Showing posts with label வீடுகடன். Show all posts
Showing posts with label வீடுகடன். Show all posts

Wednesday, January 6, 2010

வீட்டு கடனுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்தது ஆக்சிஸ் வங்கி

இந்தியாவின் மூன்றாவது ‌பெரிய வங்கியான, ஆக்சிஸ் வங்கி வீட்டு கடனுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 31ம் தேதிக்குள் வாங்கும் கடனுக்கு மட்டும், எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினாலும், முதல் இரண்டு வருடங்களுக்கு 8.25 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் வசூலிக்கப் படும். அதற்கு பிறகு மாறும் வட்டி விகிதம் விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வீட்டு கடனுக்கான வட்டி, இரண்டு வருடங்களுக்கு பிறகு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் எனப்படும் வட்டி விகித்தின் அடிப்படியில் வட்டி விதிக்கப்படும்.
இதில் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் விட 3.5 சதவீதம் குறைவாக வசூலிக்கப்படும். ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான கடனுக்கு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் விட 3 சதவீதத்திற்கும் குறைவாக வட்டி வசூலிக்கப்படும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, December 10, 2009

'டல்' அடிக்குது பங்குச் சந்தை: டபாய்க்குமா, பறக்குமா?

உலகளவில் பிரச்னைகள் இல்லாததால் சந்தையிலும் பெரிய மாற்றம் இல்லை. சரிவில் வாங்கியவர்கள் லாபமடைந்தனர்; விற்றவர்களும் மறுபடி ஒரு சரிவுக்காக காத்திருக்கின்றனர். திங்களும், நேற்றும் சிறிய சரிவைச் சந்தித்தன. ஆனால், நேற்று முன்தினம் சந்தை, 'ஜம்'மென பயணித்தது. பெரிய துபாய் புயலுக்கு பிறகும், சந்தை 17,000 புள்ளிகளுக்கும் மேலே தான் இருக்கிறது. திங்களன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, நேற்று முன் தினம், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தான், சந்தை யை 244 புள்ளிகளுக்கு மேல் தூக்கிச் சென்றது. அதாவது, 'வரும் மார்ச் மாதம், அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் அதிகப்படியாக செலவழிக்கும். அதற்காக பார்லிமென் டின் அனுமதியை கோரும். சில மாதங்களுக்குள் அரசு நிறுவன பங்குகள் விற்பனை நடக்கும்' எனக் கூறினார். இது, சந்தையை மேலே தூக்கிச் சென்றது. நேற்று முன்தினம், 'நிப்டி' 18 மாத உச்சத்திற்கு போனது ஒரு சாதனை. கடந்த ஆண்டு சோதனை படைத்த சந்தை, தற்போது சாதனை படைப்பது, ஆறுதல். நேற்று சந்தை மதிப்பு உலகளவில் குறைந்திருந்ததால், இங்கும் குறைந்தது. மெட்டல் மற்றும் வங்கிப் பங்குகள், சரிவுக்கு காரணமாக இருந்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 102 புள்ளிகள் குறைந்து 17,125 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறந்து 5,112 புள்ளிகளுடனும் முடிந்தது.

புதிய வெளியீடுகள் : ஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி (ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம் பெனியின் ஒரு அங்கம்) தனது புதிய வெளியீட்டை டிச., 7ம் தேதி முதல் கொண்டு வந் தது. நேற்றைய இறுதியில் 1.67 தடவை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு முடிந்தது.கோத்ரெஜ் பிராபர்டீசின் புதிய வெளியீடு நேற்று வரை 1.23 தடவை வரை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு நாளை வரை திறந்திருக்கும்.

மியூச்சுவல் பண்ட்கள் : கடந்த ஆண்டு சந்தை குறைவாக இருந்த போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் கோடிகளுக்கும் கீழே சென்றிந்தது. தற்போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு எட்டு லட்சம் கோடிகளுக்கும் மேலே சென் றிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு கூடியுள்ளது; அதே சமயம் முதலீட்டாளர் களும் அதிகளவில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர்.

தற்போது, பங்குச் சந்தைகள் டெர்மினல்கள் மூலமாகவே, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவைகள் மூலமாக மியூச்சுவல் பண்ட்களின் யூனிட்டுகளை வாங்கலாம். சில மியூச்சுல் பண்ட்கள் தங்களை பங்குச் சந்தைகள் இணைத்துக் கொண்டுள்ளன. இன்னும் பல மியூச்சுவல் பண்ட்கள் சேரவும் உள்ளன. மதியம் 3 மணி வரை அன்றைய விலையிலேயே வாங்கலாம் என்பது தான் இதில் விசேஷம். தற்சமயம் மறுபடி பல மியூச்சுவல் பண்ட்கள் தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளன. காற் றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமே?

வீட்டுக் கடன் சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. ஆதலால், வீட்டுக்கடன் 8 சதவீதத்தை தொட்டு விட்டது. கடன் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு. கடன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். ஆனால், வீடு விலை குறைய வேண்டுமே? கனவு இல்லத்தை நனவு இல்லமாக ஆக்க வாருங்கள் என்று, கூவிக் கூவி வீட்டுக் கடன் கம்பெனிகள் அழைக் கின்றன. பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால், ரிசர்வ் வங்கி அதைக் குறைப்பதற்காக சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டி விடுமா என்ற பேச்சு வேறு அடிபடுகிறது.

நவம்பர் கார் விற்பனைகார் விற்பனை சூடு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே சமயம் விற்பனையை விட, 46 சதவீதம் கூடியுள்ளது. கார் கம்பெனிகளின் பங்குகளுக்கு கொண்டாட்டம் தான். கடந்த ஆண்டு அதிகம் அடிபட்ட பங்குகள் கார் கம்பெனிகள். தற்போது ஜம்மென சுகமான சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும் கார் போல அந்தக் கம்பெனிகளின் பங்குகள் பயணிக்கின்றன.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : சந்தை சிறிய ஏற்ற, இறக்கங்களுடன் தான் இருக்கும். நல்ல வாய்ப்புகளுக்கு காத்திருங்கள். தற்போது வாங்குவதாக இருந்தால் ப்ளூ சிப் பங்குகளாக பார்த்து வாங்குகள். குறுகிய காலத்தில் நஷ்டம் இருந்தாலும் நீண்டகாலத்தில் லாபம் இருக்கும். இந்த வாரத்தில் பொதுவாக பார்த்தால், மேலேயும் போகமால் கீழேயும் வராமல், 'டல்' அடித்து கொண்டிருக்கிறது. மேலே பறக்குமா அல்லது டபாயக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5,200க்கு மேல் நிப்டி நான்கு நாட்களுக்கு நிலை பெற்றால், பலரும் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. லாபம் இருந்தால் கையில் காசு பார்ப்பதே உத்தமம்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


Tuesday, December 1, 2009

உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது?

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை. சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான 'லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.

யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன. அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது. அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை. விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள். அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை. வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில். கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.

எப்படி திரும்ப எழுந்தது?: திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின. இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும். இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.

திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்: பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட 'கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.

இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?: கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.

உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை: உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.

இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?: சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம். ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ் வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.

துபாயில் என்ன நடந்தது?: துபாய் அரசுக்கு சொந்தமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது. ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?

துபாய் திரும்ப எழுமா?: துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கட்டுரையாளர் : சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்

Tuesday, October 13, 2009

வீட்டுக் கடன்களுக்கு இனி 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான்

இதுவரை வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்பட்ட 'பிக்சட்' வட்டிவீதம் போய் இனி, 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. சாதாரணமாக வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி நிரந்தர வட்டி எனப்படும் பிக்சட் வட்டி வீதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட்டி வீதங்களில் இருந்த மாற்றம் ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பிக்சட் வட்டி வீதத்தை விரும்பினர். அப்போதைய நிலவரப்படி பிக்சட் வட்டிக்கும் மாறும் வட்டி எனப்படும் 'ப்ளோட்டிங்' வட்டிக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததில்லை. அதுவே வங்கிகளுக் கும் பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்போது சில ஆண்டுகளாக, நிரந்தர மற்றும் மாறும் வட்டி வீதங்களுக்கிடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக மாறி வருகிறது. இவற்றின் வித்தியாசம் 5.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதம் வரை வங்கிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டகாலம் வரை நிரந்தர வட்டியும் அதற்குப் பின் மாறும் வட்டியும் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன.
நிரந்தர மற்றும் மாறும் வட்டி வீதங்களுக்கிடையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் வந்தது ஏன்? உலகப் பொருளாதார மந்தநிலை இந்தியப் பங்கு மற்றும் நிதிச் சந்தையில் ஏற்படுத்திய பாதிப்பு, அரசின் கடன் வாங்கும் கொள்கை இவற்றால் தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்த வித்தியாசத்தால் பொதுமக்களுக்கு நிரந்தர வட்டி தான் லாபம் என்றாலும், வங்கிகளுக்கு நிரந்தர வட்டி என்பது நஷ்டத்தைத் தரக்கூடியதாக இருந்தது. 2002-03 காலகட்டங்களில் இரு வட்டிகளுக்கும் இடையிலான வித்தியாசம் 50லிருந்து 200 அடிப்படைப் புள்ளிகள் வரை மாறியது. மக்களோ, கடன்களுக்கு நிரந்தர வட்டியையே தேர்வு செய்தனர். வித்தியாசத்தால் ஏற்பட்ட விளைவு வங்கிகளையே பாதித்து வந்தது. 2006ல் இந்த நஷ்டம் வங்கிகளைப் பெருமளவில் பாதித்தது. இப்போது, இந்த நிரந்தர வட்டி முறையை நீக்கிவிட்டு, மாறும் வட்டியை நிரந்தரமாக்கலாமா என்று வங்கிகள் யோசித்து வருகின்றன. கூடிய விரைவில் 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான் அமலாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Saturday, August 15, 2009

எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் வட்டி குறைப்பு அறிவிப்பு

புதிதாக வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கான வட்டி வீதத்தை, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் குறைத்துள்ளது.இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முன்னர் 30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கான வட்டி வீதம் 9.25 சதவீதமாக இருந்தது. தற்போது 75 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கான மாறுகின்ற வட்டி வீதம் 8.75 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் தேதி முதல் இந்தப் புதிய வட்டி வீதம் அமலுக்கு வந்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வட்டி வீதத்திலும், அதன்பின் மாறுகின்ற வட்டி வீதத்திலும் கடன் பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு, 75 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.90 சதவீத வட்டி வசூலிக்கப்படும். முன்னர் இந்த வகைக் கடன்களுக்கான வட்டி வீதம் 9.50 சதவீதமாக இருந்தது.
நன்றி : தினமலர்


Sunday, July 5, 2009

சூடு பிடிக்குது வீட்டுக்கடன் : வட்டிவீத போர் வங்கிகள் போட்டா போட்டி

ரியல் எஸ்டேட் வர்த்தகம் மந்தமாக இருந்தாலும், வீட்டுக்கடன் தருவதில், வங்கிகள் இடையே மீண்டும் போட்டா போட்டி சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் ரியல் எஸ்டேட் வர்த்தகம், இரண்டாண்டுக்கு முன் இருந்த நிலையில் இப்போது இல்லை; 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பலமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளன. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு, வேலை பறிப்பு போன்ற காரணங்களால், பலமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனை படுத்துவிட்டது. சாப்ட்வேர் ஊழியர்களை நம்பி, பல லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் தருவதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு வட்டியையும் குறைத்தன. சாப்ட்வேர் ஊழியர்கள் வேலை போய் விட்டதால், வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் தவித்தது ஒரு பக்கம் இருக்க, அவர்களை நம்பி கட்டிய பல கோடி ரூபாய் பலமாடிக் குடியிருப்பு வீடுகளும் விற்பனை ஆகாமல் முடங்கின. இப்போது தான் ஓரளவு ரியல் எஸ்டேட் வியாபாரம் சற்று தலைதூக்கி உள்ளது. விலையைக் குறைத்து வீடுகளை விற்பனை செய்வதில் பில்டர்கள் தீவிரமாக உள்ளனர். அதனால், வீடு வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் வீட்டுக்கடனைப் பெறத் துடிக்கின்றனர். வீட்டுக்கடன் பாக்கி சரிவர வராமல் இருந்தால், கிடுக்கிப்பிடி போட்டு வந்த வங்கிகள் இப்போது ஓரளவு கெடுபிடிகளையும், வட்டி வீதத்தையும் குறைத்துக் கொண்டு வருகின்றன. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை மீண்டும் தலைதூக்க வைக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வரு கிறது. ரிசர்வ் வங்கியும் வட்டி வீதத்தைக் குறைக்க அவ்வப்போது வங்கிகளுக்கு உதவி வருகிறது. இந்நிலையில், வட்டி வீதம் 8 சதவீதம் வரை வந்து விட்டது. ஆறரை சதவீதத்துக்கு கொண்டு வருவது தான் மத்திய அரசின் எண்ணம். வீட்டுக்கடன் தரும் வங்கிகள் இடையே இப்போது வட்டி வீதப் போர் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. வட்டி வீதத்தைக் குறைத்து, போட்டா போட்டியை உருவாக்குவதில் முன்னர் எச்.டி.எப்.சி., வங்கி இருந்தது. இப்போது, அந்த பணியை ஸ்டேட் பாங்க் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. வட்டி வீதத்தை ஏற்றுவதாக இருந்தாலும், குறைப்பதாக இருந்தாலும், முதலில் இருக்கும் எச்.டி.எப்.சி., இப்போது திடமான முடிவுகளை எடுத்து வருகிறது. மற்ற வங்கிகள் வட்டியைக் குறைத்தாலும், அதற்கு போட்டியாக இன்னும் வட்டியைக் குறைக்கும் முடிவை எடுப்பதே இல்லை. வீட்டுக்கடன் பட்டுவாடாவில் முதலில் இருப்பது ஸ்டேட் பாங்க் தான். அடுத்து, எல்.ஐ.சி., உள்ளது. சமீபத்தில் ஸ்டேட் பாங்க், வீட்டுக் கடன் வட்டி வீதத்தைக் குறைத்தது மட்டுமின்றி, வீட்டுக்கடன் வாங்குவோருக்கு புதிய சலுகைத் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, 'ஈசி ஹோம் லோன்' மற்றும் 'அட்வான்டேஜ் ஹோம் லோன்' என்ற இரு திட்டங்களை ஸ்டேட் பாங்க் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு திட்டங்களிலும் கடன் பெறுவோர், முதலாண்டு 8 சதவீதம் வட்டியில் தவணையைக் கட்டலாம்; அடுத்த இரு ஆண்டுகளில் படிப்படியாக வட்டி வீதம் 9.5 சதவீதம் வரை அதிகரிக்கும். அதன் பின், புளோட்டிங், பிக்சட் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்து தவணையை கட்டலாம். ஸ்டேட் பாங்க் அவ்வப்போது நிர்ணயிக்கும், 'ஸ்டேட் பாங்க் அட்வான்ஸ் ரேட்' படி இந்த சலுகை அளிக்கப்படுகிறது. இந்த விகிதத்தின் படி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பலன் கிடைக்கும். ஸ்டேட் பாங்க் இப்படி சலுகை திட்டங்களை அறிவித்தாலும், எச்.டி.எப்.சி., வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. 'உண்மையில் எங்களின் வட்டி வீதம் தான் குறைவானது. ஆண்டுக்கணக்கின் அடிப்படையில் வட்டி வீதத்தைக் கணக்கிட்டால் இந்த உண்மை தெரியும்' என்று விளக்கம் அளித்துள்ளது. இந்த வங்கிகள் இடையே எல்.ஐ.சி., வீட்டு வசதி கழகமும் வட்டி வீதத்தை குறைத்து வர்த்தக போட்டியை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுக்கடன் வட்டி வீதம் தொடர்பாக வங்கிகள் நடத்திய போர், மீண்டும் பெரிய அளவில் தலை தூக்கும் என்று தெரிகிறது.
நன்றி ; தினமலர்


Thursday, July 2, 2009

வீட்டுக் கடன் வட்டி : எல்.ஐ.சி., குறைப்பு

எல்.ஐ.சி., வீட்டுக் கடன்களுக்கு வட்டி குறைக்கப் பட்டுள்ளது. இது குறித்து, எல்.ஐ.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்.ஐ.சி., வீட்டுக் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தில் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் தேதியிலிருந்து இந்த வட்டி குறைப்பு அமல்படுத்தப் படுவதால், ஆகஸ்ட் மாத தவணையி லிருந்து, இதற்கேற்ப வாடிக்கையாளர்கள் சலுகையைப் பெறலாம். எல்.ஐ.சி.,யின் நிதி நிலை மற்றும் செயல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டதால், இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. எல்.ஐ.சி., வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரையில் தற்போதைய வட்டிக்குறைப்புடன், கடந்த ஆறு மாதங்களில் 2 சதவீத வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு முறை தலா 0.75 சதவீத அடிப்படையில் 1.50 சதவீத வட்டி குறைக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Sunday, March 8, 2009

தேர்தல் வருவதால் அதிகரிக்கப்போகிறது பணப்புழக்கம்

ரிசர்வ் வங்கியின் ரேட் கட் வந்தால் சந்தை சிறிது உயிர் பெறும் என்று தான் எல்லாரும் 'பெட்' கட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், வியாழனன்று நடந்ததோ வேறு. ஏன் ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டுக்கு அப்புறமும் சந்தை கீழே விழுந்தது? சென்ற வாரம் வரை ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்தால் சந்தை உயிர் பிழைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். அப்படியே 50 புள்ளிகள் சதவீதம் குறைத்து புதனன்று சந்தை நேரத்திற்குப் பிறகு அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், வியாழனன்று துவக்கத்திலிருந்து சந்தைகள் விழுந்து கொண்டே தான் இருந்தன. சந்தை இன்னும் அதிகமான ரேட் கட்டை எதிர்பார்த்திருந்தது போலும்.
பணவீக்கம் ஒரேயடியாக விழுந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 50 புள்ளிகள் என்பது சந்தைக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆதலால், சந்தைகள் மேலே ஏறுவதற்குப் பதிலாக கீழே இறங்கியது. ஆச்சரியம், ஆனால் உண்மை. அன்றைய தினம் மட்டும் 248 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.
கடந்த 40 மாதங்களில் எவ்வளவு கீழ் நிலையை எட்டியிருந்ததோ அந்த நிலைக்கு அருகே சென்று விட்டது. பரமபதம் தான். பரமபதத்தை விளையாட்டில் தான் பார்த்திருக்கிறோம். விளையாட்டுக் குக் கூட சந்தையில் நினைத்ததில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கிறது.
வெள்ளியன்று சந்தை உலக சந்தைகளின் போக்கை வைத்து அதே போலவே கீழே சென்றது. வியாழனன்று உலகளவில் எல்லா சந்தைகளும் கீழேயே இருந்தன. அதன் போக்கு இங்கும் சந்தைகளில் பிரதிபலித்தது.
அன்றைய தினம் 100க்கு மேற்பட்ட புள்ளிகளை இழந்து சந்தை கலையிழந்து காணப்பட்ட நிலையில், இது தான் வாங்குவதற்கு நல்ல சமயம் என்று பலரும் வந்ததால் இழந்த புள்ளிகளையும் திரும்பப் பெற்று 127 புள்ளிகள் கூடுதலாகவும் பெற்று முடிவடைந்தது.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 127 புள்ளிகள் மேலே சென்று 8,325 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை 8,400க்கு கீழேயே முடிவடைந்துள்ளது என்பது ஒருவிதமான கலக்கம் தான்.
நல்ல பங்குகள் நல்ல பல பங்குகள் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சந்தையில் மலிவாக இருக்கிறதே என்று வாங்கப் போனால் இன்னும் விலை குறைகிறது. ஆதலால், முதலீட்டாளர்கள் பயப்படும் நிலை உள்ளது. ஒவ்வொரு இறக்கத்திலும் வாங்கினால் ஆவரேஜ் செய்யலாம்.
இந்த வார பணவீக்கம் 3.03 சதவீதம் அளவிற்கு வந்துள் ளது. ஒரே இறக்கமாகத் தான் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் எல்லாம் செலவழிக்கப் பயப்படுவதால் தான் இது போன்ற ஒரு நிலைமையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆடம்பரச் செலவுகள் இல்லை, அத்தியாவசியச் செலவுகள் மட்டும் தான் என்ற நிலை தான். குறைந்து கொண்டு வரும் வேகத்தைப் பார்த்தால் ஜெட் வேகம் தான்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரியும், ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைய முடிவு செய்த பின் பார்த்தால் ஒன்றிணைக்கப் பட்ட கம்பெனியான ரிலையன்ஸ தான் தற்போது உலகத்திலேயெ பெரிய ரிபைனரியாக இருக்கிறது. இதையடுத்து, வெனிசுவேலாவில் உள்ள பாராகவுனா, தென்கொரியாவில் உள்ள எஸ்.கே.கார்ப்., தென் கொரியாவில் உள்ள எல்.ஜி., - கால் டெக்ஸ், சிங்கப்பூரின் எக்சான் மொபில், பேடவுன் எக்சான் மொபில் என வரிசையில் வருகிறது. இந்த இணைப்பு முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு தூரம் பயனிளக்கப் போகிறது என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். நானோ காருக்கு விண்ணப் பம் விற்பதில் இருந்து, காருக்கு லோன் கொடுப்பது வரை ஸடேட் பாங்க் மட்டும் தான் என்று இருந்தது. தற்போது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவும் டாடா கம்பெனியின் அனுமதியைப் பெற்றுள்ளது.
தேர்தல் வந்துவிட்டது, பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகரிக்கும் பணப்புழக்கம் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும். அப்படி பொருட் கள் விற்பனை கூடி வியாபாரங்கள் கூடி சந்தையும் கூடினால் நாமும் கூடிக்கூடிப் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
வீடு வாங்கப் போகிறீர் களா? முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித்தது. வங்கிகளிடையே போட்டி உண்டாகியுள்ளது. கனரா வங்கி மற்ற வங்கிகளை விட ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்கி இன்னும் போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல வங்கிகளுக்கு இடையே போட்டி என்றால் மக்களுக்குத் தானே கொண்டாட்டம். ஆனால், இந்த வட்டி புதிதாக வாங்குபவர்களுக்குத் தான், முன் வாங்கியவர்களுக்கு இல்லை என்று எல்லோரும் கூறுவதால் கட்சி விட்டு கட்சி மாறும் காட்சிகள் (அதாவது வங்கி விட்டு வங்கி மாறும் காட்சிகள்) தேர்தல் சமயத்தில் அதிகமாகவே இருக்கும்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு 8,400 லெவலுக்கு கீழே வந்துள்ளது. இது தான் சமயம் என்று முதலீட்டாளர்கள் (உள்நாடு, வெளிநாட்டு) வரவேண்டும். அது மட்டும் தான் சந்தையைப் பலப்படுத்தும்.
நன்றி : தினமலர்


Saturday, March 7, 2009

வீட்டுக்கடன் வட்டி : ஐ.சி.ஐ.சி.ஐ., குறைப்பு

இந்தியாவின் பெரிய தனியார் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, புதிய வீட்டு கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீம் வரை குறைத்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி செய்தி தொடர்பாளர் கூறியதாவது: 20 லட்ச ரூபாய்க்கு குறைவாக வாங்கும் வீட்டு கடன்களுக்கான வட்டி வீதம் 9.75 சதவீதம். இதற்கு முன்னர் 10 சதவீதமாக இருந்தது. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி வீதம் 10.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. 30 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வாங்கும் கடன்களுக்கான வட்டி வீதம் 12 சதவீதத்தில் இருந்து, 11.5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த வட்டி வீதங்கள் குறைப்பு அனைத்தும் புதிய கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி செய்தி தொடர்பாளர் கூறினார்.
நன்றி :தினமலர்


Thursday, March 5, 2009

வீடு, கார் கடன் மீதான வட்டி குறையும்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

வங்கிகளுக்கான ரெபோ வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, வீடு மற்றும் கார் வாங்குவதற்கான கடனுக்கான வட்டி குறையும். சர்வதேசப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுவரை மொத்தம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சீர்குலைவு இந்தியாவையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பயமுறுத்திக் கொண்டிருந்த பணவீக்கம், பல்வேறு சலுகை அறிவிப்புகள் காரணமாக ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகளில் பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை தற்போது அதலபாதாளத்தில் இருக்கிறது. பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் வந்துவிட்டதால் ரிசர்வ் வங்கி மேலும் சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கு (ரெபோ) 5.5 சதவீதம் வட்டி விதிக்கப்படடது. இதில் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான (ரிசர்வ் ரெபோ) வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி குறைய உள்ளது. வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டிகள் வெகுவாகக் குறையும். சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் ஐந்தாவது சலுகை இது. வர்த்தகத்துறையில் நம்பிக்கையிழப்பு, மூலதன முதலீட்டில் தொய்வு ஆகிய நிலையைச் சமாளிக்க இந்த அறிவிப்பு உதவும் என்று கருதப்படுகிறது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைகள் மூலம் 3.88 லட்சம் கோடி பணப்புழக்கம் கிடைக்கும். உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகை அமையும் என வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளன. பொதுத்துறை வங்கியான கனரா வங்கி நேற்று வீடு, வாகனக்கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Monday, March 2, 2009

டி.எல்.எப்., நிறுவன முதலீட்டாளர்கள் புகார்: ரூ.40 - 70 லட்சம் பணம் கட்டியவர்கள் பாதிப்பு

டி.எல்.எப்., நிறுவனத்தின் சார்பில் கட்டும் அடுக்குமாடி வீடுகளுக்காக லட்சக்கணக்கில் பணம் கட்டியவர்கள், அந்நிறுவனத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ளனர். அதற்குள் பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு மொத்தத் தொகையிலிருந்து 32 சதவீதம் வரை குறைத்ததுபோல் சென்னை வாடிக்கையாளர்களுக்கும் குறைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டி.எல்.எப்., நிறுவனம் (டில்லி லீஸ் பைனான்ஸ்) சார்பில் சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3,493 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட 2008ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட குடியிருப்புகளுக்கு 40 லட்சம் முதல் 75 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் வசிக்கும் டாக்டர்கள், ஆடிட்டர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என, மொத்தம் 1,800 பேர் வீடுகளைப் பதிவு செய்தனர். இதில் பெரும்பாலானோர் 95 சதவீதம் வரை பணம் கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஓராண்டாகியும் செம்மஞ்சேரியில் கொடுத்த பணத்திற்குரிய கட்டுமானப் பணிகள் நடக்கவில்லை. மேலும், டி.எல்.எப்., நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்குச் சரியான தகவல் தொடர்பு இல்லாததால் பணத்தைக் கட்டியவர்களில் 1,100 பேர் ஒரு குழுவாகக் கூடினர். அதற்கு ஜான்சன் தலைவராகவும், முக்கிய நிர்வாகிகளாக வக்கீல் சியாம்சுந்தர், ராம்கோபால், முத்துக்கருப்பன், பிரசாத், மவுலி ஆகியோர் பொறுப் பாளர்களாகச் செயல்படுகின்றனர். டி.எல்.எப்., நிறுவனத்தில் பணம் கட்டியவர்களின் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 300க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் நிர்வாகிகள் ஜான்சன், வக்கீல் சியாம்சுந்தர் உள்ளிட்ட பலர் கூறியதாவது: டி.எல்.எப்., நிறுவனம் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு 13 மாதங்களாகியும் நகர ஊரமைப்பு பிளான் வரவில்லை. டி.எல்.எப்., நிறுவனம் - லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் கூட்டாக முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது அனைவரும் அறிந்ததே. இதில் அடுக்குமாடிக் குடியிருப்பு வேண்டி கட்டிய பணத்தில் 49 சதவீதம் லீமேன் பிரதர்ஸ் நிறுவனத்துடன் கலந்து விட்டதால், மீண்டும் செம்மஞ்சேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி கொடுப்பார்களா? வரும் 2011ம் ஆண்டுக்குள் கட்டிக்கொடுக்க முடியுமா என்ற பயம் எங்களுக்கு வந்துவிட்டது. எனவே தான், பணம் கட்டியவர்கள் ஒரு குழுவாக சென்னையில் செயல்படுகிறோம். அதில் உறுப்பினர்களாக 1,300 பேர் உள்ளனர். தமிழகத்தில் அனைத்து பில்டர்களும் யு.டி.எஸ்., பதிவு செய்த பின் தான் கட்டடம் கட்டுகின்றனர். அதுபோல் முழுமையாக கட்டடப் பணி முடிவதற்கு முன் டி.எல்.எப்., நிறுவனமும் யு.டி.எஸ்., பதிவு செய்ய வேண்டும். பெங்களூரில் டி.எல்.எப்., நிறுவனம் 32 சதவீதம் வரை மொத்த தொகையிலிருந்து குறைத்துள்ளது. அதுபோல் சென்னையில் 10 சதவீதம் தான் மொத்த தொகையில் குறைத்துள்ளது. பெங்களூரைப் போல் சென்னையிலும் மொத்தத் தொகையில் குறைக்க வேண்டும்.
செம்மஞ்சேரியில் 3,493 அடுக்குமாடி கட்டும் குடியிருப்புக்கு 10 ஆயிரம் வாகனங்கள் வரலாம். அதற்கேற்ப பாதை இல்லை. சுனாமி காலனி மக்கள் வசிக்கும் வழியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது. நல்ல பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி 13ம் தேதி டி.எல்.எப்., நிறுவனம் ஒரு கடிதத்தை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், 'தேவைப்படுபவர்கள் முழுப் பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளலாம்' என அறிவித்தது. இதை நம்பி நிறையபேர் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக கடிதம் அனுப்பினர். ஆனால், அவர்களுக்கு எந்தவிதப் பதிலும் வரவில்லை. கடந்த 23ம் தேதி மொத்தத் தொகையில் 10 சதவீதம் குறைப்பதாக டி.எல்.எப்., நிறுவனம் அறிவித்ததில் யாருக்கும் திருப்தியில்லை. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மீண்டும் மொத்தத் தொகையிலிருந்து குறைக்க வேண்டும். ஒரு வாரம் நாங்கள் கெடு விதித்துள்ளோம். மேலும், சென்னை டி.எல்.எப்., நிறுவனத்துடன் இனி பேசப் போவதில்லை. இங்குள்ளவர்கள் மீது நம்பிக்கை இல்லை. டில்லியில் இருந்து வரும் நிர்வாகிகளுடன் தான் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


Saturday, February 21, 2009

ஸ்டேட் பேங்க் கின் அதிரடி திட்டம் : கார் கடனுக்கு ஒரு வருடத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான வட்டியில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி வரும் பிப்ரவரி 23ம் தேதியில் இருந்து மே 31ம் தேதிக்குள் புதிதாக கார் கடன் வாங்குபவர்களுக்கு, ஒரு வருட காலத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருக்கிறது. இப்போது, கார் கடனுக்கு ஸ்டேட் பேங்க் 11.5 சதவீத வட்டியும், மற்ற பொதுத்துறை வங்கிகள் 10.25 முதல் 12.25 சதவீத வட்டியும் வசூலிக்கின்றன. மேலும் கார் கடனை அதிகபட்சமாக 84 இ.எம்.ஐ.,களாக செலுத்தலாம் என்றும் ஸ்டேட் பேங்க் சொல்லியிருக்கிறது. டிசம்பர் 2008 உடன் முடிந்த காலத்தில் கணக்கிட்டு பார்த்தபோது, ஸ்டேட் பேங்க்கில் கார் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே கார் கடனை அதிகரிக்கும் விதமாக இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாதா மாதம் 20,000 பேருக்கு கார் கடன் கொடுக்க வேண்டும் என்று அது இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக, அதிக வட்டி காரணமாக இந்தியாவில் வீட்டு கடன் மற்றும் கார் கடன் பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்திருப்பதை அறிந்த ரிசர்வ் பேங்க், வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது. கார் விற்பனையும் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் டிசம்பர் மாதத்தில் 7 சதவீதமும் ஜனவரி மாதத்தில் 3 சதவீதமும் குறைந்திருந்தது. கார் கடனுக்கு இப்போது வட்டியை குறைத்திருக்கும் ஸ்டேட் பேங்க், கடந்த ஜனவரி 31ம் தேதி, வீட்டு கடனுக்கு ஒரு வருடத்திற்கு 8 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருந்தது.
நன்றி : தினமலர்


Monday, December 29, 2008

கடனுக்கான வட்டியை குறைக்கிறது ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ பேங்க்கில் ஹவுசிங், ஆட்டோ மற்றும் பெர்சனல் லோன் வாங்கியவர்களுக்கு ஒரு புத்தாண்டு இனிப்பு செய்தியை அதன் சி.இ.ஓ., மற்றும் மேலாண் இயக்குனர் கே.வி.காமத் அறிவித்திருக்கிறார். இவர்களுக்கான வட்டியை குறைக்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஜனவரியின் ஆரம்பத்தில் நாங்கள், எங்களிடம் லோன் வாங்கியவர்களுக்கு வட்டியை குறைப்பது பற்றி அறிவிப்போம் என்றார் அவர். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன புத்தாண்டு பரிசு கொடுக்கப்போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது இதை அவர் தெரிவித்தார். வட்டி குறைப்பு ஒரு சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில்தான் புதிதாக அவர்களிடம் ஹவுசிங் லோன் வாங்கியவர்களுக்கு வட்டியை 1.5 சதவீதம் வரை குறைத்திருந்தது. ஜனவரியில் குறைப்பதாக இருந்த வட்டி குறைப்பு, பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


Thursday, December 25, 2008

வீட்டு கடனுதவி சிறப்பு திட்டம் : கார்ப்பரேஷன் வங்கி அறிமுகம்

கார்ப்பரேஷன் வங்கி, வீட்டுக் கடனுதவி சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வீட்டுக் கடனுதவி சிறப்பு திட்டப்படி, 20 ஆண்டு காலவரையில், ஐந்து லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 8.5 சதவீத வட்டியும், ஐந்து லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய்க்குள் வாங்கும், கடனுக்கு 9.25 சதவீத வட்டியும் விதிக்கப்படும். இத்திட்டத்தில் கடன் வாங்குவோர் செலுத்த வேண்டிய முன்பணமாக, ஐந்து லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 10 சதவீதமும், ஐந்து முதல் 20 லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 15 சதவீதமும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இம்மாதம் 17ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை வாங்கும் கடனுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
நன்றி :தினமலர்


Sunday, December 21, 2008

எல்.ஐ.சி., வீட்டுக்கடன் வட்டி குறைப்பு

பொதுத்துறை வங்கிகளை அடுத்து எல்.ஐ.சி., வீட்டுக்கடன் நிறுவனமும் வட்டி குறைப்பு செய்துள்ளது. இது பற்றி, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.ஆர்.நாயர் தெரிவித்துள்ளதாவது: மொத்தம் 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25 சதவீதமாகவும், அடுத்து வரும் ஆண்டு களுக்கு 9.75 சதவீதமாகவும் இருக்கும். 20 லட்சத்திற்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு, 11.50 சதவீதத்தில் இருந்து 11.25 சதவீதமாக வட்டி குறைக்கப் பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு, முன் கூட்டியே கடனை திருப்பி செலுத்தும் போது விதிக்கப்படும் அபராதத்திற்கு விலக்கு போன்ற சலுகைகளும் உண்டு. இவ்வாறு நாயர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


Friday, December 19, 2008

'வட்டி வீதம் மேலும் குறையும்'

பணவீக்கம் குறைந்துள்ளதால் வட்டி வீதம் மேலும் குறையும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அசோக் சாவ்லா கூறியதாவது: பணவீக்கம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால், வட்டி வீதமும் குறையும். டிசம்பர் 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பணவீக்கம் 6.84 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து ஆறு வாரமாக பணவீக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. அதனால், ரிசர்வ் வங்கி இதைக் கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பின், மூன்று லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது. இவ்வாறு அசோக் சாவ்லா கூறினார்.
நன்றி : தினமலர்


Tuesday, December 16, 2008

வீட்டுக்கடன் வட்டி கிடுகிடு குறைப்பு * நடுத்தர மக்களை கவர சலுகை! வங்கிகள் அதிரடி

வீட்டுக் கடன்களுக்கான வட்டியை கணிசமாகக் குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.5 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். அத்துடன், சில வங்கி நடைமுறை கட்டணச் சலுகைகளும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இது, நடுத்தர மக்கள் வீடு வாங்க ஆர்வத்தைத் தூண்டும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. ரியல் எஸ்டேட் திடீரென பூதாகர வளர்ச்சி பெற்றது. நிலம் வாங்குவதும், வீடு வாங்குவதும் குதிரைக் கொம்பாக ஆனது. வீட்டுக் கடனுக்கான வட்டி வீதங்கள் வங்கிகளில் அதிகம் இருந்ததால், வீடு வாங்குவது என்பது முடியாத செயல் என்று பலரும் நினைக்கத் துவங்கினர்.தற்போது, பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையை புத்துயிர் பெறச் செய்ய பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வங்கிகள் வட்டியைக் குறைத்தது : அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் வீட்டுக்கடன் கிடைக்கச் செய்ய மத்திய அரசு, வங்கிகளை வலியுறுத்தி வருகிறது. சமீப காலமாக வீட்டுக் கடன் வட்டியில் நிரந்தர வட்டி, புளோட்டிங் என்று கடன் வாங்கியவர்கள் பெரும் குழப்பத்தில் சிக்கினர். இதனால், வங்கிகளில் கடன் வாங்குவது குறையத் துவங்கியது. சில மாதங்களுக்கு முன், பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு 11 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வட்டி விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை காரணமாகவும், கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பெரும்பாலான வங்கிகள் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டியைக் குறைத்தது. தற்போது, பணவீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டியை மேலும் குறைத்து, ஏழை நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் வழி செய்ய வேண்டுமென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை செயலர் அருண் ராமநாதன், சில பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.குறிப்பாக, 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி குறைப்பு சலுகைகளை அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.சலுகை: இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள் அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்தின்(ஐ.பி.ஏ.,) கூட்டம், நேற்று மும்பையில் நடந்தது. இதன் தலைவரான டி.எஸ்.நாராயணசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டம் முடிந்ததும் ஸ்டேட் பாங்க் தலைவர் ஓ.பி.பட், நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது;ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி வீதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐந்து லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி 9.25 சதவீதமாக இருக்கும். இந்த இரண்டு வட்டி வீதங்களும் ஐந்து ஆண்டு காலத்திற்கானது. கண்டிப்பாக இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது.இது, அடுத்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ரூ.20 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்குபவர்கள் இனிமேல் பிராசசிங் கட்டணம், பிரீ-பேமன்ட் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டியது இல்லை.வீட்டுக் கடனுக்கு இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப்படும்.வீட்டுக் கடன் வழங்குவதில் மாற்றம் செய்யவும், சலுகைகள் வழங்கும்படியும் மத்திய அரசு கடந்த 7ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை இந்திய வங்கிகள் சங்கம் எடுத்துள்ளது.மேலும், வட்டி வீதத்தைக் குறைப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.ரூ.5 லட்சம் கடன் பெறுபவர்களுக்கு வங்கிக்கு முன்பணமாக 10 சதவீதமும், ஐந்து லட்சத்திற்கு மேல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்கள் முன்பணமாக 15 சதவீதமும் செலுத்த வேண்டும்.வீட்டுக் கடன் குறைப்பு, புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் மற்றும் புதிய கடன் ஆகியவற்றுக்கான வட்டியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலையால் இத்தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி கட்ட, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு பட் கூறினார்.
மகிழ்ச்சியா ? ஏமாற்றமா ? : வங்கிகளின் இந்த முடிவை, வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்கள் ஆட்சேபித்துள்ளன.ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமாக உள்ள டி.எல்.எப்., நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் தல்வார் கூறுகையில், "வட்டி வீதங்கள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன. இது, 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையால் சூப்பர் மெட்ரோ, மெட்ரோ, முதல் தர நகரங்களில் வசிப்பவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை' என்றார்.பாரஸ்வநாத் டெவலப்பர்ஸ் சேர்மன் பிரதீப் கூறுகையில், "நாங்கள் வட்டி குறைப்பு மேலும் அதிகமிருக்கும் என எதிர்பார்த்தோம். இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. முன்பணத்தின் அளவைக் குறைத்திருப்பதும், பிராசசிங் கட்டணம் ரத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
நன்றி : தினமலர்


Sunday, December 7, 2008

வீட்டுக்கடன் வட்டி குறையும்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, விலைவாசியை குறைப்பதற்கும், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கும், சுணக்கம் கண்டுள்ள உற்பத்தித் துறை மீண்டும் உற்சாகமடைவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்புக்கு நிதித்துறை வந்ததும், பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வங்கிகளுக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களுக்கும், வங்கிகளிடம் இருந்து பெறும் குறைந்த கால டிபாசிட்களுக்குமான வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக, வங்கிகளிடம் இருந்து பெறப்படும் குறைந்த கால டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளுக்கு கூடுதல் நிதிவசதி கிடைக்கும். தாராளமாக கடன் கொடுக்க முடியும். கடன்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இது டிசம்பர் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகள் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். சமீப காலமாக உற்பத்தித் துறை முடக்கம் கண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிட்கோவுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி மறுநிதி அளிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம், வங்கிகளின் நிதி இருப்பு விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதில் மாற்றம் ஏற்படுத்தாமல், தற்போது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் கூறியதாவது; ''பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை தொடர்ந்து, தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் பணவீக்கம் குறையும் என்று நம்புகிறோம். சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் நிலையை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்,'' என்று கூறினார். வட்டிவிகித குறைப்பைத் தவிர, சில குறிப்பிட்ட வங்கிகள், அன்னிய செலாவணி மாற்று பாண்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள் ளது. இந்த பாண்டுகள், கவர்ச்சிகரமான கட்டணத்தில் இருப்பதால், வங்கிகள் இதனால் பலன் பெறும். சர்வதேச நிதி நெருக்கடியால் பண பட்டுவாடாவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதி கிடைக்கும்.
நன்றி : தினமலர்


Friday, December 5, 2008

வீட்டு கடன் வட்டி விகிதம் குறையும்

ஆட்டோ மொபைல் துறையில், பல லட்சக்கணக்கானோர் வேலை இழப்பை தவிர்ப்பதற்காக, வர்த்தக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் சுங்க வரி குறைத்து அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரம், வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள வீட்டுக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. நிதித்துறையைக் கையில் எடுத்துக் கொண்ட பின், பிரதமர் மன்மோகன் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு பற்றி அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில், முக்கியமாக கேபினட் செயலர் கே.எம். சந்திரசேகர் தலைமையிலான செயலர்கள் கமிட்டி, முக்கிய முடிவுகளை நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து ஆலோசித்ததால், இன்று கடன் வட்டிவிகித அளவு குறைப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டும், 65 பேர் வேலையிழந்தது குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. தற்போது உரிய முடிவு எடுக்கப்படாவிட்டால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுவிடும். அதே நேரத்தில், குறைந்த கால கடன்களுக்கான வட்டி விகித்தத்தை ரிசர்வ் வங்கி குறைக்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் 2,000 கோடி ரூபாயில் திட்டமும் அறிவிக்கப்பட உள்ளது. நிறுவனங்கள் பணப்புழக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொள்ள, விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. வர்த்தக வாகன உற்பத்தி துறையில், உற்பத்தி சரிந்து வருவதைத் தொடர்ந்து, அவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சுங்க வரியில் சலுகை அளிக்கப்பட உள்ளது. தற்போது, பஸ்களுக்கு 12 சதவீதமும், டிரக்குகளுக்கு 14 சதவீதமும் சுங்க வரி விதிக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளில் தேவை அதிகரிப்பு இருந்தும் கூட, கடந்த அக்டோபர் மாதத்தில், ஏற்றுமதியாளர்கள் 12 சதவீத சரிவை சந்திக்க நேர்ந்தது. இதைத் தவிர்க்க, நிச்சயம் சலுகை அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Sunday, November 30, 2008

வாங்க ஆளில்லாததால் பல மாடிக்குடியிருப்புகள் முடக்கம்: பிரபல நிறுவனங்கள் தவிப்பு

பல லட்சம் ரூபாய் போட்டு வாங்க ஆளில்லாததால், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பல மாடிக்குடியிருப்புகள் எல்லாம் பூட்டியே கிடக்கின்றன. டில்லி, மும்பை மட்டுமின்றி, சென்னையிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது. சர்வசேத நிதி நெருக்கடியால், கட்டுமான திட்டங் களும் முடங்கிப்போயுள்ளன. சாப்ட்வேர் உட்பட பல துறை நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நிலை போய், இப்போது பலரும், எப்போது வேலை போகுமோ என்று பயந்த வண்ணம் உள்ளனர்; அதனால், எதிலும் முதலீடு செய்ய அவர்கள் தயாரில்லை. அது மட்டுமின்றி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வேறு நெருக்கடியில் சிக்கியுள்ளதாலும், கிரெடிட் கார்டு பாக்கி, கடன் பாக்கி என்று பொது மக்களிடம் இருந்து சரியாக வராததால், கதி கலங்கிப்போயுள்ளன. அதனால், வீட்டுக்கடன் கொடுப்பதில் கடும் கெடுபிடிகளை போட்டுள்ளன. வங்கிகள் கடன் தருவதில் கட்டுப்பாடு, வாங்க ஆளில்லாத நிலை போன்ற காரணங்களால், டில்லி, மும்பை, சென்னை , பெங்களூரு நகரங்களில் கட்டப்பட்ட வானளாவ பலமாடிக்குடியிருப்புகளில், வீடுகள் 50 சதவீதம் விற்காமல் பூட்டி கிடக்கின்றன. இதனால், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதில் பல முன்னணி நிறுவனங்களும் தயக்கம் காட்டுகின்றன. பங்குச்சந்தையில், பங்குகளை வெளியிட்டசில மணி நேரத்தில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய டி.எல்.எப்.,நிறுவனம், தன் பல திட்டங் களை ஆறு மாதம் தள்ளிப்போட்டுள்ளது. அது போல, பார்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் நிறுவனமும் தன் திட்டங்களை தள்ளிப்போட்டுள்ளது. டில்லியில் குர்கான் பகுதியில் அடுத்த மாதம் முடிக்க வேண்டிய கட்டுமான திட்டங்கள், அடுத் தாண்டு மார்ச் வரை தள்ளிப்போடப்பட்டுள் ளது. வாடிக்கையாளர்கள் வாங்குவதில், தாமதம் ஆவது தான் காரணம். சென்னையிலும், இந்த நிலை தான் காணப்படுகிறது. சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களிடம் விற்று விடலாம் என்று கணக்கு போட்டு பல இடங்களில் கடன் வாங்கி, கட்டப் பட்ட பல மாடிக் குடியிருப்புகளில் பல வீடுகள் விற்கப்படாத நிலை நீடிக்கிறது. நிதி நெருக்கடியில் தாக்கு பிடிக்க முடியாத பில்டர்கள், வேறு பில்டர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. டில்லியில், டி.எல்.எப்., யுனிடெக், பார்ஸ்வநாத் நிறுவனங்களின் திட்டங்கள் முடங்கிப்போயுள்ளன. டி.எல்.எப்.,பின் பினாகில், ஐகான் திட்டங்கள் இப்போது முடிந்திருக்க வேண்டும்; இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. பெங்களூரு நகரில் பிரஸ்டீஜ் குரூப், மந்த்ரி குரூப், காத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நன்றி ; தினமலர்