Sunday, November 30, 2008

வாங்க ஆளில்லாததால் பல மாடிக்குடியிருப்புகள் முடக்கம்: பிரபல நிறுவனங்கள் தவிப்பு

பல லட்சம் ரூபாய் போட்டு வாங்க ஆளில்லாததால், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பல மாடிக்குடியிருப்புகள் எல்லாம் பூட்டியே கிடக்கின்றன. டில்லி, மும்பை மட்டுமின்றி, சென்னையிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது. சர்வசேத நிதி நெருக்கடியால், கட்டுமான திட்டங் களும் முடங்கிப்போயுள்ளன. சாப்ட்வேர் உட்பட பல துறை நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நிலை போய், இப்போது பலரும், எப்போது வேலை போகுமோ என்று பயந்த வண்ணம் உள்ளனர்; அதனால், எதிலும் முதலீடு செய்ய அவர்கள் தயாரில்லை. அது மட்டுமின்றி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வேறு நெருக்கடியில் சிக்கியுள்ளதாலும், கிரெடிட் கார்டு பாக்கி, கடன் பாக்கி என்று பொது மக்களிடம் இருந்து சரியாக வராததால், கதி கலங்கிப்போயுள்ளன. அதனால், வீட்டுக்கடன் கொடுப்பதில் கடும் கெடுபிடிகளை போட்டுள்ளன. வங்கிகள் கடன் தருவதில் கட்டுப்பாடு, வாங்க ஆளில்லாத நிலை போன்ற காரணங்களால், டில்லி, மும்பை, சென்னை , பெங்களூரு நகரங்களில் கட்டப்பட்ட வானளாவ பலமாடிக்குடியிருப்புகளில், வீடுகள் 50 சதவீதம் விற்காமல் பூட்டி கிடக்கின்றன. இதனால், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதில் பல முன்னணி நிறுவனங்களும் தயக்கம் காட்டுகின்றன. பங்குச்சந்தையில், பங்குகளை வெளியிட்டசில மணி நேரத்தில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய டி.எல்.எப்.,நிறுவனம், தன் பல திட்டங் களை ஆறு மாதம் தள்ளிப்போட்டுள்ளது. அது போல, பார்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் நிறுவனமும் தன் திட்டங்களை தள்ளிப்போட்டுள்ளது. டில்லியில் குர்கான் பகுதியில் அடுத்த மாதம் முடிக்க வேண்டிய கட்டுமான திட்டங்கள், அடுத் தாண்டு மார்ச் வரை தள்ளிப்போடப்பட்டுள் ளது. வாடிக்கையாளர்கள் வாங்குவதில், தாமதம் ஆவது தான் காரணம். சென்னையிலும், இந்த நிலை தான் காணப்படுகிறது. சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களிடம் விற்று விடலாம் என்று கணக்கு போட்டு பல இடங்களில் கடன் வாங்கி, கட்டப் பட்ட பல மாடிக் குடியிருப்புகளில் பல வீடுகள் விற்கப்படாத நிலை நீடிக்கிறது. நிதி நெருக்கடியில் தாக்கு பிடிக்க முடியாத பில்டர்கள், வேறு பில்டர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. டில்லியில், டி.எல்.எப்., யுனிடெக், பார்ஸ்வநாத் நிறுவனங்களின் திட்டங்கள் முடங்கிப்போயுள்ளன. டி.எல்.எப்.,பின் பினாகில், ஐகான் திட்டங்கள் இப்போது முடிந்திருக்க வேண்டும்; இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. பெங்களூரு நகரில் பிரஸ்டீஜ் குரூப், மந்த்ரி குரூப், காத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நன்றி ; தினமலர்


No comments: