Thursday, September 17, 2009

போதுமே கண்துடைப்பு!

பருவமழை தவறியதால் நாட்டில் நிலவும் வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் தங்களது பங்களிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, தங்களது துறையைச் சார்ந்த அலுவலர்களும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக நிதியமைச்சர் இனி தனது விமானப் பயணங்களில் முதல் வகுப்பில் பயணிப்பதைத் தவிர்த்து சாதாரண வகுப்பில் மட்டுமே பயணிக்கப் போவதாக அறிவித்தார். சொன்னதுடன் இல்லாமல் செயலிலும் இறங்கி கோல்கத்தாவுக்கும், நேற்று சென்னைக்கும்கூட சாதாரண வகுப்பில் பயணித்து அரசுக்கு ஒரு சில ஆயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் தனது பங்குக்கு சாதாரண வகுப்பில் பயணித்தார் என்பதுடன், அவரைப் பின்பற்றி ஏனைய மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் சாதாரண வகுப்பில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

சாதாரண வகுப்பில் பயணிப்பதால் அரசுக்கு அப்படி என்னதான் மிச்சம் ஏற்பட்டுவிடும் என்று கேட்டுவிடக் கூடாது. நமது மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையில் 75 சதவீதம் அவர்களது சுற்றுப்பயணச் செலவுக்காகத்தான் என்பது தெரியுமா? விமானக் கட்டணம், அன்னியச் செலாவணி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம், வெளிநாடு செல்லும்போது இவர்கள் அழைத்துச் செல்லும் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கான செலவு என்று ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரிப்பணம் நமது அமைச்சர்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணத்துக்காகச் செலவாகிறது (வீணாகிறது!) என்பதுதான் உண்மை.

2007 - 2008-க்கான புள்ளிவிவரப்படி, மத்திய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கான மொத்தச் செலவு ரூ. 182 கோடி. இதில் இவர்களது உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஆன செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 138 கோடி. மொத்த அமைச்சரவையின் சம்பளம் மற்றும் படிகள் வெறும் ரூ. 1.75 கோடிதான். இவர்களது வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தொலைபேசிச் செலவு, அலுவலகத் தனி உதவியாளர்கள், வீட்டுத் தோட்டப் பராமரிப்பு, வாகனச் செலவுகள் என்பன மீதியுள்ள செலவுகள்.

நமது மத்திய அமைச்சர் பெருமக்கள் தங்களது சுற்றுப்பயணச் செலவுகளில், சாதாரண வகுப்பில் பயணம் செய்வதன் மூலமும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்து, அரசின் அல்லது அரசு நிறுவனங்களின் விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஆளுநர் மாளிகைகளில் தங்குவதன் மூலம் 10 சதவீதம் மிச்சம் பிடித்தால், ஆண்டொன்றுக்கு ரூ. 18 கோடி மிச்சமாகுமே என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு.

ஆண்டொன்றுக்கு இந்திய அரசின் மொத்தச் செலவு, 2009-10-க்கான நிதிநிலை அறிக்கையின்படி ரூ. 10,20,838 கோடி. இதில் ரூ. 18 கோடி எத்தனை சதவீதம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமைச்சர்களின் செலவுகளால் ஆகும் வரிப்பண இழப்பைவிட, நமது உயர் அதிகாரிகளின் பயணச் செலவுகளால் ஆகும் இழப்புகள் பல நூறு மடங்கு அதிகம் என்பது நமது நிதியமைச்சருக்குத் தெரியாதா என்ன? மைத்துனிக்குக் குழந்தை பிறந்தால், தில்லியிலிருந்து பெங்களூருக்கும், மைத்துனனுக்கு நிச்சயதார்த்தம் என்றால் தில்லியிலிருந்து புவனேஸ்வரத்துக்கும் ஏதாவது அலுவலக வேலையை உருவாக்கிக் கொண்டு அரசு செலவில் பறப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் உயர் அரசு அதிகாரிகளுக்கு யார் கடிவாளம் போடுவது?

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்வதை நமது உயர் அதிகாரிகள் தவிர்த்தாலே ஆண்டொன்றுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மிச்சமாகுமே!

அரசின் பணிகள் திட்டமிட்டபடி முடியாமல் ஏற்படும் காலதாமதத்தால் ஆண்டுதோறும் வீணாகும் வரிப்பணம் ரூ. 1,000 கோடியைத் தாண்டுமே, அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லையே, ஏன்?

இந்தியாவில் ஓடும் மோட்டார் வாகனங்களில் 60 சதவீதம் அரசு வாகனங்கள்தான். இவை முறையாகப் பராமரிக்கப்படாததால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் நஷ்டம் எத்தனை ஆயிரம் கோடி? அதனால் வீணாக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சம் பிடிக்கப்பட்டாலே கணிசமான அன்னியச் செலாவணி மிச்சமாகுமே, அது ஏன் கவனிக்கப்படுவதில்லை?

பொருளாதாரத் தேக்கத்தால் அடுத்த நிதியாண்டில் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் குறையும் வாய்ப்பு நிறையவே உண்டு. வறட்சியின் காரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற இனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. ஏற்கெனவே பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வரும் மத்திய அரசு, மேலும் தள்ளாடும் என்பது நிஜம்.

இந்த நிலையில், நிர்வாக இயந்திரத்தின் திறனை அதிகரிப்பதன் மூலமும், திட்டமல்லாச் செலவை, அதாவது வட்டித்தொகை, பயணச் செலவு, அரசு விழாக்கள், திடீர் இலவச அறிவிப்புகள் போன்றவற்றைக் குறைப்பதன் மூலமும் மட்டுமே நிதிநிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அமைச்சர்கள் சாதாரண வகுப்பில் பறப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் இருக்கட்டும். கட்டுக்கடங்காமல் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் சர்வ வியாபியாகிய அதிகார வர்க்கத்துக்குக் கடிவாளம் போடுவது யார்? எப்படி? எப்போது?
நன்றி ; தினமணி

திருடனின் கையில் சாவி...!

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.

கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், "பரிசு' என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய "ஃபைசர்' நிறுவனம்-

வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி "வையோக்ஸ்' என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு
நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...

ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?.
நன்றி : தினமணி

ஊழலுக்கு எச்சரிக்கை!

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவரின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ள கருத்தும், ஊழல் செய்யும் அரசு ஊழியர்களின் சொத்து பறிமுதல் மசோதா தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்று மத்திய நீதித் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ள கருத்தும் நாட்டில் ஏதோ நல்லது நடப்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளன.

அதுமட்டுமல்ல, ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் பிரிவுகள் 309, 310, 311 திருத்தப்பட வேண்டும் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

அமைச்சர் பேசிய அதேவேளையில், உச்ச நீதிமன்றத்தில் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை கோரும் வழக்கொன்றில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவரைத் தண்டிப்பதில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என்ற கருத்தையும் நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், சுதர்ஸன் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துகள் யாவும் மக்களைத் திருப்திப்படுத்தும் கருத்துகளாக இல்லாமல், நடைமுறையில் உண்மையிலேயே அமல்படுத்தப்படும் விஷயங்களாக மாற வேண்டும். மாறினால்தான் இந்தப் பேச்சுகளும் கருத்துகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

லஞ்சம் வாங்கியதாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்படும் செய்திகள் வருகின்றனவே தவிர, அவர்கள் தண்டிக்கப்பட்டதாகச் செய்திகள் வருவது மிகமிகக் குறைவு. இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, கோடிகோடியாய்ச் சேர்த்து வைத்த லஞ்சப் பணத்தில் "வாய்தா' வழி சுகவாழ்வு வாழ்கிறார்கள்.

ஒவ்வோர் ஆட்சியிலும் கடந்த ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அமைச்சர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள். மீண்டும் ஆட்சி மாறியதும் அவர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகின்றன. அல்லது கட்சி மாறிய சிலநாளில் அவர் மீதான லஞ்ச வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். திடீரென நல்லவராகிவிடுகிறார். ஆனால் அவர்களது சொத்துகள் அனைத்தும் மக்கள் பணம் என்பது பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

இந்தியாவில் அனைவரும் அரசு ஊழியர்கள் அல்ல. அதிகபட்சமாக 2 சதவீதம் பேர் மட்டுமே அரசு ஊழியர்கள். அதேபோன்று அனைவரும் அரசியல்வாதிகளும் அல்ல. அவர்களிலும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மிகச் சிலர்தான். ஆனால் இவர்கள் செய்யும் ஊழலும், வாங்கிச் சேர்க்கும் சொத்துகளையும் பார்த்து மக்கள் மனமொடிகிறார்கள். அரசியல்வாதியாவது ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ அதற்கு முன்னதாகவோ மக்கள் மன்றத்தை எதிர்கொண்டு, அவர்களது அனுமதியுடன் மட்டும்தான் மீண்டும் லஞ்சம் வாங்க முடிகிறது. ஆனால், அதிகாரிகள் அப்படியா? ஒருமுறை நியமனம் பெற்றுவிட்டால், ஓய்வு பெறுவது வரை, அல்லது பிடிபடாதவரை தங்கு தடையின்றி லஞ்சத்தில் புரள முடிகிறது.

காவல்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்களும் கூட்டம் நடக்கும் நாளுக்கு மட்டுமே படி பெறும் சாதாரண நகராட்சி கவுன்சிலர்களும்கூட அவரவர் பகுதியில் பளிங்குக் கற்களால் இழைத்துக் கட்டியுள்ள மாளிகைகள் மக்கள் பார்வைக்கு மறைந்துவிடுமா என்ன? நகரின் முக்கிய பகுதிகளில் மனை, வீடுகள், கடைகளை மனைவி மற்றும் உறவினர் பெயரில் இவர்கள் வாங்கி, புதுப்புதுக் கார்களில் வலம் வரும் இவர்களைப் பார்க்கும் இந்தியக் குடிமகன், எல்லா அறநெறிகள் மீதும் நம்பிக்கை இழக்கிறான். விரக்தியின் உச்சத்தில், பாஞ்சாலி சபதத்தில் வரும் மகாகவி பாரதியின் கூற்றினைப்போல, ""வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிபெலாம்'' என்கிற மனநிலைக்கு ஆளாவது தவிர்க்க முடியாததாகிறது. இதனால்தான், லஞ்சத்தை வெறுப்பவர்கள்கூட, "வேறு வழியில்லையே' என்று நொந்துகொண்டு லஞ்சத்தைக் கொடுக்க உடன்படும் சூழ்நிலை உருவாகிறது.

ஒவ்வோர் அரசு ஊழியரும் சொத்துகள் வாங்கும்போது அது பற்றிய விவரத்தைத் தங்கள் துறை மூலமாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், எத்தனை அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு முறைப்படி தெரிவிக்கிறார்கள்? அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவதும், பினாமி பெயரில் சொத்து பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதும்தான் பெரும் ஊழல்களுக்கு கடிவாளம் போடும்.

இதெல்லாம் இருக்கட்டும். தலைமை நீதிபதி சொல்லும் கருத்து ஆழமானது, அவசியமானது என்றாலும்கூட, நீதிபதிகள் சொத்துகளை அறிவிக்க நீதித்துறையே பின்வாங்குகிறபோது அவர்தம் சொல்லுக்கு மதிப்பு இருக்குமா? ஐம்பதுகளில் உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தா காலத்திலிருந்து அவ்வப்போது எழுகின்ற "ஊழலை ஒழிப்பேன்' கோஷம் உதட்டளவு கோஷமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இப்போது வீரப்ப மொய்லியின் முறை... நல்லது நடந்தால் சரி...!
நன்றி : தினமணி