Tuesday, October 20, 2009

அழிவை நோக்கி கடலோரக் கிராமங்கள்

கடலோர மக்களின் வாழ்வு என்றாலே போராட்டங்களை எதிர்கொள்வதாகவே அமைந்துவிடும்போல! இலங்கை கடற்படையின் தாக்குதல், மீனவர்களுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பாணை, மீனவர்களைக் கடற்கரையில் இருந்து வெளியேற்றும் சட்டங்கள் என அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புகளில் தத்தளித்து மீளமுடியாமல் இருப்போருக்கு இன்னோர் அதிர்ச்சியாக வந்துள்ளது கடலரிப்பு.

தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகரித்து வரும் கடலரிப்பு மீனவ மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலரிப்பு என்பது ஒன்றும் புதிதல்ல.
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான உவரி கப்பல் மாதா ஆலயம், முன்னர் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுத்தான், புதிய ஆலயம் 1970-1974-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் புனித அந்தோனியார் ஆலயம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியுள்ளது. அப்போதெல்லாம் மக்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை உணரவில்லை.

ஆனால், அண்மைக்காலங்களில் 5 அல்லது 10 ஆண்டுகளில் ஏற்பட்டு வரும் கடலரிப்புதான் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தி மீனவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து வேம்பார் காலனி அமைந்த இடத்தின் தொலைவு சுமார் 200 மீட்டர். ஆனால், தற்போது கடல் அலைகள் காலனி வீடுகளின் சுவர்களைத் தொடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றன.

கடற்கரையில் இருந்து தொலைவில் கட்டப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம், கடலுக்குள் மூழ்கும் அபாயக் கட்டத்தில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலும் இதேபோல கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருவதாகப் பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.

மேலும், மாற்றுவழி காணும் கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல தமிழகத்தில் பல கடலோரக் கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. இதைப் பற்றிச் சிந்திப்பது யார் என கடலோர மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடியப்பட்டினம், தேங்காய்ப்பட்டினம், இரயுமன்துறை உள்ளிட்ட கிராமங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் பெரியதாழை, கூட்டப்புளி உள்ளிட்ட கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள தருவைகுளம், சிப்பிகுளம், கீழவைப்பார், வேம்பார் உள்ளிட்ட கிராமங்களும் அதிக அளவில் கடலரிப்பைச் சந்தித்து வருவதாக அண்மையில் சின்பேட் என்ற தொண்டு நிறுவனம் பின்லாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 9 கடலோர மாவட்டங்களில் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் விவசாயம், மீன் பிடித்தலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றி ஆய்வு நடத்தியபோதுதான் இந்த அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

கடலரிப்பால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை உணராமலேயே "கரை தேய்கிறது, வளர்கிறது' என சாதாரணமாகக் கூறுகின்றனர் மீனவர்கள். இந்த பேராபத்து கடலோரக் கிராமங்களை மட்டுமன்றி, மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளையும் விட்டுவைக்கவில்லை.

மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இவற்றில் விலாங்குசல்லி, பூவரசன்பட்டி ஆகிய இரு தீவுகளும் கடல்மட்டத்தின் உயரத்துக்குச் சமமாகத்தான் தற்போது இருக்கின்றன. மிக விரைவில் இவை அடியோடு காணாமல்போகும் நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிலவியல் துறை ஆராய்ச்சியாளர்கள். மற்ற தீவுகளின் வடிவமும், அளவும் சில ஆண்டுகளாக உருமாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கடலரிப்பும், கரை வளருவதும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து வந்துள்ளன. இதை ஆபத்து நிலைக்கு வளரவிடாமல் சூழியல் சமநிலை அமைப்புகளான மணல் குன்றுகள், உயிர் அரண் காப்புக் காடுகள் மற்றும் கரையோரத்தில் அமைந்த தாவரங்கள் பாதுகாத்துள்ளன.

இதற்கு மாறாக, கடலில் கற்களைக் கொட்டுவதும், கட்டடங்களைக் கட்டுவதும், கடலோரத்தில் மணல் அள்ளுவதும், பவளப் பாறைகளை வெட்டி எடுப்பதும் கடலரிப்புக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் பனிக்கட்டி உருகிக் கடல் மட்டம் உயருகிறது என்றால், அதைத் தாக்குப்பிடிக்கும் இயற்கை அரண்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல இயற்கையைச் சுரண்டும் மனிதனின் செயல்பாடுகளே இயற்கைச் சீற்றத்துக்கு வழி அமைத்திடுகிறது.

புதுச்சேரி பகுதியில் கரையில் போடப்பட்ட கற்களால் விழுப்புரம் பகுதியில் உள்ள கோட்டக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கடலரிப்பின் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அரசின் முடிவு கற்கள் மற்றும் கான்கிரீட் தடுப்பு உள்ளிட்ட இயற்கைக்கு மாறான தாற்காலிகத் தீர்வை நோக்கித்தான் உள்ளது.

அரசின் கட்டுப்பாடுகள் மீனவர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதம் கொடுப்பதாக அமைய வேண்டும்.

கடலோர மக்களை வெளியேற்றாமல் நிரந்தரத் தீர்வுக்கான வழிமுறைகளை அரசு செயல்படுத்த வேண்டும் என மீனவ மக்கள் விரும்புகின்றனர்.

அரசு, இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்டி வரும் வேகத்தை அழிந்து வரும் கடலோரக் கிராமங்களைப் பாதுகாப்பதில் காட்டினால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம். தினமும் விடியலை முதலில் பார்க்கும் கடலோர மக்களுக்கு வாழ்விலும் விடிவு ஏற்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.
கட்டுரையாளர் : ரெ. ஜாய்சன்
நன்றி : தினமணி

பாதுகாப்பான டிரைவிங் பிரிமியம் ரேட் குறையும்

இன்சூரன்ஸ் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களால், பல ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, தற்போது கார் இன்சூரன்சில் பல பயன்கள் உள்ளன. பாதுகாப்பாக, வாகனங்கள் ஓட்டுபவர்கள், சில ஆதாயங்கள் பெறும் வகையில், ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு, புதிய திட்டம் ஒன்றை சோதனை திட்டமாக துவங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காரில், டிராக்கிங் கருவி ஒன்று பொருத்தப்படும். அந்த கருவி, காரின் வேகம், 60 கி.மீ.,க்கு மேல் செல்கிறதா, போக்குவரத்து விதிகள் மீறப்படுகிறதா மற்றும் இரவு 10 மணிக்கு மேல் கார் ஓட்டப்படுகிறதா என்பதை கண்டறியும். இதன் மூலம் காரின் பயன்பாடு கண்டறியப்படும்.
முன், 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட, டிராக்கிங் கருவியின் தற்போதைய விலை ஐந்தாயிரம் ரூபாய். வாடிக்கையாளர்கள் தங்கள் கார் பயன்பாடு குறித்து, அறிய விருப்பம் தெரிவிக்க வேண்டும். அதுவே இந்த கருவி பொருத்துவதில் இருக்கும் ஒரே பிரச்னை.
இதுகுறித்து ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,'டிராக்கிங் கருவி மூலம் சேகரிக்கப்படும், விஷயங்கள் பிரீமியம் கணக்கிடுவதற்கே பயன்படுத்தப்படும். இந்த கருவி, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற உள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்


தாமதிக்கப்படும் நீதி...

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதன் உச்சத்தைத் தொட்டது. இனி இந்த நூற்றாண்டையே ஆக்கிரமித்து அச்சுறுத்தும் பிரச்னையாக இருக்கப் போவது சுற்றுச்சூழல்தான்.

இன்று உலக அளவில் புவி வெப்பம் உயர்வடைதலும் அதனைத் தொடர்ந்து பருவ நிலையில் ஏற்படும் மாற்றமும் அவற்றின் விளைவாக வெள்ளம், வறட்சி, கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குதல் முதலிய பல பாதிப்புகள் தொடர்கிறதென்றால் உள்ளூர் அளவில் நமது கண் முன்னால் நமது வாழ்வின் ஆதாரமாக விளங்குகின்ற நீர் நிலைகளையும் அது சார்ந்த சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

அகில இந்திய அளவில் நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் இருந்து வருவது ஒருபுறமென்றால், மறுபுறம் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீராதாரங்களை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதும், எஞ்சியுள்ள நீர் நிலைகளில் கழிவுநீரைக் கலந்து நஞ்சாக்குவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பாலாற்றுப் படுகையும் காவிரிப் படுகையும் மிகக்கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பாலாறு தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்படுகிறதென்றால், காவிரிப்படுகை முழுவதும் ஜவுளி உற்பத்தியின் துணைத் தொழிலான சாயத் தொழிலால் மாசுபடுத்தப்பட்டு வருகிறது.

காவிரியின் கிளையாறுகளான பவானி, கோவை மற்றும் ஈரோடு மாவட்ட தொழிற்சாலைக் கழிவுகளாலும், நொய்யலாறு திருப்பூர் சாயக்கழிவுகளாலும், அமராவதி ஆறு கரூர் சாயக் கழிவுகளாலும், கொடகனாறு திண்டுக்கல் தோல் பதனீட்டுக் கழிவுகளாலும், காளிங்கராயன் கால்வாய் ஈரோடு நகர தோல் தொழிற்சாலைக் கழிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திலும் வெளியேற்றப்படும் கழிவு நீர் காவிரியில்தான் வந்து சங்கமிக்கின்றன. மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரிக்கு அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கழிவும், புகளூர் கால்வாய் மூலமாக காவிரியில்தான் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவு நீரில் அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மையும் ரசாயன உப்புத் தன்மையும் கலந்து காணப்படுகின்றன.

சாதாரணமாக குடிப்பதற்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்படும் நீரில் டிடிஎஸ் அளவு அதிகபட்சமாக லிட்டருக்கு 300 மில்லி கிராம் வரை இருக்கக்கூடும். ஆனால் சாயப்பட்டறைகளிலிருந்தும் அதன் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீரில் டிடிஎஸ் அளவு லிட்டருக்கு 2400 மி.கி. முதல் 13,000 மி.கி. வரை இருப்பதாக ஆய்வாளர்களும் விவசாயிகளும் கூறுகின்றனர்.

காவிரியிலும் அதன் கிளையாறுகளிலுமாக நாளொன்றுக்கு சுமார் 30 கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த சாயக்கழிவு கலந்த நதிநீர்தான் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீராணம் ஏரி வழியாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லும் குடிநீரிலும், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் முதலிய கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரிலும் நச்சுத்தன்மை கொண்ட சாயக்கழிவு நீர் கலந்திருப்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

நச்சுக்கழிவு நீர் கலந்த நதிநீரைப் பாசனத்திற்காகப் பயன்படுத்தி விளைவித்த விளைபொருள்களை மக்கள் உட்கொள்வதாலும் அதனையே குடிப்பதற்கும் பயன்படுத்துவதாலும் மிக மோசமான வியாதிகள் உண்டாகின்றன. குறிப்பாக புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள், தோல்நோய், மலட்டுத்தன்மை மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கஹீனம், புத்தி சுவாதீனம் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.

தமிழக அரசு கடந்த 30-3-1989 அன்று வெளியிட்ட அரசு ஆணை எண் 213-ன் படி நீர்நிலைகளிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் எந்தத் தொழிற்சாலையும் அமைக்கக்கூடாது. ஆனால் இந்த அரசாணையை மீறுகின்ற வகையில் கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பெருவாரியான சாய மற்றும் சலவைப்பட்டறைகள் ஆறு மற்றும் கால்வாய்களுக்கு வெகு அருகில் அமைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதச் செயலாகும்.

இதற்கு அரசு எந்த விதிமுறையின் கீழ் அனுமதியளித்துள்ளது என்பது பொதுமக்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 31-5-2005 அன்று 90 நாள்களுக்குள் அனைத்து சாயப்பட்டறைகள் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் சவ்வூடு பரவல் முறையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்திக் கொள்ளவும், கழிவு நீரை வெளியேற்றாவண்ணம் நிறுத்திக் கொள்ள உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை இதுவரை சாயப்பட்டறைகள் செயல்படுத்தாமல் இருப்பது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

நொய்யலாற்றுப்பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபை தொடுத்த வழக்கில் கடந்த 27-7-2009 அன்று உச்ச நீதிமன்றம் சாயப்பட்டறைகள் மற்றும் அவற்றின் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவுகள் இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதியோ அல்லது மக்கள் நலன் கருதியோ தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் திறனற்றுக் கிடப்பதையே இத்தகைய உத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பையும், சாயக்கழிவு நீரை வெளியேற்றா வண்ணம் நிறுத்திக் கொள்ள பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளையும் முனை மழுங்கச்செய்யும் நோக்கில் சாயக்கழிவு நீரைக் குழாய் மூலம் கடலில் சேர்க்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாயக்கழிவு நீரைக் கடலில் கொண்டு கலப்பதன் மூலம் கழிவு நீரில் உள்ள நச்சுத்தன்மையால் கடலின் பல்லுயிர் சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.

மேலும் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்காற்றுப் பகுதி அறிவிக்கை இத்தகைய நச்சுக்கழிவுகள் கடலில் கொட்டப்படுவதைத் தடை செய்கிறது. ஐந்தாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கும் முதல்வருக்கு இந்த உண்மை புரியாமலிருப்பது வருத்தம் அளிக்கிறது. கடந்த தேர்தலில் ஜவுளி மாவட்டங்களில் ஆளும் கூட்டணி தோல்வியைத் தழுவியதற்கு அடிப்படையான காரணங்களுள் தீர்க்கப்படாத சாயக்கழிவு பிரச்னையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் நிலைகளை மாசுபடுத்துவது குற்றச்செயல் என்பதனை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு - 277, இந்திய நீர் சட்டம் - 1974 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1986 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களும் மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளும் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

இருந்தபோதிலும் சாயக்கழிவு பிரச்னை தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதை சாயப்பட்டறை உரிமையாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.

நீதியின் தாமதம் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தும் குற்றச்செயலை மறைமுகமாக அனுமதிப்பதாகவே உள்ளது. வாழ்வாதாரமான நிலத்தையும் நீரையும் இழந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இழப்பீடு கோரி நீதிக்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்து அவர்களில் பலர் இறந்தும் போய்விட்டனர்.

குறைந்தபட்சம் அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாவது கிடைக்கச் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் சம்பந்தமான வழக்குகளை பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கும் போக்கை வழக்கமாகக் கொண்டுள்ள நமது நாட்டின் உயர் நீதிமன்றங்கள் மீதும் உச்ச நீதிமன்றத்தின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மதிப்பும் நம்பிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

சாமானிய மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்திருக்கும் கடைசி நம்பிக்கையை இழப்பதற்கு முன்பு நீதித்துறை தனது நடுநிலைத் தன்மையை நிலைநாட்ட வேண்டியது அவசியம். ஏனெனில் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.

(கட்டுரையாளர்: ப. குணசேகரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கப் பொதுச் செயலர்.)
நன்றி : தினமணி

தார்மிக நியாயம்!

இன்னார் மட்டும்தான் பொதுவாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற வரைமுறைகள் மக்களாட்சித் தத்துவத்தில் கிடையாதுதான். படித்தவர்களும், சட்ட வல்லுநர்களும், பொருளாதார நிபுணர்களும், தங்களை முற்றிலுமாக மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்களும் மட்டுமே சுதந்திர இந்தியாவின் ஆரம்பகாலங்களில் அரசியலில் களம் புகுந்தனர். காலப்போக்கில் ஏனைய தரப்பினர் பலரும், கலைத்துறையினர் உள்பட, அரசியலில் பங்கு பெறத் தொடங்கினார்கள்.

ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக, குறிப்பாகச் சொல்லப்போனால் 1967-க்குப் பிறகு, அரசியலை மட்டுமே தங்களது தொழிலாகக் கொண்டவர்கள் மிக அதிக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் காலம் முடிந்து சுயநலவாதிகளின் காலம் தொடங்கியது என்றுகூடக் கூறலாம். இந்த நிலைமை இந்தியா முழுமையிலும் பரவலாகக் காணப்பட்டது என்பதுதான் உண்மை.

அரசியல் என்பதே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், அதன்மூலம் தனிப்பட்ட முறையில் செல்வத்தையும், செல்வாக்கையும் பெருக்கிக் கொள்வதற்கும்தான் என்றாகிவிட்ட நிலைமை கடந்த 20 ஆண்டுகளாக மேலும் தரம் தாழ்ந்து அதிக அளவில் கிரிமினல் பின்னணி உடையவர்களும்கூட தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்களாக வலம் வரும் அளவுக்குப் போய்விட்டிருக்கிறது. இது ஒருபுறம் கவலை அளிக்கிறது என்றால் அதைவிடக் கவலையளிக்கும் இன்னொரு நிலைமையும் உருவாகி உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில், பல தொழில் அதிபர்கள் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களில் சிலர் தங்களது செல்வத்தாலும், செல்வாக்காலும் சில அரசியல் கட்சிகள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்களாகி விடுகிறார்கள். இன்னும் சிலர், அரசியல் கட்சித் தலைமையுடன் உள்ள நெருக்கத்தால் மக்களவைக்கே போட்டியிட்டு வெற்றியும் அடைகிறார்கள்.

கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள் போன்றவர்களைக் குடியரசுத் தலைவரே மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய நமது அரசியல் சட்டம் வழிவகுக்கிறது. மேலும், இதுபோன்று அரசியலைத் தங்களது பிழைப்பாக வைத்துக் கொள்ளாதவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தனிப்பட்ட ஆதாயம் கருதாமல், நல்ல பெயர் வாங்க மக்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றுகூட நம்ப இடமிருக்கிறது.

பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தங்களது சுயநலத்தைக் கருதாமல் பொதுநல நோக்குடன் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். அந்த எண்ணத்தில்தான் மக்களும் திரையுலகில் கோடிகோடியாகச் சம்பாதித்துவிட்ட கலைஞர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபடாமல் பொது நன்மையைக் கருதிச் செயல்படுவார்கள் என்று நம்பி அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த நம்பிக்கை மோசம் போவதும் உண்டு.

அது ஒருபுறம் இருக்கட்டும். சமீபகாலமாகப் பல தொழிலதிபர்கள் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களே, அவர்களது செயல்பாடுகள்தான் கவலை அளிப்பதாக இருக்கிறது. சமீபத்தில், நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்றில் உறுப்பினராக உள்ள ஒரு தொழிலபதிபர், தனது நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்படும் கட்டமைப்புப் பணிகள் பற்றிய ஆய்வு ஒன்றில் அரசுத் தரப்பில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றக் குழுக்கள் அரசுத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பவை. அதன் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அமைச்சர்களைவிட அதிகாரம் படைத்தவர்களாக இருப்பவர்கள். சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளை அழைத்து விவரங்கள் கேட்கவும், கோப்புகளைப் பரிசீலனை செய்யவும் அதிகாரம் படைத்தவர். அரசுப் பணிகளை ஒப்பந்தப்புள்ளி மூலம் பெற்று நிறைவேற்றும் தனியார் கட்டமைப்பு நிறுவனங்களை நடத்துபவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, சம்பந்தப்பட்ட நிலைக் குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்தால் அது என்ன நியாயம்?

தாங்கள் சம்பந்தப்பட்ட, உறவினர்கள் சம்பந்தப்பட்ட அல்லது கீழமை நீதிமன்றங்களில் தாங்கள் வாதாடிய வழக்குகள் வந்தால், அதன் விசாரணையில் நீதிபதிகள் பங்கேற்பதில்லை. தார்மிக ரீதியாக அது தவறு என்று கருதுகிறார்கள். ஆனால், அரசியல்வாதிகளாக மாறிய தொழிலதிபர்களோ, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டியவர்களைக் கேட்டுத் தங்கள் வியாபாரத்துக்குப் பயனளிக்கும் நிலைக் குழுவில் இடம்பெற்று விடுகிறார்கள். இது எப்படி சரி?

தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளாக மாறுவதிலோ, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதிலோ தவறில்லை. இவர்களது அனுபவமும், திறமையும் தேசத்தின் நன்மைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படுமானால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், தங்களது பதவியைப் பயன்படுத்தித் தங்களது நிறுவனங்களில் வளர்ச்சியை உறுதிப்படுத்த முயல்கிறார்களே, அதை எப்படி அனுமதிப்பது?

ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.ஏ. பை, டி.டி. கிருஷ்ணமாச்சாரி போன்ற தொழிலதிபர்கள் அமைச்சர்களாகி இந்தியப் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்ததுபோக, இப்போது பதவிகள் சுயவளர்ச்சிக்குப் பயன்படுகிறதோ என்கிற ஐயம் தலைதூக்குகிறது. தொழிலதிபர்கள் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதுதான் தார்மிக ரீதியாக நியாயம்!
நன்றி : தினமணி

எது சிறிய கார்? அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

சிறிய கார் எது என்பதற்கு மத்திய அரசு சில வரையறையை வகுத்துள்ளது. இதற்கு, டெயோட்டோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. சிறிய கார் என்பதை காரின் நீளத்தை வைத்து முடிவு செய்ய கூடாது, எரிபொருள் சிக்கனம், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் புகை வெளியிடும் போது மாசு ஏற்படுத்தாமல் இருத்தல் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
சிறிய கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. சிறிய கார் என்பது 4,100 மி.மீ., முதல் 4,450 மி.மீ., வரை நீளம் கொண்டதாக இருக்க வேண்டும், பெட்ரோலில் ஓடும் காராக இருந்தால், 1200 சிசி திறன் கொண்டதாகவும், டீஸலில் ஓடும் கார் 1500 சிசி திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு வரையறை வகுத்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் சங்கமும் அரசுக்கு சில யோசனையை கூறியுள்ளது. காரின் நீளத்தை அடிப்படையாக கொண்டே சிறிய காரை வரையறுக்க வேண்டும், இன்ஜின் அளவை கருத்தில் கொள்ள கூடாது என்று அந்த சங்கம் கூறியுள்ளது.
இதற்கு டொயோட்டோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. டொயோட்டோ நிறுவனம், இந்தியாவில் சிறிய கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.3,800 கோடி முதலீடும் செய்ய உள்ளது. இந்நிறுவனம் சார்பில், சிறிய கார் வரையறை குறித்து, பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 'எங்களது கொள்கையே, சிறியதில் துவக்கி பெரியதாக முடிக்க வேண்டும் என்பது தான். இந்தியாவில் சிறிய கார் உற்பத்திய பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளோம். ஆனால், சிறிய கார் என்ற வரையறையை நீக்க வேண்டும்,'' என்று இந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சிறிய கார் என்பதை, செயல்பாட்டின் மூலமே வரையறை செய்ய வேண்டும், நீளத்தை அடிப்படையாக கொண்டு வரையறை செய்ய கூடாது என்று ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து ஹோண்டா நிறுவன தரப்பில் கூறும் போது,'இந்தியாவில், 2011-12ம் ஆண்டில் சிறிய காரை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்திய அரசின் சிறிய கார் வரையறைக்கு உட்பட்டதாகவே அந்த கார் அமையும். இருந்தாலும், உலக ஆட்டோமொபைல் தரத்தை பின்பற்றினால், உலகளவில், கார் உற்பத்தி மையமாக இந்தியா திகழ ஒரு வாய்ப்பாக அமையும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


பணவீக்க சதவீத தகவல் இனி மாதம் ஒரு முறை தான்: என்.டி.பி.சி., பங்குகளை விற்கவும் அரசு முடிவு

வாரா வாரம் மறுஆய்வு செய்யப்பட்டு வந்த மொத்த விற்பனைக் குறியீட்டு எண், இனி மாதம் ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால், இனி பணவீக்க விவரங்கள், மாதம் ஒரு முறை மட்டுமே வெளியிடப்படும். மேலும் பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை விற்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. விலைவாசி அதிகம் இருந்த போதும், பணவீக்க விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே தொடர்ந்து இருக்கிறது. ஆனால் பொருளாதார மந்த நிலையில் இருந்து இன்னமும் நாடு மீளவில்லை.
பணவீக்க சதவீத அளவை வாரந் தோறும் வெளியிடும் நடைமுறை சரி அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் மாதம் ஒரு முறை வெளியிடப்படும் வழக்கம் இருக்கிறது என்று, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா சமீபத்தில் கூறியிருந்தார். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த்சர்மா கூறியதாவது: நாட்டின் பணவீக்கம் குறைவாக காணப்பட்டாலும், பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கருத்திற்கொண்டு,'ஹோல்சேல் பிரைஸ் இன்டெக்ஸ்' எனப்படும் மொத்த விற்பனைக் குறியீட்டு எண் மாதத்திற்கு ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். தற்போது ஒவ்வொரு வாரமும் மறு ஆய்வு செய்யப்பட்டு வரும், மொத்த விற்பனைக் குறியீட்டு எண்ணை, வெளிநாடுகளில் செய்வதை போன்று, இனி மாதம் ஒரு முறை மட்டுமே மறு ஆய்வு செய்யப்படும். எனவே, பணவீக்கம் விவரங்கள், மாதம் ஒரு முறையே வெளியிடப்படும். எனினும், எரிபொருட்கள் குறித்த விவரங்கள் வாராவாரம் வெளியிடப்படும். அதேபோல, பிரதமர் தலைமையில், விலைவாசி ஆய்வுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொருட்களின் விலைவாசி குறித்து ஆராயப்பட்டது. நாடு முழுவதும் பொருட்களின் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும். இதனால் வெளிநாட்டிலிருந்து முக்கிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரமும் அமைச்சர்களின் குழு கூடி விலைவாசி குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 211 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மத்திய அரசின் மானிய உதவியுடன் ஹஜ் பயணம் மேற் கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் செய்து வருகிறது.
என்.டி.பி.சி., பங்குகள் விற்பனை: பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., யின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும். இதன்மூலம் என்.டி.பி.சி., நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்குகளின் சதவீதம் 84.50 ஆக குறையும். தவிர 'சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம்' என்ற பொது துறை நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆனந்த்சர்மா கூறினார்.
நன்றி : தினமலர்