Thursday, July 9, 2009

பணவீக்கம் மேலும் குறைந்தது

ஜூன் 27 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் மைனஸ் 1.55 சதவீதமாக இருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் மைனஸ் 1.30 சதவீதமாக இருந்தது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடம் இதே காலத்தில் 12.03 சதவீதமாக இருந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த வாரத்தில் கடல் மீன் விலை 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பருப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை 2 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேபோல இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெய் விலையும் ஒரு சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் அயர்ன் காஸ்டிங்உள்பட சில் மெட்டல்கள் மற்றும் சில கெமிக்கல்கள் விலை குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


10 மாத இடைவெளிக்குப்பிறகு ஹட்ச் விளம்பரத்தில் மீண்டும் வந்திருக்கிறது ' பக் ' நாய்

இதற்கு முன் ஹட்ச் நிறுவன மொபைல் போன் விளம்பரத்தில் வந்த ' பக் 'நாய் மிக பிரசித்தம். பின்னர் அது வோடபோனாக மாறிய பின்னும் அந்த குட்டி நாய் எல்லோருக்கும் பிடித்த ஒரு அபிமான நட்சத்திரமாக மக்கள் மனதில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 10 மாத காலமாக அது விளம்பரத்தில் வராமல் இருந்தது. இப்போது மீண்டும் வந்திருக்கிறது. ஐபிஎல் - 2 போட்டியின்போது வோடபோன் நிறுவனம், முட்டை வடிவிலான கதாபாத்திரத்தை கொண்டு ஜூஜூஸ் என்ற விளம்பரத்தை வெளியிட்டு, அதுவும் பிரபலமானதும், இனிமேல் ' பக் ' நாய் வராது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் மீண்டும் அது நடிக்க வந்து விட்டது. இது குறித்து வோடபோனுக்காக விளம்பர படங்களை தயாரிக்கும் ஆக்லிவி அண்ட் மதர்ஸ் என்ற விளம்பர நிறுவனத்தின் எக்ஸிகூடிவ் பிரான்ட் டைரக்டர் குமார் சுப்ரமணியம் தெரிவித்தபோது, நாங்கள் ஜூஜூஸ் விளம்பரத்தை டி.வி.யில் வெளியிடும்போதும் ' பக் ' நாயை விட்டுவிடவில்லை. வோடபோன் ஸ்டோர்களில் விளம்பர அட்டைகளாக அதை வைத்திருந்தோம் என்றார். அந்த ' பக் ' நாய்க்குட்டியும், குட்டி பெண்ணும் நடிக்கும் விளம்பர படங்கள் மீண்டும் இந்திய தொலைக்காட்சிகளில் வெளிவர ஆரம்பித்து விட்டது
நன்றி : தினமலர்


இந்திய ராணுவத்தில் இணைந்தார் மலையாள நடிகர் மோகன்லால்

மலையாள நடிகர் மோகன்லால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு கவுரவ ‌லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னிலையில் மோகன்லால் பதவியேற்றுக் கொண்டார்.
நன்றி : தினமலர்


ஏர் - இந்தியா சீரமைப்பு குழுவுக்கு தலைமை ஏற்க ரத்தன் டாடாவை அனுகிய மத்திய அரசு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் ஏர் - இந்தியாவின் நிர்வாகத்தை சீரமைத்து, அதை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஒரு ஆலோசனை குழுவை ( அட்வைசரி போர்டு ) மத்திய அரசு நியமிக்கிறது. அந்த குழுவுக்கு பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை தலைமை ஏற்குமாறு கேட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ரத்தன் டாடாடை சமீபத்தில் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய அமைச்சரின் கோரிக்கையை ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை. இந்நிலையில், ஏர் - இந்தியா நிறுவனம், அது குத்தகைக்கு வாங்கியிருக்கும் விமானங்களை கூடிய விரைவில் திருப்பி கொடுத்து விட முடிவு செய்திருக்கிறது. அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. அதற்காக ஒரு குழுவை நியமித்து குத்தகை ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து, இன்னும் ஒரு வாரத்திற்குள் குத்தகை விமானங்களை எல்லாம் திருப்பி கொடுத்து விட தீர்மானித்திருக்கிறது. மேலும் ஏர் - இந்தியாவின் விமானங்கள் செல்லாத வெளிநாடுகளில் இருக்கும் ஏர் - இந்தியா அலுவலகங்களை மூடி விடவும் தீர்மானித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தை சாம்ராஜ்யத்தை சரித்த பட்ஜெட்

பட்ஜெட் நன்றாக இல்லையா? இல்லை அதை பங்குச் சந்தை சரிவர புரிந்து கொள்ளவில்லையா? இது தான் அனைவரின் கேள்வியும். ஏழை, எளியவர்கள் முதல் அனைவரையும் கவர்ந்திழுக் கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என, அனைவரும் எதிர்பார்த்தது தான். அதனால் தான் சந்தை கடந்த பல நாட்களாக, குறிப்பாக கூறப்போனால் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து கூடிக் கொண்டே வந்தது. 28 சதவீதம் கூடியது. அதாவது, 12,173 புள்ளிகளிலிருந்து 15,600 புள்ளிகள் வரை சென்றது. கடந்த வாரம் கூட ரயில்வே பட்ஜெட் நன்றாக இருந்தது.
மேலும், பொதுத்துறை பங்குகளை விற்பது பற்றியும், வெளிநாட்டு முதலீடுகள் பற்றியும் பொருளாதார ஆய்வறிக்கை கூறியது. வரப்போகும் பட்ஜெட் எப்படி இருக்கக்கூடும் என்று கூறாமல் கூறுவது தான் பொருளாதார ஆய்வறிக்கை. ஆனால், இந்த சர்வேயில் குறிப் பிடப்பட்டிருந்த பல முக்கியமானவை பட்ஜெட்டில் இடம் பெறாததால் சந்தை பட்ஜெட் தினத்தன்று ஒரு இறக்கி இறக்கி விட்டுச் சென்றது.
பட்ஜெட் தினத்தன்று சந்தை 870 புள்ளிகள் குறைந்தது. பட்ஜெட்டிற்கு பிறகு சந்தை 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் சந்தை இவ்வளவு குறைந்துள்ளதே என்று பலரும் வாங்க ஆரம்பித்தனர். ஆதலால், சந்தை 127 புள்ளிகள் மேலே சென்றது. ஆனால், நேற்று மறுபடி மிகவும் சந்தை குறைந்தது ஏன்? உலகின் மிகப்பெரிய ரேட்டிங் கம்பெனியான எஸ் அண்டு பி, இந்தியாவின் ரேட்டிங் குறைக்கப்படலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இது தவிர உலகளவில் சந்தைகளும் குறைந்தே தொடங்கியிருந்தன. இவை இரண்டும் சேர்ந்து இந்திய சந்தைகளை இழுத்து கீழே போட்டது. ஆதலால் மும்பை பங்குச் சந்தை 401 புள்ளிகள் குறைந்து முடிந்தது.
யார் இந்த சரிவில் வாங்கினர்? இப்படி 1,100 புள்ளிகள் குறைந்த சந்தையில் யாராவது வாங்கினார்களா? உள்நாட்டு நிதி நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் சந்தையில் பங்குகளை வாங்கினர். இது சந்தையில் நஷ்டத்தை சிறிது குறைக்க உதவியது. பட்ஜெட்டில் என்ன எதிர்பார்த்து கிடைக்காமல் போனது? செக்யூரிட்டிஸ் டிரான்ஸ்சாக்ஷன் டாக்ஸ், வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள், வருமான வரி உச்சவரம்பு கூடுதல் என பல நல்ல அம்சங்கள் பட்ஜெட்டில் இருந்தாலும் சந்தையில் ஒரு தொய்வு ஏற்பட்டது.
நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 401 புள்ளிகள் குறைந்து 13,769 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 123 புள்ளிகள் குறைந்து 4,078 புள்ளிகளுடனும் முடிந்தது. பட்ஜெட் நன்றாக இல்லாததால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க ஆரம்பித்துள்ளன. பட் ஜெட் தினத்தன்று 1,483 கோடி ரூபாய்க்கு சந்தையில் பங்குகளை விற்றன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதாலும், மேலும் வரத்துக்கள் குறைந்ததாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு லாபம். பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு உள்ள வரிகள் அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை கூடுதலாகும். அதே சமயம் சுங்கவரிகள் கூடுதலாக இருப்பதால் தங்கம் கடத்தல் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த வருடத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வரத்துவங்கியுள்ளன. இண்டஸ் இந்த் வங்கி, தனது சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த காலாண் டில் மட்டும் 86.5 கோடி ரூபாய் லாபமாக சம்பாதித்து உள்ளது. இது கடந்தாண்டு இதே காலாண்டை விட 365 சதவீதம் அதிகம். ஆதலால், சந்தையில் இந்த கம்பெனியின் பங்குகள், 10 சதவீதம் வரை மேலே சென்றது.
சரிந்த வங்கிப் பங்குகள்: வங்கி சீர்திருத்தங்கள் பற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படாததால் வங்கிப் பங்குகள் கடந்த மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருக்கின்றன. வங்கித் துறை குறியீடு, 11 சதவீதம் வரை சரிந்துள்ளது. மேலே செல்லுமா? நிச்சயமாக மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளன. சீர்திருத்தங்கள் இல்லாவிடினும் வங்கிகள் இந்த காலாண்டில் நல்ல லாபம் காண்பிக்கும். ஆதலால், பங்கு விலைகள் கூடும்.
ரிலையன்ஸ் பங்குகள் தேர்தல் முடிவுகளுக்கு முன் இருந்த நிலைக்கு வந்து விட்டது. இந்த கம்பெனியின் பங்குகள் 1,829 ரூபாய் என்ற அளவிற்கு நேற்று வந்து விட்டது. ரிலையன்சின் இரு கம்பெனிகளுக்கிடையே எரிவாயு விற்பதில் உள்ள தகராறு இன்னும் தீராததாலும், கோர்ட்டுக்கு சென்றிருப்பதாலும் சந்தையில் அந்த கம்பெனியின் பங்குகள் கீழே சென்றன. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? வரும் நாட்கள் கடினமாகத் தான் இருக்க வேண்டும். காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் சந்தை அதை சிறிது வரவேற்று மேலே செல்லும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்