Tuesday, March 20, 2012

ஆண் - பெண் நட்புறவு

ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம்காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை என்னைப்பற்றி ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச்சொல்ல இந்தச் சுய தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.

ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள்கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை. விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படியெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் சின்னவன் ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.

ஆணின் இயல்பை நன்கு அறிந்த தமிழர்கள் இயற்றிய பொன்மொழி இது. இதுபற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும் என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும். ஒரு தகப்பன் தன் மகளை ஆண் நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு பெண்ணோடு பழகும்போது இவள் ஒரு பெண் என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பனைப் பார்ப்பதுபோல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை.

இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டுவர முடியும். இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு.

பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக் கொள்ளாதபோதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள்.

தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப் பாலைச் சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக்கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது.

ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும்போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும்போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்)

தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் - அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் - திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்துமீறல்கள் ஏற்படும்போதே, அதைப் புரிந்துகொள்ளும் - ஆனால் அதை விரும்பாத - பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.

ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்துமீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப்போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் என் எழுத்தாள நண்பர் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப்போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன்.

தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்ய மாட்டான். தோதான வாய்ப்பின்போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான். அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.

எனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (ழ்ண்ள்ந்). ஆக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால் மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடேயானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.

காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் வழிவது பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் வழிசல்கள் உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)

பல்லாண்டுகள் எந்தவிதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணேகூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள்.

ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன? பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய் அபத்தத்திலும் அபத்தமான கருத்து.

பெண்களோடு அவர்களைப் பழகவிட்டாலும், பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான். அதை மாற்றுவது மிக, மிக மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.

எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்.

நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.

வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்கள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்துகொண்ட கொடுமையை என்ன சொல்ல? பொதுவாக இதுதான் ஆண்களின் லட்சணம்.

இதுபோன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில்தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும்கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.

எனவேதான் நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர்போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறு இல்லாத பிற ஆண்களும்கூட இதை ஆதரிக்கிறார்கள் - ஆனால், வேறு உள்நோக்கத்துடன். அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ, அதற்காக!

கட்டுரையாளர்  : ஜோதிர்லதா கிரிஜா
நன்றி  : தினமணி   


Saturday, February 11, 2012

இறைவா, எங்கே போகிறோம்?

வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.

அதே சென்னையில் இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, அவரிடம் நண்பர்களாகப் பழகிய நான்கு இளைஞர்கள் வஞ்சகமாக அழைத்துச் சென்று, அவருக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து வெறித்தனமாகக் கற்பழித்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் மாணவர்கள். அதிலும் பொறியியல் படிக்கும் மாணவர்கள்.

இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொறுமையின்மைக்கும், வெறித்தனமான பிடிவாதங்களுக்கும், கட்டுப்பாடில்லாத ஒழுக்கக் கேடுகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் இறையுணர்வு இல்லாமையும், நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த கருத்து. அதிலும் குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒழுக்கக் கேடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது வக்கிரத்தனங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் காட்சி ஊடகங்களும், வெறித்தனத்துக்கு வழிகோலும் மதுப் பழக்கமும்தான் இந்தப் போக்குக்குக் காரணங்கள்.

இறையுணர்வாளர்கள் தவறிழைக்கவில்லையா? இறைவனின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆஷாடபூதிகளாகவும், ருத்திராட்சப் பூனைகளாகவும், கபட வேட தாரிகளாகவும் எத்தனையோ பேர் காவி உடை தரித்த, வெள்ளை அங்கியை அணிந்த காமுகர்களாக உலவினார்கள் தெரியுமா? என்றெல்லாம் இறை மறுப்பாளர்கள் எதிர்க்கேள்வி எழுப்பக்கூடும். அவர்கள் கூறுவது எல்லாம் பொய் என்று நாம் மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ தயாராக இல்லை.

அதேசமயம், இறையுணர்வு என்பது பரவலாக, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக பய உணர்வையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. கபடவேட தாரிகள் சாமியார்களாகவும், பாதிரியார்களாகவும், மௌல்விகளாகவும் உலவி இருக்கலாம். ஆனால், அப்படி நடந்துகொண்ட ஒரு சிலரைக் காரணம் காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப் போதித்த தெய்வத் தொண்டர்கள் அனைவரையும் நாம் இழிவு செய்துவிட முடியாது. கூடாது!

இளைஞர்களுக்கு ஆன்மிக போதனை நடத்தி வந்த காலகட்டத்தில், பேராசைக்கு இடம் கொடுக்காதே, ஒழுக்கம்தான் உயர்வு தரும், இறை நம்பிக்கை உன்னைக் காப்பாற்றும் என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல போதனைகளைப் பள்ளிகளிலும் வீட்டிலும் ஊட்டி வளர்த்துவந்த காலங்களில் எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்ததுபோக, இப்போது இளைஞர்கள் பாதை தவறி நடப்பது என்பதே ஒரு நெறியாக மாறி விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், அப்படி ஒருவரை நாம் கண்டுபிடித்து நிலைநிறுத்தியாக வேண்டும் என்பார் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் வால்டேர். பள்ளிகளில் இறையுணர்வு போதிக்கப்பட்டது. ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தனும், உலக நீதியும், மூதுரையும் பிஞ்சு உள்ளங்களை நெறிப்படுத்த சொல்லிக் கொடுக்கப்பட்டன. இப்போதைய நர்சரி ரைம்ஸ் கல்வி முறை, பணத்தைத் தேடுவதும் வாழ்க்கை வசதிகளைத் தேடுவதும், சிற்றின்ப சந்தோஷங்களுக்கு வழிகோலுவதும் மட்டுமே தனது குறிக்கோள் என்று மாறிவிட்டிருப்பதன் வெளிப்பாடுதான் சென்னையில் நடந்தேறியிருக்கும் அந்த இருவேறு சம்பவங்கள்.

கற்பழிக்கப்பட்ட பெண், தனது நண்பர்கள் என்று அந்த நான்கு மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து தாய்க்கு அறிமுகப்படுத்தியபோது, சகோதரிபோலத் தனது மகளுடன் பழகுகிறார்கள் என்று அந்தத் தாய் கருதி அதை அங்கீகரித்ததன் விளைவுதான் இன்று கற்பழிப்பில் முடிந்திருக்கிறது என்று நாம் சொன்னால் நம்மைப் பழமைவாதிகள் என்று ஒதுக்கக்கூடும். ஆனால், அதுதானே நிஜம்?

ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதுபோலத் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், கதைகளும் பரவலாக வெளிவருகின்றன. அவை நடைமுறையில் சாத்தியம்தானா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட திராணியற்றவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம். காரணம் இதைத் தவிர்க்க முடியாது என்கிற சூழ்நிலையை இன்றைய நுகர்வுக் கலாசாரச் சூழல் உருவாக்கி விட்டிருக்கிறது.

திரைப்படங்கள் சமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுபோய் சமுதாயச் சீரழிவுக்கு வழிகோலிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் காதலைத் தவிர, வேறு உணர்வுகளே இல்லை என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தாத திரைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே என்றாகிவிட்டது.

பள்ளி மாணவர்கள் தொடங்கி பிறந்த நாளானாலும், தேர்வில் வெற்றி பெற்றாலும், மகிழ்ச்சியான தருணம் என்றாலும் மது அருந்திக் கொண்டாடுவது என்பது கலாசாரமாகிவிட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நமது அரசும் ஊருக்கு ஒன்றிரண்டு என்பதுபோய் தெருவுக்குத் தெரு மதுபான விற்பனைக் கடைகளைத் திறந்து வைத்து இளைஞர்களைத் தவறான வழிக்குத் திசைதிருப்புவதில் முனைப்பாக இருக்கிறது.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்த வருமானமானாலும் ஒழுக்கமான நிறைந்த வாழ்வுக்கு அவர்களைப் பழக்கத் தயாராக இல்லை. ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலைசெய்த அந்தப் பள்ளிச் சிறுவனுக்கு தினமும் கைச்செலவுக்கு நூறு ரூபாய் தருவார்களாம் பெற்றோர்.

திரைப்படம் பார்த்துதான் தனது பழிவாங்கும் குணம் அதிகரித்ததாகக் கூறுகிறான் அந்தப் பள்ளி மாணவன். சகோதரியாகப் பழகிய பெண்ணை போதையில் கற்பழிக்கிறார்கள் நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள். இறைவா, நாங்கள் எங்கே போகிறோம்?
நன்றி : தினமணி   


Friday, June 17, 2011

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.


""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
 
நன்றி : தினமணி


Wednesday, June 8, 2011

யாரிடம் சொல்லி அழ?


கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எடுத்தது. அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடிவிட வேண்டும். 2022-ம் ஆண்டில் ஜெர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அது.


இதற்கு அவசியமில்லை என்று ஜெர்மனியின் அதிபர் ஆஞ்செலா மெர்க்கெல் தனிப்பட்ட முறையில் சில மாதங்களுக்கு முன்பும்கூட கருத்து தெரிவித்திருந்தாலும், அவரும் நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறார். வேறு வழியில்லை. இதற்கு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை என இரண்டு இயற்கைச் சீற்றங்களும் ஒருசேரத் தாக்கியதில் ஃபுகுஷீமா அணுஉலை பாதிக்கப்பட்டது முதல் உலக நாடுகள் மற்றும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்சமும் விழிப்புணர்வும்தான் காரணம். இப்போது உடனடியாக 7 அணுஉலைக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதேசமயம் இந்தியாவில் ஒரு நிலைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. ஜெய்தாபூரில் அணுஉலைக்கூடம் அமைத்தே தீருவோம் என்று அரசு சொல்கிறது.

இதற்கு அரசுத் தரப்பில் தரப்படும் விளக்கம்: இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அணுஉலைக் கூடம் மூலம் மின்உற்பத்தி மிகமிக அவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது அணுஉலைக் கூடங்கள் மூலம் நம் நாட்டுக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3 விழுக்காடு மட்டுமே. 2020-ம் ஆண்டு இது 6 விழுக்காடாக உயரும். 2030-ம் ஆண்டு இது 12 விழுக்காடாக உயரும். பாதுகாப்பு முறைகளில்தான் சிறிது மாற்றங்கள் தேவை. அதில் முழுமையாகக் கவனம் செலுத்தினால் பிரச்னையே இல்லை.

இதை இந்திய அரசு சொல்லும்போது நாம் ஜெர்மனியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெர்மனியில் அணுமின் உலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் 22 விழுக்காடு. அதாவது நான்கில் ஒரு பங்கு மின்சாரம் அணுஉலைக் கூடங்கள் மூலம்தான் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. ஆனாலும் அதை இழக்கத் துணிகிறார்கள். எதற்காக? மக்கள் நல்வாழ்வுக்காக.

ஃபுகுஷீமா அணுஉலை விபத்தால் குடிநீரிலும்கூட கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும் நிலைமையைக் கண்கூடாகக் கண்டுவிட்டதால் ஏற்பட்ட முடிவு இது. மக்கள் நலன் கருதி இந்த முடிவை அவர்கள் மேற்கொள்கிறார்கள். பிற இயற்கை ஆதாரங்கள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முடிவை ஏற்றுக் கொள்கிறார்கள். மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, ஆபத்தைத் தெரிந்தே அரவணைப்பது மடமை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அணுஉலைக் கூடங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் ஜெர்மனி அரசுக்கும்கூட நன்றாகத் தெரியும். அவர்கள் நம்மைவிட பொறுப்பாக இந்தப் பணிகளில் ஈடுபட்டு, பாதுகாப்புக்கு அதிக அக்கறை தரக்கூடியவர்கள்தான். ஆனால் அவர்கள் அறிந்திருக்கிறார்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை யாவும் இயற்கைச் சீற்றங்களுக்கு முன்பாக அர்த்தமற்றவை என்பதை.

இந்தியாவின் அணுஉலைக் கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல, இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடிச் செல்வதென்பது வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் மிகவும் எளிது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இதை மும்பைத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு இருந்தும் இந்திய அரசு சொல்கிறது - பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரி செய்துவிட்டால் போதுமானது. அணுஉலைக் கூடங்களால் பிரச்னை இருக்காது என்று. எவ்வளவு பொறுப்பற்றதனம்?

அண்மையில் ஜெய்தாபூரில், அணுஉலைக் கூடத்துக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியை அரசு அடக்கி ஒடுக்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த மக்களின் எதிர்ப்பு அரசியலாக்கப்பட்டு, அரசியல் சண்டையாக மாற்றப்பட்டதால் மக்களின் ஈனக்குரல் அமுங்கிவிட்டது. அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் அணுஉலைக் கூடம்தான் இந்தியாவிலேயே மிகப் பெரியது. இந்த அணுஉலைக் கூடத்தின் மின்உற்பத்தித் திறன் 9,900 மெகாவாட். இதற்காக இங்கே 2,400 ஏக்கர் நிலத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜெய்தாபூரில் அணுஉலை அமையவிருக்கும் பகுதி பல்லுயிர் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இடங்களில் முக்கியமானது. ஆனாலும் அந்த இடத்தைத்தான் இந்திய அணுமின் கழகம் தேர்வு செய்துள்ளது. அதற்கு அணு ஆற்றல் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இடத்தில் அணுஉலை அமையுமானால், இந்த பல்லுயிர் பெருக்கம் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

மேலும், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் கொண்ட 4-வது நிலையில் உள்ள பகுதி இது என்று பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடத்தில் அணுமின் உலை வைப்பது எந்த விதத்தில் சரியான முடிவாக இருக்கும்? அமைக்கப்படவுள்ள ஈபிஆர் எனப்படும் புதிய தொழில்நுட்பத்திலான உலைகள், இதுவரை பரிசோதனைக்கு உட்படாதவை. இவற்றின் நன்மை தீமையை யார் அறிவார்? பிறகு எந்த தைரியத்தில் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது?

இந்தியாவில் கிடைக்கும் யுரேனியம் 10,000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மட்டுமே போதுமானது. இதற்கும் மேலாக, அணுமின் உற்பத்தியை அதிகரித்தால் யுரேனியத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். இதற்கு ஆயிரம் கெடுபிடிகள், ஒப்பந்தங்கள், தடைகள். இதையும் மீறி இறக்குமதி செய்தாலும் அவற்றின் விலை அப்போது மேலதிகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்தியாவின் மின் தேவை ஒவ்வோராண்டும் 10 விழுக்காடு அதிகரிப்பதாகவும் அதனால்தான் இத்தகைய முடிவுகளை மேற்கொள்வதாகவும் அரசு காரணம் கூறுகிறது. இது ஒரு நொண்டிச் சாக்கு. இந்தியாவின் மின்உற்பத்தி தட்டுப்பாடு 13 விழுக்காடு என்றால், மின்விநியோகத்தில் வழித்தட இழப்பு 28 விழுக்காடாக இருக்கிறது. இப்போது இருக்கும் மின்உற்பத்தி நிலையங்களை அதன் முழுஉற்பத்தித் திறனுக்குப் பயன்படுத்தி, வழித்தட மின்இழப்பை 10 விழுக்காடாகக் குறைத்தாலே போதும். மின்தட்டுப்பாடு நீங்கிவிடும்.

மக்களைப் பற்றியும், நாளைய தலைமுறை பற்றியும் கவலைப்படாமல் பன்னாட்டு நிறுவனங்களின் மின்தேவையைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்பட்டால், இப்படியெல்லாம்தான் முடிவுகள் எடுக்கப்படும்!
நன்றி : தினமணி


Tuesday, June 7, 2011

நடப்பு 2011ம் ஆண்டில் இதுவரையில்புதிய பங்கு வெளியீடுகள்: 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவு



நடப்பு 2011ம் ஆண்டில், இதுவரை புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 15 நிறுவனங் களுள், 9 நிறுவனப் பங்குகளின் விலை, வெளியீட்டு மதிப்பை விட, 16 முதல் 75 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. 6 நிறுவனப் பங்குகளின் விலை, 1.40 சதவீதம் முதல் 277 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்ற 2010ம் ஆண்டிலும், நடப்பு 2010ம் ஆண்டிலும், நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வருகிறது. உலகளவில், பணவீக்கம் அதிகரித்து வருவது, ஒரு சில வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாதது, மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வியாபாரம் சுணக்கமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு 2011ம் ஆண்டில், இதுவரை இந்தியாவில், 15 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன. இவற்றுள், அக்ரோபெடல் டெக்னாலஜீஸ் நிறுவனம், பங்கு ஒன்றை 90 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது. ஆனால், இதன் பங்கின் விலை, வெளியீட்டு விலையை விட, 75 சதவீதம் சரிவடைந்து, 22.70 ரூபாய் என்ற அளவில் கைமாறிக் கொண்டுள்ளது. அதாவது, இதன் பங்குகளில், முதலீடு செய்த முதலீட்டாளர்கள், இதன் பங்குகளை விற்கும் நிலையில், அதிக இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.இதே போன்று, ஷில்பி கேபிள் டெக்னாலஜிஸ் நிறுவனம், பங்கு ஒன்றை 69 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது.

ஆனால், இதன் பங்கின் விலை, தற்போது, பங்கு சந்தையில், வெளியீட்டு விலையைவிட 73 சதவீதம் சரிவடைந்து, 18.65 ரூபாய் என்ற அளவில் உள்ளது.மேலும், சர்வலட்சுமி பேப்பர் நிறுவனத்தின் பங்கின் விலை, வெளியீட்டு விலையான 29 ரூபாயை விட, 64 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஓம்கார் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்கின் விலை (வெளியீட்டு விலை 98 ரூபாய்) 46 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பாரமவுன்ட் பிரின்ட் பேக்கேஜிங் நிறுவனத்தின் பங்கின் விலை ( 35 ரூபாய்) 45 சதவீதமும், பி.டி.சி. இந்தியா பைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் பங்கின் விலை (28 ரூபாய்) 32 சதவீதமும், சங்வி போர்ஜிங் அண்டு இன்ஜினியரிங் நிறுவனப் பங்குகளின் விலை (85 ரூபாய்) 25 சதவீதமும், பியூச்சர் வென்சர்ஸ் இந்தியா நிறுவனப் பங்கின் விலை (10 ரூபாய்) 19 சதவீதமும், இன்னோவென்டிவ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை (வெளியீட்டு விலை 29 ரூபாய்) 16 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளன.நாட்டின் பங்கு வர்த்தகம், நன்கு இல்லாததால், பல முதலீட்டாளர்கள், ஒரே இடத்தில் முதலீட்டை மேற்கொள்ளாமல், ஆதாயம் அளிக்கும் பல்வேறு முதலீட்டு திட்டங்களில், முதலீடு செய்து வருகின்றனர்.

இதுவும், புதிய பங்கு வெளியீடுகள் மற்றும் பங்கு சந்தைகளில் முதலீடு குறைந்து போனதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.இவ்வாண்டு புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, பல நிறுவனங்களுள், பினோடெக்ஸ் கெமிக்கல் நிறுவனம் பங்கின் வெளியீட்டு விலையை 70 ரூபாய் என்ற அளவில் நிர்ணயித்திருந்தது. இதன் பங்கு ஒன்றின் விலை தற்போது, 277 சதவீதம் அதிகரித்து, 264.35 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று, மிட்வேலி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், பங்கு ஒன்றை 70 ரூபாய்க்கு வெளியிட்டது. இதன் பங்கு ஒன்று தற்போது, 79 சதவீதம் உயர்ந்து 125.40 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேற்கண்ட நிறுவனங்கள் தவிர, லவ்வபிள் லிங்கிரி நிறுவனத்தின் பங்கு ஒன்று தற்போது, வெளியீட்டு விலையான, 205 ரூபாயை விட 58 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆஞ்சநேயாலைப்கேர் நிறுவனம், பங்கு ஒன்றை 234 ரூபாய்க்கு வெளியிட்டது. அதன் பங்கு ஒன்றின் விலை தற்போது, 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

சுடர் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை, வெளியீட்டு விலையான 77 ரூபாயை விட, 36 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலையும், வெளியீட்டு விலையான 175 ரூபாயை விட, 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்நிலையில், சிறப்பு வகை ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், கேலக்ஸி சர்பாக்டன்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, போதிய அளவிற்கு ஆதரவு கிடைக்காததால், இந்நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றுக் கொண்டது.

மென்னிரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கியது. இந்நிலையில், இந்நிறுவனம், பங்கு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதாக புகார் வந்ததையடுத்து, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி', இந்நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்படுவதை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்


Monday, June 6, 2011

வங்கி வைப்பு நிதி முதலீட்டிற்கு கூடுதல் ஆதாயம்

வங்கி, அஞ்சலக சேமிப்பு, பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என, பலதரப்பட்ட முதலீட்டு இனங்களில், பாதுகாப்பான, நியாயமான வருவாய்க்கு உகந்த முதலீடு எது?


இந்த கேள்விக்கு, வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என, ”லபமாக விடை கூறி விடலாம். தற்போதைய நிலையில், முதலீடு மோசம் போகாமல், அதே சமயம், பணவீக்கத்தை ஓரளவு எதிர்கொள்ளும் வகையில், வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குறைந்தபட்ச வட்டி, 3.5 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி, 9 சதவீதமாகவும் உள்ளது. இவற்றை விட அதிக வட்டியை, வங்கிகள் அவற்றின் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்குகின்றன.வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது, வங்கியில் சேமிப்பு கணக்கை கொண்டுள்ள வாடிக்கையாளருக்கு, கூடுதல் வருவாயை வழங்கும் எனலாம்.

மேலும், அன்றாட இருப்பு நிலைக்கேற்ப கணக்கிடப்படும் வட்டியை, மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒருமுறையோ, வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்தும், ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இதனால், வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம், சராசரியாக 4.13 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த வட்டி விகிதத்தை விட, கூடுதல் வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, 'பிக்சட் டிபாசிட்' எனப்படும், குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 10.25 சதவீத வட்டியை, வங்கிகள் வழங்குகின்றன.

மேலும், மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக இதைவிட வட்டி வழங்கப்படுகிறது.இந்த வகையில், குறித்த கால வைப்பு நிதிக்கு அதிக வட்டி வழங்குவதில், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டு வைப்பு கணக்கிற்கு, 10.25 சதவீத வட்டி வழங்குகிறது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சி காலத்தில் 11 ஆயிரத்து 65 ரூபாய் கிடைக்கும். கரூர் வைஸ்யா வங்கி, ஓராண்டு கால வைப்புத் திட்டத்திற்கு 10 சதவீத வட்டி வழங்கி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கர்நாடகா பேங்க், சவுத் இந்தியன் பேங்க் ஆகியவை, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஓராண்டு முதலீட்டிற்கு, 9.75 சதவீத வட்டியை வழங்குகின்றன. இந்த வரிசையில், பெடரல் பேங்க் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டிற்கான குறித்த கால வைப்புத் தொகைக்கு, 9.60 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதன்படி இவ்வங்கியில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சிக் காலத்தில் 10 ஆயிரத்து 995 ரூபாய் கிடைக்கும்.

பெரும்பாலான மூத்த குடிமக்களின் முதல் தேர்வாக, வங்கிகளின் டிபாசிட் திட்டங்கள் உள்ளன. அவர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு ஆகியவற்றின் மூலம் பெறும் வருவாயை, வங்கிகளின் குறித்த கால வைப்புக் கணக்கில் சேமிக்கின்றனர். அவர்களைக் கவர்வதற்காக, வங்கிகள், இதர முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வட்டியை விட, கூடுதல் வட்டியை வழங்குகின்றன.

இவ்வகையில், மூத்த குடிமக்களின் ஓராண்டு கால வைப்புத் தொகைக்கு, கரூர் வைஸ்யா பேங்க் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஆகியவை, அதிகபட்சமாக 10.5 சதவீத வட்டியை வழங்குகின்றன. இதன்படி, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வோருக்கு, முதிர்ச்சிக் காலத்தில் 11 ஆயிரத்து 92 ரூபாய் கிடைக்கும். இதேபோல், ஆக்சிஸ் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகியவையும், மூத்த குடிமக்களின் ஓராண்டு வைப்புத் தொகைக்கு, 10.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. பெடரல் பேங்க் 10.1 சதவீத வட்டியை வழங்கி வருகிறது.

பங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், இதை விட கூடுதல் வருவாய் பார்க்க முடியும் என்றபோதிலும், அவற்றில் இடர்பாடுகள் அதிகம் உள்ளன. தங்கத்தில் செய்யும் முதலீடு, லாபகரமானதாக கருதப்படுகிறது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை, 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை, 92 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை, 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களின் சராசரி வருவாய், 8.8 சதவீதமும், கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு மேற்கொள்ளும் பேலன்ஸ்டு பண்டு திட்டங்கள், 8.7 சதவீத வருவாயையும் அளித்துள்ளன. 'இன்கம் பண்டு' மீதான முதலீட்டின் சராசரி வருவாய், 5 சதவீதமாகவும், 5 ஆண்டு கால முதலீட்டின் சராசரி வருவாய், 6.5 சதவீதமாகவும் உள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணியில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய,'லார்ஜ் கேப்' பரஸ்பர நிதி திட்டங்களின் 5 ஆண்டு கால சராசரி வருவாய், 11 சதவீதமாக உள்ளது.

இத்திட்டங்கள் வாயிலான வருவாயை ஒப்பிடும் போது , வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதிக்கான வட்டி வருவாய் குறைவுதான். எனினும், நியாயமான வட்டி வருவாயில், நிம்மதியாக காலம் கழிக்க விரும்புவோரின் விருப்பத் தேர்வாக, வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்கள் திகழ்வதில் வியப்பேதுமில்லை.

அதிக வருவாய்:வங்கிகளின், குறித்த கால வைப்பு நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீது, கடன் பெறும் வசதியும் உள்ளது. இக்கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு, வங்கி மாறுபடுகிறது. அவசர தேவை அல்லது பிற நிதியினங்களில், முதலீடு செய்து கூடுதல் வருவாய் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன்படி, தங்களின் வைப்பு நிதி டிபாசிட்டிலிருந்து பெறும் கடனுக்கு, கூடுதலாக, 2 அல்லது 3 சதவீத வட்டியை செலுத்த வேண்டும். வங்கிகள், குறித்த கால வைப்பு நிதியில், 30 சதவீத அளவிற்கு கடன் வழங்குகின்றன.

- ஏ.கே.விஜய்தேவ்
நன்றி : தினமலர்   


Sunday, June 5, 2011

வேலை தரும் கல்விக்குத் தயாராகுங்கள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு நாள்கள் பல கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவரும், மாணவியும் அவர்களது பெற்றோர்களும் கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரிகளை மொய்த்து வரும் காலம் இது. வீடுகள் தோறும் பெற்றோர்கள், நண்பர்கள் என ஆளாளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி பிளஸ் 2 தேர்வு பெற்ற மாணவர்களை ஒரு வழி ஆக்கிவிடும் காலகட்டம் இது.

பொதுவாகவே, மேல்படிப்புக்கு மட்டுமல்ல, பிள்ளைகள் எல்.கே.ஜி. சேர்ந்ததில் இருந்து இந்தப் படிப்பு குறித்த ஆலோசனைகள், அவன் அல்லது அவள் ஒரு வேலைக்குச் செல்வது வரை தொடர்ந்து நிழல் போல் வருவது என்பது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.

பள்ளிகளில் சேர்க்கும் போதே பொறியாளர், மருத்துவர் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை தங்கள் பிள்ளைகளின் தோளில் ஏற்றி அவர்களின் தோள் வலியைக் கூட பொருள்படுத்தாது சுமக்கச் சொல்லி வருவதே பல பெற்றோர்களின் செயலாக இருந்து வருகிறது.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பக்கத்து வீட்டு மாணவரைக் காட்டி, இது போல் படிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று அடிக்கடி கூறுவதுதான் பல குடும்பங்களிலும் நடக்கும் நிகழ்ச்சி. இந்த வார்த்தை மாணவர்களின் மனதில் பதிவாகி எப்படியாவது பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்ற துடிப்பையும் உருவாக்கி விடுகிறது.

இதனால் பொறியியல், மருத்துவம் போன்றவைகளைத் தவிர்த்த மற்ற படிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் ஒரு தெளிவான பார்வை இல்லாமலேயே போய் விடுகிறது.

இதனைத் தவிர்த்து எத்தனையோ படிப்புகள், அதுவும் படித்தவுடனே வேலை வாய்ப்பு வழங்கும் படிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் பட்டயப் படிப்புகள் என எண்ணற்ற படிப்புகள் இன்றைய கல்விச் சந்தையில் குவிந்து கிடக்கின்றன.

அப்படி இருந்தாலும் அந்தப் படிப்புகள் என்னவோ மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு போன்று கிராக்கியுடன் இருப்பதில்லை என்பதுதான் வேதனை.

தெரிந்த பையன் ஒருவன் பொறியியல் படித்து இன்று கைநிறைய சம்பளம் வாங்குகிறான் என்ற பிரமிப்புத்தான் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறதே தவிர எண்ணிக்கையில் அடங்காத பொறியியல் பட்டம்பெற்ற மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சொற்பமான சம்பளத்தில் வேலை செய்வதைக் கவனத்தில் கொள்வதில்லை.

இப்படி குடும்பமும்,சொந்தமும், அக்கம்பக்கமும் ஒவ்வொரு மாணவரையும் பொறியியல் படிப்புக்காகத் தயார்படுத்தி இருக்கின்றனர். இந் நிலையில் பிளஸ் 2 தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்க முடியாமல் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும் கூட வேறு வழியின்றி மாணவர்களும், பெற்றோர்களும் ஏதாவது ஒரு கல்லூரியில் அவர்கள் கேட்கும் கட்டணத்தைச் செலுத்திப் படிக்கவைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

அங்கு அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்குமா என்பதைக்கூட யோசிப்பதில்லை. தன் பிள்ளை என்ஜினீயரிங் படிக்கப் போகிறான் என்பது மட்டுமே அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். இது ஒரு சமூக அந்தஸ்தாகி விட்டது.

குறைவான மதிப்பெண்கள் பெற்று ஏதோ ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பதை விட, படிக்கும் திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்குரிய கல்வியைக் கற்க பெற்றோர்களும் விரும்புவதில்லை. மாணவர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையிலும், பணத்தைச் செலவழித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களால், பொறியியல் கல்லூரிகளிலும் தனது திறனை வெளிப்படுத்த இயலாமல் போகிறது.

இதனால் ஏராளமானவர்கள் தங்கள் கல்வியைத் தொலைத்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துள்ள விவரங்கள் ஏராளம். உலகியல் நடப்புகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் திறன் பெற்றவர்கள் இன்றைய மாணவர்கள்.

அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால், அவர்களின் எண்ணங்களை மாணவர்களின் மனதில் திணிப்பதுதான் பிரச்னையாகி வருகிறது. இதன் காரணமாகத் தங்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு உதவிசெய்து, அவர்களுக்கு வழிகாட்ட எத்தனையோ தொலைக்காட்சிகள் நல்ல பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. நாளிதழ்கள் பல கல்லூரிகளின் பாடப்பிரிவுகளைத் தொகுத்து வழங்கி வருகின்றன. எத்தனையோ கல்வித்துறை வல்லுநர்கள் நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகின்றனர்.

எனவே, தேர்வு முடிவுகளை அறிந்துள்ள நிலையில், அடுத்த நிலைக்குச் செல்ல மாணவர்களைப் பெற்றோர்கள் தயார்படுத்தினாலே போதும். மாணவர்களின் சிந்தனையை மழுங்கடிக்காமல் இருந்தாலே,அவர்களின் ஆற்றல் தானாகவே வெளிப்படும். பெற்றோர்களே பிள்ளைகளைச் சிந்திக்க விடுங்கள்.

கட்டுரையாளர்: வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி