பேசுகிறவர்கள் நடத்தும் உலக மாநாடுகளுக்கு வருகிறவர்கள் தாராளமாக வந்து சுதந்திரமாகப் பேசிவிட்டுப் போகிறார்கள். உலகத் தெலுங்கர் மாநாடு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத் நகரில் நடைபெற்றபோது பிறநாடுகளில் வாழும் தெலுங்கர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்தபோது எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. அவ்வாறே பெங்களூரில் நடந்த உலக கன்னட மாநாட்டிலும் பிற நாடுகளைச் சேர்ந்த கன்னடர்கள் தாராளமாகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
உலகப் பஞ்சாபி மாநாடு சண்டீகரில் நடைபெற்றபோது கனடாவில் வாழ்ந்து கொண்டிருந்த காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் இந்தியா வர இந்தியத் தூதரகம் விசா தர மறுத்துவிட்டபோது, பஞ்சாப் முதலமைச்சர் பிரதமரிடம் போராடி விசா வழங்கச் செய்தார். இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் தாராளமாக வந்து தங்கள் மொழி மாநாட்டில் சுதந்திரமாகப் பேசமுடிகிறது. இதற்கு பஞ்சாப் முதலமைச்சரின் மொழி உணர்வும் மத்திய அரசுடன் போராடும் மன உறுதியுமே காரணமாகும்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த பிறநாட்டுத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு தான் பொறுப்பல்ல மத்திய அரசே பொறுப்பு என்று சொல்லி முதலமைச்சர் தப்பித்துக்கொள்ள முடியாது. மத்திய ஆட்சியிலும் இவரது கட்சி ஓர் அங்கம். பிரதமரிடம் இவருக்கு மதிப்பு நிறைந்த செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை இவர் தடுத்து நிறுத்த முன்வரவில்லை என்று சொன்னால் அது இவரது சம்மதத்தோடு நடைபெறுகிறது என்பதுதான் பொருள்.
முதலமைச்சர் கருணாநிதி முன்னின்று நடத்த இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்குபெற உலக நாடுகளிலிருந்து இத்தனை இத்தனை பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற பட்டியலை முதலமைச்சர் மிக்க பெருமிதத்துடன் வெளியிட்டிருக்கிறார். மற்றவர்கள் நடத்தும் உலகத்தமிழ் மாநாடுகளுக்கு வந்த பலரை வெளியேற்றியவர் இப்போது இவர் நடத்தும் மாநாட்டுக்காவது உலகத் தமிழர்களை அனுமதிக்க முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவர்களில் யாரையேனும் வெளியேற்றாமல் இருப்பார் என நம்புவோமாக.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
Tuesday, January 12, 2010
Monday, January 11, 2010
தமிழ் வெறும் துக்கடாவா...?
கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் சென்னை இசை விழா முடிவடையும் நிலையை எட்டிவிட்டது. முக்கியமான பழம்பெரும் சபாக்களின் நிகழ்வுகள் முடிந்துவிட்டன. சென்னை சங்கமத்துடன் இந்த ஆண்டுக்கான இசைவிழா நிறைவுபெறும்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற இசை, நாட்டியம் தொடர்பான கலை விழாக்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் எடின்பரோ சர்வதேசக் கலைவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இசை, நாட்டிய விழாவில் பங்குபெறவும், கலந்துகொள்ளவும் உலகெங்கிலும் இருந்து கலைஞர்களும் ரசிகர்களும் குவிகிறார்கள். ஆனால், இந்த இசை விழா நடப்பது ஆறே ஆறு அரங்கங்களில் மட்டுமே.
லண்டன் நாட்டிய விழா, நியூயார்க் நாட்டிய விழா, ஐரோப்பிய நாட்டிய விழா என்று எத்தனை எத்தனையோ இசை, நாட்டிய விழாக்கள். ஆனால், அவை அனைத்துமே வியாபாரக் கண்ணோட்டத்துடன், பல தொழில் நிறுவனங்களும், அந்தந்த நகர அமைப்புகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்திக் குளிர்காய முற்படுகின்றனவே தவிர, கலைக்காக நடத்தப்படும் விழாக்களா என்றால் கிடையாது.
ஆனால் நமது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் இசைவிழா அப்படிப்பட்டதல்ல. இது வியாபாரத்துக்காக நடத்தப்படுவது அல்ல. சுற்றுலாப் பயணிகளைக் கவர வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்படுவதும் அல்ல. கலைக்காகக் கலாரசிகர்களால் நடத்தப்படும் நமது சென்னை இசை விழாவின் பிரமாண்டம் உலகில் வேறு எந்தப் பகுதியில் நடைபெறும் விழாக்களுக்கும் இல்லை என்பதால்தான், சென்னை மாநகரம் இந்தியாவின் கலாசார தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
73 சபாக்கள் ஏறத்தாழ 2,850 இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் திறமையை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்து வடநாட்டவரும், வெளிநாட்டவரும் வாய் பிளந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆண்டுதோறும் சில நூறு புதிய இளைய தலைமுறைக் கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். சொல்லப்போனால் இந்த இளைய தலைமுறைக் கலைஞர்களில் பலர் பணத்துக்காக இசையைத் தேர்ந்தெடுக்காமல், இசையை இசைக்காக நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
கர்நாடக இசை என்பதை நாம் தென்னிந்திய இசை அல்லது திராவிட இசை என்று சொல்வதுதான் சரி. எப்படித் தமிழர், கேரளத்தவர், கன்னடர், ஆந்திரர் ஆகிய அனைவரையும் வடவர்கள் "மதராசிகள்' என்று குறிப்பிடுகிறார்களோ அதைப்போல, நமது தஞ்சைத் தரணியில் தோன்றி தென்னகமெங்கும் பரவிய தென்னக இசையைக் கர்நாடக இசை என்று குறிப்பிடுகிறார்கள், ஆற்காடு நவாபுகள் அப்போது கர்நாடிக் நவாப் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கிருஷ்ணா நதிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையிலான பகுதியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்தனர். மைசூர் உள்பட உள்ள பகுதியை ஆண்ட கர்நாடிக் நவாபுகளின் நாட்டு இசையைக் கர்நாடக இசை என்று இந்துஸ்தானிய இசை மரபினர் அழைக்க முற்பட்டனர். இதுதான் வரலாற்று உண்மை.
சப்த ஸ்வரங்களின் அடிப்படையில் அமைந்த இசை எப்படித் தமிழிசையாகும் என்று கேட்பவர்கள் மறந்துவிடும் ஒன்று, இந்த சப்த ஸ்வரங்கள் நமது பண்களின் பரிணாமம்தான் என்பதை. இசையும், முழவும், தாளமும், கூத்தும், அபிநயமும் ஆய இவை ஐந்தும் பஞ்ச மரபு என்பார்கள். "பஞ்ச மரபு' என்கிற சங்க கால நூலில் இசை மரபின் வங்கிய மரபு என்கிற உட்பிரிவில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் சுத்த எழுத்தால், ""வரிபரந்த கண்மடவாய் வைக்கத் தெரிவரிய ஏழிசையும் தோன்றும். இதனுள்ளே பண் பிறக்கும். சூழ் முதலாம் சுத்தத் துளை'' என்று வங்கியம் (புல்லாங்குழல்) வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
நமக்கே உரித்தான இந்த இசையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் அந்த இசை பாமரனுக்கும் புரியும் இசையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகத் தமிழ் சாகித்யங்கள் (பாடல்கள்) கையாளப்பட வேண்டும். பெயருக்குத் துக்கடாவாக ஒரு திருப்புகழோ, திருப்பாவையோ பாடுவது என்பது இசையை மட்டுமல்ல, தமிழையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது.
இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலர் தமிழ் சாகித்யங்களை மட்டுமல்ல, தெலுங்கு சாகித்யங்களையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடும் அவலநிலை ஏற்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழில் பாடினால் மட்டும் போதாது. தமிழ் படித்துத் தமிழைச் சரியாக உச்சரித்தும் பாட வேண்டும்.
கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்போது, நீங்கள் தமிழில் பாடுவதாக இருந்தால்தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்கள் நிபந்தனை விதிப்பதில்லை என்கிற நியாயமான கேள்வியை எழுப்பி இருக்கிறது "விடுதலை' நாளிதழ். நாமும் அந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறோம்.
இசை பாமரர்களைப் போய்ச் சேர வேண்டும். இந்த நோக்கம் சென்னை சங்கமத்தால் ஓரளவுக்கு செயல்வடிவம் கொள்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும். பூங்காக்களில் பாடும் பல கலைஞர்கள் பாமரர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழில் பாடுகிறார்கள். இவர்கள் சபாக்களில் பாடும்போது தமிழில் பாடுவதில்லையே ஏன்? அங்கே கூடும் ரசிகர்கள் தமிழ் பாடக்கூடாது என்று சொல்வார்களா என்ன? இல்லை அவர்கள்,வெளிநாட்டவர்களும் வெளிமாநிலத்தாருமா, தமிழர்கள்தானே?
பணக்கார நிலச்சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஏகபோக உரிமையாக இருந்த இசை இன்று அனைவருக்கும் பொதுவாகி இருக்கிறது. இனி அதைப் பாமரனும் ரசிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அதற்குப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை இசை கட்டாயமாகக் கற்றுத்தரப்பட வேண்டும். நமது சபாக்களும், இசைவாணர்களும் தமிழிசைக்கு முன்னுரிமை தரவேண்டும். தமிழகத்தில் தமிழில் பாடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் கேவலம் இனியும் தொடரக்கூடாது!
நன்றி : தினமணி
உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற இசை, நாட்டியம் தொடர்பான கலை விழாக்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் எடின்பரோ சர்வதேசக் கலைவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இசை, நாட்டிய விழாவில் பங்குபெறவும், கலந்துகொள்ளவும் உலகெங்கிலும் இருந்து கலைஞர்களும் ரசிகர்களும் குவிகிறார்கள். ஆனால், இந்த இசை விழா நடப்பது ஆறே ஆறு அரங்கங்களில் மட்டுமே.
லண்டன் நாட்டிய விழா, நியூயார்க் நாட்டிய விழா, ஐரோப்பிய நாட்டிய விழா என்று எத்தனை எத்தனையோ இசை, நாட்டிய விழாக்கள். ஆனால், அவை அனைத்துமே வியாபாரக் கண்ணோட்டத்துடன், பல தொழில் நிறுவனங்களும், அந்தந்த நகர அமைப்புகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்திக் குளிர்காய முற்படுகின்றனவே தவிர, கலைக்காக நடத்தப்படும் விழாக்களா என்றால் கிடையாது.
ஆனால் நமது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் இசைவிழா அப்படிப்பட்டதல்ல. இது வியாபாரத்துக்காக நடத்தப்படுவது அல்ல. சுற்றுலாப் பயணிகளைக் கவர வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்படுவதும் அல்ல. கலைக்காகக் கலாரசிகர்களால் நடத்தப்படும் நமது சென்னை இசை விழாவின் பிரமாண்டம் உலகில் வேறு எந்தப் பகுதியில் நடைபெறும் விழாக்களுக்கும் இல்லை என்பதால்தான், சென்னை மாநகரம் இந்தியாவின் கலாசார தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
73 சபாக்கள் ஏறத்தாழ 2,850 இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் திறமையை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்து வடநாட்டவரும், வெளிநாட்டவரும் வாய் பிளந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆண்டுதோறும் சில நூறு புதிய இளைய தலைமுறைக் கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். சொல்லப்போனால் இந்த இளைய தலைமுறைக் கலைஞர்களில் பலர் பணத்துக்காக இசையைத் தேர்ந்தெடுக்காமல், இசையை இசைக்காக நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
கர்நாடக இசை என்பதை நாம் தென்னிந்திய இசை அல்லது திராவிட இசை என்று சொல்வதுதான் சரி. எப்படித் தமிழர், கேரளத்தவர், கன்னடர், ஆந்திரர் ஆகிய அனைவரையும் வடவர்கள் "மதராசிகள்' என்று குறிப்பிடுகிறார்களோ அதைப்போல, நமது தஞ்சைத் தரணியில் தோன்றி தென்னகமெங்கும் பரவிய தென்னக இசையைக் கர்நாடக இசை என்று குறிப்பிடுகிறார்கள், ஆற்காடு நவாபுகள் அப்போது கர்நாடிக் நவாப் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கிருஷ்ணா நதிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையிலான பகுதியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்தனர். மைசூர் உள்பட உள்ள பகுதியை ஆண்ட கர்நாடிக் நவாபுகளின் நாட்டு இசையைக் கர்நாடக இசை என்று இந்துஸ்தானிய இசை மரபினர் அழைக்க முற்பட்டனர். இதுதான் வரலாற்று உண்மை.
சப்த ஸ்வரங்களின் அடிப்படையில் அமைந்த இசை எப்படித் தமிழிசையாகும் என்று கேட்பவர்கள் மறந்துவிடும் ஒன்று, இந்த சப்த ஸ்வரங்கள் நமது பண்களின் பரிணாமம்தான் என்பதை. இசையும், முழவும், தாளமும், கூத்தும், அபிநயமும் ஆய இவை ஐந்தும் பஞ்ச மரபு என்பார்கள். "பஞ்ச மரபு' என்கிற சங்க கால நூலில் இசை மரபின் வங்கிய மரபு என்கிற உட்பிரிவில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் சுத்த எழுத்தால், ""வரிபரந்த கண்மடவாய் வைக்கத் தெரிவரிய ஏழிசையும் தோன்றும். இதனுள்ளே பண் பிறக்கும். சூழ் முதலாம் சுத்தத் துளை'' என்று வங்கியம் (புல்லாங்குழல்) வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
நமக்கே உரித்தான இந்த இசையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் அந்த இசை பாமரனுக்கும் புரியும் இசையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகத் தமிழ் சாகித்யங்கள் (பாடல்கள்) கையாளப்பட வேண்டும். பெயருக்குத் துக்கடாவாக ஒரு திருப்புகழோ, திருப்பாவையோ பாடுவது என்பது இசையை மட்டுமல்ல, தமிழையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது.
இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலர் தமிழ் சாகித்யங்களை மட்டுமல்ல, தெலுங்கு சாகித்யங்களையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடும் அவலநிலை ஏற்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழில் பாடினால் மட்டும் போதாது. தமிழ் படித்துத் தமிழைச் சரியாக உச்சரித்தும் பாட வேண்டும்.
கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்போது, நீங்கள் தமிழில் பாடுவதாக இருந்தால்தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்கள் நிபந்தனை விதிப்பதில்லை என்கிற நியாயமான கேள்வியை எழுப்பி இருக்கிறது "விடுதலை' நாளிதழ். நாமும் அந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறோம்.
இசை பாமரர்களைப் போய்ச் சேர வேண்டும். இந்த நோக்கம் சென்னை சங்கமத்தால் ஓரளவுக்கு செயல்வடிவம் கொள்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும். பூங்காக்களில் பாடும் பல கலைஞர்கள் பாமரர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழில் பாடுகிறார்கள். இவர்கள் சபாக்களில் பாடும்போது தமிழில் பாடுவதில்லையே ஏன்? அங்கே கூடும் ரசிகர்கள் தமிழ் பாடக்கூடாது என்று சொல்வார்களா என்ன? இல்லை அவர்கள்,வெளிநாட்டவர்களும் வெளிமாநிலத்தாருமா, தமிழர்கள்தானே?
பணக்கார நிலச்சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஏகபோக உரிமையாக இருந்த இசை இன்று அனைவருக்கும் பொதுவாகி இருக்கிறது. இனி அதைப் பாமரனும் ரசிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அதற்குப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை இசை கட்டாயமாகக் கற்றுத்தரப்பட வேண்டும். நமது சபாக்களும், இசைவாணர்களும் தமிழிசைக்கு முன்னுரிமை தரவேண்டும். தமிழகத்தில் தமிழில் பாடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் கேவலம் இனியும் தொடரக்கூடாது!
நன்றி : தினமணி
Subscribe to:
Posts (Atom)
